ஆறடி கூந்தலை அவிழ்த்துக் கொட்டி
அழகு காட்டும் ஆரணங்கே ! அற்புதமே !
உந்தன்
கார்குழலால் கட்டுண்ட
காளையரோ ஆயிரம்பேர் !
ஆயிரம்பேர் ஆனாலும்
அடுத்துன்னைக் கரந்தொட்டு
மாலையிடப்போகும் மன்மதன் யாரென்று
வாலைக் குமரியே !
வாய்திறந்து கூறிடுவாய் !
கண்ணிமைத்துக் காளையரைக்
கைதுசெய்யும் காரிகையே!
உந்தன்
கண்ணிமைக்குள் சிறைப்பட்டக்
காதலன் யாரெனவே
என்னிடம் செப்பிடுவாய்
ஏந்திழையே ! என்னுயிரே !
அன்று
கல்செய்த தவமன்றோ இராமனின்
காலடி பட்டது.
ஒரு
செல்லாய்ப் பிறந்திருந்தாலாவது உன்
செவ்விதழ் என்மீது பட்டிருக்குமே!
என் செய்வது ! அந்தப்
பொல்லாப் பிரமன் என்னை ஒரு
புல்லாகவன்றோ இந்தப்
புவிமீது படைத்துவிட்டான்.
நில்லாய் ! இளங்கொடியே !
நீ உந்தன் பட்டுக் கால்விரலால்
சற்றே என்னை மிதித்துவிட்டுப் போ !
Bookmarks