Page 3 of 16 FirstFirst 1 2 3 4 5 6 7 13 ... LastLast
Results 25 to 36 of 182

Thread: கவிதையில் யாப்பு

                  
   
   
  1. #25
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    அன்புடையீர்!

    சில குறிப்புகள்:

    01. செய்யுள் ஓசை பற்றிய பயிற்சிகளை வாசகர்கள் அசை-சீர்-தளை-அடி பற்றிய விவரங்கள் அறிந்தபின் பின்னரே முயல்வது எளிதாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்பதால் இனிவரும் ஓசைப் பயிற்சிகளை இப்போது தரப் போவதில்லை. அகவற் பயிற்சிகளையும் பின்னர் முயன்று பார்க்கலாம்.

    02. எனினும், இயற்பா வடிவத்தில் எழும் செய்யுள் ஓசை பற்றி முதலிலேயே தெரிந்துகொள்வது முக்கியம் என்பதால், இதுவரை வந்தவற்றில் கீழுள்ள பகுதிகளை மட்டும் ஒருமுறைக் கிருமுறை படித்து விளங்கிக் கொள்ளவும்.

    2. செய்யுள் உறுப்புகள்
    2.1. செய்யுள் இயற்ற
    3.1. அசையும் சீரும்
    3.2. செய்யுள் ஓசை
    3.3. அகவல் ஓசை
    3.4. அகவல் முயற்சி

    03. இனிவரும் பகுதிகளில் செப்பல், துள்ளல், தூங்கலோசை பற்றிய விவரங்களும் எழுத்தெனும் அடிப்படை உறுப்பின் விவரங்களும் அறிந்த பின்னர், அசை-சீர் பற்றிய பகுதிகள் வரும்போது வாசகர்கள் அப்போது வரும் பயிற்சிகளை மும்முரமாக முயன்று பார்க்கலாம்.

    04. ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அப்போதே கேட்கலாம். எனக்குத் தெரிந்த வரையில் விளக்க முயல்கிறேன்.

    அன்புடன்,
    ரமணி

  2. #26
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    3.5. செப்பல் ஓசை

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    செப்புதல் என்றால் பதில்சொற் கூறுதல்
    தானே இயல்பாக மறைவின்றி மொழிவது.
    "மறைத்துக் கூறாது செப்பிக் கூறுதல்"
    என்பார் நச்சினார்க் கினியர் உரையிலே.

    "இசைகுறித்து வருதலின்றி செப்புத லாகிய
    வாக்கியம் போன்ற ஓசை" என்று
    கூறுவார் இளம்பூ ரணர்தம் உரையிலே.

    வெண்பா யாப்பது செப்பல் ஓசையில்
    வெண்பாவில் வராது அகவல் ஓசை
    செப்பலை விளக்கும் கீழ்வரும் வெண்பா.

    (பலவிகற்ப இன்னிசை வெண்பா)
    வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்
    வெண்டளையால் தானே வருவது செப்பலோசை
    மாமுன் நிரையும் விளம்காய்முன் நேரும்
    வருவது வெண்டளை காண்.

    வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
    பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
    நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
    சேர்ந்தோ வருமெனக் காண்.


    (இருவிகற்ப நேரிசை வெண்பா)
    செப்பல் ஒலித்திடும் வெண்பா வடிவத்தில்
    செப்புவர் சான்றோர்தம் நல்லுரை - இப்படி
    நல்வழி மூதுரை போன்ற பனுவல்கள்
    செல்வழி சொல்வன வாம்.

    சான்று 1.
    நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
    குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
    நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
    தான்செல் உலகத் தறம்.
    --விளம்பி நாகனார், நான்மணிக்கடிகை 11


    சான்று 2.
    நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
    இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்---உமைக்கினிய
    மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்!
    சிந்தையே, இம்மூன்றும் செய்.
    --மஹாகவி பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 25


    *****
    Last edited by ரமணி; 28-01-2013 at 09:34 AM.

  3. #27
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    3.6. செப்பல் முயற்சி

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    நாமும் செப்பல் புனைந்திடு வோமா?
    செப்பல் ஓசையின் தேவைகள் என்ன?
    மாமுன் நிரையும் விளம்முன் நேரும்
    காய்முன் நேரும் சீரிடை அடியிடை
    வந்தால் செப்பல் தானே பயிலுமே.


    காய்ச்சீர் என்பது நேரில் முடியும்
    மூவசைச் சீரென நினவிற் கொள்வோம்.
    தானே இயல்பாய் மொழிதல் மற்றும்
    வாக்கியம் போல அமைவது செப்பல்.

    செப்பல் ஓசை பயிலும் வெண்பா
    ஒன்று நான்கு அடிகளில் முயல்வோம்
    வெண்பா விளக்கம் வேறோர் இயலிலே.

    (பிழையுள்ள வெண்பா)
    கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
    மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
    பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடக்க
    மாடியில் போட்ட வடாம்.

    இந்த அடிகளை அலகிடக் கிடைப்பது
    கண்/ணோ/டு கண்/ணோக்/கின் காக்/கை பறக்/குமா?
    மண்/ணோ/டு காற்/றடித்/தால் உள்/ளம் பத/றுமே!
    பா/டுபட்/டுக் கா/யவைத்/து வாழ்க்/கை நடக்/க
    மா/டியில் போட்/ட வடாம்.

    சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
    நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை
    நேர்நேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர் நிரைநிரை
    நேர்நிரைநேர் நேர்நிரைநேர் நேர்நேர் நிரைநேர்
    நேர்நிரை நேரநேர் மலர்.

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    மூன்றாம் நான்காம் அடிகளைப் பிணைத்து
    நேர்-நேர் எனவரும் தளைமுரண் கண்டீரோ? ... [நடக்க--மாடியில்]
    இம்முரண் போக்கிட இப்படி மாற்றுவோம்.

    (வெண்பா)
    கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
    மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
    பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடந்திட ... [’நடக்க’ என்பதை மாற்றி]
    மாடியில் போட்ட வடாம்.


    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    எதுகை மோனை முயற்சிகள் இன்றி
    இன்றைய பேச்சு வழக்கில் பயிலும்
    சொற்களை வைத்து இன்னொரு வெண்பா.

    இந்த அடிகளை அலகிட்டுப் பார்த்து
    செப்பல் ஓசை சீரிடை அடியிடை
    வருவது கண்டு உறுதி செய்யவும்.

    (வெண்பா)
    நேரம் தவறாமல் வேளைக்குச் சாப்பாடு
    நாயர் கடைடீ நினைத்தபோது சூடாக
    வாரம் ஒருமுறை மாட்டினி மூவிகள்
    பேச்சிலர் வாழ்க்கையே வாழ்வு!


    *****
    Last edited by ரமணி; 28-01-2013 at 09:35 AM.

  4. #28
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    3.7. துள்ளல் ஓசை

    (இணைக்குறள் ஆசிரியப்பா)
    துள்ளல் என்பது குதித்தல் ஆகும்
    துள்ளலில் நடையே தடைப்படும்
    பசுவின் கன்று துள்ளல் போல
    இடையிடை உயர்ந்து மீண்டும் சமன்படுமே.

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    துள்ளலை விளக்கும் கீழ்வரும் மூன்று
    அடிகளில் சீரிடை மட்டும் கலித்தளை
    பயின்றிடத் துள்ளல் வருவது காண்க.

    (ஆசிரியத் தாழிசை)
    ஓரடிக்குள் அறுதியிட்டோ அடியிடையே தொடர்ந்துவந்தோ
    காய்ச்சீர்முன் நிரைவந்த கலித்தளையால் கலிப்பாவில்
    துள்ளலோசை பயின்றுவந்து பசுக்கன்றை நினைவூட்டும்.


    சான்று 1:
    (தரவுக் கொச்சகக் கலிப்பா)
    ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய
    இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள்
    கருநோக்கா வகைக்கருணைக் கண்ணோக்கம் செயுஞானத்
    திருநோக்க அருணோக்கம் இருநோக்கும் செயச்செய்து
    மருநோக்கும் பொழில்தில்லை மணிமன்றுள் நடஞ்செய்வோய்.
    ---குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை

    ’வகைக்கருணைக் கண்ணோக்கம்’ இருசீர்கள் தவிர்த்தெல்லாச்
    சீர்களிடை அடிகளிடைக் கலித்தளையே பயின்றுவர
    அடிகளிலே ஒலித்துள்ளல் அமையாது போமோகாண்!

    சான்று 2
    (தரவுக் கொச்சகக் கலிப்பா)
    கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ
    பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
    விற்குவனை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
    அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்.
    --சேக்கிழார், திருத்தொண்டர் புராணம் 140


    வெண்டளையும் கலித்தளையும் சமமாகப் பயின்றாலும்
    அணிமேலே அணிசேர்ந்தே அதிசயங்கள் அடுக்கிவரத்
    துள்ளலோசை துவளாமல் ததும்புவது கண்டீரோ?

    *****
    Last edited by ரமணி; 28-01-2013 at 09:37 AM.

  5. #29
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    நேர்முன் நேரும் நிரைமுன் நிரையுமாய்ச்
    சீர்கள் ஈரசை பெற்று வந்தால்
    சீர்த்துக் கேட்கும் அகவல் ஓசை
    அகவற் றளைகள் மட்டும் வரவே.
    நன்றி ஐயா ..

    கடைசி வரியை கொஞ்சம் விளக்குங்களேன்

  6. #30
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    வணக்கம் திரு.ஜான்.

    அகவற் றளைகள் இரண்டு வகைப்படும் (இவை பற்றிய விவரங்கள் தளைகள் இயலில் வருவதால் இங்கு விளக்கவில்லை): நேர்முன் நேர் வருவது நேரொன் றாசிரியத் தளை [உதாரணம்: கண்ணன் என்னும் மன்னன்]. நிரைமுன் நிரை வருவது நிரையொன் றாசிரியத் தளை [உதாரணம்: வருவது உரைத்திடும்].

    இவ்விரு ஆசிரியத் தளைகள் மட்டுமோ அல்லது பெரிதுமோ சீர்கள் இடையிலும் அடிகள் இடையிலும் வந்தால் எழும் ஓசையே அகவலோசை. அடிகளிடை வருவது என்பது முதலடியின் இறுதிச் சீரும் இரண்டாமடியின் முதற்சீரும் தளையில் ஒன்றுதலாகும். ஆசிரியத் தளைகள் இயற்சீர் என்றும் ஆசிரிய வுரிச்சீர் என்றும் அழைக்கப்படும் ஈரசைச் சீர்களிலேயே வரும்.

    அன்புடன்,
    ரமணி


    Quote Originally Posted by ஜான் View Post
    நேர்முன் நேரும் நிரைமுன் நிரையுமாய்ச்
    சீர்கள் ஈரசை பெற்று வந்தால்
    சீர்த்துக் கேட்கும் அகவல் ஓசை
    அகவற் றளைகள் மட்டும் வரவே.
    நன்றி ஐயா ..

    கடைசி வரியை கொஞ்சம் விளக்குங்களேன்

  7. #31
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    3.8. துள்ளல் முயற்சி
    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    நாமும் துள்ளல் புனைந்திடு வோமா?
    துள்ளல் ஓசையின் தேவைகள் என்ன?
    கலித்தளை பெரிதும் வருவது வேண்டும்.

    (கலிவிருத்தம்)
    காய்ச்சீர்முன் நிரைவந்தால் கலித்தளையாய்க் குதித்துவரும்
    கலிப்பாவில் கலித்தளையே பெரும்பாலும் பயின்றுவரும்
    கலித்தளையே சீர்களிடை பெரிதும்வர வேண்டுவது
    கலித்தளையே அடியிடையே கட்டாய மில்லை.


    முயற்சி 1.
    (குறள் வெண்செந்துறை)
    வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையைப் பிடித்திழுத்(து)
    இடுப்பினிலே இருத்திவைத்து நிலாகாட்டி உணவூட்டினாள்.


    (ஆசிரியத் தாழிசை)
    இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
    வீட்/டுக்/குள் பறந்/தோ/டும் குழந்/தை/யைப் பிடித்/திழுத்(து)
    இடுப்/பினி/லே இருத்/திவைத்/து நிலா/காட்/டி உண/வூட்/டினாள்.

    சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
    நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரை
    நிரைநிரைநேர் நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநேர்நிரை

    (குறள் வெண்செந்துறை)
    மூவசைச் சீர்கள் நேரசையில் முடிந்து
    நிரைதொடரக் கலித்தளை வருவது காண்க.

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    பிடித்திழுத்(து) இடுப்பினிலே என்ற சீர்கள்
    பிடித்திழுத் திடுப்பினிலே என்றாகிப் புணர்ச்சியில்
    கருவிளம் கருவிளங்காய்ச் சீர்களாகி விளம்முன்
    நிரைவர நிரையொன் ராசிரியத் தளையாகு(ம்)
    எனினும் பெரிதும் கலித்தளை பயின்று
    வருவதால் அடிகளில் துள்லலே கேட்கும்
    குழந்தையின் துள்ளலும் தாய்தடு மாற்றமும்
    பொருளிலும் ஒலியிலும் இயல்வது நோக்குக.

    (தரவுக் கொச்சகக் கலிப்பா)
    துள்ளலோசை தொடர்ந்துவர நிரையசையில் தொடங்குகிற
    புளிமாங்காய் கருவிளங்காய் எனும்காய்ச்சீர் களையடுக்கி
    நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர்
    அடிதோறும் அமைத்திட்டால் எழுதும்பா முழுவதுமே


    ஒலித்துள்ளல் வருமெனினும் இதுபோல எழுதுவது
    கடினமென்றும் ஒருநிலையில் செயற்கையாகு(ம்) எனக்காண்க
    எனவேதான் கலித்தளையும் பிறதளையும் விரவிவரக்
    கலிப்பாக்கள் பொதுவாக இயற்றப்படல் காணலாம்.

    முயற்சி 2.
    [அலகிட்டுக் கலித்தளையே பயில்வது காண்க.]
    (குறள் வெண்செந்துறை)
    படபடக்கும் சிறகுடனே பறந்துவரும் புறாக்கூட்டம்
    சடசடெனத் தரையமர்ந்து பொரியுண்ணும் அழகுகாண்பீர்!


    *****

  8. #32
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    3.9. தூங்கல் ஓசை

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    நித்திரை மயக்கம் பயின்று வருமாம்
    வஞ்சித் தளையில் தூங்கல் ஓசையில்.
    தூங்கல் ஓசையில் பாட்டின் விஷயம்
    தூங்குவது பற்றி என்பது அல்ல.

    அகவலு மின்றிச் செப்பலு மின்றித்
    துள்ளலு மின்றி ஒலிகளில் மயக்கம்
    மந்தம் ஓய்வு ஏக்கம் வந்திடத்
    தூங்கல் ஓசை தளைகளில் கேட்கும்!

    தூங்கலில் வருவது தளைகள் இரண்டு.
    கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியில்,
    கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியில்.

    தூங்கலை விளக்கும் வஞ்சி யடிகள்:

    (கலித்தாழிசை)
    வஞ்சித்தளை ஒன்றாமலும் பொருந்தியும்வரும்
    தூங்கல்*ஒலி ஓரடியினில் முடிவுறுவது வஞ்சிப்பா.

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    வஞ்சி யடிகள் பொதுவில் அமைவது
    இருசீர் அல்லது முச்சீர் அடிகளாய்

    தூங்க லோசை கேட்குமோர் பாடல்:

    சான்று:
    (குறளடி வஞ்சிப்பா)
    மாகத்தினர் மாண்புவியினர்
    யோகத்தினர் உரைமறையினர்
    ஞானத்தினர் நய-ஆகமப்
    பேரறிவினர் பெருநூலினர்
    காணத்தகு பல்கணத்தினர்
    ---கி.வா.ஜ.,’கவி பாடலாம்’ பக்.201


    (இணைக்குறள் ஆசிரியப்பா)
    மரபு சார்ந்த உரைகளில் கூறுவர்:
    அகவல் செப்பல் இரண்டும் வருமே
    செய்யுள் உரைநடை இரண்டு வடிவிலும்
    எனினும் துள்ளல் தூங்கல் இரண்டும்
    செய்யுளில் மட்டுமே வருவன.
    அகவல் செப்பல் அடியிடைத் தளைக்கும்
    துள்ளல் தூங்கல் அடிகளில் மட்டுமே.

    *****
    Last edited by ரமணி; 30-01-2013 at 10:37 AM.

  9. #33
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    3.10. தூங்கல் முயற்சி

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    நாமும் தூங்கல் புனைந்திடு வோமா?
    தூங்கல் ஓசையின் தேவைகள் என்ன?
    கனிமுன் நிரையோ நேரோ வருகிற
    வஞ்சித் தளைகள் பயில வேண்டும்
    இருசீர் அல்லது முச்சீர் அடிகளில்.
    மூவசை நிரையில் முடிவது கனிச்சீரே.


    முயற்சி 1.
    (குறள் வெண்செந்துறை)
    ஆரியபவன் நெய்ரோஸ்ட்டினில் பொய்மணக்குமே!
    பிரியாணியில் காய்கறிகளைத் தேடவேண்டுமே!


    ஆ/ரிய/பவன் நெய்/ரோஸ்ட்/டினில் பொய்/மணக்/குமே!
    பிரி/யா/ணியில் காய்/கறி/களைக் தே/டவேண்/டுமே!

    நேர்நிரைநிரை நேர்நேர்நிரை நேர்நிரைநிரை
    நிரைநேர்நிரை நேர்நிரைநிரை நேர்நிரைநிரை

    (நேரிசை ஆசிரியப்பா)
    மூவசைச் சீர்கள் நிரையில் முடிந்து
    நேரோ நிரையோ தொடர
    வஞ்சித் தளைகள் பயிவது காண்க.

    முயற்சி 2.
    (வஞ்சித் துறை)
    தாலாட்டுகள் பலபாடியும்
    காலாட்டுமே தூங்காது!
    எட்டிநோக்கிடும் சுட்டிப்பயல்
    பட்டுவிழிகள் சினம்தணிக்கும்!


    தா/லாட்/டுகள் பல/பா/டியும்
    கா/லாட்/டுமே தூங்/கா/து!
    எட்/டிநோக்/கிடும் சுட்/டிப்/பயல்
    பட்/டுவிழி/கள் சினம்/தணிக்/கும்!

    நேர்நேர்நிரை நிரைநேர்நிரை
    நேர்நேர்நிரை நேர்நேர்நேர்
    நேர்நிரைநிரை நேர்நேர்நிரை
    நேர்நிரைநிரை நிரைநிரைநேர்

    (நேரிசை ஆசிரியப்பா)
    மூவசைச் சீர்கள் நிரையில் முடிந்து
    நேரோ நிரையோ தொடர
    வஞ்சித் தளைகள் பயிவது காண்க.

    *****

  10. #34
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    4. யாப்பு விவரணம்: அடிப்படை உறுப்புகள்

    (இணைக்குறள் ஆசிரியப்பா)
    அசைகள் இசைந்து ஒலித்து ஒருங்கே
    இயல்பாய் அமைவது செய்யுள் என்றும்
    ஒசை ஒருங்கே அமைந்து ஒலிக்கத்
    தளைகள் முக்கியம் என்றும்
    அறிந்த பின்னர் இனிமேல்
    செய்யுளின் அடிப்படை உறுப்புகள் ஆய்வோம்.

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    முன்பே சொன்னதை நினைவில் கொணர
    அளவும் பாவும் அடியும் சீரும்
    அசையும் எழுத்தும் மாத்திரை யாக
    அடிப்படை உறுப்புகள் ஏழெனத் தெரியுமே. ... [பார்க்க 3.,2.1.]

    4.1. மாத்திரை

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    மாத்திரை என்பது கால அளவு.
    கண்ணிமை கைநொடி செய்தல் காலம்
    மாத்திரை யாகும் ஒன்றென் றறிக.

    எழுத்தொலிக் காலமே யாப்பின் மாத்திரை
    எழுத்தின் மாத்திரை இப்படி யாகும்:
    குறிலொன்று, நெடிலிரண்டு, உயிரளபெடை மூன்றே.

    குற்றிய லிகரம், குற்றிய லுகரம்,
    ஆய்தம், மெய்யிவை அரைமாத் திரையே;
    உயிரின் அளவே உயிர்மெய் அளவு.

    ஒற்றளபெடை, ஐகாரக் குறுக்கம் ஒன்று;
    மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம்
    என்பன கால்மாத் திரையில் ஒலிக்குமே.


    4.2. எழுத்து

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    எழுவெனும் வினையடிப் பிறந்த சொல்லாம்
    எழுத்து என்பது பெயர்ச்சொல் ஆகும்
    எழுதல் என்றால் உருப்பெறத் தோன்றுதல்
    எழுதுதல் என்பது தோன்றச் செய்தலே.

    எண்ணம் உருப்பெறத் தோன்றும் எழுத்து
    உருவின்றிக் ஒலியாய்க் கேட்டதை வரைந்து
    உருவுடன் பார்க்க வைப்பது எழுத்து.

    எண்ணங்கள் அலையுமனம் எழுத்தில் சீர்ப்பட
    வண்ணங்கள் விரிந்து காணுமனம் நிறைக்கும்.
    எழுத்து இன்றேல் இலக்கியம் இல்லை.

    எழுத்தின் மகிமை குறித்தே பொருள்பல
    எழுத்தெனும் சொல்லில் அடங்கி யுள்ளன.
    எழுத்தே முதலில் ஓரொலியின் வரிவடிவம்.

    எழுதுதலும் எழுதியதும் குறிக்கும் எழுத்து.
    தலைவிதி என்பதும் ஆகும் எழுத்து.
    கையில் ஓடும் ரேகை எழுத்து.

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்று
    வள்ளுவர் பெருமான் சொல்லும் போது
    இலக்கணம் என்று பொருள்படும் எழுத்து.
    எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
    என்று ஔவையும் குறள்வழி கூறுவார்.

    எழுதும் எழுத்து வரிவடி(வு) என்பதால்
    எழுதுதல் என்பது வரைதலைக் குறிக்க
    எழுத்தெனும் சொல்லது சித்திரமும் சுட்டுமே.

    கண்ணுக்கு மையெழுதும் பெண்ணைக் கவிஞன்
    எழுத்தில் எழுதி மனதில் வரைவான்.
    ஓவியன் வரிகளோ மனதில் எழுதுமே.

    *****

  11. #35
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    4.3. எழுத்தின் வகைகள்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    எழுத்தில் வரைவது பேசும் ஒலியாம்.
    எழுத்தெனப் படுவது எழுதப் படுவது
    என்று இலக்கண நூல்கள் குறிக்குமே.

    எழுத்தெனப் படுவது மூவகைப் படுமே
    உயிரும் மெய்யும் சார்பும் என்று.
    உயிரும் மெய்யும் முதலெழுத் தெனப்படும்
    முதல்சார்ந்து வந்தது சார்பெழுத் தாகுமே.

    முதலில் வருவது மொத்தம் முப்பது
    உயிரெழுத் துகளில் பத்தும் இரண்டும்
    மெய்யெழுத் துகளில் பத்தும் எட்டுமே.

    4.4. உயிரின் வகைகள்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    அ-முதல் ஔ-வரை உயிரெழுத் தாகும்
    உயிரில் வகைகள் மூன்று உண்டு
    குறிலே நெடிலே அளபெடை என்று.
    குறில்கள் ஐந்து: அ,இ,உ, எ,ஒ-என,
    நெடில்கள் ஏழு: ஆ,ஈ,ஊ,ஏ, ஐ,ஓ,ஔ.

    4.5. மெய்யின் வகைகள்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    இக்-முதல் இன்-வரை மெய்யெழுத் தாகும்
    மெய்யில் வகைகள் மூன்று உண்டு
    வல்லினம் மெல்லினம் இடையினம் என்றே.

    கசட தபற வல்லின மாகும்
    ஙஞண நமன மெல்லின மாகும்
    யரல வழள இடையின மாகும்
    மெய்யெனும் உயிரிலா எழுத்துகள் யாவும்
    ஒற்றுப் பெறுவதால் ஒற்றெனப் படுமே.

    4.6. சார்பின் வகைகள்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    சார்பெழுத் தென்பது வகைகளில் பத்து
    உயிர்மெய் ஆய்தம் உயிரளபெடை ஒற்றளபெடை
    குற்றிய லுகரம் குற்றிய லிகரம்
    ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம்
    மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம்
    என்பன அந்தப் பத்து வகைகளாம்.

    முதலெழுத் துகளைச் சார்ந்து வருதலால்
    சார்பெழுத் தென்னும் பெயரினைத் தாங்கி
    மேலுள்ள பத்து வகைகளில் வருமே.

    4.7. உயிர்மெய்

    (நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
    இக்-முதல் இன்-வரை ஒவ்வொரு மெய்யும்
    அ-முதல் ஔ-வரை உயிருடன் சேர்ந்து
    க-முதல் ன-வரை இருநூற்றுப் பதினாறாக
    வருவது உயிர்மெய் எழுத்துகள் ஆகுமே
    சான்றாக
    ககா-கிகீ குகூ-கெகே கைகொகோ
    கௌ-என்று க-வர்க்க உயிர்மெய் பன்னிரண்டே.

    4.8. ஆய்தம்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    உயிரிலும் மெய்யிலும் உயிர்மெய் யிலும்சேரா
    அஃ-எனச் சொல்லும் ஆய்த எழுத்துக்கு
    முப்புள்ளி முப்பாற் புள்ளி தனிநிலை
    என்றே வேறு பெயர்களும் உண்டே.

    முன்னொரு குறிலும் பின்னொரு வல்லினம்
    பெற்று இடைவரும் ஆய்த எழுத்தே.
    சான்றாக அஃது, எஃகு, எனவரும்.
    தனக்கே உரிய அரைமாத் திரையில்
    குறையா தொலிப்பது முற்றாய்த மாகும்.

    *****

  12. #36
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    4.9. அளபெடை யென்பது

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    அளபு என்பது மாத்திரை அளவு
    அளபு எடுத்தல் மாத்திரை நீளுதல்
    அளபு எடுத்துத் தனதுமாத் திரையின்
    நீண்டு ஒலிப்பதே அளபெடை யாகும்
    அளபெடுத்தல் குறிக்க அளபெடுத்த எழுத்தின்
    இனவெழுத் தொன்று தொடர்ந்து வருமே.

    செய்யுளில் ஓசை குறையும் போது
    உயிர்நெடில் எழுத்துகள் ஏழும்
    ஙஞண நமன வயலள பத்தும்
    தனியே நிற்கும் ஆய்த எழுத்தும்
    தத்தம் மாத்திரை நீண்டு ஒலிப்பதே
    அளபெடை என்று அழைக்கப் படுவது
    அளபெடை இருவகை: உயிரும் ஒற்றும்.

    4.10. உயிரளபெடை

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    நெடில்பின் தக்க குறிலே வந்து
    ஒசை நிரப்பும் உயிரள பெடையாம்
    மூன்று மாத்திரை யாக ஒலிக்கும்.
    உயிரள பெடையில் மூவகை யுண்டு
    செய்யுளிசை இன்னிசை சொல்லிசை யென்றே.

    அளபெடுக்கும் போதோர் இனவெழுத்து தோன்றுமே:
    ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
    ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ.

    4.11. செய்யுளிசை அளபெடை

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    ஓசை நிரப்ப உயிர்நெடில் எழுத்துகள்
    முதலிடை கடையில் அளபெடுத்து வந்தால்
    செய்யுளிசை அளபெடை என்றபெயர் பெறுமே.

    ’ஆஅதும் என்னுமவர்’ என்று முதலிலும்,
    ’தெய்வந் தொழாஅள்’ என்று இடையிலும்,
    ’நல்ல படாஅ’ என்று கடையிலும்
    செய்யுளிசை அளபெடுத்து வருவது காண்க.

    அதும்-தொழாள்-படா என்னும் சொற்கள் தம்முள்
    ஓரசைச் சீராய் நிற்றல் கருதி
    ஓசை நிறைக்க அவற்றை நீட்டி
    ஈரசைச் சீர்க ளாக்கி எழுதி
    அசையும் தளையும் குன்றா திருக்கச்
    செய்த முயற்சியே செய்யுளிசை யளபெடை.

    சான்றுகள்:
    ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
    ஆஅதும் என்னு மவர்.
    --திருக்குறள் 653

    அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
    நல்ல படாஅ பறை.
    --திருக்குறள் 1115

    தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை.
    --திருக்குறள் 55


    4.12. இன்னிசை அளபெடை

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
    இன்னிசை நோக்கி அளபெடுத்து வந்தால்
    இன்னிசை அளபெடை என்றபெயர் பெறுமே.

    ’கெடுப்பதூஉம் கெட்டார்க்கு’, ’உடுப்பதூஉம், உண்பதூஉம்’
    என்பன இன்னிசை அளபெடைச் சான்றுகள்.
    ’கெடுப்பதூம், உடுப்பதூம், உண்பதூம்’ சொற்கள்
    ’கெடுப்பதும் உடுப்பதும் உண்பதும்’ என்றே
    ஈரசைச் சீரின் இலக்கணம் அமைந்தும்
    இன்னிசை நோக்கி அளபெடுத்தல் காண்க.

    சான்றுகள்:
    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை.
    --திருக்குறள் 15

    உடுப்பதூஉம் உணபதூஉம் காணின் பிறர்மேல்
    வடுக்காண் வற்றாகும் கீழ்.
    --திருக்குறள் 1079


    4.13. சொல்லிசை அளபெடை

    (நேரிசை ஆசிரியப்பா)
    ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
    ஒருசொல் மற்றொன் றாக வேறுபடுத்தி,
    சொல்லிசை கூட்ட வருவது
    சொல்லிசை அளபெடை என்றபெயர் பெறுமே.

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    சொல்லிசை அளபெடை வந்திடும் போது
    பெயர்ச்சொல் லொன்று வினையெச் சமாகும்.
    ’நசைஇ தொகைஇ வளைஇ அளைஇ’
    ’விரும்பி தொகுத்து வளைத்து அளந்து’
    என்பன சொல்லிசை அளபெடைச் சான்றுகள்.

    (இணைக்குறள் ஆசிரியப்பா)
    "உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
    வரனசைஇ யின்னும் உளேன்"
    என்ற குறளில், நசையெனும் விருப்பம்,
    அளபெடுத்து நசைஇ, விரும்பி என்று
    ஆனது சொல்லிசை அளபெடைச் சான்று.

    சான்றுகள்:
    உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
    வரனசைஇ யின்னும் உளேன்.
    --திருக்குறள் 1263

    அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
    முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி
    --தொல்காப்பியம், பொருள்.அகத். 39

    நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
    வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
    --நப்பூதனார், முல்லைப்பாட்டு 1-2

    இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
    செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
    --திருக்குறள் 91


    4.14. ஒற்றள பெடை

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    செய்யுளில் ஓசை குறையு மிடத்து
    மெய்யெழுத்து மிகுந்து ஒலித்து பாட்டில்
    ஒசை நிரப்புவது ஒற்றள பெடையாம்.

    செய்யுள் ஓசை குறையு மாயின்
    ஈடு செய்ய இடைகடை அளபெடுத்து
    நீண்டு ஒலிக்கும் பதினொரு எழுத்துகள்
    ஙஞணநமன வயலள ஆய்தம் என்பன,
    அளபெடுத் ததுகாட்ட மீண்டும் எழுதப்படும்.

    குறிலின் குறிலிணைக் கீழ்வரும் ஒற்று
    இடைகடை அளபெடுத்து மிக்கு வரும்.
    ’எஃஃகு இலங்கிய’, ’பூவுந் தண்ண் புனமயில்’,
    ’இலங்ங்கு வெண்பிறை’ என்பன சான்றுகள்.

    ’எஃஃகு, இலங்கிய’ தனிக்குறிற் கீழிடை
    ’கண்ண் கருவினை’ தனிக்குறிற் கீழ்கடை
    ’கலங்ங்கு நெஞ்சமிலை’ குறிலிணைக் கீழிடை
    ’மடங்ங் கலந்த’ குறிலிணைக் கீழ்க்கடை
    ஒற்றள பெடையாய் வருவது காண்க.

    சான்றுகள் அனைத்திலும் ஒற்றள பெடுத்ததால்
    ஓரசைச் சீர்கள் ஈரசை யாகிச்
    செய்யு ளொசை நிறைத்தல் காண்க.

    சான்றுகள்:
    எஃஃகிலங்கிய கையராயின்னுயிர்
    வெஃஃகுவார்க் கில்லைவீடு.

    பூஉந் தண்ண் புனமயில் அகவ
    மாஅங் குயில்கள் சாஅய்ந் தொளிப்பப்
    --சிதம்பரச் செய்யுட் கோவை 12


    அளபெடைச் சீர்களை அலகிடும் போது
    தளைகள் தட்டில் அலகு பெறுமே
    தளைகள் ஒன்றின் அலகு பெறாது.

    அளபெடை மாத்திரை நோக்கும் போது
    உயிரளபெடை ஒலிப்பது மூன்றுமாத் திரையில்
    ஒற்றளபெடை ஒலிப்பது ஒருமாத் திரையிலே.

    *****

Page 3 of 16 FirstFirst 1 2 3 4 5 6 7 13 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •