Page 1 of 16 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 182

Thread: கவிதையில் யாப்பு

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0

    கவிதையில் யாப்பு

    கவிதையில் யாப்பு
    யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
    ரமணி


    இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
    தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
    கடந்த சில மாதங்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
    என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
    வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

    யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
    எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
    கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

    அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
    யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

    யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
    வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
    அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
    என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

    தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
    வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
    இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.

    இந்தத் தொடரைப் பிற தமிழ் மன்றங்களிலும் என் வலைப்பூவிலும், புனைந்து பதிந்து வருகிறேன். இங்கும் பதிவுசெய்யும் வாய்ப்பு எனக்கு மகிழ்ச்சி.

    *****

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    கவிதையில் யாப்பு
    ரமணி


    1. கடவுள் வாழ்த்து

    கணபதி
    (கலிவிருத்தம்)
    வெண்துகில் உடுத்து வெளியெங்கும் வியாபித்து
    வெண்ணிலா நிறத்துடன் ஆனந்த முகம்கொண்ட
    ஓங்கார வடிவத்தை விக்னமறத் தியானித்துப்
    பாங்காக நூலமையப் பாதம் பணிவேனே.

    அவையடக்கம்
    (வெண்டுறை)
    கற்றறிந்தோர் நூற்பல சற்றேனும் கற்றதில்
    பெற்றசில செய்தி மகிழ்ச்சி வியப்பினை
    மற்றவரும் கண்டு மகிழ்ந்து பயன்பெற
    உற்றதே ’கவிதையில் யாப்பு’.

    1.1. செய்யுளும் கவிதையும்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    யாப்பு என்பது கட்டும் நியதி.
    யாத்தல் என்பது பிணித்தல், புனைதல்.
    யாவெனும் வினையடிப் பிறந்தது யாப்பே.

    எழுத்தும் அசையும் சீரும் தளையும்
    தொடுத்து அடிகளில் சேரக் கட்டிப்
    பொருளினை விளக்கிச் செய்யுள் அமைக்க
    உரிய இலக்கணம் யாப்பிலக் கணமாம்.

    செய்யுள் என்பது செய்யப் படுவது.
    பத்தியும் பாட்டும் காவியம் உரையும்
    செய்யுள் என்பதன் பிரதி பதங்களே.

    கவிதை என்பது கவினுற விதைத்தல்.
    பாட்டு என்பது பாடப் படுவது.
    செய்யுளும் பாட்டும் கவிதை வடிவமே.

    மலரும் கொழுந்தும் சேர்த்துத் தொடுத்த
    மாலை போலச் சொற்கள் விரவி
    சீர்படத் தொடுத்தது செய்யுள் எனலாம்.

    மாலையின் நுகர்ச்சி மணமே போலச்
    செய்யுளின் நுகர்ச்சி பொருளே எனலாம்.
    மாலையின் ஊடகம் அதன்நார் என்றால்
    செய்யுளின் ஊடகம் ஓசை எனலாம்.

    யாக்கை என்பது நம்முடல், கட்டுடல்.
    நம்முடல் நாமாகும் நம்மனத் தாலே.
    கவிதை யாப்பில் அதன்பொருள் மனமே.

    கவிதையில் மனதைச் சொல்லும் போது
    செய்யுள் யாக்கையைக் கவினுறச் செய்து
    மாலையின் மணத்தை, மலர்களின் அழகை,
    நாரின் ஓசையை, முழுவதும் துய்ப்போம்.

    *** *** ***

  3. Likes முரளி, ஜானகி liked this post
  4. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    மரபுக்கவிதை என்னும் மங்கை நல்லாளைக் கைப்பிடிக்கும் முயற்சியில் , தோற்றுப்போன 65 வயது காளை நான். வேறு வழியின்றி புதுக்கவிதைப் பெண்ணை மணந்து, நானும் ஒரு கவிஞனாக மன்றத்திலே உலாவிக்கொண்டு இருக்கிறேன். தங்களுடைய கவிதைகள் மூலமாக யாப்பிலக்கணத்தைக் கற்கமுடியும் என்று நம்புகிறேன். தொடரட்டும் தங்களுடைய நன்முயற்சி
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    வணக்கம் திரு. ஜகதீசன்.

    புதுக்கவிதையில் ஜெயிப்பது இல்லைபோல் யாப்பில் தோற்பது இல்லை. யாப்பின் வரையைறைக் குட்பட்ட தெல்லாம் செய்யுளாகிவிடும். செய்யுள் ஊடகத்தில் கவிஞன் மனது சரிவர வெளிப்படின் செய்யுள் கவிதையாகும்.

    புதுக்கவிதை எழுதுவதற்கும் மரபில் வழிகள் உண்டு: 'ரமணியின் கவிதைகள்' என்னும் திரியில் என் இரண்டாவது கவிதை/செய்யுள் நோக்குக.

    இத்தொடரை ஆரம்பிக்கும் போது நானும் ஒரு குறள் வெண்பா கூட ஒழுங்காக எழுதமுடியாதவனாக இருந்தேன். யாப்பில் படிப்பதை ஒரு மாணவனின் 'பர்சனல் நோட்ஸ்' போலக் கவிதையில் பதிந்துகொள்வது உபயோகமாகவும் உற்சாகமாகவும் உள்ளது. யாப்பு பற்றிய என் கவிதைக் குறிப்புகளை நான் இங்குப் பதிவது என்னைப்போல், உங்களுக்கும் பலருக்கும் பயன்படும் என்பது என் நம்பிக்கை.

    அன்புடன்,
    ரமணி

    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    மரபுக்கவிதை என்னும் மங்கை நல்லாளைக் கைப்பிடிக்கும் முயற்சியில் , தோற்றுப்போன 65 வயது காளை நான். வேறு வழியின்றி புதுக்கவிதைப் பெண்ணை மணந்து, நானும் ஒரு கவிஞனாக மன்றத்திலே உலாவிக்கொண்டு இருக்கிறேன். தங்களுடைய கவிதைகள் மூலமாக யாப்பிலக்கணத்தைக் கற்கமுடியும் என்று நம்புகிறேன். தொடரட்டும் தங்களுடைய நன்முயற்சி

  6. Likes முரளி liked this post
  7. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    கவிதையில் யாப்பு
    ரமணி

    2. செய்யுள் உறுப்புகள்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    தொல்காப் பியம்தரும் செய்யுள் உறுப்புகள்
    துல்லிய மாக முப்பத்து நான்கில்
    நல்லதோர் கவிதை மரபில் முனைவோர்
    எல்லோரும் நாடும் அடிப்படை உறுப்புகள்
    வல்லிதின் விரிப்போம் இந்நூல் தனிலே.

    மாத்திரை, எழுத்து, அசையும், சீரும்,
    அடியும், யாப்பும், மரபும், தூக்கும்,
    தொடையும், நோக்கும், பாவும், அளவும்,
    திணையும், கைகோள், கூற்றும், கேட்போர்,
    களனும், காலம், பயனும், மெய்ப்பாடு,
    எச்சம், முன்னம், பொருளும், துறையும்,
    மாட்டு, வண்ணம், அம்மை, அழகு,
    தொன்மை, தோலும், விருந்து, இயைபு,
    புலனும், இழைபும் என்னும் இவையே
    தொல்காப் பியம்தரும் முப்பத்து நான்கே.

    2.1. செய்யுள் இயற்ற

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    செய்யுள் இயற்ற உறுப்புகள் ஏழு:
    அளவும், பாவும், அடியும், சீரும்,
    அசையும், எழுத்தும், மாத்திரை யெனவே.

    பாவே செய்யுள் என்பது ஆகும்;
    அந்தப் பாவும் அளவுடன் வருவது;
    பாவின் அளவு அடிகள் கணக்கு;
    அடியின் அளவு சீர்கள் கணக்கு;
    சீரின் அளவு அசைகள் கணக்கு;
    அசையில் எழுத்துகள் ஒருங்கே அசையும்;
    எழுதப் படுவன எழுத்துகள் ஆகும்;
    எழுத்தொலிக் காலம் மாத்திரை யாகுமே.

    இந்த ஏழு உறுப்புகள் யாவும்
    வழக்கில் உண்டு, செய்யுளில் உண்டு.
    வழக்கில் ஏழும் வரைவின் றிவரும்;
    செய்யுளில் ஏழும் கட்டுண் டுவரும்.
    வழக்கு என்பது பேச்சு வழக்கு,
    வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுளே.

    *****

  8. Likes முரளி liked this post
  9. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    2.2. வரிகள் அமைக்க

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    செய்யுள் அமைக்க உறுப்புகள் ஏழெனில்
    வரிகள் அமைக்கப் பத்தும் இரண்டும்:
    வனப்பு, தொடையே, மாட்டு, வண்ணம்,
    அம்மை, அழகு, தொன்மை, தோலும்,
    விருந்து, இயைபு, புலனே இழைபு
    என்பன அந்தப் பத்தும் இரண்டுமே.

    (குறள் வெண்செந்துறை)
    வனப்பால் வருவது கலையின் நுகர்ச்சி;
    தொடையால் இயல்வது சீரடித் தொடுப்பு.

    விலகியும் அணுகியும் உள்ள சொற்களைப்
    பொருளால் பிணித்தல் மாட்டு என்பது.

    வண்ணம் என்பது செய்யுளின் தாளம்;
    அம்மை என்பது சொற்களின் அமைதி.

    எளிய சொற்களும் பொருந்திய தாளமும்
    அமைய வருவதே அழகு என்பது.

    தொன்மை என்பது பழமை மதிப்பு;
    தோலால் வருவது செய்யுளின் பொற்பு.

    விருந்தால் வருவது செய்யுளின் புதுமை;
    இயைபில் சொற்கள் ஒலிகளில் ஒன்றும்.

    வழக்கில் எளிதே பயிலும் சொற்கள்
    குறிப்பால் பயின்று சொல்வது புலனாம்.

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    தேர்ந்த சொற்கள் உயிரொலி நீண்டு
    மெல்லின இடையின மெய்கள் செறிந்து
    பயிலும் நடையே இழைபு என்பதாம்.

    2.3. பொருள் உணர்த்த

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    வரிகளில் பயில்வது பன்னிரண் டானால்
    பொருளினை உணர்த்தப் பத்தும் மூன்றும்:
    நோக்கும், திணையும், கைகோள், கேட்போர்,
    கூற்றும், களனும், காலம், பயனும்,
    மெய்ப்பா டெச்சம், முன்னம், துறையும்,
    பொருள்வகை என்று பத்தும் மூன்றுமே.

    நோக்கு என்பது கவியின் பார்வை,
    செய்யுள் அணிகளால் கேட்டாரை ஈர்த்து
    தன்னை நோக்கச் செய்யும் உறுப்பே.

    திணை என்பது அகமும் புறமும்;
    அகமாம் மனதின் வடிகால் என்பது;
    புறமாம் வெளிநில வாழ்க்கை என்பது;
    திணைகள் முற்றும் அறிந்திட நாடுவீர்
    தொல்காப் பியத்தில் பொருளதி காரமே.

    கைகோள் என்பது களவும் கற்பும்,
    ஆண்-பெண் வாழ்வின் ஒழுங்கும் முறையும்.
    கேட்போர் என்பது செய்யுள் மாந்தர்,
    கூற்று என்பது அவர்களின் பேச்சே.

    சந்தர்ப்ப சூழல் என்பது களனாம்,
    காலம் என்பது நேரமும் பொழுதும்;
    செய்யுளின் தாக்கம் பயனெனப் படுமே.

    மெய்ப்பா டென்பது தங்கும் உணர்வு;
    உணர்வில் எட்டு வகைகள் உண்டு:
    நகைத்தல், அழுதல், இகழ்தல், வியத்தல்,
    அச்சம், பெருமிதம், வெகுளி, உவகையே.

    முன்னம் என்பது கவிஞன் மரபு;
    எச்சம் என்பது கவிஞன் போக்கு.
    துறை என்பது மரபைத் தழுவல்;
    பொருள்வகை என்பது வேறு படுதலாம்.

    2.4. யாப்பும் தூக்கும்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    யாப்பும் தூக்கும் எஞ்சி யிருப்பன:
    யாப்பு என்பது பாட்டின் செயல்வகை;
    தூக்கு என்பது ஓசையில் இடைவெளி:
    ’பாக்களைத் துணித்து நிறுக்கும் உறுப்பு’. ... ... ... [தொல்.பொ.313]
    தூக்கு என்பது தாளமும் குறிக்கும்.
    தூக்கின் தாளம் ஏழு வகையிலே.
    மரபு என்பது நிறுவிய வழக்கு;
    தூக்கு என்பது மதிப்பினை ஆய்தலுமே.

    செய்யுள் உறுப்புகள் முப்பத்து நான்கில்
    பாக்கள் நீண்டால் பொருந்தி வருவது
    அழகு, தொன்மை, தோலும், விருந்து,
    இயைபு, புலனும், இழைபும் என்று
    இறுதி எட்டாக உள்ள உறுப்புகள்.
    மற்றவை எல்லாம் ஒற்றைப் பாவிலும்
    பாக்கள் திரட்டிலும் உகந்து வருவதே.

    2.5. யாப்பியல்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    வேறொரு நோக்கில் பார்க்கும் போது
    மாத்திரை, எழுத்து, அசையும், சீரும்,
    அடியும், யாப்பும், தூக்கும், தொடையும்,
    பாவும், அளவும், மாட்டு, வண்ணம்,
    இயைபு, இழைபு என்று மொத்தம்
    பத்தும் நான்கும் அமைவது யாப்பியலாம்.

    பொருளைக் குறித்தவை பத்தும் ஒன்பதும்:
    நோக்கும், திணையும், கைகோள், கூற்றும்,
    கேட்போர், களனும், காலம், பயனும்,
    மெய்ய்ப்பா, டெச்சம், முன்னம், பொருளும்,
    அம்மை, அழகு, தொன்மை, துறையும்,
    தோலும், விருந்தும், புலனும் என்று.
    மரபு என்னும் நிறுவிய வழக்கு
    பொருளிலும் வடிவிலும் பொருந்தி வருவதே.

    2.6. மூவகை யாப்பு

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    யாப்பியல் குறித்த பத்தும் நான்கும்
    மேலும் பிரிவது வகைகள் மூன்றாய்.
    அடிப்படை உறுப்புகள் ஏழு ஆகும்:
    மாத்திரை, எழுத்து, அசையும் சீரும்,
    அடியும், பாவும், அளவும் என்றே.

    செய்யுள் செயல்வகை இரண்டில் அமையும்:
    வடிவம் யாப்பில், மதிப்பு தூக்கில்.
    அழகும் மகிழ்ச்சியும் ஐந்தில் அமையும்:
    தொடையும், மாட்டும், வண்ணம், இயைபு,
    தேர்ந்த சொற்களின் நடையில் இழைபே.

    *** *** ***

  10. Likes முரளி liked this post
  11. #7
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    மிக சிறந்த பணி. தொடரட்டும் தங்களுடைய நன்முயற்சி.

    என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
    வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

    யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

    அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
    யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
    எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.
    உங்கள் இலக்கை நீங்கள் அடைய நல் வாழ்த்துக்கள்.

  12. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    3. யாப்பு விவரணம்: ஓசை
    (நிலைமண்டில ஆசிரியப்பா)

    அடிப்படை உறுப்புகள் முதலில் ஆய்வோம்.
    செயல்வகை உறுப்புகள் பின்னர் பார்ப்போம்.
    பொருள்வகை உறுப்புகள் இறுதியில் வருமே.

    அடிப்படை உறுப்புகள் ஏழில் வருமே:
    அளவும், பாவும், அடியும், சீரும்,
    அசையும், எழுத்தும், மாத்திரை யாகவே. ... [பார்க்க 2.1.,2.6.]

    செயல்வகை உறுப்புகள் ஏழில் வருமே:
    யாப்பும், தூக்கும், தொடையும், மாட்டும்,
    வண்ணம், இயைபு, இழைபு என்றே. ... [பார்க்க 2.6.]

    பொருள்வகை உறுப்புகள் பத்தும் ஒன்பதும்:
    நோக்கும், திணையும், கைகோள், கூற்றும்,
    கேட்போர், களனும், காலம், பயனும்,
    மெய்ய்ப்பா, டெச்சம், முன்னம், பொருளும்,
    அம்மை, அழகு, தொன்மை, துறையும்,
    தோலும், விருந்தும், புலனும் என்றே. ... [பார்க்க 2.3.,2.5.]

    ஓசை:
    மாத்திரை என்பது எழுத்தொலிக் காலம்;
    எனவே முதலில் ஓசையை ஆய்வோம்.
    தளைகள் பயின்றிட வருவது ஓசை.
    தளையால் ஓசையும் ஓசையில் தளையும்
    என்றிவ் விரண்டும் ஸயாமின் இரட்டையரே.

    இயல்பான ஓசையில் வருவது இயற்பா
    இசையோடு சேர்ந்து ஒலிப்பது இசைப்பா
    இயற்பா இயல்வது இலக்கண விதிகளில்
    இசைப்பா இயல்வது சந்த லயங்களில்
    இலக்கண விதிகளில் இயலும் இயற்பாவின்
    இயல்பான ஓசையைத் தளைகள் குறிப்பினும்
    இயற்பா ஓசையில் எழுத்தும் சீரும்
    இணைந்தே செய்யுளின் ஓசை எழுமே.

    3.1. அசையும் சீரும்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    ஓசை விவரணம் நோக்கும் முன்னர்
    அசைச்சீர் உறுப்புகள் அடிப்படை தெளிவோம்.
    ஒன்றோ பலவோ எழுத்துகள் சேர்ந்து
    ஒன்றாய் ஒலிப்பது அசையெனப் படுமே.
    அசைகள் ஒன்றோ பலவோ சேர்ந்து
    இசைந்து ஒலிப்பது சீரெனப் படுமே.


    (குறள் வெண்செந்துறை)
    குறிலோ நெடிலோ தனித்துவந் தாலோ,
    ஒற்றடுத்து வந்தாலோ, நேரசை எனப்படும்.

    ’பானு வந்தாள்’ என்ற தொடரில்
    நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.
    [பா/னு வந்/தாள்]

    தனிக்குறில் அசைகள் பெரிதும் சீரின்
    இறுதியில் வருமே: ’பானு, படகு’.

    ஒற்றுகள் எத்தனை வரினும் அசையாகா.
    ’அர்த்தம்’ என்பது நேர்நேர்’ ஆகும்.


    குறில்கள் இரண்டோ, குறில்நெடில் சேர்ந்தோ
    தனித்தும், ஒற்றடுத்தும் வந்தால் நிரையசை.

    ’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
    ’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
    நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.
    [வழி/வகை அறிந்/திடாள்]


    (இணைக்குறள் ஆசிரியப்பா)
    சீர்களின் அசைகளைப் பிரிக்கும் போது
    குறில்கள் தொடர்ந்து வந்தால்,
    இருகுறில் இணைப்பினை
    நிரையெனச் சேர்த்த பின்னரே,
    ஏதும் தனிக்குறில் மீதம் இருப்பின்
    நேரசை யதுவெனப் பிரிக்க வேண்டும்.
    அப்படி மிஞ்சும் தனிக்குறில்
    சீரின் இறுதியில் வருவது காணலாம்.

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    இதனால் ’மகளே’ என்பது ’மக/ளே’
    என்றுதான் ஆகும்; ’ம/களே’ ஆகாது.
    ’வருவதறி’ என்பது ’வரு/வத/றி’ ஆகும்.
    ’வருவதறிகுறி’ என்பது ’வரு/வத/ரிகு/றி’ ஆகுமே.

    அசைகள் இணைந்து வருகிற சீர்களில்
    ஈரசை மூவசைச் சீர்களே செய்யுளில்
    பெரிதும் பயின்று வருமென அறியலாம்.

    ஈரசைச்சீர் இருவகை: மாச்சீர் விளச்சீர்.
    நேரசை இறுதியில் வருவது மாச்சீர்
    நிரையசை இறுதியில் வருவது விளச்சீர்.

    மூவசைச்சீர் இருவகை: காய்ச்சீர் கனிச்சீர்.
    நேரசை இறுதியில் வருவது காய்ச்சீர்.
    நிரையசை இறுதியில் வருவது கனிச்சீர்.


    அசைச்சீர் வகைகளின் வாய்பா டுகளும்
    செய்யுளை அலகிடும் முறைகள் பற்றியும்
    உரிய பகுதியில் அறியப் பெறலாம்.

    *****
    Last edited by ரமணி; 28-01-2013 at 09:43 AM.

  13. #9
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0
    மிகவும் பயனுள்ள தொகுப்பு... தொடருங்கள் ரமணி !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

  14. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    வரவேற்கத்தக்க புது முயற்சி!

    கருத்துக் கூறப் படிக்க வேண்டும்.
    நேரம் கிடைக்கும்போது படித்துக் கருத்துரைக்க விரும்புகின்றேன்.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  15. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    3.2. செய்யுள் ஓசை

    (நிலமண்டில ஆசிரியப்பா)
    ஓசை என்பது ஒலிகளின் இணைப்பு
    இயலிசை நாடகம் மூன்றிலும் ஓசை
    ஒலியின் ஊடக மாக வருவதே.

    இயலெனும் உரைநடை வழக்கில் ஓசை
    அலைகளின் இரைச்சலாய்க் குழம்பி வருவது
    நாடக வழக்கிலும் உரைநடை போன்றே.

    செய்யுள் வழக்கில் ஓசை இசைந்து
    இயல்பாய்ப் பயின்று ஒருங்கே வருமே
    அகவல், செப்பல், துள்ளல், தூங்கலென
    தமிழில் செய்யுள் ஓசைகள் நான்கு.

    ஆசிரியத் தளையிரண்டால் ஆவது அகவல்
    வெண்டளை யிரண்டு வருவது செப்பல்
    கலித்தளை யொன்றே வருவது துள்ளல்
    வஞ்சித் தளையிரண்டு வருவது தூங்கல்
    ஒவ்வோர் ஓசைக்கும் தளைகள் இருப்பினும்
    செப்பல் தவிர வேறு ஒலிகளில்
    பிறவகைத் தளைகள் விரவி வருமே.

    அகவல் ஓசை வருவது அகவற்பா
    அகவற் பாவே ஆசிரி யப்பா
    செப்பல் ஓசை வருவது வெண்பா
    துள்ளல் ஓசை வருவது கலிப்பா
    தூங்கள் ஓசை வருவது வஞ்சிப்பா
    நால்வகை ஓசையில் உள்வகை உண்டே.


    3.3. அகவல் ஓசை

    (நிலமண்டில ஆசிரியப்பா)
    மயில்கத் துவதை அகவல் என்கிறோம்
    அகவிக் கூறலால் அகவல் எனப்படும்
    உயர்த்துக் கூறும் ஓசை அகவல்.
    எடுத்தல் என்றும் அதனை அழைப்பரே.

    செய்யுளின் அகவல் எடுத்தல் ஓசை
    தடைகள் இல்லாது செல்லும் ஓட்டம்
    நினைத்தது உரைத்தலாம் நினைத்த வாறே.

    ஒருவரே உரைக்க மற்றவர் கேட்பார்
    இருவர் உரையா டலாக இன்றி.
    ஒருவரே சொல்வது அழைத்தல் எனப்படும்
    அழைத்தலில் அகவல் ஓசை கேட்கும்!

    தச்சு வேலை செய்வோர் பேச்சில்
    போர்க்களம் பற்றிப் பாடுவோர் பாட்டில்
    வருவது உரைப்போர் கூறும் சொற்களில்
    தனக்குத் தானே பேசும் பேச்சில்
    அகவல் ஓசை கேட்பது அறியலாம்.

    அகவல் ஓசை பயின்று வருவது
    ஆசிரியப் பாவெனும் அகவற் பாவில்.
    ஆசிரியப் பாவில் ஆசிரி யத்தளை
    வெண்டளை விரவிட அகவல் கேட்கும்.
    மாமுன் நேரசை, நிரையசை விளம்முன்
    என்று வந்தால் ஆசிரி யத்தளை.


    ’மாமுன்நேர்’ என்றால் மாச்சீரைத் தொடர்ந்துவரும்
    சீரின் முதலசையில் நேரசை இருக்கும்.
    ’முன்’னென்றால் எதிர்நோக்கி என்றுபொருள் கொள்க.

    (குறள் வெண்பா)
    மாமுன் நிரையும் விளம்,காய்முன் நேரும்
    வருவது வெண்டளை காண்.

    (நிலமண்டில ஆசிரியப்பா)
    இவ்விரு தளைகளும் சீர்களின் இடையிலும்
    அடிகளின் இடையிலும் தொடர்ந்து வருவது
    செய்யுளின் ஓசைக்கு இன்றியமை யாததாம்.

    அகவல் ஓசை பயிலுமோர் செய்யுள்:
    சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
    யவனர் தந்த வினைமாண் நன்கலம்
    பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
    வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளை*இ
    அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய
    நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
    --அகநானூறு 149, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்.

    இன்னொரு உதாரணம் பாரதி தருவது:
    வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
    வாழிய பாரத மணித்திரு நாடு!
    இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
    நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
    அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
    --மஹாகவி பாரதியார்

    *****
    Last edited by ரமணி; 28-01-2013 at 09:29 AM.

  16. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    3.4. அகவல் முயற்சி

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    அகவல் ஒலிவரப் புனைவது எளிது.
    நாமும் அகவல் புனைந்திடு வோமா?
    அகவல் ஓசையின் தேவைகள் என்ன?

    நேர்முன் நேரும் நிரைமுன் நிரையுமாய்ச்
    சீர்கள் ஈரசை பெற்று வந்தால்
    சீர்த்துக் கேட்கும் அகவல் ஓசை
    அகவற் றளைகள் மட்டும் வரவே.

    [அகவற் றளைகள்: நேரொன்று, நிரையொன்று ஆசிரியத் தளைகள்]

    இங்ஙனம் புனைதல் இயலா தென்பதால்
    நேர்முன் நிரையும் நிரைமுன் நேர்வரும்
    ஈரசை இயற்சீர் வெண்டளை விரவி

    அகவல் ஓசை சற்றே மங்கினும்
    அகவற் பாவில் ஒலிக்கப் புனைவரே.
    [மூவசைச் சீர்கள் இப்போது வேண்டாம்.]

    அகவல் வெண்டளை விரவும் அடிகள்:
    வாசலில் யாரெனப் பாரடி மகளே!
    வேறுயார், உங்கள் அறுவை நண்பரே!


    இந்த அடிகளை அலகிடக் கிடைப்பது
    வா/சலில் யா/ரெனப் பா/ரடி மக/ளே!
    வே/றுயார், உங்/கள் அறு/வை நண்/பரே!

    சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
    நேர்-நிரை நேர்-நிரை நேர்-நிரை நிரை-நேர்
    நேர்-நிரை நேர்-நேர் நிரை-நேர் நேர்-நிரை

    தந்தையும் மகளும் அழைத்துக் கூவிட
    அசைகள் யாவும் இசைந்து வந்திட
    அகவல் ஓசை வருவது தப்புமோ?

    தந்தையின் கூவல் கூர்த்த தொடர்ச்சி.
    வாசலில் யாரெனப் பாரடி மகளே!
    மகளின் கூவல் நின்று ஒலிப்பது,
    அயர்ச்சி, அங்கதம், குரலில் தெரிய.
    வேறுயார், உங்கள் அறுவை நண்பரே!

    இந்த அடிகளை இப்படி எழுதினால்
    வேறு ஓசைகள் விரவிடக் கேட்பீர்:
    வாசலில் யாரென்று பார்த்திடுவாய் மகளே!
    வேறுயார், உங்களது அறுத்திடும் நண்பரே!

    அகவல் குறைந்து வினவல் ஆகிட
    செப்பலும் துள்ளலும் சேர்ந்தே ஒலிக்க
    அகவல் ஓசை மறைவது காண்பீர்.

    கவிதையைச் செய்யுளாய்க் கிளைத்திடும் போது
    கவினும் அழகும் அணியும் நோக்கி
    மனதில் வருவதை வந்தபடி கொட்டாமல்
    வனப்பு மிளிர எழுத முனைந்தால்
    கவிதையின் விதைகள் படிப்போர் மனதில்
    மெல்லத் துளிர்விட்டு நின்று நிலைக்கும்
    மத்தாப் பாக எரிந்து மறையாது!

    எனவே கவிதை முனையும் அன்பர்காள்!
    செய்யுள் நன்கு புனையக் கற்பீர்.
    தறியின் பாவு ஊடுதல் போலப்
    பாவி நடப்பதே பாட்டென் றுணர்க.

    ஓசை உணர்ந்து அசைகளைப் பிணைத்தால்
    தளைகள் தாமே பொருந்தி வந்து
    எழுதும் பாவகை எவ்வகை ஆயினும்
    எழுதும் பாட்டு சிறப்பது நிச்சயம்.

    *****

Page 1 of 16 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •