Page 5 of 16 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 15 ... LastLast
Results 49 to 60 of 182

Thread: கவிதையில் யாப்பு

                  
   
   
  1. #49
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    4.40. சீர்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    எத்தனை பொருட்கள் சீரெனும் சொல்லுக்கு!
    அத்தனை யாகிவரும் சீரெனும் உறுப்பு
    நேரடி யாகவோ மறைமுக மாகவோ.

    செய்யுளின் கட்புலன் உறுப்பெனச் சீரே! ... [கட்புலன்=கண்ணுக்குச் சட்டெனத் தெரியும்]
    செய்யுள் என்பதோர் செடியெனக் கொண்டால்
    செடியின் இலைகளே சீர்கள் ஆகுமே
    செடியின் பூக்களே இலைமறைத் தொடைகளாம் ... [தொடை=எதுகை, மோனை போன்றவை]
    கிளைகளே அடிகளாய் விளைந்து வந்திடக்
    கிளைகளில் இணையும் காம்பே தளைகளாம்.

    செடியில் இலையே கட்புலன் உறுப்புபோல்
    செய்யுளில் சீரே கட்புலன் உறுப்பாம்
    ’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
    முன்வரும் கட்புலன் இவ்வடிச் சீர்களே.

    சீரே செய்யுளின் செல்வம் அழகு
    நன்மை பெருமை மதிப்பு புகழே
    என்பது கீழ்வரும் செய்யுளில் புரியுமே.

    (நேரிசை வெண்பா)
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    --ஔவையார், நல்வழி 12

    சீர்களே மேல்வந்த பாவின் பொற்காசு
    சீர்களின் அமைப்பு பாவின் அழகு
    சீர்களின் கருத்து பாவின் நன்மை
    சீர்களே பாவின் மதிப்பிலே புகழிலே.

    சீர்களே பெரும்பங்கு செய்யுளின் இயல்பில்
    சீர்களே துலாமென ஓசையை நிறுக்கும்
    சீர்களின் அளவில் தாளமும் பாட்டும்
    ஓர்வகை யாகி ஓங்கி ஒலிக்குமே.

    இன்னும் செய்யுளின் நேர்மை சமன்பாடு
    செம்பொருள் உறுதி ஆயுதம் தண்டை
    என்னும் பொருள்களும் சீரினில் அடக்கம்.
    காரணித்துக் காதலித்துநம் முன்னோர் இட்டபெயர்
    ஆரணிய மெனவிரியும் யாப்புறுப் புகளிலே.

    4.41. சீரென்பது

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    ஓசை லயம்பட நிற்க உதவும்
    செய்யுளின் உறுப்பு சீரெனப் படுமே.
    அசைகள் தனித்தோ தொடர்ந்தோ பயின்று
    இசைந்து ஒலிக்கும் சீரெனும் உறுப்பிலே.


    நச்சினார்க் கினியர் கலித்தொகை உரையிலே
    தாளம் என்பதில் மூன்றென உறுப்புகள்
    தாளத்தின் காலச்சுழல் பாணியில் தொடங்குமே
    தாளத்தின் நீடிப்பு தூக்கினில் அடங்குமே
    தாளத்தின் முடிவு சீரினில் அடங்குமே
    என்றே சீரினைப் பாணியோ(டு) ஒப்பிடுவார்.

    சீரின் எல்லை சொல்லில் முடியலாம்
    சீரின் எல்லையில் சொற்பிளவு வரலாம்
    சீர்வரும் சொற்பிளவு வகையுளி யெனப்படும்.
    சீரிசை நோக்கிச் சொற்பொருள் நோக்காது
    நேர்வரும் ஓசையே சொற்களைப் பிரிக்குமே.


    (குறள் வெண்பா)
    வருகிற பாக்குறளில் ’வேண்டுதல்வேண் டாமை’
    பிரியும் வகையுளி காண்.

    வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.


    வகையுளி இல்லாக் குறளொன்று கேட்பின்
    அகர முதல உளது.

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.


    *****

  2. #50
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    4.42. சீர் வகைகள்

    (கலிவிருத்தம்)
    நேரசையும் நிரையசையும் பல்வகையில் இணந்து
    ஓரசைமுதல் நான்கசைவரை உருவாகும் சீர்களில்
    ஈரசையும் மூவசையும் அதிகம் பயின்றும்
    நான்கசைச் சீர்கள் அருகியும் வருமே.

    (குறள் வெண்செந்துறை)
    சீர்களின் வகைகளை நினைவினில் வைக்கச்
    சீர்களின் வாய்பா டுகள்மிக உதவுமே.

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    சீர்வகைப் பெயர்தன் அசைத்தொகை பொறுத்து
    ஓரசை ஈரசை மூவசை நாலசை
    என்றே நால்வகைப் பெயர்பெறு மாயினும்
    செய்யுட் குரிமை பூண்டு நிற்கும்
    திறமும் பிறவும் நோக்கி யவற்றை
    அசைச்சீர் அகவற்சீர் வெண்சீர் வஞ்சிச்சீர்
    பொதுச்சீர் என்ற ஐவகைப் பெயர்களில்
    அழைப்பது செய்யுள் வழக்கினில் அமையுமே.

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    அசைச்சீ ரென்பது ஓரசைச் சீரே
    அகவற் சீர்கள் ஈரசை வகைகளே
    வெண்சீ ரென்பது மூவசைக் காய்ச்சீர்
    வஞ்சிச் சீர்வகை மூவசைக் கனிச்சீர்
    பொதுச்சீ ரென்பது நாலசைச் சீர்களே.


    4.43. ஓரசைச் சீர்

    (ஆசிரியத் தாழிசை)
    அசையொன்று தனிநின்று இசைநிறைக்க வருவதே
    அசைச்சீர் என்னும் ஓரசைச் சீராம்.
    அசைச்சீர் இரண்டே தனிநேர் தனிநிரை.

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    அசைச்சீர் பெரிதும் வெண்பா ஈற்றிலும்
    கலிப்பா அம்போ தரங்க ஈற்றிலும்
    வஞ்சி விருத்தம் இடையிலும் வருமே.


    (குறள் வெண்செந்துறை)
    நாள் மலர் காசு பிறப்பு
    என்பது ஓரசைச் சீர்வாய் பாடு.


    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
    நேர் நிரை நேர்பு நிரைபு
    என்னும் நால்வகை ஓரசைச் சீர்கள்.

    இறுதிச் சீரென வெண்பாவின் ஈற்றடியில்
    இவற்றில் ஓன்று மட்டும் வருமே.

    காசு பிறப்பு ஓரசைச் சீர்களே.
    தனிக்குறில் தவிர மற்ற நேருடன்
    குற்றிய லுகரம் சேர்ந்தால் நேர்பு
    நிரையுடன் சேர்ந்தா லாகும் நிரைபு.

    தனிநேர் அசைச்சீர் நாள்-எனப் படுமே
    தனிநிரை அசைச்சீர் மலர்-எனப் படுமே
    தனிக்குறில் அல்லாத நேரசை யுடனே
    குற்றிய லுகரம் சேர்வது நேர்பு
    நிரையுடன் குற்றுகரம் சேர்வது நிரைபு.


    மது-எனும் அசைச்சீர் நேர்பா மலரா?
    து-எனும் எழுத்து குற்றுகர மாயினும்
    ம-வெனும் எழுத்து தனிக்குறி லாகிட
    மதுவெனும் அசைச்சீர் தனிநிரை யாகி
    மலரெனக் குறிக்கும் வாயா டாகுமே.

    மாசு என்பதில் குற்றிய லுகரம்
    மாவெனும் தனிநெடி லுடனே சேர்வதால்
    காசெனும் வாய்பா டினிலே வருமே.

    பந்து என்பதன் வாய்பா டென்ன?
    பந்து என்பதில் பந்-எனும் நேரசை
    குறிலொற்றுப் பெற்றதால் தனிக்குறி லன்று
    குற்றுகரம் சேரக் காசு ஆகுமே.

    உவர்-எனும் தனிநிரை அசைச்சீர் மலரே
    உவர்ப்பு என்று வந்தால் அதுவே
    உவர்-உடன் சேரும் குற்றுக ரத்தால்
    பிறப்பெனும் வாய்பா டாகி வருமே.

    (சிந்தியல் வெண்பா)
    நாள்-இல் முடிவது இந்தக் குறட்பா:
    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.


    மலர்-இல் முடிவது இந்தக் குறள்வெண்பா:
    தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
    வானம் வழங்கா தெனின்.


    காசு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


    பிறப்பு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.


    *****

  3. #51
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    4.43. ஓரசைச் சீர் பயிற்சி

    பயிற்சி 1. நாள்-மலர் அறிதல்
    http://kavithaiyilyappu-payirchchi.b.../02/443-1.html

    (இணைக்குறள் ஆசிரியப்பா)
    வெண்பாக்கள் ஈற்றடி ஈற்றசையாய் வந்த
    கீழுள்ள பதினைந்து சொற்களில் எட்டு
    நாள்-மலர் என்னும் வாய்பாடு கொண்டன.
    நாள்-மலர் எட்டையும் தெரிவு செய்து
    நாள்-என வருவது கீழ்வரும் நிரலில்
    அமைத்தே எழுதுக:

    தனிக்குறில், தனிக்குறில் ஒற்றுடன்,
    தனிநெடில், தனிநெடில் ஒற்றுடனே.
    மலர்-என வருவது கீழ்வரும் நிரலில்
    அமைத்தே எழுதுக.

    குறிலிணை, குறிலிணை ஒற்றுடன்,
    குறில்நெடில், குறில்நெடில் ஒற்றுடன் என்றே.

    சொல் கொக்கு தா உறவு இசைந்து
    லால் மழை கு வரைவு வீடு
    மெலாம் மூப்பு சிறப்பு கலம் வினை


    பயிற்சி 2. காசு-பிறப்பு அறிதல்
    http://kavithaiyilyappu-payirchchi.b...43-2_6412.html

    (இணைக்குறள் ஆசிரியப்பா)
    வெண்பாக்கள் ஈற்றடி ஈற்றசையாய் வந்த
    கீழுள்ள பதினைந்து சொற்களில் ஏழு
    காசு பிறப்பு வாய்பாடு கொண்டன.
    காசு பிறப்பு ஏழும் தேர்ந்து
    காசென வருவது கீழ்வரும் நிரலில்
    அமைத்தே எழுதுக:

    தனிக்குறில் ஒற்றுடன் குற்றுகரம், ... [தனிக்குறில்+உகரம் கூடாது]
    தனிநெடில் குற்றுகரம்,
    தனிநெடில் ஒற்றுடன் குற்றுகரம் என்றே.
    பிறப்பென வருவது கீழ்வரும் நிரலில்
    அமைத்தே எழுதுக.

    குறிலிணை குற்றுகரம்,
    குறிலிணை ஒற்றுடன் குற்றுகரம்,
    குறில்நெடில் குற்றுகரம்,
    குறில்நெடில் ஒற்றுடன் குற்றுகரம் என்றே.

    கலம் சிறப்பு உறவு லால் கு
    வீடு தா மழை கொக்கு மெலாம்
    மூப்பு வினை இசைந்து சொல் வரைவு


    *****
    Last edited by ரமணி; 20-02-2013 at 08:36 AM.

  4. #52
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    4.44. ஈரசைச் சீர்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    நேர்நிரை யெனவரும் அசைகள் கூடி
    ஈரசைச் சீர்வரும் வழிகள் நான்காம்
    நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
    ஈரசைச் சீர்கள் இப்படி நான்கே.

    ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கில்
    மாச்சீர் இரண்டு விளச்சீர் இரண்டு.
    ஈற்றசை நேர்வரின் மாச்சீர் ஆகும்
    ஈற்றசை நிரைவரின் விளச்சீர் ஆகுமே.

    தேமா புளிமா கருவிளம் கூவிளம்
    என்பது ஈரசைச் சீர்களின் வாய்பாடு.
    இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
    நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
    என்னும் நான்கு ஈரசைச் சீர்களே
    சீரின் அசைநிரல் பெயரே சுட்டுமே.


    அனைவரும் அறிந்த மரங்கள் அவற்றில்
    விளைந்திடும் பூக்கள் காய்கள் கனிகளை
    அழைத்திடும் பெயர்களைச் சீர்களுக் கிட்டனர்.
    ---கி.வா.ஜ. ’கவி பாடலாம்’


    தேமா என்பது பழுக்கும் மாங்காய்
    புளிமா என்பது ஊறுகாய் மாங்காய்
    கருவிளம் என்பது விளாமர மாகும்
    கூவிளம் என்பது வில்வ மரமே.

    அகவற்சீர் இயற்சீர் ஆசிரிய வுரிச்சீர்
    எனவும் ஈரசைச் சீர்கள் பெயர்பெறும்.

    செய்யுள் வழக்கில் பேச்சின் வழக்கில்
    பெரிதும் இயல்பாய்ப் பயின்று வருதலால்
    இயற்சீர் என்ற பெயரில் வருமே.

    அகவல் ஓசை தாங்கி வருவதால்
    அகவற் சீரெனும் பெயரில் வருமே.
    அகவல் பயிலும் ஆசிரியப் பாவிற்
    குரிய சீரென் றாகும் இதுவே
    ஆசிரிய வுரிச்சீர் என்றும் பெயர்பெறும்.

    இயற்சீர் மட்டுமே அமைந்த குறளிது:
    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.


    இந்தக் குறளை அலகிட வருவது
    கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
    புளிமா புளிமா மலர்-என அறிக.

    *****

  5. #53
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    4.44. ஈரசைச் சீர் பயிற்சி

    நினைவிற் கொள்ள:
    தேமா புளிமா கருவிளம் கூவிளம்
    நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
    என்பன ஈரசைச் சீர்கள் அமைப்பு.

    பயிற்சி 1. சீர் காணல்
    http://kavithaiyilyappu-payirchchi.b.../02/444-1.html

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    கீழ்வரும் குறள்தனை அலகிட் டறிந்து
    சீர்களின் அசைகளை நன்கு நோக்கியே
    சீர்களின் பெயர்களைச் செய்யுளின் அடிகள்
    அமைந்திடு மாறு அமைத்து எழுதுக.

    வலைதளக் குறிப்பு:
    சீர்களின் பெயர்களை மின்னெலி சொடுக்கிட
    சீர்களின் பெயர்களே பேழையில் விழுந்து
    எழுதுதல் எளிதினில் கைவர உதவுமே.
    [பேழை=textarea box]

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.


    *****

  6. #54
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பயிற்சி 2. சீர் நிரல் வர அமைத்தல்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
    தேமா புளிமா கருவிளம் கூவிளம்
    என்ற நிரலில் பொருளுடன் அமைந்து
    வாய்க்கால் ரோஷம் நேசம் முதற்சீராய்
    மூன்று அடிகள் வந்திட எழுதுக.

    நேசம் ரோஷம் மிகுந்த வாய்க்கால் களிப்புறும் வருவதுன்
    தகப்பனால் வரப்பில் மாமனே ஆவதே மிகுந்தால் நெஞ்சமே


    *****
    Last edited by ரமணி; 24-02-2013 at 12:04 AM.

  7. #55
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பயிற்சி 3. ஒருசீர் ஒருமுறை
    http://kavithaiyilyappu-payirchchi.b.../02/444-3.html

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    கருவிளம் புளிமா கூவிளம் தேமா
    கூவிளம் தேமா கருவிளம் புளிமா
    புளிமா தேமா கருவிளம் கூவிளம்
    மேல்வரும் நிரலில் அமையு மாறு
    கீழ்வரும் சொற்களில் தேர்வு செய்து
    அமைக்கவும் மூன்று செய்யுள் அடிகளே.

    பெரிய சொற்களின் வீரம் புதுமைகள்
    செயலினில் புலவர் சொல்லில் வழியிலோர்
    வருமோ? பாம்பினைப் பார்த்தேன் பற்பல.

  8. #56
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    4.43. ஓரசைச் சீர் பயிற்சி விடைகள்

    பயிற்சி 1. நாள்-மலர் அறிதல்: விடை
    கு சொல் தா லால் மழை கலம் வினை மெலாம்

    பயிற்சி 2. காசு-பிறப்பு அறிதல்: விடை
    கொக்கு வீடு மூப்பு உறவு சிறப்பு வரைவு இசைந்து

    4.44. ஈரசைச் சீர் பயிற்சி விடைகள்
    பயிற்சி 1. சீர் காணல்: விடை

    மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
    நில/மிசை நீ/டுவாழ் வார்.

    நிரைநிரை நேர்நிரை நேர்நிரை நேர்நேர்
    நிரைநிரை நேர்நிரை நேர்

    கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா
    கருவிளம் கூவிளம் நாள்

    பயிற்சி 2. சீர் நிரல் வர அமைத்தல்: விடை

    தேமா புளிமா கருவிளம் கூவிளம்
    வாய்க்கால் வரப்பில் வருவதுன் மாமனே
    ரோஷம் மிகுந்த தகப்பனால் ஆவதே
    நேசம் மிகுந்தால் களிப்புறும் நெஞ்சமே

    பயிற்சி 3. ஒருசீர் ஒருமுறை: விடை

    வழியிலோர் பெரிய பாம்பினைப் பார்த்தேன்
    கருவிளம் புளிமா கூவிளம் தேமா

    சொற்களின் வீரம் செயலினில் வருமோ?
    கூவிளம் தேமா கருவிளம் புளிமா

    புலவர் சொல்லில் புதுமைகள் பற்பல.
    புளிமா தேமா கருவிளம் கூவிளம்

    *****

  9. #57
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பயிற்சி 4. அனைத்தும் ஒரே சீர்: தேமா புளிமா கருவிளம் கூவிளம் நிரல்
    http://kavithaiyilyappu-payirchchi.b.../02/444-4.html

    கீழ்வரும் சீர்களைச் சரிவர அமைத்து
    தேமா தேமா தேமா தேமா
    புளிமா புளிமா புளிமா புளிமா
    கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
    கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
    என்னும் நிரல்களில் அமைந்து வந்து
    ஒரேவகை ஈரசைச் சீர்வரு மாறு
    நாற்சீர் கொண்ட அளவடி எழுதுக,
    கொன்றால் பசுமை மலரதன் கெஞ்சினால்
    என்பன அடிகளில் முதற்சீ ரெனவர.


    மிஞ்சினால் கொன்றால் வனமாம். பசுமை
    தின்றால் கெஞ்சினால் கெஞ்சுவான். மணத்தினில்
    மலரதன் போச்சு. மகிழ்ந்திடும் மனமிது.
    மரங்கள் பாவம் அடர்ந்த மிஞ்சுவான்


    *****

  10. #58
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பயிற்சி 5. அனைத்தும் ஒரே சீர்: தேமா
    (http://kavithaiyilyappu-payirchchi.b.../02/444-5.html)

    கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
    பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
    பூர்த்தி செய்து அடிகளை எழுதுக.

    என்றும் வில்லின் கானல் ஒன்று வாசம் வண்ண நாருக் நீரா

    காதல் --- --- காது
    பூவின் --- --- குண்டு
    ஒன்றே --- --- உண்டு
    வான --- --- ஜாலம்


    பயிற்சி 6. அனைத்தும் ஒரே சீர்: புளிமா
    (http://kavithaiyilyappu-payirchchi.b.../02/444-6.html)

    கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
    பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
    பூர்த்தி செய்து அடிகளை எழுதுக.

    கருணை துவைத்து இதயம் இலக்கு துணியை அமைதி

    கவிஞன் --- ரசிகன் ---
    அடித்துத் --- உலர்த்து ---
    இறைவன் --- இருந்தால் ---


    பயிற்சி 7. அனைத்தும் ஒரே சீர்: கருவிளம்
    (http://kavithaiyilyappu-payirchchi.b.../02/444-7.html)

    கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
    பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
    பூர்த்தி செய்து அடிகளை எழுதுக.

    குழலினும் புலவரும் வனத்தினில் உறைவன கலைஞரும் இனியது

    --- --- புகழ்ந்திடும் புரவலன்
    --- --- குழந்தைகள் மிழற்றுதல்
    --- --- பலப்பல விலங்குகள்


    பயிற்சி 8. அனைத்தும் ஒரே சீர்: கூவிளம்
    (http://kavithaiyilyappu-payirchchi.b.../02/444-8.html)

    கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
    பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
    பூர்த்தி செய்து அடிகளை எழுதுக.

    உள்ளதா? மென்னடை ஏறுமோ? கொண்டவள் சொத்துகள் அம்பலம்

    ஏழையின் சொல்லிது --- ---
    அன்னமும் நாணிடும் --- ---
    தாவர ஜங்கமச் --- ---


    *****

  11. #59
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!

    இந்தப் பயிற்சியிலிருந்து ஒவ்வொரு பயிற்சியையும் முயன்று பார்த்து
    சரியான விடையை இங்குப் பதியும் முதல் பதிவுக்கு
    மின்காசு (iCash Credits 100) வழங்கப்படும்... (முரசொலி)


    பயிற்சி 9. செய்யுளடி அமைத்தல்
    (http://kavithaiyilyappu-payirchchi.b.../02/444-9.html)

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
    ஈரசைச் சீர்களே நான்கு பயின்று
    பள்ளிக் குழந்தைகள் கற்றிடும் இந்த
    அடிகள் மூன்றினை அமைத்து எழுதுக.

    செல்வர்க் தாங்குதல் னாகும் செங்கோல்
    இறைவ முறைமை கழகு வித்தவன்
    செழுங்கிளை கழகு எழுத்தறி மன்னவர்க்


    *****

    பயிற்சி 10. செய்யுளடி அமைத்தல்
    (http://kavithaiyilyappu-payirchchi.b...02/444-10.html)

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
    ஈரசைச் சீர்களே நான்கு பயின்று
    புகழ்மிகு அப்பர் தேவாரப் பாடலின்
    அடிகள் நான்கினை அமைத்து எழுதுக.

    னெந்தை பொய்கையும் வீசு நீழலே.
    வீணையும் வண்டறை மதியமும் மாலை
    தென்றலும் ஈச மூசு வீங்கிள
    மாசில் போன்றதே வேனிலும் யிணையடி


    *****
    Last edited by ரமணி; 01-03-2013 at 11:19 AM.

  12. #60
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    4.45. மூவசைச் சீர்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    ஈரசைச் சீர்கள் நான்கின் இறுதியில்
    நேரசை நிரையசை சேர்ந்து வந்து
    மூவசைச் சீர்கள் எட்டா கிடுமே.

    ஈரசை இறுதியில் நேரசை சேர்ந்துவரும்
    மூவசைச் சீர்கள் நான்கும் காய்ச்சீர்
    ஈரசை இறுதியில் நிரையசை சேர்ந்துவரும்
    மூவசைச் சீர்கள் நான்கும் கனிச்சீர்.


    ’தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்’
    என்பது காய்ச்சீர் வாய்பா டாகும்.

    இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
    நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நேர்நிரைநேர்
    என்னும் நால்வகை காய்ச்சீர் வகைகளே.

    ’தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி’
    என்பது கனிச்சீர் வாய்பா டாகும்.

    இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
    நேர்நேர்நிரை நிரைநேர்நிரை நிரைநிரைநிரை நேர்நிரைநிரை
    என்னும் நால்வகை கனிச்சீர் வகைகளே.

    வெண்பாவுக் குரியதால் காய்ச்சீர் நான்கும்
    வெண்சீர் வெண்பா வுரிச்சீர் என்று
    இரண்டு பெயர்கள் பெற்று வருமே.

    வஞ்சிப்பா வில்வரும் கனிச்ச்சீர் நான்கும்
    வஞ்சிச்சீர் வஞ்சி யுரிச்சீர் என்று
    இரண்டு பெயர்கள் பெற்று வருமே.

    தென்மேற்கு வடமேற்கு வடகிழக்கு தென்கிழக்கு
    பொன்னாக்கும் பொருளாக்கும் பொருள்பெருக்கும் பொன்பெருக்கும்
    என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களில்
    காய்ச்சீர் அனைத்தும் முறையே காண்க.

    பூவாழ்பதி திருவாழ்பதி திருவுறைபதி பூவுறைபதி
    மீன்வாழ்துறை சுறவாழ்துறை சுறமறிதுறை மீன்மறிதுறை
    என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களிலே
    கனிச்சீர் அனைத்தும் முறையே காண்க.
    [சுற=சுறா மறி=திரிதல் துறை=நீர்த்துறை]
    --பசுபதி, ’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.49

    காய்கனிச் சீர்களுக்கு இன்றைய வழக்கில்
    டீவீபார் சினிமாபார் நகைக்கடைபார் சீரியல்பார்
    ஜூவீபடி குமுதம்படி தினமலர்படி பாடமும்படி
    போன்ற சான்றுகள் அறிந்து மகிழலாம்.

    (குறள் வெண்பா)
    காய்ச்சீராம் வெண்பா வுரிச்சீர் களேவரும்
    கீழ்வரும் வெண்பா விலே.

    (இன்னிசை அளவியல் வெண்பா)
    ஆராரோ ஆரிரரோ கண்ணேநீ கண்ணுறங்கு
    ஆராரோ பேசினாலும் உன்கண்ணை மூடிவைத்து
    நான்தூளி ஆட்டுவதில் நன்றாய்நீ கண்ணுறங்கு
    நானோய்ந்து தூங்குமுன்நீ தூங்கு.


    தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
    தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
    தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
    தேமாங்காய் கூவிளங்காய் காசு

    கனிச்சீராம் வஞ்சியுரிச் சீர்களே வருகிற
    சான்று கீழ்வரும் வஞ்சி அடிகளில்.

    (குறளடி வஞ்சிப்பாவின் பகுதி)
    பூந்தாமரைப் போதலமரத்
    தேம்புனலிடை மீன்றிரிதரும்
    வளவியலிடைக் களவயின்மகிழ்
    வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
    மனைச்சிலம்பிய மண்முரசொலி
    வயற்கம்பலைக் கயலார்ப்பவும்
    --யா.கா.மேற்கோள்


    தேமாங்கனி கூவிளங்கனி
    கூவிளங்கனி கூவிளங்கனி
    கருவிளங்கனி கருவிளங்கனி
    புளிமாங்கனி கருவிளங்கனி
    கருவிளங்கனி கூவிளங்கனி
    புளிமாங்கனி புளிமாங்கனி

    *****

Page 5 of 16 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 15 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •