4.15. முற்றிய லுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
மாத்திரை குறையா தொலிக்கும் உகரம்
முற்றிய லுகரம் என்றபெயர் பெறுமே
இஃது தனிக்குறில் அடுத்தும்
மெல்லின இடையின மெய்மேல் ஏறியும்
வருவது சான்றாக: ’நகு,தடு, தபு,பசு,
அது,அறு, தும்மு, கதவு, உண்ணு’
சொற்களில் உகரம் முழுவதும் ஒலிக்குமே.
4.16. குற்றியலுகரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தன்னியல் பாகிய ஒருமாத் திரையில்
குறைந்தே மாத்திரை அரையாய்க் குறுகி
ஒலித்திடும் உகரமே குற்றிய லுகரமாம்.
குசுடு துபுறு என்று உகரம்
வல்லின மெய்யுடன் சேரும் போது
வல்லின உயிமெய்க் குற்றுகர மாகித்
தனிக்குறில் அல்லாத மற்றைச் சொற்களில்
வந்திடும் போது குற்றிய லுகரமாய்க்
குன்றி அரைமாத் திரையில் ஒலிக்குமே.
வல்லின உயிர்மெய் ஆறினில் மட்டுமே
குற்றிய லுகரம் குன்றி வருமே
மெல்லின இடையின உயிர்மெய் களிலே
உகரம் குன்றி ஒலிப்பது இல்லையாம்.
தும்பு என்பது குற்றிய லுகரம்
தும்மு என்பது முற்றிய லுகரம்
நஞ்சு என்பது குற்றிய லுகரம்
நஞ்ஞு என்பது முற்றிய லுகரம்
உண்டு என்பது குற்றிய லுகரம்
உண்ணு என்பது முற்றிய லுகரம்
குடகு என்பது குற்றிய லுகரம்
குடவு என்பது முற்றிய லுகரமே.
கு-குரு சு-சுகம் து-இது என்று
கு-சு-து என்னும் ஓரெழுத்துச் சொற்கள்
தனிக்குறிலாய் நிற்றலால் குற்றுகர மாகாது.
தனக்கு முன்வரும் அயலெழுத்தின் வகையொட்டிக்
குற்றிய லுகரம் வந்திடும் போது
ஆறு வகைப்பட்ட தொடர்களில் அமையுமே.
வல்லின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
வன்றொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’சுக்கு மச்சு பட்டு பத்து உப்பு உற்று’
’சாக்கு நீச்சு பாட்டு கூத்து காப்பு உற்று’
என்பன வன்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
மெல்லின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
மென்றொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’சங்கு பஞ்சு வண்டு பந்து தும்பு நின்று’
’பாங்கு காஞ்சு வாண்டு சாந்து பாம்பு சான்று’
என்பன மென்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
இடையின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
இடைத்தொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’தேய்கு ஆர்கு அல்கு --வ்கு மாழ்கு தெள்கு’ ... [--வ்+கு சொல்லில்லை]
’வெய்து --ர்து --ல்து --வ்து போழ்து --ள்து’
’தோய்பு மார்பு சால்பு --வ்பு வாழ்பு வள்பு’
என்பன இடைத்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
இடைத்தொடர் வகையில் சுடுறு என்பன
ஈற்றயலிற் குற்றுகர மாகக் கொண்டு
அமையும் சொற்கள் இலையெனக் காண்க.
எஞ்சிய குதுபு குற்றிய லுகரமும்
இடையினம் மெய்கள் அனைத்தையும் ஈற்றயலின்
கொள்வ தில்லை என்றும் காண்க.
உயிர்மெய் யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
உயிர்த்தொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’படகு நகாசு அகடு தகாது அளபு கதறு’
என்பன உயிர்த்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
தனிநெடி லெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
நெடிற்றொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’பாகு காசு நாடு காது பாபு ஆறு’
என்பன நெடிற்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
நெடிற்றொடர்க் குற்றிய லுகரம் என்பது
தனிநெடில் பின்வரும் ஈரெழுத்துச் சொற்களாம்.
’தகாது ஆகாது’ போன்று இரண்டின்
மிஞ்சிய எழுத்துவரும் சொற்களில்
குற்றிய லுகரம் உயிர்த்தொட ராகிவிடும்.
ஆய்த எழுத்தை ஈற்றயலில் கொண்டவை
ஆய்தத்தொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’எஃகு கஃசு அஃது சுஃறு’
என்பன ஆய்தத்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.
குற்றியலுகரச் செயல்பாடு
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
குற்றிய லுகரச் செயல்பாடு பற்றி
மொழியியல் கருத்து மகிழ்ச்சி தருவது
வல்லின மெய்கள் இறுதியில் வந்தால்
எளிய தல்ல அவற்றை ஒலித்தல்
காட் அஃத் பஞ்ச் மார்ப்
போன்ற சொற்களை ஒலித்தல் எளிதா?
எனவே
காடு அஃது பஞ்சு மார்பு
என்று அந்த வல்லின மெய்மேல்
உகரம் ஏறி ஒலித்தல் எளிதாகி
உகரம் தானும் இசையில் நலிந்து
குற்றிய லுகரம் ஆகி விடுமே.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆங்கிலம் பயிலும் இற்றைநாள் தமிழில்
ஓங்குவது காணீர் குற்றிய லுகரமே!
சாக் பாஸ் போட் ஷாப் டேப் பார் ... [chalk pass boat shop tape bar]
என்று பேச்சில் பரந்த ஆங்கிலம்
நன்கு குற்றிய லுகரம் சேர்ந்து
சாக்கு பாசு போட்டு ஶாப்பு டேப்பு பாரு
என்றே பேச்சினில் ஒலிக்கும் அன்றோ?
*****
Bookmarks