Page 19 of 23 FirstFirst ... 9 15 16 17 18 19 20 21 22 23 LastLast
Results 217 to 228 of 273

Thread: ரமணியின் கவிதைகள்

                  
   
   
  1. #217
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    இவை போன்ற நகைச்சுவையும் தேவைதான் ...

  2. #218
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பிரதோஷத் துதி
    வானப் பிரத்த வேசம்

    (எண்சீர் விருத்தம்: தேமா புளிமா விளம் மா அரையடி)

    வானப் பிரத்த வயதெனும் போதும்
    . வாழும் வகையில் மாறுதல் இல்லை
    மோனம் சிறிதும் பயிலுதல் யின்றி
    . மூடன் எனவே அலைவதில் இவன்றன்
    ஊனின் பெருக்கில் உயிரொளி சுருங்க
    . உள்ளம் முழுதும் அல்லவை சேர்த்தான்!
    ஞானத் திரளாய்ப் பொலிவுறும் பெம்மான்
    . நலியும் இவனை உயர்த்துவ தென்றோ? ... 1

    பண்ணும் இசையும் செவியுறும் போது
    . பம்மும் இருளைச் சிலகணம் கரைத்தான்
    கண்ணும் கரமும் குவிந்திடும் போது
    . கட்டுண் டுளத்தைச் சிலகணம் நிறைத்தான்
    விண்ணில் நிறங்கள் கலந்திடும் நேரம்
    . விஞ்சும் இறைமை விழிகளில் இறைத்தான்
    எண்ணம் உடனே இருமையைத் தேட
    . எல்லாம் சிதறி இறையுணர் வறுமே! ... 2

    கண்ணும் கருத்தும் உலகியல் இனிமை
    . காணும் வழியில் சென்றிடும் போதும்
    வெண்ணீ றணிதல் பூசனை செய்தல்
    . வேசம் எனநீ அறிந்திடும் போதும்
    தண்ணென் றுனது திருவருட் தெளிவை
    . சற்றே யிவனுக் களித்திவன் வாணாள்
    பண்ணும் வினையால் தீமையென் றெதுவும்
    . பற்றா திருக்க அருள்புரி வாயே! ... 3

    --ரமணி, 02/03/2015, கலி.18/11/5115

    *****

  3. #219
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பிரதோஷத் துதி: புகலாகும் உம்தாள்!
    (எழுசீர் சந்த விருத்தம்: தனதான தான தனதான தான தனதான தான தனனா)*

    கருநீல கண்டர் விடைமீது நின்று களியாடும் நேரம் இதுவே
    கருவண்டு சூழும் அலர்சூடும் அன்னை கனிவோடு கண்டு மகிழ்வாள்
    இருளாகு முன்னர் நிறைவண்ண வானம் இறைசூழும் இன்பம் எனவே
    திருவால யத்தில் திருமேனி கண்டு திருநீற ணிந்து பணிவேன். ... 1

    சுழல்போன்ற வாழ்வில் சுயமாக எண்ணி சுகமென்று கொள்ளும் எதுவும்
    விழலென்று கண்டு வினைசெய்தல் விட்டு விகசித்து வாழ்தல் வருமோ
    குழகன்தாள் பற்றி வருநாளில் நின்று குறியேது மின்றி உயர
    மழுவேந்தி யென்றன் உளமேவி நின்று மருள்நீக்க வேண்டும் அரனே. ... 2

    அகலாத இன்பம் உளையாத உள்ளம் அழியாத கல்வி தருவீர்
    இகவாழ்வில் என்னுள் இறையெண்ணம் மேவி இதம்செய்து வாழ அருள்வீர்
    சிகைதன்னில் திங்கள் இடமேவு மங்கை திரையாறு மென்று வருவீர்
    புகலாகும் உம்தாள் நிலையாகி நன்மை பொழுதேறு முன்னர் புரிவீர்! ... 3

    --ரமணி, 18/03/2015, கலி.04/12/5115

    குறிப்பு:
    எழுசீர் சந்த விருத்தம்: தனதான தான தனதான தான தனதான தான தனனா

    இந்தச் சந்த விருத்த யாப்பில் திருஞானசம்பந்தர் தென்திருமுல்லைவாயில் கோவிலுறை
    சிவனைப் போற்றும் தம் பதிகத்தில் பயன்படுத்தியுள்ளார் என்று இதை அறிமுகப்படுத்திய
    சந்தவசந்தம் குழுமம் சிவத்திரு. வி.சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி.
    http://www.thevaaram.org/thirumurai_..._idField=20880

    இந்த சந்த அமைப்பை ஆறவது சீரில் மட்டும் தனதான/தானான என்று மாற்றி,
    ’குமுதம்’ திரைப்படத்தில் வரும் ’என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா?’ பாடலில்
    கீழ்வரும் வரிகளில் பாடலாசிரியர் மருதகாசி பயன்படுத்தியுள்ளார்:

    மணமாலை சூட்டி பலபேரும் வாழ்த்த வளையாடும் என்கையின் விரலில்
    கணையாழி பூட்டிப் புதுப்பாதை காட்டி உறவாடும் திருநாளின் இரவில்
    இளந்தென்றல் காற்றும் வளர்காதல் பாட்டும் விளையாடும் அழகான அறையில்
    சுவையூறும் பாலும் கனிச்சாறும் கொண்டு தனியேநீ வருகின்ற நிலையில்


    மேலே நான் எழுதியுள்ள சந்தப் பாடலும் இந்த வரிகளில் ராகத்தில் அமைந்துள்ளது.

    --ரமணி

    *****

  4. #220
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    வண்ணச் சிதறல் விஞ்ஞானம்
    (அறுசீர் விருத்தம்: தேமா/புளிமா மா காய் .. மா மா காய்)



    ஹோலித் திருநாள் விளையாட்டாய்
    . உறங்கும் வானில் வெகுதூரம்
    கோலப் பொடியை இறைத்ததுயார்?
    . குழலில் பீய்ச்சி அடித்ததுயார்?
    சாலச் சிறந்தே ஓர்வண்ணம்
    . சாற்றும் சேதி எதுவாகும்?
    தூலப் புகையாய் விரிந்தேதான்
    . சூக்கம் பெருமை காட்டுவதோ? ... 1 ... ;சூக்கம் = சூக்குமம்’

    சூரி யவொளி வெப்பத்தில்
    . சூறைக் காற்று வீசிடுமே
    நேரும் காற்றின் நுண்துகளில்
    . நிகழும் மின்னேற் றம்பாய
    பாரின் துருவ வான்வெளியின்
    . பகுதி உறையும் காற்றணுக்கள்
    சாரம் குறைய மோதுவதில்
    . சகட்டு மேனிக் கோலங்கள்! ... 2

    பசுமை வண்ணம் விளைப்பதுவே
    . பக்கல் உள்ள உயிர்வளியாம் ... [உயிர்வளி = ஆக்ஸிஜன்]
    விசும்பில் முழுதும் செம்மையென
    . விளைதல் தூர உயிர்வளியாம்
    திசைகள் முழுதும் நீலமெனத்
    . திகழும் வாயு ருசரகமாம் ... [ருசரகம் = நைட்ரஜன்]
    இசையும் வண்ணம் ஏழின்பின்
    . இலங்கும் வாயுத் துகளெனவே. ... 3

    இயற்கைக் காட்சிப் பின்னணியாய்
    . இறையின் சக்தி உளதென்றே
    செயலில் கொண்டு ஆய்வோர்க்கே
    . திண்ணம் உண்மை புலனாகும்
    இயற்கை பின்னே சூனியமே
    . என்றே கொளுவோர் வாணாளில்
    இயக்கம் இயக்கன் இயங்குபொருள்
    . இனிமை எதுவென் றறியாரே. ... 4

    --ரமணி, 22/03/2015

    உதவி:
    http://www.northernlightscentre.ca/northernlights.html

    *****

  5. #221
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    தனிநிற்பேன் வடுவெனவே!
    (அளவியல் ஆங்கில சானட்: தரவு கொச்சகக் கலிப்பா + குறள் வெண்செந்துறை:
    இயைபு: அஆஅஆ, இஈஇஈ, எஎ)


    எத்தனையோ புள்ளினங்கள் எல்லாமே கண்ணினிமை
    அத்தனையும் வந்துபார்க்கும் அன்றாடம் உறவாடும்
    எத்தனையோ புள்ளிசையாம் எல்லாமே பண்ணினிமை
    கத்துவதும் கொஞ்சுவதும் காலைமுதல் சிறகாடும்!

    அன்னமென எதையெதையோ ஆர்ப்பரித்தே தேடியுண்ணும்
    மின்னலெனக் கண்பட்டு மின்னலெனப் பறந்துவிடும்
    அன்னமதை நெய்பருப்பை அக்கணமே நாடியுண்ணும்
    இன்னலெதும் செய்யாதாம் இன்னிசையும் மறந்துவிடும்!

    இத்தனைக்கும் சுற்றிடத்தில் எங்கணுமே சோலையிலை
    வித்தெவணோ அத்தனையும் வேலிகாத்தான் முள்மரமே
    புத்துகளாய் எருக்கமுடன் புதர்முட்கள் சாலைவரை
    ஒத்துவரும் கான்கொடிகள் ஓங்கியெழுந் துள்வருமே!

    வானளாவும் அடுக்ககங்கள் வகைமனிதர் நடுவினிலே
    தானளாவும் நான்மட்டும் தனிநிற்பேன் வடுவெனவே!

    --ரமணி, 03/04/2015

    *****

  6. #222
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    கரிவலம்வந்தநல்லூர் (சங்கரன்கோவில் அருகில்)
    (எழுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா விளம் விளம் மா)
    (சம்பந்தர் தேவாரம்: 3.120.1: மங்கையர்க் கரசி வானவர்கோன் பாவை)

    கோவில்
    http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=4508
    http://naavaapalanigotrust.com/index...sivan&Itemid=0
    http://ammandharsanam.com/magazine/D...de/page021.php

    காப்பு
    கரிமுகன் ஐங்கரன் கண்ணருளால் வேந்தன் ... [வேந்தன் = இந்திரன்]
    கரிவலம் வந்தநல்லூர் காணும் இறைவனாம்
    பால்வண்ண நாதர் பரிந்தருள் செய்திடும்
    கால்வண்ணம் கூறுவேன் கண்டு.

    பதிகம்
    இந்திரன் ஜெயந்தன் பெற்றதால் சாபம்
    . இருவரும் வேடுவர் குலத்தில்
    வந்தனர் பிறந்து பூமியில் ஓர்நாள்
    . வாளிவில் கொண்டவர் அலைந்தே
    வந்ததில் காள வனந்தனில் வேட்டை
    . யாடிடக் கண்டவி லிங்கம்
    கந்தலாய்ப் புலியின் தோலணி யீசன்
    . கரிவலம் வந்தநல் லூரே. ... 1

    [ஜெயந்தன் = இந்திரன் மகன்; வாளிவில் = அம்பும் வில்லும்;
    காளவனம் = கரிவலம்வந்தநல்லூரின் ஒரு பெயர்]

    வான்பசு வருணன் விஞ்சையர் சித்தர்
    . மரகதன் வாயுவும் இந்தக்
    கான்தரு நிலத்தில் விலங்கெனத் தோன்றிக்
    . கருத்தனை வழிபட ஈசன்
    ஆன்றவர் துதியில் அகமகிழ் வுறவே
    . அனைவரின் சாபமும் தீரக்
    காந்தனாம் தேவன் இந்திரன் ஏறும்
    . கரிவலம் வந்தநல் லூரே. ... 2

    [வான்பசு = காமதேனு; விஞ்ஞையர் = வித்தியாதரர்; மரகதன் = குபேரன்;
    ஆன்றவர் = தேவர்; காந்தன் = தலைவன்]

  7. #223
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    இறைவனின் பேராம் பால்வண நாதர்
    . இலக்குவன் வழிபட நின்றார்
    இறைவியின் பேராம் ஒப்பனை யம்மை
    . இறைவனை மேவிய மர்ந்தாள்
    கறைதனைக் கொண்டே அமுதினை தேவர்க்
    . களித்தனர் கறைமிடற் றண்ணல்
    கறுவியே வாவி சுக்கிரர் செய்தார்
    . கரிவலம் வந்தநல் லூரே. ... 3

    சுக்கிரர் வாவி பாலமு தாகச்
    . செய்திறை யருளினை வேண்ட
    முக்கணர் சோதி வாவியெ ழுந்தே
    . முன்னுரு லிங்கமுட் சேர
    அக்கணம் வாவி நீருள தாக
    . அங்கணர் பால்வண ரானார்
    கக்கசம் இன்றிப் புரமழித் தாரின் ... ... [கக்கசம் = பிரயாசை, முயற்சி]
    . கரிவலம் வந்தநல் லூரே. ... 4

  8. #224
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    கரிவலம் வரவே கரிபுரம் பேராம்
    . காளவ னம்சுடு காடாம்
    கருத்தனம் பரனாம் அம்பர புரமாம்
    . அமுதுறும் அசலமென் றோர்பேர்
    ஒருபெயர் சிவசக் திபுரமாம் இன்னும்
    . ஓர்சிவன் முக்திபு ரமெனக்
    கருவனின் தலப்பேர் இங்ஙனம் பலவாம்
    . கரிவலம் வந்தநல் லூரே. ... 5

    [கருத்தனம் பரனாம் = கருத்தன் (சிவன்) அம்பரனாம்; கருவன் = சங்காரமூர்த்தி சிவன்]

    கருவையின் மீதோர் நூறெனும் பாடல்
    . கனியுமந் தாதிவெண் பாவும்
    உருவினில் பதிற்றுப் பத்தெனும் வகையில்
    . ஒருசதம் பாக்களும் செய்த
    திருவுடை அதிவீ ரராமனின் ஊரே
    . திருக்கரு வையெனச் சொல்லும்
    கருமிடற் றண்ணல் மேவிய தலமாம்
    . கரிவலம் வந்தநல் லூரே. ... 6

  9. #225
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    கருவைமன் வரதுங் கன்னொரு பிள்ளைக்
    . கனியினைப் பெற்றவ னில்லை
    கருவையூர் முழுதும் சிவனுருக் கண்டே
    . காலடி வைத்திலேன் என்றான்
    மரணமும் வந்து சூழவே கொள்ளி
    . மருவிலி வைத்தன ரென்றே
    கருவுறும் கதைகள் புகழ்ந்திடும் ஊராய்க்
    . கரிவலம் வந்தநல் லூரே. ... 7

    [கருவைமன் = கருவையின் மன்னன்; மருவிலி = அனாதியாகவே எல்லாம் பொருந்தி
    எதுவும் புதிதாக வேண்டாத சிவன்--திருமந்திரம் 9.25]

    மலைகொள முயன்ற இலங்கையின் வேந்தை
    . மறுகணம் கால்விரற் கீழே
    தலைபடத் பத்துத் தோள்பட நசுக்கித்
    . தனியருள் செய்துபின் காத்தார்
    சிலைநிகர் சக்தி இடமுறும் மேனி
    . சிவனெனச் சிந்தையில் வாழும்
    கலைமதி மத்தம் தலைநதி கொள்வார்
    . கரிவலம் வந்தநல் லூரே. ... 8

  10. #226
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    (இறுதிப் பகுதி)

    அலையுறும் சயனர் மலருறும் பிரமன்
    . அழற்றலை தாள்தனைத் தேடி
    மலைவுடன் நின்ற பொழுதிவர் அருளி
    . மாண்பினைக் காட்டியே நின்றார்
    தொலைவினில் அருகில் மனதினில் கண்முன்
    . தோழனாய் நின்றருள் சிவனார்
    கலைமறி கரத்தர் வினையழி வரத்தர்
    . கரிவலம் வந்தநல் லூரே. ... 9

    ஆரணம் ஒப்பாப் பன்னெறி இன்னாள்
    . அவனியில் மாந்தரை யிழுக்கக்
    காரணன் நெறியே உய்நெறி யென்றே
    . காரியம் ஆற்றிடும் அடியார்
    பூரண நலனும் வேரெனும் அறிவும்
    . புண்ணியன் அருளினால் பெறவே
    காரிகை மேனி யிடமுற வந்தான்
    . கரிவலம் வந்தநல் லூரே. ... 10

    வனந்தனில் வாழும் பேயுடன் ஆடும்
    . வழித்துணை நாதனைப் போற்றி
    மனதினில் ஊறும் தினவினைக் கொண்டே
    . மாசறச் செய்தலை வேண்டி
    நனவினில் நேரும் நிகழ்வுகள் யாவும்
    . நஞ்சுணி உளமெனக் கொண்டால்
    கனவிலும் காவலன் கண்திறந் தருளக்
    . கரிவலம் வந்தநல் லூரே. ... 11

    --ரமணி, 08-11/04/2015

    *****

  11. #227
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பிரதோஷத் துதி
    என்குணத்தான் தாளின்னும் உள்ளம் கொள்ளேன்

    (இருபத்து நான்கு சீர் ஆசிரிய விருத்தம்:
    கூவிளங்காய் காய் மா மா | காய் காய் மா தேமா x 5)


    துள்ளிவிழும் வெள்ளலையில் திரளாய் ஓங்கித்
    . துவளவைத்த வாசுகியின் விடத்தால் தேவர்
    . . துடிதுடித்தே மரணபயம் மனதில் சூழத்
    . . . துரத்துகின்ற வேளையிலே விரைந்தே ஓடித்
    . . . . துடிகொண்டார் தூமலர்த்தாள் இணையைப் பற்றித்
    . . . . . துயர்நீக்கி உயிர்காக்கத் துதித்தே வேண்ட
    வள்ளலவர் விழிநுதலார் அபயம் தந்தே
    . . வருநஞ்சால் மாதவனின் நிறமும் மாற
    . . . மலரவனும் கவலையுற்றே உள்ளம் வாட
    . . . . வன்றொண்டர் சுந்தரரை அனுப்பி யந்த
    . . . . . வாசுகியின் காளமவர் மணியாய்ச் செய்தே
    . . . . . . வளர்மதியர் வரக்கரத்தில் வைத்தே நிற்க
    விள்ளலின்றி விடையவரும் அதனை யேற்றே
    . . மிடறுவழி விழுங்கிடவே வாயில் கொள்ள
    . . . விமலையவள் பதைபதைத்தே கழுத்தைப் பற்ற
    . . . . விடமதுவும் நின்றதனால் நீல கண்டர்
    . . . . . விண்ணவரின் வேண்டுதலால் பதிமூன் றாம்நாள்
    . . . . . . விடையேறிக் கொம்பிடையே நடனம் செய்வார்
    எள்ளளவே சுகமெனினும் அதையும் நாடி
    . எனதெனவே கொண்டுதினம் மகிழும் நாளில்
    . . . எண்ணத்தில் கறையேற வினைகள் ஏறி
    . . . . இகவாழ்வை இழிவாழ்வாய்ச் செய்தல் கண்டும்
    . . . . . என்குணத்தான் தாளின்னும் உள்ளம் கொள்ளேன்
    . . . . . . எந்தையவர் எனக்கெந்நாள் அருள்செய் வாரோ?

    --ரமணி, 16-18/04/2015, கலி.03/01/5116

    *****

  12. #228
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    அட்சய திருதியைத் துதி: பொன்மாரி யாகப் பொழி!
    (அளவியல் நேரிசை வெண்பா)

    விக்னம் விளைத்தே வினைகள் அகற்றியே
    லக்னம் திருத்தும் லலிதைமக! - அக்னியாய் ... ... [லக்னம் = காலநேரம்]
    என்றன் உளமுறும் ஈனம்கொள் ஞானத்தைப்
    பொன்மாரி யாகப் பொழி. ... 1

    வேதம் நிலைபெற்றே வேள்விகள் ஓங்கியே
    தீதெலாம் நீக்கும் திறமைசேர் - மாதுரியர் ... ... [மாதுரியர் = விவேகியர்]
    வன்முறை நீக்கி வளஞ்சேர்க்க வேதனே
    பொன்மாரி யாகப் பொழி. ... 2

    மூன்றளந்தா னேயினி மூவுலகும் இன்பமுறத்
    தான்நீங்கி ஞானம் தழைக்கவே - வான்நிற்கும்
    அன்னையின் அன்பே அகமுறவே மாந்தர்க்குப்
    பொன்மாரி யாகப் பொழி. ... 3

    கண்ணுத லேநின் கழலிணை யாடலில்
    மண்ணில் அறந்தழைக்க மானுடர் - எண்ணத்தில்
    நன்மையே தங்கி நலம்விளைக்க வுன்னருள்
    பொன்மாரி யாகப் பொழி. ... 4

    உமையே அமைதியுடன் ஓர்மை அமையக் ... ... [ஓர்மை = ஒற்றுமை]
    குமையும் மனிதர் குலாவ - எமைக்காத்தே
    இன்னருள் செய்தே இனிவரும் நாளெல்லாம்
    பொன்மாரி யாகப் பொழி. ... 5

    பொன்மகளே பொன்னுடன் பூமனமும் பூவுலகில்
    நன்னெறியாய் நின்றினி நாளெல்லாம் - இன்மையின்
    இன்னல் மறைந்து இனிமை நிலவிடப்
    பொன்மாரி யாகப் பொழி. ... 6

    கலைமக ளேநீ கடைக்கண்ணால் பார்த்தே
    உலையும் உலகிது உய்ய - நிலைத்திடும்
    நன்மையென ஞானமே நாடிட வுன்னருள்
    பொன்மாரி யாகப் பொழி. ... 7

    வள்ளிம ணாளநீ வந்தருள் செய்திங்கே
    கள்ள மனிதரைக் காய்ந்தழித்தே - உள்ளமெலாம்
    உன்கழல் நாளும் உவந்தே உயர்வெய்தப்
    பொன்மாரி யாகப் பொழி. ... 8

    சிந்தையில் சீர்தருவாய் ஶ்ரீராம உன்னைதினம்
    வந்தித்தே வாழ்வில் வளம்பெற்றே - இந்தியப்
    பொன்னாடு முன்னிற்கப் பூவுலகில் நன்மைகள்
    பொன்மாரி யாகப் பொழி. ... 9

    பாரதப் போரினில் பார்த்தனின் சாரதியே
    பார்-அதம் ஆவதைப் பார்த்திலையேன்? - வேருடன் ... ... [அதம் = அழிவு, பள்ளம், தாழ்வு]
    வின்னம் அறுத்தே விழுமம் எழுந்தோங்கிப்
    பொன்மாரி யாகப் பொழி. ... 10

    இறையுரு பத்தியில் ஈடுபட்டும் உள்ளே
    உறைவதை உள்ளியே ஒன்றும் - நிறைமாந்தர்
    பொன்னாய்ப் உருக்கிப் புறந்தரும் சொற்கேட்டால்
    பொன்மாரி கொள்ளும் புவி. ... 11

    --ரமணி, 21/04/2015, கலி.08/01/5116

    *****

Page 19 of 23 FirstFirst ... 9 15 16 17 18 19 20 21 22 23 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •