Page 23 of 23 FirstFirst ... 13 19 20 21 22 23
Results 265 to 273 of 273

Thread: ரமணியின் கவிதைகள்

                  
   
   
  1. #265
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    #ரமணி_பிரதோஷம்
    பிரதோஷத் துதி: தாண்டவனே ஆண்டருளே!
    (எழுசீர் விருத்தம்: கூவிளங்காய் மா காய் மா காய் மா காய்)

    ஆலெழுந்த வாரி அச்சமுற்ற தேவர்
    . அன்றுன்னை நாட அருள்செய்யச்
    சேலெழுந்த கண்ணாள் நஞ்சிறங்கும் கண்டம்
    . திகிலெழுந்து பற்றக் கொண்டாயே
    காலெழுந்து வீட்டும் கருமேக வெள்ளம்
    . காலத்தை நிறுத்தும் நாள்வரையில்
    காலெழுந்த நடனம் நிற்காதே ஆடும்
    . கண்ணுதலே நல்லோர் காத்தருள்வாய். ... 1

    ஆவிழிந்த ஐந்தும் ஆலயத்தில் ஆடி
    . அடியார்க்கு நன்மை அருள்வோனே
    நாவிழிந்த பாட்டாய் நாலுவகைப் பண்ணின்
    . நாதமுனைச் சூழும் காட்சியுடன்
    காவிழிந்த மலர்கள் காட்டுமலங் காரம்
    . கண்ணிழியச் சுற்றில் வரும்போது
    நோவிழிந்த வாழ்வின் நுண்மையைநா டாதே
    . நுகர்வோரைத் திருத்தும் அருளாளா. ... 2

    [ஆவிழிந்த ஐந்து = பஞ்சகவ்யம்;
    நாலுவகைப் பண் = வேத, தேவார, நாதஸ்வர, மேளப் பாட்டு;
    இவற்றில் மேளம் விரல்களால் எழுந்தாலும் தாளம் முதலில் மனத்தின்
    நாவிலேயே எழுகிறது;
    காவிழிந்த = சோலையில் இருந்து இறங்கிய]

    தேனறியாக் காட்டு மலரானேன் ஆன்மத்
    . தினவறியா வெற்று மனம்கொண்டேன்
    வானறியாப் பயிராய் வலுவிழ்ந்தே இன்று
    . வாடுகிறேன் ஒன்றும் அறிந்திலனாய்
    நானறிந்த உலகில் துன்பமிலா இன்பம்
    . நாடுகிறேன் இன்னும் தேடுகிறேன்
    தானெரிந்த காட்டில் கூளியுடன் ஆடும்
    . தாண்டவனே என்னை ஆண்டருளே. ... 3

    [தானெரிந்த = தான் என்னும் உடல் நிமித்த அகந்தை]

    --ரமணி, 02/07/2016, கலி.18/03/5117

    *****

  2. #266
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    கண்ணே, மணியே, கட்டிக் கரும்பே!
    (முச்சீர்க் குறள் வெண்செந்துறை)

    பெண்
    கண்ணே என்றால் கண்ணாடிக்
    கண்ணென் றுன்றன் எள்ளுரையோ?
    கண்ணில் ஆடும் தோற்றமெலாம்
    கண்ணா டிசெயும் மாயமன்றோ?
    கண்ணுக் கின்றைய கற்பனையாய்
    பெண்ணைச் சொல்லப் பொருளுண்டோ?

    ஆண்
    கணினிக் கேமரா கண்போல்
    அணியாய்க் காண்பதால் கண்ணென்றேன்
    கண்ணே நீயும் கண்ணாடி
    கண்ணே நானும் கண்ணாடி
    இருவிழிப் பொருத்தம் இப்படியாய்
    வருவது நாலாய் வளமன்றோ?

    பெண்
    மணியே என்றார் மங்கையெனை
    மணியே என்சம் பாத்தியமாய்
    மணியில் லாமல் உழைமாடாய்
    மணிநீ என்னைக் காண்பாயோ?

    ஆண்
    மணிபோல் வெட்டித் துண்டாக்கி
    அணியாய்ப் பேசும் அருமங்கை
    மணியே உன்சம் பாத்தியமேல்
    மணியாய்க் காய்கறி அரிந்தேதான்
    மணியில் உணவும் சமைப்பாயே
    பணியில் நானும் உதவிடவே!
    மணிநான் மணிமே கலைநீயே
    பிணிப்பேர் பொருத்தம் பெருமையன்றோ?

    பெண்
    கட்டிக் கரும்பே நானென்றே
    சுட்டித் தனமாய்ச் சொல்வாயோ?
    கரும்பாய் என்னைப் பிழிவாயோ?
    வருமுன் காப்பேன் வனமங்கை!

    ஆண்
    கரும்புச் சாறு இருவரும்நாம்
    அரும்பும் மாலைச் சாலையிலே
    விரும்பிப் பருகுவோம் பலநாட்கள்
    கரும்பின் மறுபெயர் அறிவாயே
    கன்னற் சாறாய் உன்னுள்ளம்
    கன்னம் இழைத்துநான் கண்டேனே
    கன்னல் என்றே இனிநானும்
    என்றும் உன்னை அழைப்பேனே!

    பெண்
    கனியே தேனே என்றாரே
    வனிதை எங்களைப் புலவருமே
    உவமை சுட்டும் உடலாக
    உவந்தே நீயும் காண்பாயோ?

    ஆண்
    நவநா கரிகப் பெண்மணிநீ
    உவமைப் பொருளே வேறன்பேன்
    கணினித் தகவற் கனியேநீ ... [கனி=சுரங்கம்]
    அணிமலர்த் தேனாய் உன்பேச்சு
    கனியும் உள்ளம் தேனாக
    வனிதை உன்னைக் காண்பேன்நான்
    காலம் காலமாய்ச் சொன்னதெலாம்
    ஆலம் விழுதாய் நிற்பதன்றோ?
    சொல்லின் பொருள்தான் வேறாகிக்
    கல்வியில் கருத்தில் சமமாவோம்.

    இருவரும்
    (இருசீர்க் குறள் வெண்செந்துறை)

    மணிநீமணி மேகலைநான்
    கணினித்துறை கம்பெனியின்
    பணியேநமைச் சேர்த்ததுவே
    மணிநாம்மிகச் சேமித்தே
    அணியாயிரு வாரிசுகள்
    துணிவோம்நம் வாழ்வினிலே!

    --ரமணி, 01/07/2016

    *****

  3. #267
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    சென்மாட்டமித் துதி
    (நேரிசை வெண்பா)

    இலையோ மலரோ இவையின்றேல் புல்லோ
    அலையும் மனத்தின் அகந்தை - குலையவே
    தந்தால் வருவேன் தயங்காமல் என்றாயே
    மொந்தை உளந்தருமே முள்! ... 1

    கண்ணன் குழந்தையாய்க் காதலனாய்த் தோழனாய்
    எண்ணம் சிதைத்துள்ளே இன்பமாய்ப் - பண்ணும்
    குருவாய் எனதகந்தை கொள்ளும் இறையாய்
    உருக்கொள உய்யும் உயிர். ... 2

    குழலில் மயிற்பீலி கொண்டான்கைப் பற்றும்
    குழலூதி உள்ளத்தைக் கொண்டான் - குழல்மூச்சாய்
    என்னுள் இறங்கும் எரிவாயுத் தேரோட்டி
    தன்னுள்ளே கொள்வானென் தான். ... 3

    --ரமணி, 25/08/2016

    *****

  4. #268
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    சொல்விளையாடல் 1. தொடும்-தொடலை
    (கலிவிருத்தம்)

    (பதினாறு வயதில் மாண்ட ஒரு சிறுவனின் ஈமச் சடங்கில் இரு புலவர்களுக் கிடையில் உரையாடல்)

    தொடுமெனச் சொன்னார் தொடலை யென்றேன்
    சுடுமெனச் சொன்னார் சுடலை யென்றேன்
    அடுமெனச் சொன்னார் அடலை யென்றேன்
    விடுமெனச் சொன்னார் விடலை யென்றேன்!

    [தொடலை = மாலை; அடலை = சாம்பல்; சுடலை = சுடுகாடு;
    விடலை = பதினாறு வயதுச் சிறுவன்]

    பொருள்:
    புலவரவர்
    தொடும் பிணத்தை என்றார்; நான் தொடலை (மாலை) என்றேன்.
    சுடும் நெருப்பு என்றார்; ஆம், சுடலை (சுடுகாடு) என்றேன்.
    அடும் (அழித்துவிடும் ) என்றார்; முடிவில் அடலை (சாம்பல்) என்றேன்.
    சரி விடும் என்றார்; விடலை (பதினாறு வயதுச் சிறுவன்) என்றேன்!

    --ரமணி, 16/03/2017

    *****

  5. #269
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    சொல்விளையாடல் 2. உழல்-உழலை
    (கலிவிருத்தம்)

    உழல்கிறேன் நாளும் கழுத்தில் உழலை
    சுழல்கொளும் மனத்தில் இல்லை சுழலை
    அழல்வணன் உளத்திலை விரைவின் அழலை
    கழல்கள் பணியேன் வினைகளோ கழலை!

    [உழலை = செக்கு மரத்தடி; சுழலை = வஞ்சகம்;
    அழல்வணன் = நெருப்புபோல் வண்ணம்கொண்ட சிவன்;
    அழலை = களைப்பு;
    கழலை = கழுத்து, வயிற்றில் வரும் பெருங் கட்டி நோய்]

    --ரமணி, 16/03/2017

    *****

    சொல்விளையாடல் 3. புத்தகம்-முத்தமிழ்
    (கலிவிருத்தம்)

    புத்தகம் வளர்த்ததால் புத்தகம் விட்டேன்
    முத்தமிழ்ச் சொல்லற முத்தமிழ் மனத்தில்
    எத்தனம் போதும் எத்தனமும் வீணெனும்
    வித்தகம் எழுந்து வித்தகம் விழுந்ததே.

    பொருள்
    புத்து-அகம் வளர்த்ததால் புத்தகம் விட்டேன்
    முத்தமிழ்ச் சொல்லற முத்து-அமிழ் மனத்தில்
    எத்தனம் போதும் எத்-தனமும் வீணெனும்
    வித்து-அகம் எழுந்து வித்தகம் விழுந்ததே.

    --ரமணி, 16/03/2017

    *****

  6. #270
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    சொல்விளையாடல் 4. சிந்தனை-எந்திரி
    (கலிவிருத்தம்)

    சிந்தனை மனத்தில் சிந்தனை குறைத்தே
    எந்திரி வாழ்வில் எந்திரி கண்டதில்
    கந்துகம் மனத்தில் கந்துகந்து நிற்க
    வந்தது போக வந்தது நின்றது!

    பொருள்
    சிந்து (கடல்) அனை (அனைய = போன்ற, கடைக்குறை விகாரம்) மனத்தில் சிந்தனையைக் குறைத்தே
    எந்து-((என்ன, எப்படி என்று) இரி (ஓடும்) வாழ்வில், எந்திரி (பொம்மலாட்டப் பாவையை ஆட்டுவிப்போனைக்) கண்டதில்
    கந்துகம் (மனக் குதிரை) மனத்தில் கந்து (தூண்) உகந்து நிற்க
    வந்தது எல்லாம் போனது ஆகி, இப்போது வந்த-அது (இந்த ஞானம்) நின்றது!

    --ரமணி, 16/03/2017

    *****

  7. #271
    இளையவர் பண்பட்டவர் கிருஷ்ணன்'s Avatar
    Join Date
    27 Jun 2009
    Location
    Theni ,Tamilnadu
    Posts
    94
    Post Thanks / Like
    iCash Credits
    11,128
    Downloads
    0
    Uploads
    0
    ஆகா அத்தனையும் அருமை ,...நிதானமாக மீண்டும் மீண்டும் படிக்கிறேன் ...தேனாய் இருக்கிறது.
    தீதும் நன்றும் பிறர் தர வாரா

  8. Likes ரமணி liked this post
  9. #272
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    #ரமணி_பிரதோஷம்
    பிரதோஷத் துதி: ஒத்திவைத்தே ஓய்ந்தேனே!
    (குறும்பா)
    (சிவன்: பிரதோஷத்துதி)


    ஒத்திவைத்தே ஒத்திவைத்தே ஓய்ந்தேனே
    சித்தமெலாம் பித்தேறி மாய்ந்தேனே
    .. கண்ணெதிரே தெரிவதெலாம்
    .. எண்ணெழுத்தாய் அறிவதனால்
    அத்தனையும் உண்மையெனக் காய்ந்தேனே. ... 1

    கற்பனையே விற்பனமாய்க் கொண்டேனே
    அற்பமெலாம் அற்புதமாய்க் கண்டேனே
    .. ஆன்மவொளி பேணேனே
    .. பான்மையதில் காணேனே
    சிற்சபையின் சன்னிதியை அண்டேனே. ... 2

    அஞ்செழுத்துக் காதொலிக்கும் நேரமெலாம்
    நெஞ்செனிலே ஏதேதோ வேருறுமே
    .. வேதவொலிப் பண்ணிசையில்
    .. காதலிலே கண்ணசையும்
    கொஞ்சமேனும் ஏற்றமிலாச் சீரழிவே. ... 3

    மூவறமும் நிலைநிற்கும் வாழ்வினிலே
    ஆவதெலாம் ஆனதெனும் தாழ்வினிலே
    .. முத்திநிலை நாடேனே
    .. அத்தனுனைத் தேடேனே
    போவதுவும் வருவதுவும் ஊழ்வினையோ? ... 4

    கத்துகடல் நஞ்செடுத்தே உண்டவனே
    முத்தெனக்க ழுத்தினிலே கொண்டவனே
    .. என்னுளத்தில் தெளிவுறவே
    .. உன்னுருவின் ஒளியருளே
    சத்தியத்தின் தத்துவமாய் நின்றவனே. ... 5

    --ரமணி, 01/12/2017

    *****

  10. #273
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பிரதோஷத் துதி: எவ்வித மெனினும் காத்திருப்பேன்!
    (அறுசீர் விருத்தம்: விளம் மா காய் => அரையடி)

    ஆட்டுவித் தாலும் ஆடாத
    . அகமென தாகில் என்செய்வேன்
    கூட்டுவித் தாலும் கூடாத
    . குணமென தாகில் என்செய்வேன்
    தேட்டுவித் தாலும் தேடாத
    . தினவென தாகில் என்செய்வேன்
    ஓட்டுவித் தாலும் ஓடாத
    . ஒட்டுத லாகில் என்செய்வேன்? ... 1

    காட்டுவித் தாலும் காணாத
    . கல்மன மாகில் என்செய்வேன்
    பாட்டுவித் தாலும் பாடாத
    . பண்பென தாகில் என்செய்வேன்
    நாட்டுவித் தாலும் நாடாத
    . நலிவென தாகில் என்செய்வேன்
    பூட்டுவித் தாலும் பூட்டாத
    . புத்தியைக் கொண்டேன் என்செய்வேன்? ... 2

    இவ்விதம் என்னை இயக்குவதும்
    . ஈசர்-உம் செயலாய் எண்ணுவதோ
    செவ்விதின் என்னைச் செப்பனிடும்
    . திருவுளம் இந்நாள் உமக்கிலையோ
    வெவ்வினை சூழ வாழ்வதுதான்
    . விதியெனக் கென்றே சொல்வீரோ
    எவ்வித மெனினும் காத்திருப்பேன்
    . எண்குணன் என்னை ஆட்கொளவே! ... 3

    --ரமணி, 15/12/2017

    *****

Page 23 of 23 FirstFirst ... 13 19 20 21 22 23

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •