அநுத்தமா
ஆஹா! என் காட்டில் பொன்மாரி பொழிகிறதே! புரவலர் முரளிக்கு நன்றிபல.
அநுத்தமா
ஆஹா! என் காட்டில் பொன்மாரி பொழிகிறதே! புரவலர் முரளிக்கு நன்றிபல.
பேஷ் ! பேஷ்! ரொம்ப பிரமாதம் ! உங்கள் பக்கங்கள், திரிகள்.
ஏதோ என்னால் இயன்றது. இன்னும் கொடுக்க ஆசை தான். பொற்கிழி தான் கிழிந்து விட்டது. என் செய்வேன்!
அய்யா, உங்களின் முதற்கவிதையைய்ப் படித்ததும் நீங்கல் மரபுக் கவிதைகள் மாத்திரம்தான் எழுதுபவர் என்று எண்ணி இத்திரிப் பக்கம் வராமல் காத தூரம் ஓடி பொழுது போகாமல் முழுவதும் படித்தபின் என்னை நானே நொந்துகொண்டேன்...
யாப்பிலும் புதுக் கவிதை,கடிஜோக்ஸ் மற்றும் இத்யாதி இத்யாதி (...!!!)எழுதிக் கலக்கலாம் (???) எனப் புரிந்துகொண்டேன்...
தொடர்ந்து கலக்குங்கள்....
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
வணக்கம் திரு. ஜெயந்த்.
மரபுக் கவிதையில் நான்கு பாவகைகளும் ஏராளமான பாவினங்களும் உள்ளன. பாவகைகளில் வெண்பா தவிர மற்ற மூன்று வகைகளில் சீர்களும் தளைகளும் விரவலாம். இணைக்குறள் ஆசிரியப்பாவில் முதலடி ஈற்றடியில் மட்டும் நான்கு சீர்கள் வர, இடையிலுள்ள அடிகளில் சீர்கள் இரண்டோ மூன்றோ வரலாம். இது புதுக்கவிதைக்கு ஏற்ற வடிவம்.
பாவினங்கள் பலவற்றில் மிகவும் நெகிழ்ந்த இலக்கணமே பயில்கிறது. உதாரணமாக, ஆசிரியத் தாழிசையில் தம்முள் அளவொத்த மூன்று அடிகள், குறள்வெண்செந்துறையில் தம்முள் அளவொத்த இரண்டு அடிகள், அவ்வளவே. இவ்விரு இனங்களிலும் ஒவ்வொரு அடியிலும் எத்தனை சீர்களும் இருக்கலாம், எந்தத் தளையும் வரலாம்--முதலடியின் அளவு (சீர் எண்ணிக்கை) மற்ற அடிகளிலும் இருக்கவேண்டும், அவ்வளவே.
நீங்கள் எழுதிய ஹைக்கூ இது:
கால்களை காத்தாலும்
காவலில்லாத இடம்தான்
என்றும் காலணிகளுக்கு!
இந்த ஹைக்கூவை மரபில் இப்படி எழுதலாம்:
(ஆசிரியத் தாழிசை)
கால்களைக் காத்தாலும்
காவலற்ற இடமே
காலணி களுக்கே!
இன்னும் கொஞ்சம் உணர்ச்சி சேர்த்து மூன்று சீர்களில்:
(ஆசிரியத் தாழிசை)
கால்களை முள்ளிலும் கல்லிலும் தாங்கி
கால்களை வெய்யிலின் கடுமையில் காக்கும்
காலணி களுக்குக் காவலென் பதேது?
குறள் வெண்பா வடிவில்:
(ஐக்குறள்: இருவிகற்பக் குறள் வெண்பா)
கால்களைக் காத்தாலும் காலணிக் கென்றுமே
காவலில் லாத இடம்.
மரபில் சிந்திக்க முயன்று பாருங்கள்.
அன்புடன்,
ரமணி
அய்யா, விளக்கங்களுக்கு நன்றி...
என் இளமைக் கால கல்வி இலங்கையில்...
இலக்கணம் பற்றி இளமையில் பயிலாததால் ஒரு சிறு பயம்...
தேர்வுகளுக்காக புரிந்து படிக்காமல் மனப்பாடம்(!!!) விட்டு வேறு வழி தெரியவில்லை...
அதனால் மரபுக் கவிதை எழுதுவதை மெதுவாக மேற்கொளலாம் என எண்ணுகின்றேன்...!!!
பி.கு : உங்களைவிட வயதில் சிறியன்... எனவே "ஜெயந்த்" என்றே அழைக்கலாமே...
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
23. கழுதையும் ஞானமும்!
(நிலைமண்டில ஆசிரியப்பா)
சிறந்த ஞானமெது சொல்லுங்கள் குருவே!
அறிந்த ஞானியிடம் மனிதன் கேட்டான்.
இன்பத்தில் களித்தலும் துன்பத்தில் நோதலும்
இல்லாத நிலையே ஞானம் என்றார்.
முனிவரின் சொற்கள் மனிதனுக்(கு) எட்டவில்லை.
தனியே மேய்ந்தவோர் கழுதையைக் காட்டினார்.
கவனியிக் கழுதையை காலையும் மாலையும்
அவனியின் ஆற்றாமை அறிந்து கொள்வாய்.
கழுதையோ(டு) ஓர்நாள் கழித்த மனிதன்
வழியொன்றும் காணாமல் வந்தான் மீண்டும்.
பழுதென்ன பார்வையில்? புரியவில்லை குருவே!
விழுமிய தாங்கள்தான் விடைகூற வேண்டும்.
காலையில் அழுக்கில் கனத்த மூட்டைகள்
சுமந்த கழுதை வருத்தம் கொண்டதா?
மாலையில் வெளுத்து இலேசான மூட்டைகள்
சுமந்த கழுதை மகிழ்வு கொண்டதா?
சமமென் றிருப்பதே ஞானம் மனிதா!
மமதை நீங்கினால் சமனம் ஆகியே
தமதெனும் பற்றைத் துறந்து வாழ்வில்
நமதல்ல எதுவுமெனும் ஞானம் புலப்படும்!
--ரமணி, 08/02/2013
[குறிப்பு: இந்தக் கவிதை பற்றி நானும் ஒரு நண்பரும் வேறொரு குழுமத்தில் கவிதையில் உரையாடியதைப் பின்னர் பதிகிறேன்.]
*****
24. உத்திக் கவிதைகள்
1. வினை-பெயர் அடுத்து இருபொருள் படவரும் எண்ணும்மைகள்
(அறுசீர்க் குறள் வெண்செந்துறை)
முள்ளும் மலரும் மலரும் காயும் காயும் கனியுமே
பள்ளும் பறையும் பறையும் ஒலியும் ஒலியும் ஒளியுமே
காகமும் கரையும் கரையும் உடையும் உடையும் கிழியுமே
தாகமும் குறையும் குறையும் மறையும் மறையும் நிறையுமே.
கல்லும் கரையும் கரையும் அணையும் அணையும் உடையுமே
சொல்லும் விளக்கும் விளக்கும் இருளும் இருளும் மருளுமே
காற்றும் அலையும் அலையும் சுழலும் சுழலும் கழலுமே
நாற்றும் தழையும் தழையும் ஆடும் ஆடும் மேயுமே.
[ஒலிதல்=தழைத்தல்; கிழி=பரிசு; மறை=வேதம்]
--ரமணி, 12/02/2013
இதுபோல் அமைத்தெழுத வேறென்ன எண்ணும்மைகள் பயன்படும்?
*****
26. விஜய வருஷ சங்கல்பம்
(குறளடி வஞ்சிப்பா)
விஷுபுண்ணிய தினப்பிறப்பில்
விஷாலாக்ஷியின் அருட்பார்வையில்
விஜயவருஷம் பிறந்தெழுந்தது
விஷ்வரூபமாய் வளர்ந்தாளவே
தீவினையெலாம் தீப்பட்டு
நல்வினைகள் எழுந்தோங்கி
வல்லமைகள் பலசேர்ந்து
நலங்கள்பல விளைந்திடவே
பலவகைகளில் வணங்கிடுவோம்
இவ்வாண்டில்
ஊமைகள் பேசி உண்மைகள் வெளிவர
ஆமைகள் முயலாகி ஆற்றல் காட்டிடத்
தீமைகள் விலகி நன்மைகள் பெருகவே
பாமரர் பண்டிதர் யாவரும் நலம்பெறத்
தாமத மின்றிப் பூமகள் அருள்பெற
நாமெலாம் உழைப்போம் நம்பிக்கை யுடனே.
--ரமணி, 01/01/5114 | 14/04/2013
*****
5114 வள்ளுவராண்டின்படிதானே?
என்றென்றும் நட்புடன்!
அல்ல, கலியுக சகாப்தத்தின் படி இது 5114-ஆம் ஆண்டு. வள்ளுவர் ஆண்டின் படி 2045.
இன்றும் சீனா தன் 5,0000 ஆண்டு பழமையான வரலாற்றை ஒவ்வொரு ஆண்டுப் பிறப்பின் போதும் கொண்ண்டாடுகிறது.
கிருஷ்ண பரமாத்மா துவாபர யுகத்தின் இறுதியில் வாழ்ந்தார் என்பதற்கு அவர் அரசாண்ட துவாரகை நகர ஆழ்கடல் சான்றுகள் கிடைத்துள்ளபோது நாம் ஏன் நம் பாரம்பரியத்தை மறக்கவேண்டும்?
பயனுள்ள தகவல்
நன்றி ஜயா
என்றென்றும் நட்புடன்!
ஹாஸ்யக் குறட்பாக்கள்: மணவாழ்வு அன்று
மதுரை சிதம்பரம் வீட்டிலே ஒன்ற
விதவித மாகுமே வாழ்வு. ... 11
மதுரை சிதம்பரம் ஒன்றாக ஆகிவிட்டால்
மாமியார் என்னா வது? ... 12
மாமியார் மெச்சிய மாட்டுப்பெண் உண்டோசொல்?
சாமியாலும் ஆகாத வொன்று. ... 13
கணவனவன் அம்மாக்கோண்(டு) ஆகிவிட்டால் அந்தோ
மனைவியின் வாழ்க்கை நரகு. ... 14
மாமனார் வாயில்லாப் பூச்சியாகி விட்டாலோ
மாமியார் ராச்சியம் தான். ... 15
பணமும் நகையும் படைத்தாயின் வாழ்க்கை
மணமகள் கைவசம் தான். ... 16
பற்றிடும் கொம்பு புளியமரக் கொம்பாயின்
வற்றாத செல்வத்தில் வாழ்வு. ... 17
கொண்டாட்டம் சம்பளம் வந்து ஒருவாரம்
திண்டாட்டம் மீதிவாரம் மூன்று. ... 18
கடனேதும் கிட்டாது போனால் உடனே
அடகுக்கு இல்லாள் நகை. ... 19
பட்டுப் புடவைக்கே வக்கில்லை வாழ்க்கையில்
கிட்டுவ தெங்கே நகை? ... 20
--ரமணி, 18/04/2013
*****
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks