காரைக்காலில் எங்கள் வீட்டுக்கு எதிர் இல்லத்து மாடியில் பல் மருத்துவர் கபீர்தாஸ்
வசித்துக்கொண்டு அங்கு கிளினிக்கும் நடத்தினார் . புதுச்சேரியிலிருந்து வந்திருந்த அவர்
மணமாகாத இளைஞர் . எங்கள் நோய்களுக்கு அவரை நாடியதால் காலப் போக்கில் நெருக்கம்
முகிழ்த்தது . உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அவருக்கு நாங்கள் சமைக்கும் உணவு
வகைகளுள் சிலவற்றை அவ்வப்போது வழங்கினோம் ; முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிடுவோம் .
ஒரு நாள் , கோழி பிரியாணி தருவதாய் அறிவித்துவிட்டு மதியம் கொடுத்தோம் .
விடுமுறை நாள்களில் , என் மனைவியும் ஐந்து பிள்ளைகளும் நானும் வட்டமாய் அமர்ந்து
( தரையில்தான் ; சாப்பாட்டு மேசை பழக்கத்துக்கு வராத காலம் ) உரையாடியபடி உண்பது
வழக்கம் : பிள்ளைகள் அரசு பள்ளிகளில் தமிழ்வழி பயின்றவர்கள் ; அவை வெவ்வேறு பள்ளிகள் ;
நானும் அரசு பள்ளி ஆசிரியர் . ஆக ஆறு பாடசாலைகளில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை
அவரவரும் சொல்வோம் ; இவையன்றிப் பொதுவான விஷயங்களும் இடம்பெறும். .
மிக்க சுவையாய் இருந்தால் உண்டு முடித்த பின்பும் உட்கார்ந்தபடியே பேசிக்கொண்டிருப்போம் .
அன்று , பக்கத்து இல்லத்தரசி , தமது வீட்டிலிருந்து ( ஓட்டு வீடுகள் : பேசுவது கேட்கும் )
" சாப்பாட்டு நேரமா ? நானும் வரட்டுமா ? " என வினவினார் .
" வாங்க , வாங்க ; கோழி பிரியாணி ! " என்றேன் .
அவர் உடனே , " கோழியா ? இன்னைக்கு அமாவாசை ஆச்சே ! " என்றதும் நான் மௌனித்தேன் ;
குற்ற வுணர்ச்சி கொண்டேன் ; அமாவாசையில் அசைவம் சாப்பிட்டதற்காக அல்ல . ( நாங்கள் நாள்
நட்சத்திரம் பார்ப்பதில்லை . விரதம் எதுவும் கடைப்பிடிப்பதில்லை ) ; தந்தையை இழந்திருந்த ஒருவரின்
விரதத்துக்குப் பங்கம் ஏற்படுத்தியதை எண்ணித்தான் வருந்தினேன் .
அருந்தி முடிந்ததும் அவரிடம் சென்றேன் ; " மன்னிக்கணும் , அமாவாசை இன்னு தெரியாமே
அசைவம் கொடுத்திட்டோம் " அவர் பதில் அளித்தார் : " பரவாயில்லை , இதற்கு முன்னாலும்
சில தடவை இப்படி ஓட்டலில் சாப்பிட்டிருக்கேன் ; வருத்தப்பட வேணாம் "
உண்மைதானா? அல்லது என்னைச் சமாதானப்படுத்த அப்படிச் சொன்னாரா ? தெரியவில்லை .
திருமணம் புரிந்துகொண்டு சில ஆண்டு கழித்துச் சொந்த ஊர் போய்விட்ட அவரது
அகாலச் சாவுச் செய்தி எங்களைப் பெருந் துயரில் ஆழ்த்திற்று .
==========================================
Bookmarks