************************************************
ஆண் அழைப்பு
************************************************
என்னவளே!
விரல் கோர்த்த போது,விரிந்த நம் இதழ்களும்,
அனல் கொதித்த போது, என் அன்பு முத்தமும்,
துயர் நேர்ந்த போது,பலம் தந்த தோள்களும்,
ஊர் சுற்றும் போது,நாம் கொண்ட உவகையும்,
கைபேசியில் நாம்,கழித்த பொழுதுகளும்,
சின்னச் சண்டைகளும்,
செல்லச் சிணுங்கள்களும்,
உணர்த்தாத ஊடலையா உணர்த்திவிட்டான்-
உனக்கு பார்த்திருக்கும் ஆண்மகன்?-
உனக்காகவே வாழ்கிறேன்- உடனே என்னுடன் வா!
என்னுயிர் கொடுத்தேனும்,உன் இன்னுயிரை காப்பேன்!
படி தாண்டி வா என் பத்தினியே!!!
***********************************************
பெண் மறுப்பு
***********************************************
என்னவனே!
உனக்காக மட்டும்,அளித்தேன் என் பெண்மை,
நாம் கொண்ட காதல், எந்நாளும் உண்மை!
இறந்தாலும் மறவேன்,மறந்தாலும் இறப்பேன்!
துயில் கொள்ளும் நேரம்,தலையணையும் குளம்தான்!
முழுநிலவு கண்டால்,முழுதும் உன் முகம்தான்!
இருந்தென்ன செய்ய,வர இயலாத பாவி நான்!
தகப்பனும் தாயும்,தடைதானே எனக்கு!
தங்கையின் வாழ்வும்,என் முடிவில் இருக்கு!
மங்கையே நானும்,மாற்றென்ன செய்ய?
மன்றாடி கேட்டும், மறுப்பேதான் மிச்சம்!
என் நினைவுகள் என்றும், உன்னுடன் அன்புடன்!
உன் நினைவு மட்டும்,என்னிடம் கொண்டு,
உயிர் நீக்கப்போகிறேன்,உலகை விட்டு போகிறேன்!
மற்றொரு பிறவி மீண்டும் நாம் கண்டால்,
நீ வர வேண்டும்,என் ஆசை கணவனாய்!
Bookmarks