போதும் பெண்ணே நீயெனக்கு- உயிர்
====போகும் வரைக்கும் நானுனக்கு!
வேதம் கண்ணே நீயெனக்கு- உடல்
====வேகும் வரைக்கும் நானுனக்கு!
பூஜை யறையின் விளக்காக- அடி
====நேற்று வரையில் நின்றவளே!
பள்ளி யறையின் விளக்காகி- என்
===பருவம் ஆள வந்தவளே!
முகத்தைப் பார்க்கும் முன்னாலே- என்
====இதயம் இதயம் நீபறித்தாய்!
முகத்தைப் பார்த்த பின்னாலோ- என்
====உயிரும் சேர்த்து நீபறித்தாய்!
உன்னைப் பார்த்த நொடியில்தான்- என்
====பிறவிப் பயனே பூர்த்தியாச்சு!
காதல் தேவன் சந்நிதியில்- அடி
====கண்ணீர் துளசித் தீர்த்தமாச்சு!
பட்டு வாயை நீதிறந்து- காதல்
====பாஷை கொஞ்சம் பேசிவிட்டால்
கொட்டும் அருவி போல்நெஞ்சில்- தமிழ்க்
====கவிதை துள்ளிக் குதிக்கிறது!
தங்கம் போலே காலெடுத்து- அடி
====தரையில் மெல்ல நீநடந்தால்
கொலுசின் ஓசை செவிபுகுந்து- என்
====இதயத் தாழைத் திறக்கிறது!
வெட்கம் நீயும் கொள்ளுகையில்- என்
====புலன்களின் பொறுமை தொலைகிறது!
வெட்கம் கெட்ட ஆசைகளில்- அடி
====பாவி நெஞ்சு அலைகிறது!
தேடி வந்த தேவதையே- அந்த
====தெய்வம் தந்த தாய்மடியே!
பாடி வந்த பூங்குயிலே- உயிரில்
====பாதி யானத் திருமகளே!
தோளில் சாயும் வேளையிலே-நான்
====தூக்கி வளர்த்த தந்தையடி!
மடியில் சாயும் வேளையிலே- உன்னை
====கருவில் சுமந்த அன்னையடி!
கையைப் பிடிக்கும் வேளையிலே- உன்னைக்
====காவல் காக்கும் அண்ணனடி!
மையல் கொள்ளும் வேளையிலே- உன்னை
====மார்பில் சாய்க்கும் மன்னனடி!
மனத்தில் அல்ல கண்மணியே- உன்
====முகத்தில் வாட்டம் வந்தாலும்
கணத்தில் உந்தன் காலடியில்- என்
====கிளியே கிளியே உயிர்துறப்பேன்!
தென்றல் உன்னைத் தொட்டாலும்- கண்ணே
====தூக்கில் அதனைப் போட்டிடுவேன்!
அத்து மீறல் என்றேதான்- நான்
====ஐ.நா. சபையைக் கூட்டிடுவேன்!
----------------ரௌத்திரன்
Bookmarks