புதிர் எண்-562
ஒரு ஊரிலே மாணிக்கம் என்று ஒருவன் இருந்தான். ஓரளவு செல்வம் மிக்கவன். ஏழைகளுக்கு இரங்கும் கருணை உள்ளம் கொண்டவன். அதே ஊரிலே கருப்பன் என்று ஒருவனும் இருந்தான். அவன் பேராசை மிக்கவன். ஏழைகளுக்குக் கடன் கொடுத்துக் கந்து வட்டி வாங்குவது அவனுக்குக் கை வந்த கலை.அந்த ஊரில் இருந்தவர்கள் மாணிக்கத்தைப் புகழ்ந்து பாராட்டியும், கருப்பனை இகழ்ந்தும் பேசுவார்கள்
மாணிக்கத்தின் புகழைக் கண்டு கருப்பன் மிகுந்த பொறாமை கொண்டான்.எப்படியாவது மாணிக்கத்தை ஒழித்துவிட வேண்டும் என்று சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தான்.
ஒருநாள் மாணிக்கத்தைப் பார்க்க அவனது நண்பன் வந்திருந்தான்.அவனுக்கும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு பெரும் பணக்காரரின் மகளுக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதாகவும், மணப்பரிசாக மணமகளுக்குக் கொடுக்க விலை உயர்ந்த வைர மோதிரம் ஒன்று வாங்கவேண்டும் என்றும், திருமணச் செலவு நிறைய ஆகி ,அவனிடம் பணப்பற்றாக்குறை இருப்பதினால், மாணிக்கம் கொடுத்து உதவினால், ஒரு மாத காலத்துக்குள் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் கூறினான்.
நண்பனுக்குத் திருமணம் கூடிவந்தது கேட்டு மாணிக்கம் மகிழ்ந்தான். ஆனால் அந்த சமயம் மாணிக்கத்திடம் கையிருப்பில் பணம் இல்லை. அவனுக்கும் ஒரு மாதத்துக்குள் பணம் வந்துவிடும். இருந்தாலும், நண்பன் கேட்கும்போது இல்லை என்று சொல்வது எப்படி என்று யோசித்து, மறுநாள் தருவதாகக் கூறினான்.
அன்று மாலையே, கருப்பனிடம் சென்று ஒரு மாதகாலத்தில் திரும்பக் கொடுப்பதாகக் கூறி ஒரு லட்சம் ரூபாய் கடன் கேட்டான்.கருப்பனுக்கு ஒரே மகிழ்ச்சி. மாணிக்கம் தன்னிடம் மாட்டிக்கொண்டான் என்று நினைத்து, பணத்தைக் கொடுப்பதாகக் கூறினான்.ஆனால் ஒரு நிபந்தனை போட்டான். அதாவது அவனுக்கு வட்டி ஏதும் வேண்டாம் என்றும், சரியாக முப்பது நாளைக்குள் பணம் தர இயலாவிட்டால், மாணிக்கத்தின் உடலில் இருந்து அவன் விரும்பிய இடத்தில், ஒரு கிலோ சதையை வெட்டி எடுத்துக்கொள்ள சம்மதம் என்று மாணிக்கம் பத்திரம் எழுதிக் கொடுக்கவேண்டும் என்றும் கூறினான்.
மாணிக்கம் அதைப் பற்றி எதுவும் அதிகம் ஆலோசிக்காமல், எப்படியும் ஒரு மாதத்தில் பணம் வந்துவிடுமென்பதினால் சம்மதித்து பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுச் சென்று நண்பனுக்குக் கொடுத்தான்.நண்பனும் திருமணம் முடிந்து மனைவியை அழைத்துக்கொண்டு தேனிலவுப் பயணம் சென்று விட்டான்.
ஒரு மாதம் சென்றது. எதிர்பாரதவிதமாக மாணிக்கத்தின் பணம் கைக்கு வந்து சேர தாமதம் ஆகிவிட்டது.நண்பனும் தேனிலவு முடிந்து இன்னும் திரும்பி வரவில்லை. அதனால் கருப்பனிடம் வாங்கிய பணத்தைக் கூறியபடி கொடுக்க இயலாமல், கருப்பனிடம் சென்று எப்படியும் இன்னும் பத்து நாட்களுக்குள் பணம் கொடுப்பதாகக் கூறினான் மாணிக்கம்.
கருப்பன் இந்த சந்தர்ப்பத்துக்காத்தானே காத்திருந்தான். அவன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. " பத்திரத்தில் ஒத்துக்கொண்டபடி ஒரு கிலோ சதைதான் வேண்டும் அது இல்லாமல் நீ ஆயிரம் மடங்கு பணம் பத்து நாட்கள் கழித்துக் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம்" என்றான்......அது மட்டும் இல்லாமல் அந்த பஞ்சாயத்தில் போய் வழக்கும் தொடுத்தான்.
பஞ்சாயத்து கூடியது. யார் என்ன சொன்னாலும் கருப்பன் ஒத்துக்கொள்ளவில்லை. தனக்கு ஒரு கிலோ சதைதான் வேண்டும் என்றான். அந்த பஞ்சாயத்து தலைவர் சிறந்த அறிவாளி.......சிறிது நேரம் ஆலோசனை செய்தார்..பிறகு கருப்பனின் கோரிக்கை நியாயமானதே என்றும், கருப்பன், மாணிக்கத்தின் உடலில் இருந்து ஒரு கிலோ சதையை அரிந்து எடுத்துக்கொள்ளலாம் என்றும் தீர்ப்புக்கூறினார்.அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
கருப்பன் ஒரு கத்தியையையும் தராசையும் எடுத்துக்கொண்டு மாணிக்கத்தை நெருங்கி, எந்த இடத்தில் இருந்து சதையை அறுக்கலாம் என்று மாணிக்கத்தை ஏற இறங்கப் பார்த்தான்.
அப்போது "ஒரு நிமிஷம் பொறு கருப்பா" என்றால் பஞ்சாயத்துத் தலைவர்.கருப்பன் என்ன என்று கேட்டபடி அவரைப் பார்த்தான்.
அவர் கூறியதைக் கேட்டதும், தனக்கு மாணிக்கத்தின் உடலில் இருந்து சதை வேண்டாம்என்றும், தாமதம் ஆனாலும் பரவாயில்லை,தனது பணத்தை மட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும் என்றும் கூறினான்.............................................கருப்பன் ஏன் அப்படி திடீரென்று மாறினான்?????????????
Bookmarks