தமிழ்மன்ற சிறுகதை போட்டிக்காக இது என்னுடைய கன்னி சிறுகதை முயற்சி.
தகுதியுடையவை தழைத்தோங்கும்
ஆசிரியர் பரிணாம வளர்ச்சியைப் பற்றி வகுப்பில் விளக்கிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு காலத்தில் வாழ்ந்த விலங்குகள் பற்றியும், அவற்றின் தகவமைப்பு காலத்திற்கேற்ப மாறியதையும் சுட்டிக்காட்டினார். ஒருகாலத்தில் வாழ்ந்த மிருகங்கள் அடுத்த காலகட்டத்திற்கு முன்னேற முடியாமல் அழிந்தது பற்றியும் ,சில வகையான மிருகங்கள் மட்டுமே எல்லா காலத்திற்கும் தொடர்ந்தது என்பதையும் விவரித்துக்கொண்டிருந்தார்.
எப்படி சில மிருகங்கள் மட்டும் எல்லா காலத்திற்கும் தொடர்ந்தன ? தொடர்கின்றன? ஏன் டைனோசரஸ் போன்ற பெரிய மிருகங்கள் தற்போதும் வாழ முடியாமல் அழிந்தன? இதுபோன்ற கேள்விகள் கதிரவனின் மனதில் ஓடலாயின. அதற்கு ஆசிரியர், எந்தவொரு மிருகம் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்கிறதோ, அதுவே தொடர்ந்து வாழும். டைனோசரஸ் போன்ற விலங்குகள் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் தங்களுடைய பெருத்த உருவம் காரணமாக தப்பிக்கமுடியாததையும்; மரங்கள்,செடிகள் போன்ற தங்களுடைய உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் ஒட்டகங்கள் உயிர்வாழ அவைதம் கழுத்துகள் நீட்டப்பட்டதையும்; குரங்குகள் தங்கள் தகவமைப்பைக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டதாலேயே அவைதம் பரிணாமம் மனிதனாக மாறி உலகை ஆட்டுவிப்பதையும் விளக்கினார். ஆகவே தகுதியுடையவை தப்பிப்பிழைக்கும் என்ற பாடத்தை மனதில் கொண்டே வளரலானான் கதிரவன்.
எப்போதும் படிப்பில் முதலாவதாக வந்தான்.யாரேனும் சந்தேகம் என்று கேட்டால் அவர்களுக்கு சொல்லித்தராமல் புறக்கணிப்பான். விளையாட்டில் மற்றவர்களை எப்படியாவது முந்தி வெற்றிபெற்றுவிடுவான். ஏனென்று கேட்டால், அவர்களுக்கு தகுதியிருந்தால் சொந்தமாக படித்து, சொந்தமாக முயன்று வெற்றிபெறவேண்டும் என்பான். தன்னுடைய தகுதிக்கேட்பவே நட்பு வைத்துக்கொள்ள வேண்டுமென்று, தகுதி குறைந்தவர்களை ஒதுக்கி நண்பர் வட்டாரத்தையும் குறைத்துக்கொண்டே வந்தான்.
படித்து முடித்து , ஒரு நல்ல அலுவலகத்தில் பணியிலமர்ந்தான். அலுவலகம் சிறு சிறு அணிகளாக வகுக்கப்பட்டிருந்தது. அவனுடைய அணியில் அருணும் ஒருவனாக இருந்தான். அவன் சற்று கூச்ச சுபாவமுடையவன். ஒருமுறை அணித்தலைவர் , அணியை திறம்பட செயல்படுத்த ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அந்த ஆலோசனை அனைவர் முன்னிலையிலும் விவாதிக்கப்பட்டு பின்னர் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்தார். அருண் தனக்கு தோன்றிய யோசனையை கதிரவனிடம் கூறினான். ஏனெனில் அவனுக்கு அனைவர் முன்னிலையிலும் பேசுவதற்கு தயக்கம் இருந்தது. ஆனால், கதிரவன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அருணின் யோசனையை அனைவர் முன்னிலையிலும் கூறி பாராட்டையும் சிறந்த யோசனைக்காக பதவி உயர்வும் பெற்றான். தன்னைக் கேள்வி கேட்ட அருணுக்கு, தகுதியுடையவை மட்டுமே தழைத்தோங்கும் என்று பதிலளித்தான்.
ஒருமுறை தனது அணியோடு அருணும், கதிரவனும் ஒரு காட்டுக்கு சுற்றுலா செல்ல நேரிட்டது. காட்டின் ரம்மியத்தை வியந்து அனுபவித்துக்கொண்டிருந்தபோது ஒரு புலி அவர்களை நோக்கி பாய்ந்தது. எல்லாரும் ஆளுக்கொரு திசையில் தெறித்து ஓட அருணும், கதிரவனும் ஒருதிசையில் ஓடினர். புலியும் அவர்கள் திசையை நோக்கி ஓட ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் இருவரும் பிரிந்து ஓட, புலி கதிரவனை நோக்கி முன்னேறியது. அவனை கடித்துகுதற எத்தனித்த வேளையில், அருண் அங்கிருந்த மரக்கட்டையைக் கொண்டு புலியை அடித்து விரட்டினான்.
அப்போதுதான், கதிரவன் சிந்திக்கலானான். ஏன் அருண் தன்னுடைய உயிரை பொருட்படுத்தாமல் நம் உயிரைக் காக்க வேண்டும். மிருகங்கள் மட்டுமே , தாம் உயிர்வாழ மற்ற விலங்குகளை வீழ்த்தி , அழித்து வாழும். ஆனால், மனித குலம் தழைத்து விளங்குவதற்கு, அன்பு என்ற ஒரே தகுதிதான் தொன்றுதொட்டு தொடர்ந்துவருகிறது என்பதை அறிந்து மனதில் நிறுத்திக்கொண்டான். இனி மனித குலம் தழைத்தோங்க அன்பு என்ற ஒரே தகுதி போதும் என்பதில் கதிரவனுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் ஐயமிருக்காது
Bookmarks