உயிரின் மூச்சுக்குழாயே
திரிதான்
அதை கிள்ளும்போது
வலிதான்…!
எல்லா பட்டாசுகளுக்கும்
ஆசையா என்ன…
வெடித்து சிதறுவதற்கு….
உயரே சென்றாலும்
எரிந்து சாம்பலாகி
கீழேதான் விழுகின்றன
ராக்கெட்டுகள்..!
ஓலைப்பட்டாசுகளின்
உடல் சிதறும் கொடூரம்
கொடும் சத்தமாய்…
பூச்செட்டிகளை
நெருப்பு நாக்குகள்
தொடும்பொழுது
சிதறுவது கனல்களல்ல
கண்ணீர் துளிகள்…!
மத்தாப்புகளுக்கு தெரியுமா என்ன
உங்கள் கண்களை
பதம் பார்க்க கூடாதென்று…
அதன் வீச்சு
உங்கள் பார்வையை
பறித்துக்கொள்கிறதே…
ஊசிப்பட்டாசின்
உயிர் திருகி
கனல் தீண்டும்பொழுது
ஒப்பாரிகளோடு
உடல் சிதறல்கள்…!
சரம் சரமாய்
சரவெடிகள்
அடுக்கப்படும்பொழுது
பேரிரைச்சலோடு
திசைச்கொன்றாய் சிதறுவது
சிதிலமாகி விடத்தானே…
வலியின் சத்தம்
வானவெளியெங்கும்
விரவிக் கிடக்கிறது
மானிடர்க்கு
வேடிக்கையாய்…
நீங்கள்
வேடிக்கைப் பார்ப்பது
வெடிச்சத்தங்களை மட்டுமல்ல
சுற்றுச்சூழல் மாசுபடுவதையும்
சேர்த்துதான்…!
மரணமுறும் மணித்துளிகளும்
அபயக்குரல்களும்
கேட்டால்தான்
உங்கள் அகம் குளிருமா…?
பட்டாசு கொழுத்தி
பட்டையைக் கிழப்பும்
பயில்வான்களே
பசியில் துடிக்கும்
அனாதை இல்லத்து குழந்தைகளின்
அழுகையை நிறுத்தினால் போதும்
உங்கள் அகம் அழகாய் குளிரும்!
Bookmarks