இரண்டு நாள் விடுமுறையில், சரவணன் மீனாட்சி தம்பதியினர் திருப்பதிக்கு சென்றனர், ஏழுமலையானைக் கண்குளிர, மனம்குளிர தரிசனம் செய்தனர். திருப்பதியிலிருந்து சென்னைக்குத் திரும்பிய தம்பதியினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்! அவர்களுடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுத் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் கதவு திறந்து கிடந்தது.
" அய்யய்யோ! எல்லாம் போச்சே! என்று அலறி அடித்துக்கொண்டு மீனாட்சி வீட்டிற்குள்ளே ஓடினாள். அங்கே பொருட்கள் எல்லாம் வைத்த இடத்தில், வைத்தபடி இருந்தன. பீரோவைத் திறந்து பார்த்தாள். நகைகள், பணம் எல்லாம் பத்திரமாக இருந்தது கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். கணவனிடத்தில் ஓடிவந்து, " அந்த ஏழுமலையான் அருளாலே எதுவுமே திருடு போகலீங்க! " என்று சந்தோஷமாகச் சொன்னாள் மீனாட்சி.
ஆனால் சரவணன் முகத்தில் கவலை தெரிந்தது. அவன் தழுதழுத்த குரலில்," மீனாட்சி! நகைநட்டு, காசுபணம், பண்ட பாத்திரம் எது போயிருந்தாலும் நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன்; ஏன்னா அத நாம மறுபடியும் சம்பாதிச்சிடலாம், ஆனா என்னுடைய தாத்தா காலத்திலிருந்து நம்ம வீட்டுப் பொக்கிஷமா இருந்த பூட்டு திருடு போயிடிச்சே! அந்த விலை மதிப்பில்லாத பூட்டை, என் தாத்தா லண்டனுக்குப் போயிருந்தபோது வாங்கி வந்ததா , என்னோட அப்பா அடிக்கடி சொல்லுவாரு! பத்திரமா வச்சிக்கோடா! ன்னு சொல்லி அப்பா என்கிட்டே கொடுத்தாரு! இப்ப நான் என்ன பண்ணுவேன்? லட்ச ரூபா கொடுத்தாலும் அந்த மாதிரி பூட்டுக் கிடைக்குமா? " என்று சொல்லி சரவணன் கதறி அழுதான்.
Bookmarks