வீரபத்திரன் ...
அப்போதுதான் பேரலை நுரை கக்கி விட்டுப் பின்னோக்கியது.
குளிர் கண்டவனுக்கு வைத்தியம் பார்த்துவிட்டு மூலிகைப் பெட்டியும் கையுமாய் ஈர மண்ணில் நடந்து வந்தவர், சற்று தடுமாறியவராய், "எதோ பார்வையில் பட்டதே அதைக் கவனித்தும் நின்று நிதானித்துப் பாராமல் கடந்து வந்து விட்டேனே" என நினைத்துத் திரும்பிப் பார்த்தார் கூர்ந்து நோக்கினார் பரியாரி பெரிய தம்பி.
புதிய இரண்டு மூன்று தடங்களைத் தவிர பழைய அவரின் காலடித் தடங்கள் அலையில் கரை பட்டுப் போயிருந்தன.
புதைந்திருந்த ஒரு கருங் கல் தலை நீட்டிக் கொண்டிருந்தது, சூரிய கதிர் பட்டு வெளிச்சத்தில் வெண் தரையில் மினுங்கியது, அது ஒரு சிறந்த வகைக் கல்லாய் அவருக்கு புலப்பட்டது , அது இந்த இடத்துக்கு ஒரு அந்நிய பொருளாய் தெரிந்தது. கல்லும் பாறையும் கனிமமும் உலோகங்களும் அவர் மருந்துக்கு மூலப்பொருட்கள். அவைகளே அவர் தேடு பொருட்கள்.
அவசரமாய் மண்ணை விலக்கி எடுத்தவர் அதை ஆவலோடு நுணுக்கமாய் ஆராய்ந்தார்.
எதோ உணர்ந்தவர் போல் கண்ணை அகலவிரித்து ஆச்சரியத்தோடு, முழம் அளவுள்ள அந்தக்கருங்கல் துண்டை பிரட்டிப் பிரட்டிப் பார்த்தார் சின்னத்தம்பி பரியாரி பரவசப் பட்டார் மெய் சிலிர்த்தார்,
.......கொடுக்கை இழுத்துக் கட்டிக் கொண்டு ஓடினார் துள்ளினார்........கடல் பொங்கி அடித்து அலை வீசி சங்கு ஊதியது..........
வெள்ளிப் பூண் உருத்திராக்க மாலை மணிகள் கழுத்தில் குலுங்கித் தூங்கித் தொங்கி அங்கும் இங்குமாய் ஆட .............கடற்கரை மண்ணில் கால் புதைய கண்டெடுத்த கருங்கல் பாறைத் துண்டோடு ஓடினார்.
பாதிப் பனை முண்டு கொடுக்கும் வளை தாங்கிய பிரமிட்டு வடிவான தென்னோலை குத்தி நிக்கும் கோட்டை போன்ற அந்த ஓலை வீட்டின் திமிரான பெருந் திண்ணையில் வந்தமர்ந்தவர், கஷாயங்கள் , முலிகை வேர்களை ஒரு பக்கமாய் ஒதுக்கி வைத்து விட்டு மிகப் பக்குவமாய் வெள்ளைத் துணியில் அதை பக்தியோடு கிடத்திவிட்டு ..
அவசர அவசரமாய் வாகடங்களைப் பிரட்டிப் பிரட்டிக் கண்களால் வரி வரியாய் எதையோ தேடினார்.
கருங் கல் பாறைத் துண்டையும் படித்ததையும் ஒப்பு நோக்கினார், சிந்தித்தார் தெளிந்தார்.
"தக்கனின் அகந்தை அழித்த வீர பத்திர சுவாமி.......சிவனே சைவப் பெரும் பொருளே எம் குலம் தளைக்க வந்தவரே...
வாசலில் ஒற்றைத் திருக்கை வந்து நிற்பதும் பேரன், மகன் இறங்குவதும் தெரிகின்றது.
பேரன் பின்னால் வர கடகத்தில் பெரும் சுமையோடு மகன் பின்னே வருகிறார்கள்.
"பேரா வா இதை ஒருக்கா பார்"
பேரனின் கூர்மையான பார்வையில் நம்பிக்கை கொண்டவர் உற்சாகத்தோடு கூப்பிட்டார், அவன் பொருட் படுத்தவில்லை..
வெள்ளையர்கள் அறிமுகப் படுத்திய ஒரு நாட்காட்டியைப் பேரன் ஒரு கையில் வைத்திருந்தான் அதில் வர்ணத்தில் தேவ மாதா படம் போடப் பட்டிருந்தது பளிச்சிட்டது, மறு கையில் இரும்புப் பெட்டி,வந்ததும் வராததுமாய் பெட்டியைத் திறந்தவன் வேகமாய் கிளறிக் கொண்டிருந்தான். அதில் புத்தகங்களை சில உடுப்புக்களைத் திணித்து வைத்திருந்தான்."என்ன பேரா தேடுறாய்? ஒருக்கா வந்திட்டுப் போ, இந்தா இதைப் பாரப்பா."
மகன் வந்தவுடன் கிணற்றடிக்குப் போய்விட்டான்.
"பட்டணத்துக்குப் படிக்கப் போனவுடன இந்த பேரனை மறந்திட்டியே - வந்தவுடன ஒரு வார்த்தை கூடப் பேசாமல்.."
"இந்தாங்கோப்பா இதை வாசியுங்கோ" ஒரு கடுதாசித் துண்டை எடுத்து நீட்டினான்.
பனை ஓலை ஏட்டில் எழுதிப் படித்துப் பழக்கப் பட்டவர் அவர், "எவ்வளவு அழுத்தமாய் செய்திருக்கிறாங்கள்-எவ்வளவு தெளிவாய் எழுத்துக்கள்" உள்ளுக்குள் வெள்ளையரின் காகிதத்தை அதன் நேர்த்தியான நெகிழ்வான தன்மைகளை மனதிற்குள் ரசித்தபடிபிரித்தார்.
------------- வாசித்துக் கொண்டு போனவர் திடுக்கிட்டார்.....
"அப்புட்ட கடுதாசியைக் குடுத்திட்டியே" கிணற்றடியிலுருந்து திரும்பிய மகன், ஈரம் துடைத்தபடி
"அப்பு வாசிக்கிறார்"
தாழ்வாரத்திணுடாய் குனிந்து பார்த்தான். கடுதாசியைக் கையில் வைத்தபடி கஷாயங்கள் மூலிகைகளுக்கு நடுவே கண்ணில் நீர் வடிய இறுக்கமான முகத்தோடு...
"ஐயா அதைப் பற்றிப் பெரிசா யோசியாதையுங்கோ..."
"எங்கே இருந்து நாடு பிடிக்க வந்தவன் அந்த வெள்ளைக் காரண அவன் எங்களுக்குக் கல்வி தாறான், இடையில எங்கட ஊரான் இப்படி ...பொடியைப் பட்டணத்துக்கு அனுப்பி பெரிய படிப்புப் படிப்பிக்க வேணும் என்ட என் கனவில இவங்கள்....."
"அப்பு இவையல் ஒண்டும் செயேலாது, .அவங்கள் வெள்ளைக்கார அதிபர் சொல்லைக் கேக்க வேணும் அல்லாட்டி பள்ளிக் கூடத்தை விட்டுப் போகவேணும்.."
"மோனை என்னடா சொல்றாய்"
"மாணவனுக்காண்டி அந்த பண்டிதனைப் பள்ளியைவிட்டு நீக்கிவினமோ ?"
"கடிதத்தை நல்ல வாசியுங்கோ, தாங்கோ வாசித்துக் காட்டுறன்"
கடிதம் கை மாறியது..
சின்னப்புவின் பெற்றாருக்கு எழுதுவது,
உங்கள் மகனின் கல்விக்காய் எங்கள் கல்லூரியைத் தெரிவு செய்தது எங்களுக்கு மகிழ்ச்சியே, ஆனாலும் இங்கே எமது நிர்வாகத்தில் இது பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் சமுகத்தின் - தமிழரின் இந்துக் கோட்ப்பாட்டின்படி உயர் சாதியார் படிக்கும் இந்தக் கல்லூரியில் தீண்டத் தகாதவரைச் சேர்க்கக் கூடாது என ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பிரபல பண்டிதர் உங்கள் மகனைச் சேர்த்தால் கல்லூரியிலுருந்து விலகப் போவதாய் கூறுகிறார். அவரின் தமிழ் புலமையும் மத அறிவும் எங்கள் மாணவர்க்குத் தேவை.
ஆயினும் எங்கள் நிர்வாகம் எல்லோருக்கும் கல்வி வழங்க வேண்டும் அது அடிப்படை உரிமை என்பதில் உறுதியாய் இருக்கிறது.
இதுவே எங்கள் கிறிஸ்தவ கொள்கை. எனவே என்னதான் நடந்தாலும் உறுதியாய் இருக்கவும்.
உங்கள் மகனுக்கு ஏற்பட்ட இந்த அசௌகரியத்திற்காய் மனம்வருந்துகின்றோம்.
இப்படிக்கு
கல்லூரி நிர்வாகம்.
"அந்த பெரும்பான்மைச் சமுகத்தோட எதிர்த்துக் கொண்டு எப்படி படிக்க விடுறது, சதிகாரர்கள். படிக்காட்டியும் பறவாய் இல்லை பொடியன் உயிரோடிருந்தால் போதும்."
"ஒண்டும நடக்காது, நீங்கள் தைரியமாய் இருங்கோ"
"வெள்ளைக் காரங்கள் ஆட்சியில கொஞ்சம் மனசாட்சியாவது இருக்கு, அவங்கள் எங்கட மகனுக்கு பாதுகாப்பு கொடுப்பான்கள்"
"என்னன்டாலும் செய்யுங்கோ எனக்கு அவனை அங்க படிக்க இதுக்குப் புறமும் அனுப்ப மனசு கேக்கேல்ல ..."
எண்டவர் தான் கொண்டு வந்த கடற் கரைக் கல்லின் ஞாபகம் வந்தவராய் அதைக் காட்ட,
"தம்பி இஞ்ச வாங்கோ, இதைப் பாருங்கோ" கருங்கல் பாறையைக் காட்டியவர் ..
பேரன் கையில் தேவ மாத கலண்டரைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார்..,
"அதை அந்தக் கலண்டரை அங்கால வை தம்பி பேரா..இந்தச் சிலையைப் பார் இதில உனக்கு என்ன தெரியுது?"
"இந்தக் கல்லை எங்க எடுத்தனிங்கள்?"
"நான் முதலித் தம்பி அய்யாவுக்கு குளிர் கசாயம் கொடுத்திட்டு வரேக்க அந்தக் கடற்கரையோரமாய் கண்டெடுத்தனான்"
" என்ன இது..இதில என்ன இருக்கு ? இது ஒரு கல்லு , இதை வைச்சுக் கொண்டு நல்ல வித்தை காட்டுறியல், அப்பு கர வலைக்கு வாற சிங்களவர் இதைப் போட்டிருக்க வேணும்."
"இல்லைத் தம்பி ஒருக்காப் பார்- இது ஒரு தெய்வச் சிலை, இதில உனக்கு என்ன தெரியுது வடிவாப் பார்?"
மகனும் பேரனும் கூர்ந்து பார்த்தனர்..........
விறகுகள் குழை மூலிகை சேகரித்துக் கொண்டு பெண்டுகள் வீடு சேர்ந்தனர்....ஆடொன்று அவர்களை அடையாளம் கண்டு கனைத்தது .........
"அப்பு அம்மா ஆச்சி அக்கா வருகினம் அவையிட்டைக் கேளுங்கோ." தகப்பனும் மகனும் பரியாரியின் அழுங்குப் பிடியிலுருந்து தப்பித்துக் கொண்டனர்.
"சிவக் கொழுந்து இஞ்ச ஒருக்கா வந்திட்டுப் போ...பிள்ளையளையும் வரச் சொல்."
"பொறுங்கோ வாறன்"
பரியாரி திண்ணைக்கு எல்லோரும் வந்து..அவர் காட்டிய கருங்கல்லுத் துண்டைத் துளாவித் துளாவிப் பார்த்தனர்..........
"என்னப்பா எனக்கு ஒன்டுமாய்த் தெரியேல்ல"
தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் பேரன் சின்னப்பு " நல்லா மாட்டிட்டினம்" கெக்கட்டம் விட்டுச் சிரித்தான்
அதைத் தகப்பன் கணபதி உள்ளுர ரசித்தபடி, சிரிக்க வேண்டாமென்று சைகை காட்டினார்.
கடைசிப் பெண் செல்லம் மட்டும்
"ஐயா இது வைரவர் மாதிரி இருக்கு"
இதைக் கேட்ட பெண்டுகள் தொடங்கி சின்னவன் பேரன் சின்னப்பு வரை ஒரு தினுசா அவளைப் பார்த்தனர்.
"வைரவரோ?" சிவக்கொழுந்துப் பாட்டி கொஞ்சம் பக்தியோடும் பயத்தோடும் கருங்கல்லுத் துன்டிலுருந்து எட்டி விலகிக் கொண்டார்.
"நீ கிட்ட வந்திட்டாய், வாகடமெல்லாம் பார்த்தனான் - இது வீரபத்திரரடி " அவர் உறுதியாய்ச் சொன்னார்.
"வீரபத்திரரோ" சிவக்கொழுந்துப் பாட்டி மேலும் வாயைப் பிழந்து கொண்டு அந்தக் கருங்கல்லுத் துண்டை கண்வெட்டாமல் பார்த்தார்.
"இது வீரபத்திரரடி" அவர் உச்சரித்த விதம் ஒரு அதிர்வை அங்கே உண்டாகியிருப்பதை எல்லோர் முகத்திலும் ஒரு விறைப்பு, சந்தேகங்களும்,பயமும் சிவக் கொழுந்துவிக்கு, இந்த மனிசன் வீட்டுக்க என்னத்தைக் கொண்டு வந்து கூத்தடிக்கிறார்
தூரத்தே கடல் அலை தள்ளி கூவிக்கொண்டிருப்பது கேட்கக் கூடியதாய் இருந்தது.
பேரன் சின்னப்புக்கு மட்டும் அப்பு வித்தை காட்டுவது போல் தெரிந்தது. அவன் தான் கொண்டு வந்த தேவ மாதா படம் போட்ட கலண்டரைக் கொண்டு வந்து. அப்புவுக்கு ஏட்டிக்குப் போட்டியாய்.
"இஞ்சை பாருங்கோ ஆச்சி எங்கட பள்ளிக் கூடத்தில தந்ததை........"
பளபளப்பான கடதாசி மட்டையில் தேவ மாதா அந்த ஆங்கில நாட்காட்டியில் எல்லோரும் வியந்து பார்த்தனர்.
"உது வெள்ளைக் காரன் சீமையிலுருந்து கொண்டு வந்தது, இதைக் கொடுத்து எல்லாரையும் மயக்கி தங்கட மதத்தில சேர்க்கிற தந்திரம்"
"ஓமப்பா அவையள் எல்லா இடமும் வேதக் கோயில் கட்டிகினம் - மருதடிச் சந்திக்கிட்ட சுண்ணக் கல்லும் பெரிய மரத் தீராந்தியலும் கொட்டி இருக்காம் - அவள் பூமணி விறகு பொறுக்கப் போகேக்க சொன்னவள். அங்கால பள்ளிக் கூடமும் நடத்திகினமாம். எல்லாப் பிள்ளைகளும் போகிறவையாம்."
"கல்வியைக் கொடுக்கட்டும் எல்லாருக்கும்- அது நல்லது, அப்பத்தான் எல்லாரும் முன்னேறலாம். அனால எங்கட கடவுளைக் கேக்க வேண்டாம்.."
"அப்பு உங்கட கடவுள் எண்டு சொல்றியல் அந்த முருகன் கோயிலுக்க ஏன் எங்கள உள்ளுக்க விடுகினமில்லை"
"பேரா அதுக்காண்டித்தாண்டா எங்கட படியேறி வந்திருக்கிறார் இந்த வீரபத்திரர்"
இயல்பாகவே உணர்ச்சி வசப்படும் பெரியதம்பிப் பரியாரி, இப்ப உரு வந்தவர் போல்.
"குடிலப் போடு - சாமியைக் குடி வை அங்க
கூட்டி வா எங்கட குலத்த
மடையைப் போடு
பறையை அடி
பண்டத்தை தூக்கு
எல்லாரும் வரட்டும்
எவரும் தொடட்டும்
எங்கட சாமி
எங்கட தீட்டப் போக்கும் ....
பட்டால் தீட்டுப் பட எங்கட சாமி
சின்னச் சாமி இல்லை
வீரபத்திர சுவாமி பெரிய சாமி ...
அக்கினியில் தீட்டேது
ஒளிக்குள் பண்டங்களைக் கலப்பது யார் ?
எங்கட சாமி பெரியவர்
துன்பம் போக்கும் துணையே சாமி..
தூர நில் எண்டு
சொல்லும் சாமி தீட்டுள்ள சாமி....
அது வேண்டாம்
அந்த நோயுள்ள
அந்த சாமிகள் வேண்டாம் ,
வீர பத்திரன் தக்கனை வெட்டி
தான் பெரியவன் என்ற அகந்தை தலையை வெட்டி...
அகோரமாய் எழுந்தார் எங்கடசாமி,
தீண்டாது அகந்தை
நான் பெரியவன்
நீ சின்னவன்
சொல்லுற தலையைத் தறிக்க
அகோரமாய் எழுந்தார் எங்கடசாமி,
கும்பிடும் குலத்தை
பெரிய குலமாய் மாத்தும் சாமி ,
எங்கள் சிவனின் சனத்தை தொடுகிற சாமி
வீரபத்திரன்..வீரபத்திரன்..."
பெரிய தம்பிப் பரியாரி இப்ப பூசாரி கூட. நாவலுக்கு அடியில் ஒரு குடில், அதற்குள் குடியேறிய சாமிக்கு முன்னால் மூலஸ்தானம் வரை முட்டிக் கொண்டு நின்றது அந்த ஊர்.
Bookmarks