சக்ரவியூகம்
“குறை ஓன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஓன்றும் இல்லை கண்ணா........
குறை ஓன்றும் இல்லை... கோவிந்தா”
என்ற மதுரமான குரலில் பாடிக்கொண்டிருந்தாள் நந்தினி. அரங்கமே அவள் பாடலின் பக்தி லயத்தில் மூழ்கி கிடந்தது. பேரருள் கண்ணனை அந்த கோவிந்தனை தன் பாடலினால் அனைவர் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினாள். கச்சேரி முடிந்ததும் அனைவரும் பலத்த கரகோஷத்தினால் தம் பாராட்டுகளைத் தெரிவித்தனர். நந்தினி சிறந்த பாடகி என அறிவித்து அவளுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
நந்தினி அனைவருக்கும் புன்னகையோடு கைகூப்பி தன் நன்றியை தெரிவித்தாள். ஸ்டேஜ் திரை முடியதும் நந்தினியின் அம்மா கற்பகம் ஓடி வந்து தன் மகளை அனைத்து நெற்றியில் முத்தமிட்டாள். “அம்மா தாத்தா எங்க? ” என்று நந்தினி கேட்டாள் “இதோ வந்துட்டேன்” என்று புன்னகையோடு சதாசிவம் கற்பகத்தின் தந்தை இருசக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு வந்தார் அதில் கற்பகம் தன் மகளை உட்கார வைத்தாள்.
இரவு வீட்டில் சாப்பிட்டப் பிறகு “தாத்தா இன்னிக்கு கச்சேரி எப்படி” என்று நந்தினி கேட்டாள் “உன்ன மிஞ்ச இந்த லோகத்துல யாரு இல்லடி கொழந்த பிச்சி எடுத்துட்ட” என்றார்
“ம்ம் நந்தினி ரெண்டாவது பாட்டுல கொஞ்ச ஸ்ருதி சேரலடி ஒரு எடத்துல தாளம் கூட விலகிடுச்சி” என்று சுட்டிக்காட்டினாள் அம்மா
“அது எனக்கும் தெரியும்மா அப்போ எனக்கு வாய்ஸ் ட்ரை ஆயிடுத்து அதான்”
“அப்போ இன்னும் கொஞ்சம் நீ நல்லா ப்ராக்டீஸ் பண்ணனும்.... சரி நீ போய் படு” நந்தினி தன் இருசக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே அதை லாவகமாக தன் அறைக்கு ஓட்டிச் சென்றாள்.
மறுநாள் காலை கற்பகம் நந்தினி காலேஜ் சென்றவுடன் கோயிலுக்கு வந்தாள். சுவாமி தரிசனம் முடித்தாள் மனமுருக மகளுக்காக பிராதித்தாள். அங்கே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு தன் கணவன் சுவாமிநாதனை எதிர்பாராமல் சந்தித்தாள். சற்றே எடைப் போட்டு தொந்தியுடன் இருந்தான். அவன் அருகே வந்து சற்று தயங்கி
“எப்படி இருக்கே?”
“நன்னா இருக்கேன்” கிளம்ப முற்ப்பட்டாள்
“என்னை எப்படி இருக்கேள்னு கேட்கமாட்டியா? இன்னும் உனக்கு கோபம் தீர்ல இல்லயா?”
“நான் யாரு உங்கள கேள்வி கேட்க கோபப்பட எனக்கு அந்த உரிமை இல்ல”
“ஆமா நா செஞ்ச தப்புக்கு மன்னிப்பே இல்ல இப்போ தண்டனையே அனுபவிசிட்டு இருக்கேன்”
“என்ன சொல்றேள்?”
“உன்னையும் கொழந்தையும் ஆத்தவிட்டு அனுப்பிச்ச பாவத்துக்கு தண்டனைய அனுபவிக்கிறேன். நீ போனதுக்கப்புறம் உனக்கு விவாகரத்து கொடுத்துட்டு நானும் அம்மாவும் தஞ்சாவூர் போயிட்டோம் ரேவதிய கல்யாணப் பண்ணின்டேன் எங்களுக்கு ஒரு பய்யப்பொறந்தான். சொத்தெல்லாம் ரேவதிக் கைக்கு மாறிடுத்து........ நீ சாது மாட்டுப் பொண்ணா இருந்தே அம்மா உன்ன அவ்ளோ கொடுமப்படுத்தினா ஆனா அதெல்ல ரேவதிக்கிட்ட நடக்கல ...............அம்மா இப்போ ஹோம்ல இருக்கா.....பய்ய படிக்கணும்னு மெட்ராஸ் வந்தோம் அவனுக்கு எல்லா கெட்டப் பழக்கமும் இருக்கு சொத்த கறைக்குரான் கேட்க ஆளில்லை” விசும்பினார் சுவாமிநாதன்
“கற்பகம் நீ நம்ம பொண்ணை நன்னா வளர்த்திருக்கே என்னமா பாட்டு பாட்றா நா ஒருதரம் அவளோட பேசணும் ..........அவ தோப்பனார் நான்னு சொல்லமாட்டேன் .......... உங்க ஆத்துக்கு வரட்டுமா?”
“என்னை மன்னிச்சுடுங்கோனா” என்று கூறி அவனைத் திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டாள்
வீட்டுக்கு திரும்பியதும் மனம் உளைச்சலாக இருக்கவே சற்று ஓய்வு எடுத்தாள் பழைய நினைவுகள் அவள் கண்முன் நிழலாடியது.
“உங்க குழந்தைக்கு ரெண்டு காலும் சுவாதீனம் இல்ல நரம்பு பாதிச்சிருக்கு டிரீட்மென்ட் கொடுத்து பார்க்கலாம் ஆனா சரியாகும்னு கேரண்டி கொடுக்க முடியாது” டாக்டர் சொன்னார்
பிறந்து இரண்டே நாள்ஆன தன் பிஞ்சுக் குழந்தையை மடியில் போட்டு அழுதாள் கற்பகம் “இந்த சனியன தூக்கி வெளிய போடு யாரு இதை ஆயுசு பூரா வெச்சி காப்பாத்த முடியும்” என்றாள் அவள் மாமியார்
“அத்தைய்ய்”
“என்னடி சத்தபோட்ற இந்த கொழந்தை பெரிசானா யார் கால் இல்லாத பொண்ண கல்யாணம் பண்ணிப்பா?”
“கல்யாணம் ஒண்ணுதான் வாழ்கையில்லை அத்தை இவள நல்லாப் படிக்க வெச்சி பெரிய ஆளாக்குவேன்”
“கற்பகம் அம்மாவையா எதிர்த்து பேசற அவா வாழ்ந்துப் பார்த்தவா அவாளுக்கு எல்லாத் தெரியும்” சுவாமிநாதன்
“என்னங்க நீங்களுமா?”
“என்னால இந்த கொழந்தைய ஏத்துக்க முடியாதுடி நாளைக்கு இதுக்கு கல்யாணம் காட்சி பண்ண முடியுமா? இது என் குழந்தைனு சொல்ல அவமானமா இருக்கு இதை நம்ம வேளக்காரன்கிட்டக் கொடுத்துடு அவன் இதை எங்கயாவது விட்டு வந்துடுவான் பணம் கொடுத்துடலாம் அதுக்கு”
கற்பகம் அழுதுக்கொண்டே “என்னால என் குழந்தையப் பிரிய முடியாதுங்க தயவு செஞ்சிபுரிஞ்சிக் கோங்க”
“கற்பகம் கடைசியா சொல்றேன் நாங்க சொல்றத கேளு”
“சுவாமிநாதா ஒண்ணு நா இந்த ஆத்துல இருக்கணும் இல்ல இந்த கொழந்தை இந்த ஆத்துல இருக்கணும நீயே முடிவு செய்” --அம்மா
“நீங்க இந்த ஆத்துல இருங்க அத்தை நானும் என் கொழந்தையும் இந்த ஆத்த விட்டுப்போறோம்”
“என்ன நெஞ்சழுத்தம்டி நோக்கு அம்மாவையே எதிர்த்து பேசறயா? போ இந்த ஆத்த விட்டு போ இனிமே எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமு இல்லை”
“சுவாமிநாதா படிச்ச திமுறு வேற ஓண்ணுமில்லடா........போட்டும் போ இதுகளுக்கு கஷ்டப்பட்டாதான் புத்திவரும்”
“நான் போறேன் அத்தை ....... தாலிங்கறது ஒரு பொண்ணுக்கு வேலிதான் அத்தை ஆனா தாலி இல்லனாhகூட ஒரு பொண்ணு மனசுல சக்ரவியூகம் அமசுன்டா அவளோட அனுமதி இல்லாம யாரும் உள்ள வரமுடியாது இத புரிஞ்சிக்கேங்கோ நான் இன்னிக்கு சங்கல்பம் செய்றேன். இவள ஏதாவது ஒரு துறையில சிறந்து விளங்க செய்வேன்னா அப்போ நீங்க நாம இவள வளர்க்காம விட்டுடோமேனு நிச்சயமா ஃபீல் பண்ணுவேள்”
அன்று வெளியே வந்து தன் தந்தையுடன் சேர்ந்து நந்தினிக்கு பிடித்த பாட்டு கற்றுக்கொடுத்து பல இன்னல்களுக்கு பிறகு அவளை சிறந்த பாடகியாக்கியுள்ளாள். இன்று அவள் சங்கல்பம் நிறைவேறியது.
Bookmarks