ஓரம் போ..மனித சாரம் வரட்டும் ...
உடைபட்ட முகங்களின்இலையுதிர்வின் சுருக்கங்கள்
ஒரு பருவத்தின் மீளா துயரில்மீளும் ஆதிப் பொருளின் கதிர்ச்சொட்டுக்கள்...
பலகோணங்களைக் காட்டும்
ஒரு உருவத்தின் ஒப்பனை நிழல்கள் ..
யாரோ விதைக்க
யாரோ அறுக்க
உண்டியற்ற வண்டியின் சுருக்கம்..
ஊதிப்போன தொந்தியின் பெருக்கம் ..
ஒருபாதி நிழல்
மறுபாதி அனல்
இரத்த வர்ணம்
வியர்வை உப்புக்கோடு
அறுபட்ட தலைக் கொழுந்து
மிதிபட்ட நெஞ்ச குமுறல்
போரைப்போல்
சுனாமிப் பேயலையைப் போல்
பாலைவனப் பசி...
தொற்றுநோய் நாய்கள் போல்
விலக்கப்பட்ட மனிதன்..
ஒதுங்க முடிய்h நகரவீதிஎங்கும் கல்வேலிகள்..
நிழலிலும் எரிமலைப் பொறி
பூமி நல்லதுதான்
சொர்க்கம் தான்
ஏரெடுத்தவனுக்கா? தேர்செய்தவனுக்கா?
அதோ அந்தக் குளிரூட்டப்;;பட்ட மாருதிகள்
கானல்நீரை அலைசேறாய் அடிக்கின்றன.
.
செருப்பற்றகால்கள் செல்கின்றன
அனல்தாரை பூசிக்கொள்கின்றன ...
பூமியைச் செய்தவன்
வானக் கூரையின் துவானத்தில்..
பூமியைப் பறித்தவனின் தூசணத்தில் ..
எலும்பும் தசையுமாய்
எழும்பும் மனிதன்...
தோலும் நரம்புமாய்
உயிர்காத்த மனிதன்
தோள் தாங்கமுடியாயச் சுமைதாங்கியாய்....
வலிகொண்ட மூப்பனின் முழங்காற் சில்லு
தேர்ச்சில்லில் மன்னன் பல்லக்கில் பவனி ....
என் ஊன்று கோலை ஏன் பறித்தாய்?
உரிமைச் சோற்றை ஏன் தடுத்தாய்?
பந்தல் போட்ட நிழல் மரங்கள் எங்கே?
ஏன்? ஏன்?
இந்தப் பூமியில் சாமியாய் வந்தாய்?
ஓரம் போ..மனித சாரம் வரட்டும்
என் கூரை
உன் கூரை
என் இரை
உன் இரை
ஒரு தலைவிதி
ஒரு பூமி மனிதர்க்கு விதிக்கப்படட்டும்!
இந்த நீதி நிசமாகட்டும்.
Bookmarks