இன்று நான் அழுகின்றேன்...
அன்று எனது முலைகள்
வலிக்க வலிக்கத்தானே
உனது பசியைப் போக்கினேன்..?
உனது வாசம் என்னைத்திளைக்க
அந்த வாசத்தில் என்னைத் தொலைக்க
எனது நேசம் உன்னை வளைக்க
என்னைத் தொலைத்துத் தானே
உன்னை நான் வளர்த்தேன்..?
கணவன் இழந்தவளுக்கு
காமுகர்கள் இடும் பட்டம்..?
காசுகேட்கா வேசியவள்..
அவர்களின் காமக்கணைகள்
அத்தனையும் முறித்தேன்..
உனது சோகமுகங்கள்
கண்டால் மட்டும் வெறித்தேன்..
என்னை அடகுவைத்து உன்னை மீட்டேன்..
என்னை விறகாக்கி உன் குளிர் போக்கினேன்..
அன்று நீ ஆய் போனாய்..
அருவெருப்பின்றிக் கழுவினேன்..
இன்று எனக்கு இல்லாய்ப் போனாய்
இதயமே வற்றிப்போனேன்..
எங்கிருந்தாலும் மகனே நீ..
என்னாளும் நன்கு வாழ்வாய்..
என் வயிறு எரியவில்லை..
உன் குலம் தழைத்து ஓங்கும்..
உன் வாரிசு உனக்கு நாளை
என் நிலைதந்தால் மகனே
நீபடும் வேதனை உணர்ந்தேன்..
இன்று நான் அதற்காய் அழுகின்றேன்..!
Bookmarks