நாற்பத்தெட்டு நாள்
விரதமிருந்து
முடி வளர்த்து
மொட்டையடித்து
பயபக்தியோடு
பொங்கல் வைத்து
நூத்தியெட்டு
தேங்காய் உடைத்து
ஆயிரத்;தெட்டு முறை
மந்திரம் சொல்லி
வடைமாலைச் சாத்தி
நெய்விளக்கு ஏத்தி
காத்துக்கிடக்கிறது
ஒரு பெருங்கூட்டம்-
கடவுளை காண்பதற்காய்!
கண்களை மூடிக்கொண்டு
கடவுளை தேடிக்கொண்டிருக்கும் மனிதா!
ஒரு நிமிடம்
காது கொடுத்துக் கேள்!
தன்னை உருக்கி
உன்னை செய்த தாய்
உன்னை செதுக்க
தன்னை சிதைத்துக்கொண்ட தந்தை
மனக்கஷ்டத்திலிருக்கும்போது
ஊக்க வார்த்தைகளால்
உயிர் பாய்ச்சும்
உற்ற துணைவி
பணக்கஷ்டத்திலிருக்கும்போது
கொடுத்து உதவும்
பக்கத்து வீட்டுக்காரன்
உரிய நேரத்தில்
ஓடிவந்து உதவி செய்யும்
உறவினன்
தோல்வி தடுக்கி விழும்போது
தோள் கொடுக்கும் தோழன்
பேருந்து பயணத்தில்
தவறி விழுந்த பணப்பையை
பத்திரமாய் திருப்பித்தந்த
பின் சீட்டுப் பெண்
அவசரவேலையாய்
நடந்து சென்று கொண்டிருக்கும்போது
"லிப்ட்" கொடுத்த
முகம் தெரியா மனிதன்
இப்படி எண்ணற்றோர்
உருவில்தான்
உலவிக்கொண்டிருக்கிறார். . .
கடவுள்
உணர்வாயா மனிதா ?
-------------------------------
புதுவைப்பிரபா
Bookmarks