சமீபத்தில் நான் படித்த ' திருக்கண்ணனமுது ' என்ற புத்தகம்திரு. எஸ். ரகுவீரன் அவர்களது பகவத் கீதை அநுபவமாக உள்ளது.
பகவத் கீதை என்றாலே ஏதோ புரியாத புதிர் என்று நினைத்திருந்த எனக்கு இவரது புத்தகம், மிகவும் எளிய முறையில் கீதையில் புதைந்து கிடக்கும் வாழ்வியல் உண்மைகளை எடுத்துரைத்தது.
நான் படித்து அநுபவித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன்....நீங்கள் விரும்பினால்..
.
எண்ணங்களுக்கு எட்டாதவன் இறைவன். ஆனந்தமானவன், அறிவொளியானவன், அவனது விளையாட்டினை அறிவது கடினம்.அன்பால், அரவணைப்பால், கண்ணன் நமக்குத் தந்த ஞானப்பால் தான் கீதை.
விஷாதயோகம்...... 1.கலக்க இருள்
இருபுறமும் சேனைகள் அணிவகுத்துத் தயாராய் இருக்கும் போர்க்களம்...அதில் தேரோட்டியாக கண்ணன் அமர்ந்திருக்க, கம்பீரமான தேரில் அர்ச்சுனன்...சண்டை தொடங்கவேண்டிய நேரத்தில் அர்ச்சுனன், கலக்கமடைகிறான் !
பெரிய வீரன், தீரன், உள்ளத்திண்மையன், போர்த்திண்மை கொண்டவன்....கலங்குகிறான்...மனம் தளர்ந்து, உடல் சோர்ந்து, காண்டீபம் விழ, கண்ணன் காலடியில் வீழ்கிறான் ! உலகமே அவன் காலடியில் இருக்க, அவன் ஏன் கலங்குகிறான் ?...இப்படித்தான் தொடங்குகிறது 'பகவத் கீதை '
இருகைகளாலும் வில்லாற்றல் காட்டவல்ல வல்லவன், வெள்ளை மனத்தவன், அநுமனைத் தேர்க்கொடியில் அணியாகக் கொண்டவன்...அர்ச்சுனன், போர்க்களத்தில் இருபுறமும் அணிவகுத்து நின்றவர்களை வீரர்களாகப் பார்க்காமல், உறவினர்களாகப் பார்க்கிறான்....
கற்பனைக் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறிக் கொண்டான்...கண்ணனை மறந்தான்..போரில் உற்றார், உறவினர்களைக் கொன்றபின் ஏற்படும் துயரத்தை மிகைப் படுத்திக் கொள்கிறான்..பெருந்துன்பம் கொண்டு, மாவீரன் பெருங்கோழையாகி கண்ணன் காலடியில் வீழ்ந்து புலம்புகிறான்.
' என் இனிய உறவுகளை அழித்தபின் வரும் இன்பத்தைவிட துறவே இனியது..எதிரிகள் வென்றாலும் கவலையில்லை..' என மோகவலையில் ஆழ்ந்து தன்னையே இழந்தான் விசயன் !
அர்ச்சுனனுக்கு கலக்கம் உண்டாகக் காரணம் என்ன ? தளர்ச்சி, சோர்வு, அறியாமை, சோகம்...இவைகளால் அவனது அறிவு தெளிவில்லாமல் போகிறது !
அவனது துயரம் அவனது தன்முனைப்பை அழித்துவிட்டது.யோகம் பெறுவதற்குரிய பக்குவத்தை அளித்துவிட்டது. குழந்தை போலானான்.
அப்போது, தாயைப் போல கீதையெனும் ஞானப் பாலூட்ட வருகிறான் கண்ணன்.
ஞானப்பால்...கீதை
ஞானாசிரியன்...கண்ணன்
ஞானகுரு...வியாசன்.
ஞானக்கண்ணால் காண்கிறான் சஞ்சயன்...அஞ்ஞானம் தொலைகிறது.நமக்கும் தான்..
நன்றி : ரகுவீரபட்டாச்சாரியர்
Bookmarks