ஒரே விதமான நீதிகதைகள் காலத்திற்கேற்றார்போல் மாற்றி சொல்லப்படுவதை
இப்போதெல்லாம் தவிர்க்க முடியவில்லை. காரணம் தலைமுறை இடைவெளி மாற்றங்கள்.
பாட்டி வடை சுட்ட கதை கூட நவீனத்துவத்தில் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு விட்டது.
காக்காவை பாட சொன்ன நரியை பார்த்து காக்கா வடையை எடுத்து விரலிடுக்கில் வைத்துக்
கொண்டு போடா போடா புண்ணாக்கு என்று பாடியதாக திருத்தி கூறினால்தான் குழந்தைகள்
கூட ரசிக்கின்றன...இங்கும் நாம் அதிகம் அறிந்த மரம்வெட்டியும் தேவதை கதையும் இப்போது மாற்றப்பட்ட விதத்தை இப்போது பார்க்கப் போகிறோம்.
ஒரு வித்தியாசம் - இந்த கதை இப்போது மூன்றாவது பாகமும் வந்து விட்டது.
1. மூல கதை
ஒரு விறகு வெட்டி - கடும் உழைப்பாளி - தினமும் காட்டுக்கு சென்று மரம் வெட்டி விறகு
கொணர்ந்து விற்று வாழ்க்கையை நடத்துபவன்.ஒருநாள் மரம் வெட்டும்போது கை தவறி
கோடாரி அருகிலிருந்த நதியில் தவறி விழுந்து விடுகிறது. வருத்தமாய் கடவுளை
பிராத்திக்க ஒரு தேவதை தோன்றி அவன் பிரச்னையை கேட்கிறது. நதியிலிருந்து
தேவதை முதலில் ஒரு தங்க கோடாரி வரவழைத்து தருகிறது. இது இல்லை என்று
மறுக்கிறான். அடுத்து ஒரு வெள்ளி கோடாரியை வரவழைக்கிறது. அதுவும் தன்னுடையது
இல்லை என மறுக்கிறான்.மூன்றாவதாக அவனுடைய இரும்பு கோடாலியை வரவழைத்து
தர மகிழ்ந்து போய் நன்றி சொல்லி பெற்று கொள்கிறான்.அவனுடைய உண்மையையும்
நேர்மையையும் பாராட்டி தேவதை அவனுக்கு தங்க,வெள்ளி கோடாரிகளையும் பரிசு
அளித்து மறைகிறது.
நீதி : நேர்மைக்கும் உண்மைக்கும் எப்போதும் பிரதிபலன் அதிகமாகவே இருக்கும்.
2.முதல் தலைமுறை மாற்ற கதை.
அடிக்கின்ற மனைவியுடன் ஐயோபாவ வாழ்க்கை நடத்தும் முனியன் (மணியா அல்ல)
தன் மனைவியுடன் பிழைப்பு தேடி நகரம் செல்கிறான். போகும் வழியில் ஒரு இடத்தில்
ஒரு நதிக்கரையில் கொஞ்சம் ஒய்வெடுத்து விட்டு குளித்து விட்டு மனைவியையும்
குளிக்க சொல்கிறான். கொஞ்சம் அதிக ஆழத்தில் இறங்கி விட்ட மனைவியை நதி இழுத்து
சுழலில் மூழ்கடித்து விடுகிறது. இது கடவுளின் மிகப்பெரிய கிப்ட் என்றாலும் முனியனுக்கு
இனி வேறு யார் பெண் கொடுப்பார் என்ற கவலையில் சோகமாக அமர உடனே ஒரு தேவதை
அங்கே பிரசன்னமாகி அவன் பிரச்னையை கேட்கிறது. முனியன் பிரச்னையை சொன்னவுடன்
தேவதை உடனே நடிகை ரம்பாவை தோற்றுவிக்கிறது..
"இது தான் உன் மனைவியா....?"
"ஆமாங்க..ஆமாங்க..இவங்கதான் இவங்களேதான்..."
"அடப்பாவி..இப்படி பொய் சொல்றியே...இவளா உன் மனைவி"
"ஆமாங்க .... நீங்க மொதோ ரம்பாவை வரவழைப்பீங்க...அப்புறம் சிம்ரனை
வரவழைப்பீங்க...நான் இவங்கள்ளாம் என் மனைவி கிடையாது என்பேன்...கடைசியா என் மனைவியை தந்து உன் நேர்மைக்கு பரிசா மூணு பேரையும் தந்துடுவீங்க...ஒருத்தி கையாலே
அடிவாங்கி வாழ்க்கையை ஒட்ட முடியவில்லை...இதுல ரெண்டுபேரோட வாழ்றதை பார்த்தா
என் மனைவி தெனமும் பத்ரகாளிதான்..அதுக்குதான் இவங்க என் பொண்டாட்டின்னேன்..."
தேவதை அதிர்ச்சியாகி இனி யார்முன்னும் தோன்றுவதில்லை என மறைந்து விட்டது.
நீதி : 1. உயர்ந்த பரிசுகள் எல்லாமே எல்லோர்க்கும் உகந்த பரிசுகள் அல்ல...
2 கூடா பரிசும் சில சமயங்களில் கேடாய் முடிந்து விடும்.
3. இப்போதைய தலைமுறை கதை
அப்பா வாங்கி கொடுத்த புதிய கேஸியோ கால்குலேட்டரை லேபில் தொலைத்துவிட்டான் கணேஷ்... வீட்டுக்கு போனால் கோபமான அப்பா பெல்ட்டை உருவி தோலை உரித்து
விடுவார். ரொம்ப பயந்து போய் கிணற்றில் குதிக்க முடிவு செய்த கணேசின் முன் அந்த பழைய தேவதை தோன்றி அவன் பிரச்னையை கேட்டது. கணேஷ்க்கு மட்டும் உதவலாம் என
முயற்சி செய்து ஒரு ஆற்றல் வாய்ந்த ஹைபவர் பால்ம்டாப்பை (Palm Top) வரவழைத்து இதை வைத்துக்கொள் என்றது. அது பற்றி ஏதும் தெரியாததால் கணேஷ் அதை மறுத்து விட்டான். அடுத்து ஒரு ஐபிஎம் லேப்டாப்பை வரவழைத்து இதை வைத்துக்கொள் என்றது.அதுவும் தெரியாததால் கணேஷ் மறுக்க மூன்றாவதாய் அவன் கால்குலேட்டரை திருடியது அவன் பின்னால் உட்கார்ந்திருக்கும் முகேஷ்தான் என சொல்லிவிட்டு மறைந்து விட்டது.பாவம் கணேஷ்க்கு பால்ம்டாப்பும் கிடைக்கவில்லை.லேப்டாப்பும் கிடைக்கவில்லை.
நீதி :1. தேவதைகளும் தம் அனுபவத்திலிருந்து பாடம் கற்று கொள்கின்றன.
2. உயர்ந்த பரிசுகள் தேடி வரும்போது தவற விட கூடாது.
3. இன்றைக்கு என்ன புதியன என்பது பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.
Bookmarks