சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
பொருள் : உலகத்திலே பல தொழில்கள் இயங்கிக் கொண்டிருந்தாலும், அவைகளெல்லாம், ஏர்த்தொழிலுக்குப் பின்னே வைத்து எண்ணப்படுவதாகும். ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை. உழவு, துன்பம் தருகின்ற கடினமான தொழிலாக இருந்தாலும், அதுவே உலகின் தலையாய தொழிலாகும்.
" உழவு " என்ற அதிகாரத்தில் பத்து குறட்பாக்களில், உழவுத் தொழிலின் பெருமையையும், உழவரின் பெருமையையும், உழவுத் தொழில் செய்யும் முறையினையும், அது செய்யாது போனால் உண்டாகும் குறையினையும் ஆசிரியர் முறையாக வகுத்துக் கூறியிருக்கின்றார்.
திருக்குறளில் வேறு தொழில்களைப் பற்றி வள்ளுவர் பேசவில்லை. திருவள்ளுவர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தார் என்பது செவி வழிச் செய்தியாகும்; அதில் உண்மையில்லை. நெசவுத் தொழிலைப் பற்றி எந்தக் குறிப்பும் திருக்குறளில் இல்லை.
" சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் " என்ற தொடருக்கு சில உரையாசிரியர்கள் வேறுவிதமாகப் பொருள் கொள்ளுவார்கள். உலகம் சுற்றுகிறது ; அதாவது பூமி சுற்றுகிறது என்ற உண்மையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் கண்டறிந்துள்ளார் என்று எழுதுவார்கள். அது தவறான உரையாகும். ஈண்டு " உலகம் " என்ற சொல் உலக மக்களைக் குறித்து நின்றது.
Bookmarks