தெரியாமல் கைப்பிடித்து
இழுத்ததில் உடைந்த*
வளையல் சொல்லுதடி
ஆயிரம் கதை
தூரத்தில் நனவாய்த்
தெரிந்தது எல்லாம்
பக்கத்தில் கனவாய்த்
தெரியுதடி.
காதலைச் சொல்லவே
உன்பக்கம் நான் வந்தால்
கைகாலைக் கட்டிக்
கழுத்தைப் பிடித்துத்
தண்ணீரில் முக்கினால்
திணறும் மூச்சைப்
போலிருக்குதடி
தெரியாத் தனமாய்
என்பக்கம் நீவந்தால்
செஞ்சுடர்த் தீயும்
குளிர்வாடைக் காற்றும்
ஒருசேர முட்டுதடி.
விளையாட்டுப் பிள்ளையாய்த்
திரிந்தேனடி
என்ன வசியம் வைத்தாயோ
இப்படி உன்
விளையாட்டுப் பொம்மையாய்
ஆக்கிவிட்டாய்.
உனைக் காணும் போதெல்லாம்
என்னுயிர் என்னுடல் விட்டு
நடமாட்டம் செய்வதாய்த்
தோன்றுதடி.
ஒருவாழ்நாள் அவஸ்தையைத்
தந்துவிட்டு நீமட்டும்
மகிழ்ச்சியில் திளைப்பதன்
பொருளென்ன சொல்லடி.
Bookmarks