அட்சயப் பாத்திரமாய்
அவதரித்தவனே!
எப்படி இன்று
பிச்சைப் பாத்திரமாய்ப்
பிறழ்ந்து போனாய்?
உண்மையில்
நீ தேசத்தை நேசித்தது
எழுத்தில் மட்டுந்தான்.
எதார்த்தத்தில்
ஏழைகளை
ஏய்த்துப் பிழைக்கும்
எத்தர்கள் வீசியெறியும்
எலும்புத் துண்டுகளைத்தான்
என்பேன்!
நீ தேனீ தான்!
ஆனால்
மலர்களை
மறந்துவிட்டு
மலத்தையல்லவா
மொய்த்துக் கிடக்கிறாய்?
நீ கங்கைதான்!
ஆனால்,
சாக்கடையோடு
சங்கமித்துவிட்டு
இதுதான்
சமுத்திரமென்று சொல்லி
சாதித்துக் கொண்டிருக்கிறாய்...
சத்தியம் செய்கிறாய்...
அன்று
அநீதிகளுக்கு எதிராக
அரிவாளாய்
அவதரித்த உன் பேனா
இன்று
அதிகார வெறிபிடித்தாடும்
அரசியல்வாதிகளுக்கு
காசுக்காக அல்லவா
காதுகுடைந்து கொண்டிருக்கிறது?
பகட்டுக்காய்
பேனா பிடிக்கவந்த
பாவலர்தம் வரிசையில் நீயும் ஒருவன்....
இன்றைய சமுதாயம் வேண்டுமானால்
உன்
குற்றங்களைக் காணாது
கண் மூடிக்கொண்டிருக்கலாம்
ஆனால் பாவலனே!
காலத்தின் விமர்சனம்
உன்
குரல்வளையை நெரிக்கும் நாள்
வெகுதூரத்தில் இல்லை....
-------ரௌத்திரன்
Bookmarks