Results 1 to 3 of 3

Thread: சுய தொழில்கள்-11 எரிகட்டி(Fuel Bricks) தொழில்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2008
    Location
    chennai
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    10,157
    Downloads
    0
    Uploads
    0

    சுய தொழில்கள்-11 எரிகட்டி(Fuel Bricks) தொழில்

    சுய தொழில்கள் வரிசையில் அடுத்து பார்க்க இருப்பது எரிகட்டி(Fuel Bricks) தயாரிப்பு பற்றியது. இது ஒரு சுவாரிஸ்யமான தொழில். வருங்காலத்தில் இதற்கு பெருமளவில் மவுசு இருக்கும் என நம்புகிறேன். எனது கணிப்பில் இத் தொழிலுக்கு முதலிடம் தான். ஏன் நாமே இத் தொழிலைத் தொடங்கலாமா என்ற ஆசையும் உண்டு. மேலும் தகவல்கள் திரட்டி வருகிறேன். நேரில் சென்று ஆய்வு செய்து வரலாம் என இருக்கிறேன். பின் இது பற்றி ஒரு பதிவு போடுகிறேன்.
    ஆமா சுய தொழில்கள் பற்றி இவ்வளவு பதிவுகள் போட்டிருக்கிறேன். ஓரிருவரைத் தவிர யாரும் இதில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லையே ஐயா! வெளிநாட்டு வாழ் சகோதரர்களுக்காகத் தான் இவ்வளவு சிரமம் எடுத்து செய்கிறேன். கொஞ்சம் உங்க கருத்துக்களையும் அள்ளி விடுங்க ஐயாமாரே!

    எரிகட்டி தொழில் தொடங்க முழு விவரம்


    செயற்கையைவிட இயற்கைதான் ‘சீப் அண்ட் பெஸ்ட்’ என்பதற்கு சிறந்த உதாரணம் எரிகட்டி (Fuel Briquettes). அதிகரித்து வரும் கேஸ் விலையேற்றம் அனைத்துத் தரப்பு மக்களையும் கலக்கமடைய செய்திருக்கிறது. இந்த பிரச்னைக்கு அருமையானதொரு தீர்வாக உருவெடுத்திருக்கிறது எரிகட்டி தயாரிப்பு.
    குறைந்த அடர்த்தியிலான (Density) பயோமாஸை அதிக அடர்த்திக்கு மாற்றி எரிசக்தி தருவதே இதன் சிறப்பு. வீண் என வீசி எறியப்படும் பொருட்களை கொண்டே தயார் செய்யப்படுகிறவை இந்த எரிகட்டிகள் என்பதால் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, நம் நேரத்தையும், எரிசக்தியையும் மிச்சப்படுத்துகிறது.
    மூலப் பொருட்கள்:
    தேவையற்ற வேஸ்ட் பேப்பர்கள் மற்றும் கார்டு போர்டுகள், மரங்களிலிருந்து உதிரும் இலைகள், புளியின் மேல் ஓடு, கடலைத்தோல், புற்கள், வைக்கோல்கள், மரத்தின் அடிபாகங்கள், கரித்துண்டுகள், மரத்தூள் போன்ற பொருட்கள்தான் இத்தொழிலுக்கான மூலப் பொருட்கள். மூலப் பொருட்களை காய வைக்க வெயில் மிகவும் தேவைப்படும். குளிர் பிரதேசங்களில் ஆரம்பிக்க இயலாத தொழில். பெரும்பாலும் விவசாயம் சார்ந்த கழிவுப் பொருட்களே பயன்படுத்தப்படுகிறது.

    தயாரிப்பு முறை:
    மூலப் பொருட்களை நன்கு காய வைத்து, சரியான விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இது 4,500 கலோரி வெப்பத் தரத்தை கொடுக்கும் அளவில் இருக்க வேண்டும். இயந்திரத்தில் கொடுத்தால் 60, 90 டயாமீட்டர் என தேவையான அளவில் குழாய் புட்டு வடிவத்தில் எரிகட்டி கிடைத்துவிடும். இதனை அப்படியே பேக்கிங் செய்தால் விற்பனைக்குத் தயார்.
    கட்டடம்:
    இந்த எரிகட்டியைத் தயாரிக்க 2,500 சதுர அடி இடம் தேவை. எரிகட்டி செய்யப் பயன்படுத்தப்படும் மூலப் பொருளை காய வைக்க 25-30 சென்ட் இடம் தேவை. இந்த இடத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இடம் சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு.
    இயந்திரம்:
    இத்தொழிலுக்கான இயந்திரத்தின் விலை 10 லட்ச ரூபாய்க்கு மேல் ஆகும். இயந்திரங்கள் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், பவானி, சென்னை போன்ற இடங்களில் கிடைக்கிறது. இயந்திரத்தைப் பயன்படுத்துவதும் சுலபம். ஒரு நாள் பயிற்சி எடுத்துக் கொண்டால் போதுமானது.
    மானியம்:
    எரிகட்டித் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் உண்டு. முதலீட்டுத் தொகையில் 35% மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பார்கள். நேரடியாக கையில் கொடுக்க மாட்டார்கள். மூன்று வருடங்களுக்குப் பிறகு வங்கிக் கடனில் கழித்துக் கொள்வார்கள். வங்கியில் மானியத் தொகை இருப்பு இருக்கும் வரை, அதற்கு நிகரான கடன் தொகைக்கு வட்டி கட்ட வேண்டியதில்லை.
    சந்தை வாய்ப்பு:
    அதிகரித்து வரும் எரிவாயு விலையேற்றத்தால் மாற்று எரிபொருளைத் தேடி மக்கள் ஓடும் காலமிது. பெரிய பெரிய பாய்லர்களைக் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள், டீ எஸ்டேட்கள், டீக்கடைகள், சிறிய வகை ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் அடுப்புகளை நம்பி இருக்கின்றன. இந்த அடுப்புகள் எறிய வேண்டுமெனில், விறகு மற்றும்
    மூன்றாம் தர நிலக்கரியைப் பயன்படுத்தியாக வேண்டும். இவற்றின் விலை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. தவிர, வேறு இடங்களிலிருந்து இதை கொண்டு வருவதற்கான செலவும் அதிகரித்து வருகிறது. குறைந்த செலவில் அதிக எரிசக்தி தருவது இந்த எரிகட்டியின் ஸ்பெஷல் அம்சம். இரண்டு கிலோ விறகு எரிப்பதன் மூலம் கிடைக்கும் எரிசக்தி, ஒரு கிலோ எரிகட்டியை எரிப்பதன் மூலம் கிடைக்கிறது. தவிர, இவற்றை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்பதால், தற்போது இதற்கான சந்தை வாய்ப்பு பெருகி வருகிறது. பெண்கள் எளிதாக இத்தொழிலை செய்ய முடியும் என்பது இத்தொழிலில் இருக்கிற இன்னொரு ஸ்பெஷாலிட்டி.
    வேலையாட்கள்:
    மூலப்பொருட்களைக் காய வைக்க, இயந்திரத்தை இயக்க, பேக்கிங் செய்ய என இங்கே கொடுக்கப்பட்டுள்ள உற்பத்தித்திறனுக்கு மொத்தம் இருபது நபர்கள் தேவைப்படுவார்கள்.
    சூப்பர்வைசர் – 1
    திறமையான வேலையாட்கள் – 5
    சாதாரண வேலையாட்கள் – 14
    மின்சாரம்:
    ஒரு நாளைக்கு முழு உற்பத்தித் திறன் பயன்பாட்டிற்கு 504 யூனிட்களுக்குமேல் மின்சாரம் தேவைப்படும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து மணிநேரம் இயந்திரத்தை இயக்க வேண்டி வரும்.


    பிளஸ்:
    மாற்று எரிபொருளுக்கானத் தேவை அதிகரித்து வருவது இத்தொழிலுக்கு நல்ல வாய்ப்பு. மேலும், காடுகளை அழித்து விறகுகள் பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்யும் பட்சத்தில் எரிகட்டிக்கானத் தேவை மேலும் அதிகரிக்கும்.
    ரிஸ்க்:
    தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்கள் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. மரம் அறுக்கும் மில்களில் இருந்து மொத்தமாக மரத்தூளை வாங்கி கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை எனில் அண்டை மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். எனவே, இந்த தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் மூலப் பொருட்கள் கிடைக்கும் வழிகளைப் பற்றி தெரிந்து கொண்டு பிறகு இறங்கவும்.
    மார்க்கெட்டிங்:
    அலைந்து திரிந்து ஆட்களைப் பார்க்க வேண்டும் என்பதைவிட, எரிகட்டி தயாராகத் தயாராக உடனடியாக வாங்கிக் கொண்டு போகும் அளவிற்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கூடுதலாக சந்தை வாய்ப்பு இருக்கும் இடங்களுக்கு சென்று எரிகட்டியின் தேவைகளைப் பற்றி எடுத்துக் கூறி ஆர்டர்களை பெறலாம்.
    சுய உதவிக் குழுப் பெண்களும், கிராமப்புற இளைஞர்களும் இந்த தொழிலில் சுலபமாக இறங்கலாம்


    எரிகட்டி தயாரித்தல்

    பெரிய தொழிற்சாலைகளில் இருக்கும் பாய்லர்களை இயக்க விறகுகள் எரிக்கப்படுகின்றன. விறகுகளுக்காக மரங்கள் அழிக்கப்படுகின்றன. அதோடு விலையும் அதிகமாக இருப்பதால், விறகுகளுக்கு மாற்றாக மரக்கழிவு எரிகட்டிகளை பயன்படுத்தும் முறை அதிகரித்து வருகிறது. பயன்பாடு அதிகளவில் இருப்பதால், மரக்கழிவு எரிகட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம், எரிகட்டி உற்பத்தி செய்யும் கம்பெனிகள் மிகக் குறைவாகவே இருப்பதால் அதிக போட்டி இருக்காது என்கிறார் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பார்த்திபன் அவர் கூறியதாவது: தமிழகத்தில் காகித ஆலைகள் மற்றும் அனல் மின் உற்பத்திக்கு மரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதே தேவை தொடர்ந்தால், வரும் 5 ஆண்டுகளில் எரிப்பதற்கு மரம் கிடைக்காது. அப்போது மரக்கழிவு எரிகட்டியே தொழிற்சாலை பாய்லர்களுக்கு முக்கிய எரிபொருளாக அமையும்.

    விறகுக்கு கிராக்கி உள்ளதால், தற்போது பல ஆலைகள் எரிகட்டியை பயன்படுத்த துவங்கியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சம் 30 எரிகட்டி உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளன. இவை ஆயிரத்துக்கு மேல் பெருகினாலும் எரிகட்டி உற்பத்தி போதுமானதாக இருக்காது. எனவே இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் நிரந்தர லாபம் பார்க்கலாம். எரிகட்டி உற்பத்தியை ஊக்குவிக்க வனத்துறை சார்பில் தமிழகத்தில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி வளாகத்தில் எரிகட்டி உற்பத்தி பயிற்சி மையத்தை 3 மாதம் முன்பு துவக்கினோம். இலவச ஒரு நாள் பயிற்சித் திட்டத்தை நடத்தி வருகிறோம். 250 பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம். பயிற்சி பெற்றவர்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்க வங்கி மற்றும் அரசு அதிகாரி களுடன் பேசி வருகிறோம். தொழிற்சாலைகளில் பயன்படுத்தி வரும் விறகுகள் ஒரு டன் பயன்படுத்தினால் கிடைக்கும் வெப்பம், எரிகட்டியில் முக்கால் டன் பயன்படுத்தினாலே கிடைத்துவிடும். எரிகட்டியின் விலை குறைவாக உள்ளதால், தொழிற்சாலைகள் எரிகட்டி பயன்பாட்டிற்கு மாறி வருகின்றன. சந்தை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதால் இத்தொழிலில் இறங்குபவர்களுக்கு சிறப்பான வாழ்வு உள்ளது.
    இவ்வாறு பார்த்திபன் கூறினார்.

    எங்கு கிடைக்கும்?

    எரிகட்டி தயாரிக்க தேவையான மரக்கழிவுகள், மரங்கள் வெட்டி விற்கும் விவசாயிகளிடமும், புளியம்பழம், கடலைத் தோல் ஆகியவை புளி, கடலை உற்பத்தி இடங்களிலும், டீ, காபித்தூள் கழிவுகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளிலும், மரத்தூள் மர அரவை மில்களிலும் கிடைக்கும். இலை, தழை போன்றவற்றை கிடைக்கும் இடங்களில் பெறலாம். கிரைண்டர், டிரையர் உள்ளிட்ட எரிகட்டி தயாரிப்பு இயந்திரங்கள் கோவையிலும், குஜராத்திலும் கிடைக்கிறது. எரிகட்டி தயாரிப்பு பயிற்சி மற்றும் ஆலோசனைக்கு கோவை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம்.

    முதலீடு

    குறைந்தபட்சம் அரை ஏக்கர், அதிகபட்சம் முக்கால் ஏக்கர் இடம். 2 செட்டுகள் போட வேண்டும். மணிக்கு 250 கிலோ உற்பத்தி செய்யும் எரிகட்டி தயாரிப்பு இயந்திரம் 7.5 லட்சம், 1.5 டன் உற்பத்தி செய்யும் இயந்திரம் ரூ. 18 லட்சம். கிரைண்டர் இயந்திரம் ரூ. 3 லட்சம். டிரையர் ரூ. 5 லட்சம். தினசரி 5 டன் உற்பத்தி வீதம், மாதம் 30 நாளில் 150 டன் எரிகட்டி தயாரிக்கலாம். இதை உற்பத்தி செய்ய 200 டன் மரக்கழிவுகள் தேவை. மரக்கழிவுகள் டன் ரூ. 1200 முதல் ரூ. 1750 வரை விற்கிறது. அதிகபட்ச விலை ரூ. 1700 என்றால் 200 டன்னுக்கு 3.4 லட்சம் தேவை. ஒரு டன் உற்பத்தி செய்ய ஆள் கூலி, மின்சாரம், இயந்திர தேய்மானம், இட வாடகை ஆகியவற்றுக்கு ரூ. 600 செலவாகும். மாதம் 150 டன்னுக்கு ரூ. 90 ஆயிரம் ஆகிறது. உற்பத்தி முதலீட்டிற்கு மாதம் ரூ. 4.30 லட்சம் ஆகிறது.

    மாதம் ரூ. 2 லட்சம் லாபம்

    உற்பத்தி செய்யப்படும் எரிகட்டி டன் ரூ. 3800 முதல் ரூ. 4200 வரை விற்கிறது. இதன் மூலம் 150 டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ. 5.7 லட்சம், அதிகபட்சம் ரூ. 6.3 லட்சம் லாபம் கிடைக்கும். இதன் மூலம் மாதத்துக்கு குறைந்தபட்ச லாபம் ரூ. 1.4 லட்சம், அதிகபட்சம் ரூ. 2 லட்சம். கொள்முதல் செய்யப்படும் மரக்கழிவுகளின் விலை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப லாபம் இருக்கும்

    தயாரிக்கும் முறை

    மரக்கழிவுகளான இலை, கிளை, கொப்புகள், புளியம்பழத்தின் தோல், கடலைத்தோல் உள்ளிட்ட தானிய அரவை கழிவுகள், காபி, டீ தூள் கழிவுகள், அரவை மில்களில் வீணாகும் மரத்தூள் என தாவர கழிவுகள் எதுவாக இருந்தாலும் எரிகட்டி தயாரிக்க பயன்படுத்தலாம். முதலில் அவற்றை எரிகட்டி தயாரிப்பு இயந்திரத்தில் உள்ள கிரைண்டரில் அரைத்து தூளாக்க வேண்டும். தூளில் உள்ள ஈரப்பதத்தை சோதிக்க வேண்டும். 10 முதல் 12 சதவீதத்துக்குள் ஈரப்பதம் இருக்க வேண்டும்.
    அதற்கு மேல் ஈரப்பதம் இருந்தால், தூளை டிரையர் மெஷினில் போட்டு, ஈரப்பதத்தை 10 முதல் 12 சதவீதத்திற்குள் கொண்டு வர வேண்டும். வெயிலில் போட்டும் உலர்த்தலாம்.

    பின்னர் தூளை இயந்திரத்தில் கொட்டினால், அவை மரத்துண்டு வடிவத்திலான குழாயில் சேரும். அங்கு 80 முதல் 100 டிகிரி வெப்பநிலை இருக்க வேண்டும். குழாயில் தூள் சேர்ந்தவுடன் இரும்பு பிஸ்டன், தூளை இடித்து இறுக்கும். அவை மரத்துண்டுகளைப் போல் கெட்டியாகி வெளியேறும். மணிக்கு 250 கிலோ முதல் 1.5 டன் வரை எரிகட்டி உற்பத்தி செய்யலாம். மணிக்கு 250 கிலோ, 500 கிலோ, ஒரு டன், 1.5 டன் வரை எரிகட்டி தயாரிக்க தனித்தனியாக இயந்திரங்கள் உள்ளன. இயந்திரத்துக்கு ஏற்றவாறு உற்பத்தி இருக்கும்.



    வீணாகும் தாவரக் கழிவில் எரிகட்டிகள்கோவை வேளாண் பல்கலை கண்டுபிடிப்பு



    கோவை:மரத்தூளுக்கு பதிலாக, வீணாகும் தாவரக் கழிவுகளை பயன்படுத்தி, செயற்கை விறகுகளான எரிகட்டிகள் தயாரிக்கும் தொழில்நுட்பம், கோவை, வேளாண் பல்கலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பசுமையைக் காப்பதுடன், விவசாயிகள், வேலையில்லா பட்டதாரிகள் உட்பட பலரும், வேலை வாய்ப்பு பெறக்கூடிய வாய்ப்புள்ளது.தற்போது வணிக ரீதியாக நடைமுறையில் உள்ள, "பிரக்கெட்ஸ்' என்ற எரிக்கட்டிகள் (செயற்கை விறகுகள்) மரத்தூளை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மரத்தூளின் விலை உயர்வால், தயாரிப்புச் செலவை சமாளிக்க முடியாமல், எரிகட்டிகளின் விலையும் அதிகரிக்கிறது.

    அதே வேளையில், எரிபொருள் தேவைக்காக மரங்கள் வெட்டப்படுவதால், பசுமை பாதிக்கப்படுகிறது; புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்னைகள் தலைதூக்கியுள்ளன.
    இது போன்ற சூழலில் வேளாண் கழிவுப் பொருட்களில் இருந்து எரிகட்டிகளை தயாரிக்கும் தொழில்நுட்பம், கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துவரை, கத்தரி, பருத்தி மற்றும் மிளகாய் மார்கள் (அறுவடைக்கு பின் வீணாகக்கூடிய, அழிக்கப்படும் செடிகள், "மார்' எனப்படுகின்றன) நெல் உமி, கடலை தோலி, கரும்புச் சக்கை, தேங்காய் மட்டை போன்றவற்றை பவுடராக மாற்றி, எரிகட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.வேளாண் பல்கலை உயிர் ஆற்றல் துறை தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது:நிலக்கரிக்கு அடுத்து இந்த, "பிரக்கெட்ஸ்' என்ற செயற்கை விறகுகள், அதிக வெப்பத்திறன் கொண்டுள்ளன. மரத்தூளின் விலை அதிகரித்து வருவதால், எரிகட்டிகளை தயாரிக்க மாற்று வழி தேட வேண்டும். பெட்ரோலியப் பொருட்களும் குறிப்பிட்ட அளவு மட்டுமே தற்போது இருப்பு உள்ளன. எனவே, கட்டாயமாக மாற்றுப் பொருளை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.அறுவடைக்கு பின் ஏராளமான செடிகள் வீணாகின்றன. அவற்றை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற வேண்டும். எனவே, மரத்தூளுக்கு பதிலாக ஈரப்பதம் அதிகமில்லாத, சாம்பல் சத்துள்ள குறிப்பிட்ட செடிகளை பயன்படுத்தி, எரிகட்டி தயாரிக்க கடந்த மூன்றாண்டுகளாக ஆராய்ச்சி நடந்தது.தற்போது ஆராய்ச்சி முடிவடைந்த நிலையில், வேளாண் கழிவுப் பொருட்கள் எரிகட்டியாக மாற்றப்படுகின்றன. இவை ஒரே சீராக இருப்பதால், சாதாரண விறகுகளை விட, எரிதிறன் பல மடங்கு அதிகமாக உள்ளது. தேயிலை நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களை பயன்படுத்தும் இன்ஜினியரிங் நிறுவனங்கள், மர விறகுகளுக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம்; இதன் விலையும் குறைவு.மர விறகுகள் பற்றாக்குறை, நிலக்கரியால் சுற்றுச்சூழல் மாசடைதல் போன்ற காரணங்களால் எரிகட்டிகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. நெதர்லாந்து, பிரான்ஸ், சுவீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளில், இதற்கு மவுசு அதிகம். எனவே, ஏற்றுமதி வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. குறைந்தபட்சமாக 6 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய்க்குள் இதற்கான தயாரிப்புக் களத்தை அமைக்கலாம். ஒரு மணி நேரத்தில் 500 கிலோ எரிகட்டிகள் வரை தயாரிக்கலாம்; கிலோவுக்கு ஐந்து ரூபாய் வரை விலை கிடைக்கிறது.பல இடங்களில் விவசாய கழிவுகள் எரிக்கப்பட்டும், குழியில் கொட்டியும் அகற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக எரிக்கட்டிகளாக மாற்றினால் பலன் கிடைக்கும். வேலையில்லா பட்டதாரிகள் கிராமப்பகுதிகளில் எரிகட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளை அமைத்து, சுயதொழில் செய்யலாம். விவசாயிகளுக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும்.அந்தந்த சீசனுக்கேற்ப செடிகளை பயன்படுத்தலாம்; சுற்றுச்சூழலும் மாசடையாது. இயற்கை மரங்களின் தேவை குறைவதால் பசுமைக்கு பாதிப்பிருக்காது. எனவே, தொழில்நுட்பம் குறித்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இவ்வாறு வெங்கடாசலம் தெரிவித்தார்.எரிகட்டி தயாரிக்கும் தொழில்நுட்ப முறைஎரிகட்டிகளை தயாரிப்பதில் இரண்டு வகை தொழில்நுட்பங்கள் இருப்பினும், இந்தியாவில் உந்து தண்டு தொழில்நுட்பமே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.இதே முறையில் தான், கோவை வேளாண் பல்கலையிலும் விவசாய கழிவுகளை பயன்படுத்தி, எரிகட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. குறைந்தபட்சமாக, 10 சதவீத ஈரப்பசை மட்டுமே செடிக் கழிவுகளில் இருக்க வேண்டும். முதல் நிலையில் சேகரிக்கப்படும் செடிகளின் கழிவுகளில் உள்ள ஈரப்பசை, சோலார் கூடார உலர்த்தி மூலமாக நீக்கப்படுகிறது; இதற்கு ஒரு நாளாகும். பின், இயந்திரம் மூலம், "பவுடர்' ஆக மாற்றப்படுகிறது.இந்த துகள்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் உந்து தண்டு மூலமாக அதிக விசையுடன் அழுத்தப்படும் போது, கட்டிகளாக மாறி வெளியேறுகின்றன. உந்து தண்டு இயந்திரத்தில் இருந்து வெளியேறும் ஒரு சில வினாடிகளிலேயே, எரிகட்டிகள் கெட்டித்தன்மையை அடைகின்றன. இவை குறைந்தபட்சமாக 30 மி.மீ., முதல் 90 மி.மீ., வரை அகலம் கொண்டவை.காய்ந்த செடிகளை முழுமையாக பவுடராக மாற்றி, கட்டிகளாக மாற்றப்படுவதால் எடையும் மாறுவதில்லை. செடிக் கழிவுகளின் எடை அளவுக்கேற்ப கட்டிகளின் எடையும் இருக்கும்.



    எரிகட்டி தயாரிக்கும் இயந்திரம்



    பயன்
    :
    தென்னை நார்க்கழிவிலிருந்து எரிகட்டி தயாரித்தல்

    திறன்
    :
    மணிக்கு 125 கிலோ

    விலை
    :
    ரூ. 45,000 /-

    அமைப்பு
    :
    இந்த இயந்திரம் உட்செலுத்துவான், ஒருமுனையில் தாங்கப்படாமல் இருக்கும் திருகுத்தண்டு, பீப்பாய் அமைப்பு. அச்சு பிழியும் குழுல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இத்திருகுத்தண்டு பால் பேரிங்கால் ஒருமுனையிலும், மற்றொரு முனை தாங்கப்படாமலும் உள்ளது. பீப்பாய் அமைப்பானது திருகுத்தண்டினால் மூடப்படும். தாங்கியின் மேல் நிலைநிறுத்தப்பட்டிருக்கும். ஒரு முனை தாங்கப்படாமல் இருக்கும் திருகுத்தண்டு இதன் நீளவாக்கிலும், அச்சு பிழியும் குழலும், 30 செ.மீ நீளமாக இருக்கும். திருகுத்தண்டானது நேரடியாக குறைக்கும் கியரில் இணைக்கப்பட்டிருக்கும். இது 5 குதிரைத்திறன் கொண்ட மோட்டாரினால் இயக்கப்படுகிறது. தென்னை நாாக்கழிவும் சாணமும் போன்ற விகிதத்தில் தேவையான அளவு நீருடன் கலந்து கட்டியாக வெளியெடுத்து உலர வைத்து எரிகட்டியாக உபயோகப்படுத்தப்படுகிறது.

    சிறப்பு அம்சங்கள்
    :
    தொடர்ச்சியாக எரிகட்டி பிழியும் இயந்திரம்.
    எரிகட்டியின் எரி திறன் கிலோவிற்கு 3000 கிலோ காலரி ஆகும்.
    தொழிற்சாலைகளுக்கு மிகவும் ஏற்றது.


    தகவல்கள் அனைத்தும் இணையங்களிலிருந்து...

    Engr.sulthan
    Last edited by er_sulthan; 05-06-2012 at 02:31 PM.
    வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டும் எழுவதில் வெற்றிக் காண்பாய்!!

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா....மிக நிச்சயமாய்....செழிப்பாக வளரக்கூடிய தொழில்தான் இது. மிகப் பயனுள்ள தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி சுல்தான் அவர்களே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Jun 2008
    Location
    சென்னை
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    10,295
    Downloads
    25
    Uploads
    3
    அருமையான பதிவு.. தொழில் முனைவோருக்கு மிகவும் உபயோகமான தகவல்கள்.
    அன்புடன்,
    ஸ்ரீதர்


    அன்பே சிவம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •