ஆகாயத் தோட்டியாம் காக்கைக்கு நாமுண்ணும்
ஆகாரத்தில் கொஞ்சம் தினமும் வைத்திடுவோம்.
காக்கையின் நிறத்தினிலே கவியரசன் பாரதி
கண்ணனின் கருமையைக் கண்டே மகிழ்வுற்றான்.
கால்கையைப் பிடித்துக் காரியம் முடிப்போரைக்
காக்காய் பிடிக்கிறான் என்றே மொழியலுற்றார்.
கரவாக் கரைந்துண்ணும் காக்கைக் குணமுடையார்
இருப்பதனால் அன்றோ இவ்வுலகம் இருக்கிறது .
பானையின் அடியில் இருந்த நீரைப்
பருக உதவியது காகத்தின் அறிவன்றோ?
அறிவுள்ள பறவை விருந்தினர் வரவை
அறிவிப்பு செய்யவே ' கா " வென்று கரையும்.
இறந்தநம் முன்னோர்கள் காக்கையின் வடிவில்
இருந்தே நம்மைக் காக்கிறார் என்பதனால்
உண்ணும் முன்பு ஒருபிடி அன்னத்தைத்
"தின்னுக" என்றே காக்கைக்கு அளிக்கின்றார்.
பிணிஏதும் அண்டாமல் நலமாய் வாழ்ந்திட
சனியனின் வாகனத்தைத் தொழுதே பணிந்திடுவோம்.
Bookmarks