சிறுகதை
20/10
அம்மா சிரிப்பு.....அது அண்டர்கிரவுண்ட் (Underground ) சிரிப்பு.
அதென்ன அண்டர்கிரவுண்ட் ?
தெரியல. அது என்னவோ அப்படிதான் வாயில வருது. மனசுல பதிஞ்சிருக்கு.
அப்படி என்ன சிரிப்பு?
மூடின கையைத் திறந்து சோழியைக் கீழே போட்ட மாதிரியா?
இல்ல.
தாயக்கட்டையை உருட்டி போட்ட மாதிரி?
ம்…இல்ல.
தேங்கா சில்லு சிதறின மாதிரி?
ம்...ஹூம்.
பக்கெட் தண்ணியை கீழே சாய்ச்சு கொட்டினாப்போல?
நோ
குழந்தையோட கொலுசு சத்தம்...?
இல்லடீ..
ஜலதரங்கம்?
பூஜை மணி?
ச...இல்ல.
கை நிறைய அடுக்கி குலுக்கின கண்ணாடி வளையல் சத்தம்?
அய்ய..
கை தவறி கீழ விழுந்த கிண்ணம்?
போடீ...
சைக்கிள் பெல் மாதிரி தானே?
போதும் நிறுத்து. அம்மாவோட சிரிப்பு ஒண்ணும் அத்தனை முரடு இல்ல.
சைக்கிள் பெல் முரடா? ஜலதரங்கம், சோழி, தாயம் முரடா?
எங்கம்மா நிறைய சிரிப்பா. அதிலும் ஜோக் அடிச்சா சிரிப்பு உறுதி. சுமார் ரகமானாலும் சிரிச்சுடுவா. அவ சிரிச்சா எப்படி சத்தம் வரும்னு என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்வியும் பதிலும்தான் மேலே சொன்னதெல்லாம் !
சிரிச்சா தொடர்ந்து ஒரு நிமிஷம் சிரிப்பா. அதுக்கேது சத்தம்? அவ சிரிப்பு....சத்தம் கேட்காமல் குலுங்கிச் சிரிக்கும் சிரிப்பு. ஆனந்தமான சிரிப்பு. ஆயாசமான சிரிப்பு. வெட்கம் ரொம்பி வழியும் சிரிப்பு.
சத்தமில்லாமல் வரும் சிரிப்புச்சத்தம் நினைவில் இருக்கிறது. அதை எதுக்கு இது மாதிரி, அது மாதிரின்னு கம்பேர் பண்ணனும்?
அம்மா சிரிப்பு அம்மா சிரிப்புதான்..
வெள்ளை வெளேர்னு அரிசி மாதிரி மேல் வரிசை, கீழ் வரிசை ரெண்டும் தெரியும் சிரிக்கும் போது.
முத்துப்பல்செட்டுச் சிரிப்பு.
நெனவு தெரிஞ்சு அம்மாவை பல்செட்டில் தான் பார்த்திருக்கேன். என்னிக்காவது அதைக் கழட்டினா அவளோட அம்மா மாதிரி இருப்பா.
மண்ணுக்கு அடியில மாணிக்கம், வைரம், வைடூரியம் முத்து, பவளம் புதையல் கண்ட மாதிரி ஒரு சிரிப்பு...
எத்தனையோ காரணத்துக்கு அவ சிரிச்சிருந்தாலும்.....ஒரு தடவை அவ சிரிச்ச அந்த சைலண்ட் கொல் சிரிப்பு மட்டும் நான் செத்தபின்னும் எனக்கு மறக்காது..
அவரும் நானும் அவசரமா டாக்டர் செக்கப்புக்கு கிளம்பிட்டிருந்தோம்....அது மூணாவது சிட்டிங். இன்னும் ஏழு சிட்டிங் பாக்கி...அப்படி போகும்போதெல்லாம் அம்மாதான் என் ரெண்டு பசங்களையும் பாத்துக்குவா. நாங்க டாக்டர் கிட்ட போக காரணம் எதுவும் சொல்லாததால அவளுக்கு ஒரே கவலை...
எத்தனை க்ளோசா இருந்தாலும், சில விவரங்களை அம்மா கிட்ட சொல்ல முடியாது. அவ விடறதா இல்ல. அவருக்குத்தான் ஏதோ உடம்புன்னு பயந்து போனா. இல்லவே இல்லைன்னேன். அப்படின்னா எனக்குத்தான் உடம்புன்னு பதறிட்டா. குழந்தைகளை அவ கிட்ட விடாம இருந்திருந்தா சொல்லாம தப்பிச்சிருக்கலாம். வேறவழியில்லாம சொன்னேன்...
அம்மா.....ரொம்ப நாளா மனசே சரியில்ல. இப்பெல்லாம் அவருக்கும் எனக்கும் நடுவுல ரொம்ப கம்மிமா.
‘நேரத்தைச் சொல்றியா?’
பாத்தியா ஒனக்கு புரியாது...
‘புரியறாப்பல சொல்லேன்’
விடேன்
‘சொல்லு’
இதப்பாரு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷந்தான் ஆச்சு... அதுக்குள்ள கொறஞ்சு போச்சு..
‘என்னது?’
ஏன் இப்படி சொல்றதைக் கேக்காம முழிக்கற..?
‘கேட்டுட்டுதாண்டி இருக்கேன் சொல்லு’
அய்யோ எங்களோட பெட்ரூம் உறவச் சொன்னேம்மா... எப்பவோ ஒரு தடவைன்னு கொறஞ்சு போச்சு.
‘கையக் கோத்துக்கறது, மடில படுத்துட்டு டீ.வி பாக்கறது, உன் தோள் மேல கை போட்டு ரகசியம் பேசறது இதெல்லாம் நான் அடிக்கடி கவனிச்சுருக்கேன். உன் கிட்ட அன்பாத்தானே இருக்கார்? ’
ம்...ம்...இருக்கார்.
‘அப்பறம் என்ன?’
இல்ல... பத்து நாளைக்கு ஒரு தடவைதான். ...சில சமயம் அதுவும் இல்ல.( அதைத் தவிர இருக்கும் சில சின்னக் குறைகளை, நல்ல வேளை அம்மா கிட்ட சொல்லல. டாக்டர் கிட்டயும் போகல)
‘அதுக்கென்ன?’
எதேச்சையா அனிதா கிட்ட பேசினேன். அதைக் கேட்டதும் அவ என்னைத்திட்டி டாக்டர் கிட்ட அனுப்பினா...அவரை என் கூட வரவழைக்க நான் பட்ட பாடு இருக்கே!
நான் சொல்லி முடிச்சதுதான் தாமதம்...எங்கம்மா உடனே சிரிச்சா. தொடர்ந்து ஒரு நிமிஷம் அந்த சிரிப்பை சிரிச்சா சத்தமே இல்லாம.
அண்டர்கிரவுண்ட் சிரிப்பு...
எனக்கு அப்ப பிடிக்கல அந்த சிரிப்பை...அம்மா சிரிப்பை மொத மொதல்ல பிடிக்காததும் அப்பதான்...
‘மாசத்துக்கு மூணு, நாலு தடவை போலிருக்கு. விட்டுத் தள்ளு. சந்தோஷமாதான இருக்க...’
நீ சொன்னா ஆச்சா? உனக்கு தெரியாது.
மறுபடியும் அதே சிரிப்பு. ஆத்திரமாய் வந்தது எனக்கு.
இதுக்குத்தான் உன் கிட்ட சொல்லக்கூடாதுன்னு நெனச்சேன்...சொன்னா பாரு கேலி பண்ற. சிரிக்கற. ஒனக்கு புரியாது. இங்கிதமும் இல்ல.
மறுபடியும் ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு சொன்னா....
‘நான் ஒண்ணு சொல்லவா? ஒனக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்ல. உன் அப்பாக்கும் எனக்கும் எப்படி இருந்ததுன்னு நெனைக்கற?’ அதைக் கேக்கும்போது அநியாயத்துக்கு வெட்கம் வேற.
அவ கேட்டது ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியல. நான் அதைப்பத்தி இன்னிவரை நெனச்சு பார்த்தது இல்லை....
அம்மாவுக்கா!? அப்பாவுக்கா!?.....அவங்களுக்கு அது தேவைன்னு எனக்கு தோணினது இல்லை. இதுவரை யோசிக்காத அந்த விஷயம். திடுமென என்னவோ மாதிரி இருந்தது.
‘கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேல ஆச்சுடீ அப்பாக்கும் எனக்கும்.....உன்ன மாதிரி நாள் கணக்கு இல்ல......அதான் எங்களுக்குள்ள அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு...பின்ன என்ன? எனக்கு நீ சொல்றதைப் பாக்கும் போது சிரிப்புதான் வருது..’
அம்மா சிரிச்சா...
அதுதான்.. யாருமே புரிஞ்சுக்க முடியாத கவலை, சிரிப்பு எல்லாத்தையும் அண்டர்கிரவுண்டில் போட்டு மறைத்துவிட்டு ஆனந்தமாய், மெய்யாய் சிரிக்கும் சிரிப்பா...? அதுக்கேது சத்தம்? சத்தமே கேக்காம சிரிக்கும் சிரிப்பு.
எப்படி முடிஞ்சது அவளால மட்டும் சிரிக்க.? அதுவும் இப்படிப்பட்ட ஒரு விஷயத்துக்குக்கூட? அப்பா மேல ஆத்திரமாய் வந்தது. ஏன் இப்படி மத்தவங்களை பத்தி, அதுவும் அம்மாவைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியல? அவதான் சிரிப்பால போத்தி மறைச்சுட்டாளா?
இல்ல அவ சிரிப்புக்குள்ள நான் பாக்கலையா?
நாலு வயசுல நாங்க குழந்தைகளெல்லாம் சேர்ந்து அம்மா அப்பா விளையாட்டு விளையாடும் போது கூட, ஏதோ புரிஞ்சுத் தொலச்சமாதிரி அப்பா அம்மா பெட்ரூம்னு சொல்லி சொல்லி விளையாடுவோம். அந்த வயசுல புரிஞ்ச எனக்கு, இப்ப என் பசங்க அதேபோல விளையாடறதைப் பாத்தும் புரிஞ்ச எனக்கு, என்னப்பத்தி மட்டுந்தான் எண்ணமே தவிர, அம்மாவைப் பத்தி எதுவும் தோணல!
இப்ப பெரிசா புரிஞ்சதும் வெக்கமா இருந்தது. அடுத்தடுத்து இருந்த டாக்டர் சிட்டிங்கெல்லாம் உடனே கேன்சல் பண்ணினேன்.
நான் சொன்ன என் விஷயத்தைக் கேட்டு அம்மா சிரிச்ச சிரிப்பு எனக்கு பிடிக்கவேயில்ல. ஆனா அம்மா என் கிட்ட அவ விஷயத்தை சொல்லிட்டு சிரித்த சிரிப்பு இருக்கே... ஸ்பரிஸம் மறந்த அவ காலம் மாதிரி...சத்தம் கேக்காத அந்த சிரிப்புச்சத்தம், அது என் நினைவிலேயே இருக்கிறது. அது என் அம்மாவின் உயிர்....அம்மாவின் ஆவி.
முற்றும்
எழுத்து - காமாக்ஷி
Bookmarks