கட்டாந்தரையாய் பிளந்து கிடக்கும்
இந்த பாலை நிலத்தை கடக்கும் போது
வானத்தில் வட்டமிட்ட கழுகுகள்
விந்தையாய் தெரிந்தது அவனுக்கு
உயர எழும்பி
சீராய் சிறகுகள் பரப்பி
காற்றில் சறுக்கிக்கொண்டு
சடலங்களை தேடுகிறது
எழும்பிச் செல்லும் வரை எதுவும் உறுதி இல்லை
கிடைக்கும் ..... கிடைக்காது
இருக்கும் ...... இருக்காது
எத்தனைதான் எழும்பிச் சென்றாலும்
இரை கிடைப்பது என்னவோ தரையில்தான்
உச்சத்தில் பறக்க பறக்க
பார்வைக்கு பரப்பு அதிகம்
கல்வியும் அறிவும் காலத்தில் உயர்ந்து இருந்தால்
கணக்கில்லாத வாய்ப்புக்கள் இவ்வுலகில் ....
இருப்பது போதும் என்று நினைத்ததாலோ
காலம் முழுதும் இந்த கட்டாந்தரை பாதையை
கால் நடையாய் கடக்க வேண்டி வந்தது ....
காலம் கடந்து அவன் எண்ணத்தில்
முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டு இருக்க ....
கழுகின் மனதில் ஒரே எண்ணம்
"வெயிலின் வெப்பம் தாளாமல் எப்போது விழுவான் இவன் " என்று.
Bookmarks