Page 5 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 49 to 60 of 80

Thread: என் ஊர்....!!!!!

                  
   
   
  1. #49
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    என் ஊர் என்று சொல்லும்போதே அதில் தொணிக்கும் பெருமிதத்தை எவராலும் உணரமுடியும். அறியா வயதில் அதுதானே நம் உலகம். அதிலும் பெண்களுக்குப் பிறந்தவீட்டுப் பெருமை பேசவும் கூடுதலாய் ஒரு வாய்ப்பினை வழங்கும் ஊரல்லவா? வாருங்கள். திருச்சி மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

    ஆனாலும் அந்தப் பழைய நாட்களும் வாழ்க்கையும் மனத்தில் என்றும் இனிக்கும் நினைவுகள்தாமே….
    பொன்மலை என்றதுமே ஒரே மாதிரியான வீடுகள் அமைந்த ஊர் தான் நினைவுக்கு வருகிறது. புதிதாய் ஊருக்குள் நுழையும் வெளியூர்க் காரர்களுக்கு வீட்டைக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போது மென்றாகிவிடும்.

    மரியாதையுடன் பேசும் திருச்சி தமிழ், எம்மதமும் சம்மதம் என்கிற அம்மக்களின் சகோதர மனப்பான்மை, திருட்டு சீசன், ரெயில்வே பணிமனை பற்றிய செய்திகள், தொலைக்காட்சி வருவதற்கு முன், பின் மக்களின் வாழ்க்கை முறை என அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்டு சொந்த ஊரின் அருமை பெருமைகளை அடுக்கியிருக்கும் கீதத்துக்குப் பாராட்டுக்கள்.

    அந்த ஊருக்கே உரித்தான சிறப்புச் செய்திகளைச் சுவைபடச் சொல்லி பொன்மலையைச் சுற்றிக் காட்டிய கீதத்துக்கு நன்றி!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  2. #50
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பல மத மற்றும் கலாச்சாரத்துடன் ஒரே குடும்பமாய் பல குடும்பங்கள் வாழும் காலணி வாழ்க்கையை மிக சுவாரசியமாய் சொன்ன தங்கையின் எழுத்து ரசிக்க வைக்கிறது. திருச்சியின் பெருமைகளையும், மக்களின் மரியாதை கொடுக்கும் பழக்கத்தினையும், தான் பிறந்து வளர்ந்த ஊரில் தன் பிள்ளைகளையும் பெற்றெடுக்கும் பாக்கியம் பெற்றதையும் ஒன்றுவிடாமல் சொல்லி தன் ஊர் பாசத்தை வெகு அழகாய் எழுதிவிட்டீர்கள் தங்கையே.

    சீக்கிரம் வாங்க...எல்லோரும் உச்சிபிள்ளையார் கோவில்ல ஒரு சந்திப்பு வெச்சுடலாம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #51
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    என்னுடைய அடுத்த ஊர் வேப்பம்பட்டி புதூர். வேம்படிதாளத்திலிருந்து மாட்டு வண்டியில் இளம்பிள்ளை வந்த நாங்கள் லாரியில் சாமான்களை ஏற்றிக் கொண்டு ஒரு காலை வேளையில் கிளம்பினோம். புது வீட்டுக்கு போகப் போறோம்னு தெரியும். ஆனால் அந்த ஊர் எப்படி, வீடு எப்படி, பள்ளிக் கூடம் எப்படி இதையெல்லாம் விட மனசில் வேற பயம் எதுவோ இருந்தது. புதுப்பிரதேசம். தெரிந்த முகங்களே இருக்காது. ஒரே ஆறுதல் நானும் என் அண்ணனும் ஒரே வகுப்பில் படிப்பது. (பள்ளிக் கூடம் போகணும்னு அழுது ஆர்பாட்டம் செய்து நான் அண்ணன் கூடவே பள்ளியில் சேர்ந்தாச்சி.)

    இது பனையோலை வேயப்பட்ட வீடு. மண்சுவர்கள். மின்சாரம் கிடையாது. பெரிய கூடம். அதில் குழி வெட்டி ஷாஃப்ட் போட்டு 4 தறிகள், ஒரு வைண்டிங் மிஷின் ஒரு தார் போடும் மிஷின் எல்லாம் அதில் இணைக்கப்பட்டு இருந்தன. வெளியில் தாழ்வாரம் போல இழுத்து அங்கே டீசல் எஞ்சின். இன்னொரு சின்ன வீட்டில் ஒரு வார்ப்பிங் மெஷின். ஒரு முறை பெய்த மழையில் சமையலறை சுவர் இடிந்து விழுந்ததும் உண்டு. விளக்குக்காக கெஞ்சிக் கூத்தாடி தூரத்தில் இருந்த ஒரு வீட்டிலிருந்து வயர் இழுத்து மூன்று விளக்குகள் மட்டும் எரித்துக் கொண்டோம்.

    வார்ப்பிங் மெஷினை மூத்த அண்ணன் கவனித்துக் கொள்ள, அக்காமார்கள் வைண்டிங் மிஷினை கவனித்துக் கொள்ள, ஃபிரீயா இருக்கும் போதெல்லாம் தார் போடுவது எங்கள் வேலை.

    ஊர் சின்ன ஊர்தான். ஒரு முக்கிய வீதி. சாலை என்றால் ஒரே ஒரு சாலை. அதில் காலையில் ஒரு பஸ் அந்தப்பக்கம் இருந்து இந்தப்பக்கம் போகும். சாயங்காலம் இந்தப்பக்கம் இருந்து அந்தப் பக்கம் போகும். வையப்பமலை - புதன்சந்தை.. இதான் அதன் எல்லைகள். அங்கே போனால் வேறு பஸ் பிடிச்சு வேற ஊர் போகலாம். அந்த பஸ்ஸில் ஒரே ஒரு முறை வேம்படிதாளத்திற்கு பெரியப்பா வீட்டிற்குப் போனேன். ஒரு முறை நாமக்கல போனேன். உமாசங்கர் அந்த பஸ்ஸின் பெயர். அந்தக் கதை அப்புறம்.

    ஊர் எல்லையில் முதல் வீடே எங்க வீடுதான். எங்க வீட்டிற்கு பின்புறம் காலியிடம் தாண்டி சாலை. வலது புறம் ஊருக்குள் செல்லும் மண்சாலை. அதன் அடுத்த எல்லையில் மாரியம்மன் கோவில். அங்க இருந்துதான் ஒரு 50 வீடுகள் இருக்கும். ஊருக்குள் ஒரு சின்ன இராமர் கோவில் உண்டு.

    மண்சாலை தாண்டினால் முழுக்க சோளக்காடு. சோளக்காட்டு மூலையிலே அப்படின்னு பாட்டு எழுதலாம். பஸ் ஸ்டாப்பில் ஒரு காவியும் புழுதியும் அண்டிய சிமெண்ட் பெஞ்ச் இருக்கும். அதன் இரு கைப்பிடிகளில் வலது பக்கம் உள்ளது எனது குதிரை. இடது பக்கம் என் அண்ணனின் குதிரை.

    வீட்டில் பானையில் வைத்திருக்கும் கடலையை கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொண்டு குதிரையேறிப் போருக்கும், வேட்டைக்கும், இராசகுமாரிகளை மீட்கவும் போவோம். சலிக்காமல் கதை. கதை. கதை.,

    அப்பொழுது அம்புலிமாமாவில் மஹாபாரதம் முடிந்து வீர ஹனுமான் தொடர் வர ஆரம்பித்திருந்தது. அதுவும் மர்மத் தடாகம் தொடரும் எங்கள் கற்பனைகளைச் சிறகடித்துப் பறக்க வைக்கும். துணிப் பட்டையால் வால் வைத்துக் கொண்டு எத்தனையோ எலி இராட்சசர்களை குச்சிக் கதாயுதத்தால் துரத்தி அடித்திருக்கிறேன்.

    இந்த ஊரில் எனக்கு அதிகம் நண்பர்கள் கிடைக்கலை. என் அண்ணனுக்கு மாத்திரம் ஓரிருவர் கிடைத்தனர். சிலமுறை அவர்களுடன் விளையாடப் போவதுண்டு. மற்றபடி வீடே கதி.

    எங்கள் பள்ளிக்கு ஏறத்தாழ ஒண்ணரை கிலோமீட்டர் வையப்பமலை நோக்கித் தார்சாலையில் நடக்க வேண்டும். சைக்கிள் கூட அந்த ஊரில் அரிதுதான். விடியற்காலை அல்லது பொழுது சாய்ந்த நேரங்களில் ஒன்றிரண்டு மாட்டு வண்டிகள் போகும். மற்றபடி சாலை எங்களுக்கே..

    வீட்டுக்கு பக்கத்தில் ஒரு 90 டிகிரி திருப்பம், அதில் இருந்து அரை கிலோ மீட்டர் நடந்தால் ஒரு மடம் வரும். அன்கே மறுபடி இரு 90 டிகிரி வளைவுகள். அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை சமயத்தின் மடம். அங்கிருந்த பெரியவர், எங்க அப்பாவின் தாத்தாவின் (நாங்க பெரியப்பா என்று கூப்பிடுவோம்) தம்பி வீட்டில் தான் தினமும் சாப்பிடுவார். அவர்கள் பக்கத்தில் மணலி சேடர்பாளையம் என்ற ஊரில் இருந்தார்கள். எங்கள் பள்ளியும் அந்த ஊரில்தான். பள்ளியில் இடைவேளை நேரத்தில் தாகமெடுத்தால் அவங்க வீட்டில் போய்தான் தண்ணீர் குடிப்போம். அந்த பெரியம்மா (பாட்டி) என் அம்மாவை அச்சில் வார்த்த மாதிரியே இருக்கும். சேடர்? அப்படின்னா ஆதிசேஷனின் பரம்பரையில் வந்தவங்களாம். ஆதிசேஷனின் மகள் நாகதத்தையின் வாரிசுகள் சேடர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

    அமைதியான அந்த மடத்தில் பூச்செடிகள் நிறைய இருக்கும். நாங்களும் மாலை நேரத்தில் தினமும் மடத்தில் பூசைக்கும் பஜனைக்கும் போவோம். திரை விலக்கிக் காணும் ஜோதி தரிசனம் மிகவும் பிடித்த ஒன்று

    பள்ளியில் 5 வகுப்புகள் மட்டுமே உண்டு, நாங்கள் மூன்றாம் வகுப்பில் சேர்ந்தோம். ஆசிரியர்கள் வேறு விதமாக பாடம் சொல்லித் தந்தார்கள். ஒரே ஒரு பணக்கார வீட்டுப் பையன் மட்டும் இங்கிலீஸ் நோட்ஸ் வைத்திருந்தான். முதன் முதலாக் நோட்ஸ் என்ற ஒன்று இருக்கிறது என்பது அங்குதான் எனக்குத் தெரியும்.

    பசங்க ஒருத்தர் பேரும் இந்த ஊரில் எனக்கு நினைவில் இல்லை. இருந்தது ஒரே வருடம்தான் என்பது ஒன்று. இரண்டாவது எல்லோரும் பள்ளிக்கு வந்து நான் பார்த்ததே இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் இரண்டு நாள் வருகிற பசங்க நிறையவே இருந்தாங்க. என் அண்ணன் இந்தப் பள்ளியில் சேர்ந்ததில் இருந்துதான் படிப்பை இழந்தார்னு சொல்லலாம். ஆண்டுத்தேர்வை அரை மணி நேரத்தில் எழுதிமுடித்து விட்டு பெரிய மணலி அங்காளபரமேஸ்வரி கோயிலுக்கு, நண்பர்களோடு சென்று விட்டு நான் எழுதி முடித்த போது வந்து சேர்ந்து கொண்டார். இப்படி படிப்பை விட்டு அவர் ஊரைச் சுற்ற ஆரம்பிக்க படிப்பில் இருந்த கவனம் போய்விட்டது.

    இளம்பிள்ளையில் இருந்த வரை கோதுமை பிரதான உணவு. கோதுமைக் களி.. வாராவாரம் அரிசிச் சாப்பாடு, கறி என இருந்தோம். ஆனால் இங்கு வந்தபின் சோளம் முக்கிய இடத்தைப் பிடித்தது. கோதுமை அளவிற்கு எனக்கு சோளக்களி பிடிக்கவில்லை. காலையில் கூழாக கரைத்துக் குடிப்பது பரவாயில்லை. வெங்காயம், மிளகாய் புண்ணியத்தில் உள்ளே போய் விடும். ஆனால் மதியம் மற்றும் இரவு வேளைகளில் சோளக்களி என்னை மிகவுமே பாடுபடுத்தியது. ஒரு மாதிரியான சப்பென்ற ருசி சோளத்திற்கு. கூடவே தேங்காய் துவையல் செய்து விட்டால் எனக்குச் சுத்தமா பிடிக்காது.

    இதற்காகவே சனி ஞாயிறுகளில் சோளத்தை ரொட்டி போலச் சுட்டுத் தருவார் அம்மா. அவர்களுக்கும் ஒளிந்தது அந்த ஒருநாள்தான். அமாவாசைக்கு மட்டும்தான் இட்லி மற்றும் அரிசிச் சாப்பாடு.

    புதூர், சேடர்பாளையம் தவிர மற்ற ஊர்களுக்கு போனதே இல்லை. சுற்றிலும் ஏளூர், கல்லாங்காடு, பெரியமணலி, பேக்காடு எனப் பல ஊர் பெயர்களைச் சொல்லுவார்கள். ஆனால் பெரியமணலியை வேம்படிதாளம் போனபோது கடந்ததோடு சரி. மற்ற ஊர்களுக்கு இன்னும் ஒரு முறை கூட போகவில்லை. இதில் பேக்காடு எங்கள் முன்னோர்களின் சொந்த ஊராம். அதாவது என் தாத்தாவின் தாத்தா அந்த ஊர்க்காரர். பேக்காடு முத்துவீரி செட்டியார் என்று ஒரு நிலப்பத்திரத்தில் படித்ததால் தெரிந்தது.

    ராமர் கோவிலும் எங்களுக்கு பிடித்தமான இடம்தான். அங்கு இருந்த பூசாரிக்கு எங்களை ரொம்பவுமே பிடிக்கும். எங்களுக்கு சில மந்திரங்களையும் அவ்வப்பொழுது சொல்லிக் கொடுப்பார். ஓம் இராமய நமஹ என்று ஆரம்பிக்கும் அர்ச்சனை ஸ்துதியை ஒரு முறை மனம் போன போக்கில் சொல்லிக் கொண்டிருந்த போது இராமயி என்னும் பால்கார அக்கா எங்க அம்மாவிடம் உங்க பையன் போட்ட மந்திரத்தில் என் உடம்பு வலி போயே போச்சு என சிலாகித்து பேசியதைக் கேட்டு வெட்கத்துடன் சிரித்து இருக்கிறேன். ஊரில் இருந்த ஒரே கான்கிரீட் கட்டிடம் என இந்த இராமர் கோவிலைச் சொல்லலாம்,

    ஒண்ணரை கிலோ மீட்டர் தார்ச் சாலையிலும், ஒரே ஒரு மண்தெருவிலுமே ஒரு வருடம் ஓடிப்போனது. சந்தைக்குக் கூட அழைத்துப் போக மாட்டார்கள். இடையில் மாரியம்மன் பண்டிகை ஒருமுறை வந்தது. அப்போதுதான் கூழ் முதன் முதலில் குடித்தேன். ஆத்தா கூழ்.. என்பதால் இரண்டு நாளைக்கு வயிற்றில் இடம் கொடுத்து வைத்திருந்தேன். கடைசியில் அம்மா விளக்கெண்ணை கொடுத்து அம்மனை என்னிடம் இருந்து பிரிக்க வேண்டியதாய் இருந்தது.

    ஏளூர் சந்தைக்கும், பெரிய மணலி சந்தைக்கும் அம்மா அக்காமார்களை அழைத்துக் கொண்டு போய்வருவார். ஒரு முறை மணலி சந்தைக்குப் போய்விட்டு வரும்பொழுது சற்று இருட்ட ஆரம்பித்திருந்தது. திடீரென அம்மா அலறினாராம். காலில் எதுவோ கடித்து விட்டது. அவர் காலை உதற தூர விழுந்து நெளிந்து போன பாம்பை அக்கா பார்த்துவிட்டார். உடனே குறுக்கு வழியில் அம்மாவை இழுத்துக் கொண்டு மடத்திற்குப் போக அவர் காலில் கடி வாய்க்கு மேலே கட்டு போட்டு விட்டு வைத்தியருக்கு ஆள் அனுப்பி விட்டு அம்மாவை மாட்டு வண்டியில் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.

    வைத்தியர் அப்பாவின் நண்பரின் அண்ணன்தான். திருமணமாகாத பிரம்மச்சாரி. அவர் ஒவ்வொரு குளிகைகளாக ஏழு குளிகைகளை வெற்றிலையில் வைத்து மடித்துக் கொடுக்க, ஒவ்வொன்றாக மென்று விழுங்கினார் அம்மா.

    பின்னர் ஒரு கோழியை பிடித்துவரச் சொன்னார் வைத்தியர். அதன் வயிற்றை பிளேடால் நரசிம்மரைப் போலக் கீறி உள்ளே இருந்து ஈரலைக் கொத்தோடுப் பிடுங்கி அதைக் கடிவாயில் வைத்துக் கட்டினார். பிறகு இரவு முழுதும் தூங்காமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.

    ஏறத்தாழ ஊரே எங்கள் வீட்டில்தான். பேச்சு பேச்சு பேச்சு என விடியும் வரை ஊரே விழித்த்டிருந்து அம்மாவைக் காப்பாற்றியது. 48 நாட்கள் உப்புகாரமில்லாமல் பத்தியச் சாப்பாடு. அம்மா பிழைத்ததே எங்களுக்குப் மிகப் பெரிய விஷயம். காலையில் அந்த ஈரல் கறுத்து விஷம் எல்லாவற்றையும் உறிஞ்சி விட்டிருந்தது.

    ஒரே ஒரு முறை காட்டுக்கார கவுண்டருடன் வையப்பமலைக்கு மாட்டு வண்டியில் ஔவையார் படம் பார்க்கப் போனோம். வாரம் ஒரு படம் இளம்பிள்ளையில் பார்த்த நாங்கள்தான் வருடம் ஒரு படம் பார்த்தோம் என்பது மிக ஆச்சர்யமான விஷயம்.

    ஊரைப் பற்றிச் சொல்லணும்னா வெயிலை முழுதும் நான் அனுபவித்தது இந்த ஊரில்தான். ஏன்னா மரங்கள் ரோட்டில் மட்டுமே உண்டு. மற்றபடி ஊரே ஒரு மாதிரி பொட்டல்தான். சோளக்காடுதான் கண்ணுக்குத் தெரியும் பசுமை. புதையலைப் புதைக்க கூட ஊருக்குள்ள ஒரு மரத்தடி இல்லை. சொம்பு இல்லை. பஞ்சாயத்து இல்லை. அடங்கொப்புரானே அந்த வேப்பம்பட்டி எந்தத் திசையில் இருக்குன்னு கூட இன்னும் எனக்குத் தெரியாது.

    இன்னும் எனக்கு நினைவில் இருக்கும் இடங்கள், பள்ளிக்கூடம், மடம், வீடு, மாரியம்மன் கோவில், இராமர் கோவில். அப்புறம் ஒரே ஒரு கழிவு நீர் குட்டை.

    அது ஊரில் சாக்கடைகள் வந்து சேரும் பெரிய குழி. அதன் பக்கத்தில் சோளக்காடு வரப்பு. வீராப்பா வரப்பில் கண்ணை மூடிக் கொண்டுவந்து அந்த சாக்கடைக்குள் விழுந்து எழுந்து நாறியிருக்கிறேன்.

    அந்த ஊரைப் பொருத்த வரை நினைவிருக்கும் இரண்டு பெயர்கள் தர்மர் மாமா, மற்றும் இராஜமாணிக்கம் மாமா. அவ்வளவுதான். இதில் இராஜமாணிக்கம் என்பவர் அப்பாவின் நம்பர். ஆமாங்க அவரை நம்பித்தான் அப்பா அந்த ஊருக்கே போனாராம். வீடும் சரியில்லை. கரெண்ட் கனெக்ஷனும் கிடைக்கலை. அந்தப் பக்கம் இருந்து ஓயரிழுத்து குண்டு பல்பு எரிய வச்சா அதை யாரோ மின்சார வாரியத்துக்குப் போட்டுக் குடுத்து அதுக்கு கப்பம். அப்புறம் இன்னொரு நிகழ்ச்சி நடந்தது.

    ஒரு நாள் காலை. அப்பா அவரோட சொந்தக்காரர் யாரோ காலமாயிட்டார்னு காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு வையப்பமலை போய் அங்கிருந்து பஸ் பிடிச்சி போயிட்டாரு.

    திடீர்னு பஸ்ஸில் வந்து இறங்கின அம்மாவோட சொந்தக்காரர் அம்மாவோட அப்பா இறந்திட்டதா தகவல் சொல்ல..

    அம்மா, அண்ணன் யார் கையிலும் காசில்லை. எப்படி நாமக்கல் போக?

    அம்மா, அக்காமார்கள், அண்ணன்மார்கள், நான் அப்படின்னு எல்லோரும் வீடு வீடா அலைஞ்சோம் ஒரு பத்து ரூபா காசுக்காக. அன்னிக்கு பத்து ரூபா எங்களுக்குக் குடுக்க ஊரில் மனசிருக்கறவங்க கிட்ட காசில்லை. காசிருக்கறவங்க கிட்ட மனசில்லை.

    அப்போ அங்க வந்த அப்பாவின் வெளியூர் வியாபாரி நண்பர்தான் கையில 10 ரூபா கொடுத்து உடனே கிளம்புங்க என அனுப்பி வச்சார்.

    நாங்கள் புதன் சந்தை வரை நடையும் மாட்டுவண்டியுமா ஓடி ஓடி அங்கிருந்து நாமக்கல் பஸ் பிடிச்சு தாத்தாவை இறுதியாக பாக்கப் போனோம்.

    இந்தச் சம்பவம் தான் அப்பாவுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தகர்த்திடுச்சி. இந்த ஊர்ல இனிமே இருக்கவே கூடாது முடிவு பண்ணி இளம்பிள்ளைக்கு அருகில் காடையாம்பட்டி என்ற ஊருக்கு மாற முடிவெடுத்தார். அப்ப நான் நாலாவது படிச்சுகிட்டு இருந்தேன். காலாண்டு பரிட்சை முடிந்து கொஞ்சநாள்தான் ஆகியிருந்தது.

    இளம்பிள்ளையில் இருந்து வந்தப்ப இருந்த பயம் இப்போது எனக்கு இல்லை. நண்பர் இல்லை. பகைவர் இல்லை. நன்மை இல்லை. தீமை இல்லை.. நான் கொஞ்சம் ஞானியாகத்தான் இருந்தேன் அப்போது.
    Last edited by தாமரை; 26-04-2012 at 03:49 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #52
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    அடுத்த ஊர் காடையாம்பட்டி. அந்த ஊர்க்கதையை இங்கே படிக்கலாம்.

    http://www.tamilmantram.com/vb/showthread.php/13624

    அதுக்கு மேல சொல்லணும்னா மூணு நாலு விஷயம் இருக்கு. அந்த ஊர் கோவிலுக்குப் பக்கத்தில் கோணப்புளியங்கா மரம் இருக்கும். அதன் பழங்களைப் பறித்துச் சாப்பிட மிகவும் பிடிக்கும். அப்புறம் அந்த ஊர் பள்ளியும் மிக மிகச் சின்னது. சத்துணவு சூப்பரா இருக்கும்.

    இளம்பிள்ளையில் கோதுமை, புதூரில் சோளம் போல இங்க எங்களுடைய முக்கிய உணவுதானியம் கேழ்வரகு. சோளம் இல்லை என்பதே எனக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது, ஆனால் அதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கலை, கொடுமையான பஞ்சம். 1976 களில் அந்தக் கொடுமையை அனுபவித்தவர்கள் கலைஞருக்குப் பல காலம் ஓட்டுப் போடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். உணவுதானியங்கள் கிடைக்கவில்லை. ஊரில் காட்டுக்காரர்களின் வீட்டுக்குத் தேடித் தேடிப் போய் மரவள்ளிக்கிழங்கு கிலோ ஒரு ரூபாய்க்கு வாங்கி வந்து அதை அவித்தே பசியாற வேண்டியக் கட்டாயம் இருந்தது. உணவுத்தானியங்களின் பதுக்கலினால் சோறு என்பதே கனவாகிப் போனது. கடைசியில் அமெரிக்கா புண்ணியத்தில் ரேசன் கடைகளில் மக்காச் சோள ரவை வழங்கப்பட்டது. வயிற்று வலி வரும் என்றாலும் மக்காச் சோள ரவை சுவையாகத்தான் இருந்தது.

    இங்கிருந்தும் சித்தர்கோவில் நடந்து போகிற தூரம்தான். ஒரு நாள் நான்,அண்ணன், அம்மா, அக்காமார்கள் எல்லாம் சித்தர்கோவிலுக்கு சென்றுவிட்டு மலையேறி முருகனை கும்பிட்டு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். காவடி எடுத்துக் கொண்டு மலையேறிக் கொண்டிருந்தவர் ஒருவர் திடீரென ஆவேசம் வந்தவராக இங்க வாம்மா என அம்மாவைக் கூப்பிட்டார்.

    அம்மா அவர் பக்கம் போக, என் எல்லையை விட்டுப் போகப் போறயா நீ என ஆவேசப்பட்டார் அவர்.

    இல்லை சாமி என அம்மா பதற, அதெல்லாம் உனக்குத் தெரியாது. போன வாரமே பால்காய்ச்சியாச்சி. வேணும்னா உன் வீட்டுக்காரரைப் போய்க் கேட்டுக்கோ என ஆவேசமாக சாமியாடினார்(!!!)

    அம்மா அவர்காலில் விழுந்து எந்த தப்பிருந்தாலும் எங்களை மன்னிச்சுக்குங்க.. நீங்கதான் எங்க கூட இருந்து காப்பாத்தணும் என வேண்ட..

    சரி சரி.. நான் முன்னால போறேன் நீ பின்னாடியே வா என ஆடி அருள் புரிந்து விட்டு மலையேறி விட்டது (நிஜமாவே மலைதான் ஏறினார்) சாமி,

    வீட்டுக்கு வந்த பின் அம்மா அப்பாவிடம் சொல்ல.. அப்பா அதற்குப் பின்னால்தான் சொன்னார். சேலத்தில் வீடு பார்த்து பால் பொங்கியாச்சி. சித்திரை மாதம் குடி போகிறோம். வீடு ரொம்பப் பெரிசு.. வாசல்ல யார் வந்து கத்தினாலும் சமையலறையில் கேட்காத அளவிற்குப் பெரிசு. இப்படி அவர் சொன்ன விஷயங்களில் எங்கள் கனவு விரிந்தது. என் கனவுகளில் மாடி வீடுதான் வந்தது. கடல் மாதிரி வீடு.. அப்பா வியாபாரம் செய்யப் போகிறார்..

    ஆனால் ஒரே பிர்ச்சனை முழு ஆண்டுத்தேர்வுக்கு கொஞ்ச நாள் இருக்கிறது. அப்பா பள்ளியில் சென்று டி.சி கேட்க எங்கள் மீது அதீதப் பாசம் கொண்டிருந்த டீச்சர்கள் தங்கள் வீட்டில் இருந்து தேர்வு எழுதிவிட்டு குழந்தைகள் வரட்டும் என கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். அப்பா ஒப்புக் கொள்ளவில்லை. ஊரில் அவருக்கு யார் மீதோ கோபம். ஒரு நாள் கூட யாரும் இனி இந்த ஊரில் இருக்க மாட்டோம் என டி.சி. வாங்கிக் கொண்டு வந்து விட்டார்.

    நான்கைந்து மாதங்கள்தான் என்றாலும் இந்த ஊர் மிக உறுதியான மனதைத் தந்தது எனச் சொல்லலாம். கஷ்டப்படத் தயங்காத மனம் இங்குதான் எனக்குக் கிடைத்தது,
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #53
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    திருச்சிக்கு வடக்கே 30 கல் தொலைவில் இருக்கும் துறையூர்தான் என்னுடைய பிறந்த ஊர் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில்தான் என்னுடைய இளங்கலைப் பட்டத்திற்கான படிப்பை முடித்தேன். அப்போது பொன்மலையில் உள்ள இரயில்வே பணியாளர்களுக்கான திரை அரங்கில் இதய கமலம் படம் பார்த்தது இன்றும் நினைவில் உள்ளது. கட்டணம் 25 பைசா.

    ஞாயிறு தோறும் திருச்சி மலைக்கோட்டைக்கு சென்று வருவேன். தற்போது திருச்சி மாநகரம் மிகவும் மாறிவிட்டது. திருச்சி உறையூரில் நிறைய சொந்தங்கள் உண்டு.

    1971 -ல் வேலை நிமித்தமாகச் சென்னைக்கு வந்த நான் இங்கேயே தங்கிவிடுவேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
    நீங்கள் திருச்சியைச் சேர்ந்தவர் என என்னும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது " யாதும் ஊரே! யாவரும் கேளிர்! " என்ற நிலைக்குச் சென்றுவிட்டீர்கள்.
    தாங்களும் திருச்சியைச் சேர்ந்தவர்தானா? ஒத்த ஊர்க்காரர் என்பதே மகிழ்வைத் தருகிறது ஐயா. தங்களுடைய இளவயதில் பார்த்த திருச்சியைப் பற்றிச் சொல்லுங்களேன்.

    ஆரம்பகாலத்தில் சென்னைக்கும் திருச்சிக்கும் உள்ள பரபரப்பு வித்தியாசமே பெரும் வித்தியாசமாய் இருக்கும். இப்போது தாங்கள் சொல்வது போல் திருச்சியிலும் நிறைய மாற்றங்கள். சென்னைக்கு இணையானப் பரபரப்பு தொற்றிக்கொண்டுவிட்டதாக அறிகிறேன்.

  6. #54
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by மதி View Post
    அட நானும் துறையூரில் தான் பிறந்தேன்.. ஆனால் இப்போது திருச்சிக்காரன்..
    இப்படியெல்லாம் ஒற்றை வரியில் ஊர்ப்பெருமையை சொல்லிமுடித்துவிடக்கூடாது. நிறைய சொல்லவேண்டும். காத்திருக்கிறோம்.

  7. #55
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by கலையரசி View Post
    பொன்மலை என்றதுமே ஒரே மாதிரியான வீடுகள் அமைந்த ஊர் தான் நினைவுக்கு வருகிறது. புதிதாய் ஊருக்குள் நுழையும் வெளியூர்க் காரர்களுக்கு வீட்டைக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போது மென்றாகிவிடும்.
    வெளியூர்க்காரர்கள் என்றில்லை அக்கா, பழகிய எங்களுக்கே குழப்பம் வருவது உண்டு. காலனிக்குள் வேறுவீடு மாறினால்கூட நானும் தம்பியும் பள்ளிவிட்டு வரும்போது வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் எங்காவது சுற்றிக்கொண்டிருப்போம். ஏதாவது மரம், வீட்டுக்கதவு போன்ற அடையாளங்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி அப்பா சொல்லித்தருவார்.

    Quote Originally Posted by கலையரசி View Post
    மரியாதையுடன் பேசும் திருச்சி தமிழ், எம்மதமும் சம்மதம் என்கிற அம்மக்களின் சகோதர மனப்பான்மை, திருட்டு சீசன், ரெயில்வே பணிமனை பற்றிய செய்திகள், தொலைக்காட்சி வருவதற்கு முன், பின் மக்களின் வாழ்க்கை முறை என அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்டு சொந்த ஊரின் அருமை பெருமைகளை அடுக்கியிருக்கும் கீதத்துக்குப் பாராட்டுக்கள்.

    அந்த ஊருக்கே உரித்தான சிறப்புச் செய்திகளைச் சுவைபடச் சொல்லி பொன்மலையைச் சுற்றிக் காட்டிய கீதத்துக்கு நன்றி!
    பாராட்டுக்கு மிகவும் நன்றி அக்கா.

  8. #56
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    பல மத மற்றும் கலாச்சாரத்துடன் ஒரே குடும்பமாய் பல குடும்பங்கள் வாழும் காலணி வாழ்க்கையை மிக சுவாரசியமாய் சொன்ன தங்கையின் எழுத்து ரசிக்க வைக்கிறது. திருச்சியின் பெருமைகளையும், மக்களின் மரியாதை கொடுக்கும் பழக்கத்தினையும், தான் பிறந்து வளர்ந்த ஊரில் தன் பிள்ளைகளையும் பெற்றெடுக்கும் பாக்கியம் பெற்றதையும் ஒன்றுவிடாமல் சொல்லி தன் ஊர் பாசத்தை வெகு அழகாய் எழுதிவிட்டீர்கள் தங்கையே.

    சீக்கிரம் வாங்க...எல்லோரும் உச்சிபிள்ளையார் கோவில்ல ஒரு சந்திப்பு வெச்சுடலாம்.
    ஆஹா... தாராளமா செய்யலாம். வரும்போது சொல்றேன் அண்ணா.

    உங்கள் ஊக்கமிகுப் பாராட்டுக்கு நன்றி. உங்கள் ஊர்ப் பதிவையும் நேரமிருக்கும்போது தொடருங்கள். அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறோம்.

  9. #57
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    என்னுடைய அடுத்த ஊர் வேப்பம்பட்டி புதூர். வேம்படிதாளத்திலிருந்து மாட்டு வண்டியில் இளம்பிள்ளை வந்த நாங்கள் லாரியில் சாமான்களை ஏற்றிக் கொண்டு ஒரு காலை வேளையில் கிளம்பினோம். புது வீட்டுக்கு போகப் போறோம்னு தெரியும். ஆனால் அந்த ஊர் எப்படி, வீடு எப்படி, பள்ளிக் கூடம் எப்படி இதையெல்லாம் விட மனசில் வேற பயம் எதுவோ இருந்தது. புதுப்பிரதேசம். தெரிந்த முகங்களே இருக்காது. ஒரே ஆறுதல் நானும் என் அண்ணனும் ஒரே வகுப்பில் படிப்பது. (பள்ளிக் கூடம் போகணும்னு அழுது ஆர்பாட்டம் செய்து நான் அண்ணன் கூடவே பள்ளியில் சேர்ந்தாச்சி.)
    வேப்பம்பட்டி புதூர் அனுபவங்களில் பல இடங்களில் வேம்பின் ருசி காண்கிறேன். அண்ணனின் பள்ளிக்கூட வாழ்க்கை திசை மாறியது, தினமும் சோளக்களி தின்னும் கொடுமை, அம்மாவுக்கு பாம்பு கடித்தது, அவசரத்தேவைக்கும் பணமில்லாமல் உதவிக்கு அலைந்தது போன்றவை மனத்தை மிகவும் நெகிழ்த்தின.

    அதே சமயம், குழந்தைத் தனத்தின் பெரும் வெளிப்பாடாய் அமைந்த நிகழ்வுகள் இனிமை. குதிரை ஓட்டிப் போரிட்டு அரசகுமாரியை மீட்டல், அம்புலிமாமா கதைகளின் தாக்கம், இராமயி அக்காவின் உடல்நோவு தீர்த்த மகிமை போன்றவற்றைப் படிக்கையில் மிகவும் ரசித்தேன். குறுகிய காலமென்றாலும் குறைவில்லாத அனுபவங்களின் தொகுப்பை எழுதிய விதம் அருமை.

  10. #58
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சேலம் என் ஊர் என பெருமையுடன் இன்று சொல்லிக் கொள்ளும் ஊர் இதுதான். இதுவரை இருந்த மற்ற ஊர்களெல்லாம் சேலம் மாவட்டத்தைச் சார்ந்ததாகவே இருந்ததாலும், நான் பிறந்தது சேலம் அரசுப் பொது மருத்துவமனை என்பதாலும் அதில் தப்பே இல்லை.

    எல்லா மிகப் பெரிய ஊர்களும் எதாவது ஒரு நதியைச் சார்ந்தே இருக்கும். சேலத்தின் மையத்தில் ஓடுவது திருமணிமுத்தாறு. சேலத்தின் கிழக்கே விழுப்புரம் மாவட்டம் கல்ராயன் மலைகளில் உற்பத்தி ஆகும் அது சேலம் வழியே ஓடி கரூர் அருகே காவிரியில் கலக்கும். இது பருவகால நதிதான் என்றாலும் இன்று ஜீவநதி. காரணம் ஊரின் சாக்கடைகள் அனைத்தும் இதில் இணைக்கப்பட்டதே ஆகும். சென்னைக்குக் கூவம் போல சேலத்திற்கு திருமணிமுத்தாறு. இந்த ஆற்றின் நீரில் நெல் விவசாயம் இன்றும் நடக்கிறது.

    திருமணி முத்தாற்றை ஒட்டினாற் போலத்தான் சேலத்தின் முக்கியப் பிரதேசங்களான பழைய பேருந்து நிலையம், போஸ் மைதானம், நேரு கலையரங்கம், சேலத்தின் பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் கோட்டை பெருமாள் கோவில், பழம்பெருமை பெற்ற சுகவனேஸ்வரர் ஆலயம், ராஜகணபதி ஆலயம் என பல முக்கியஸ்தலங்கள் உண்டு. கோட்டை என்று பெயர் இருக்கே கோட்டை இருக்கா என்று பலரும் கேலி செய்வார்கள். அதையும் கண்டுபிடித்தோம். திருமணி முத்தாற்றில் பழைய நியூ சினிமாவிற்கு எதிர்புறம் உள்ள தொங்கு பாலத்தின் வழியாக நடந்து போனால் கரையில் கருங்கற்களால் அடுக்கப்பட்ட அந்தக் கால கோட்டை மதிலின் சிறு பகுதியைக் காணலாம். பலருக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரியாது.

    திருமணிமுத்தாற்றில் அந்தக்காலத்தில் முத்தும் கோமேதகமும் கிடைக்குமாம். அதனால் அந்தப் பெயர் வந்ததாகச் சொல்வார்கள். இன்னும் கூட திருச்செங்கோடு அருகில் கோமேதகம் கிடைப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    சேலத்திற்கே பிரபலம் சினிமா மற்றும் மாம்பழம்.

    அண்ணன் சிவா.ஜி சொன்ன மாதிரி மாம்பழம் அதிகம் விளைவது என்னவோ கிருஷ்ணகிரிதான் என்றாலும்..

    அந்தக்காலத்தில் கிருஷ்ணகிரி சேலத்தின் பகுதியாகவே இருந்தது. சேலம் மாவட்டத்தின் வடக்கு எல்லை கர்நாடகம், மேற்கில் கோவை மாவட்டம், தெற்கில் திருச்சி மாவட்டம், கிழக்கில் விழுப்புறம் ஆற்காடு மாவட்டங்கள். அதனால்தான் அது சேலம் மாம்பழம் மிகப் பிரசித்தம் என்பது அண்ணனுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

    சேலம் குண்டு மாம்பழம்தான் அல்ஃபோன்ஸா என அழைக்கப்படும் மாம்பழம் ஆகும். இப்படி உள்ளூரில் ஒரு பெயரும் வெளியூரில் ஒரு பெயருமாக மாம்பழங்கள் இருக்கும்.

    சேலத்தின் முக்கியப் பொழுது போக்கு சினிமாதான். அந்தக்காலத்திலேயே சேலத்தில் 55 தியேட்டர்கள் இருந்தன. தமிழ் நாட்டில் அப்பொழுது தியேட்டர்களின் எண்ணிக்கையில் இரண்டாம் இடம் சேலத்திற்கு. சேலத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் பல கலைஞர்களை வளர்த்து விட்டிருக்கிறது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் வழியில் இருந்த அந்த ஸ்டுடியோவில் பல வெற்றிப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று ஒரே ஒரு நினைவுச் சின்னம் மட்டுமே பாக்கி. சேலத்தில் ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் ஓரியண்டல், சக்தி ஓரியண்டல், கைலாஸ், பிரகாஷ், சந்தோஷ், சப்னா, சாந்தம், சங்கம், சங்கம் பாரடைஸ், சித்ரா, சாந்தி, சங்கீத், நாகா, ஜெயா, நியூ சினிமா, விக்டோரியா, பாரத், கல்பனா, தேவி என தியேட்டர்கள் வரிசையாக இருக்கும். இந்தப் பக்கம் போனால் கண்டிப்பாக எதாவது ஒரு சினிமா பார்த்து விட்டுத் திரும்பலாம். சிவாஜி படங்கள் எப்பொழுதும் சாந்தி தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும். போஸ் மைதானத்திற்கு அந்தப் பக்கம் கல்லாங்குத்து என்ற பகுதி உண்டு. சினிமா வினியோகஸ்தர்களின் அலுவலகங்கள், கரகாட்ட, நையாண்டி மேள, நாடக கலைக் குழுக்கள் அங்கேதான் இருக்கும். சேலத்தின் கலைமையம் அது.

    போஸ் மைதானம் : கண்காட்சி, சர்க்கஸ், பொதுக்கூட்டம் என இம்மைதானம் ஒரு மிகப் பெரிய பொழுது போக்கு இடம். இதை ஒட்டி இருக்கும் நேரு கலையரங்கத்தில் நாடகங்கள் நடைபெறும். ஆர்.எஸ். மனோகர், எஸ்.வி.சேகர், சோ, ஒய்.ஜி. மகேந்திரன் இப்படிப் பல சினிமாக் கலைஞர்களின் நாடகங்கள் இங்கே நடக்கும்.

    கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து இராஜகணபதி கோவில் வரையிலான ஒரு நீண்ட முக்கோணப் பகுதி முதல் அக்ரஹாரம் என அழைக்கப்படும். இதுதான் சேலத்தின் முக்கிய வியாபர மையம். சேலத்தின் ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு என்று சொல்லலாம்.

    ராஜகணபதி கோவில் தாண்டினால் இரண்டாவது அக்ரஹாரம். மொத்த விலைக் கடைகள், மருத்துவமனைகள் என இதுவும் பரப்பான இடம்தான். இரண்டிற்கும் மத்தியில் இருப்பது வ.உ.சி. மார்க்கட்.

    இது சென்னைக் கொத்தவால் சாவடி போல. எல்லாவகைக் காய்கறி, பூக்கள் என எல்லாமே விடியற்காலை இங்கே வந்து இறங்கும். லாரியிலிருந்தே ஏலம் விடப்பட்டு சில்லரை வியாபாரிகளுக்கு விற்கப்படும். மற்ற இடங்களை விட இங்கே காய்கறி விலை மிக மிகக் குறைவாக இருக்கும் வெளியில் வெங்காயம் கிலோ விலை 2:00 ரூபாய் என்றால் காலை ஏல விலை 20 பைசா அளவில்தான் இருக்கும். பின்னர் அங்கேயே 50 பைசா என விலையேறி பின்னர் உள்ளூருக்கு வரும்பொழுது 2:00 ரூபாயாக இருக்கும். இன்னும் எந்த விழா என்றாலும் இங்கு ஏலத்தில் காய்கறி வாங்குவதே நடக்கிறது.

    சேலத்தின் வடக்கு எல்லையில் வீற்றிருப்பவர் வெண்ணங்கொடி முனியப்பன். வடக்கு நோக்கிச் செல்லும் அத்தனை வாகனங்களுக்கும் இவர்தான் செக்கிங் இன்ஸ்பெக்டர். தென்னெல்லை பத்ரகாளியம்மன். மேற்கில் கரிமேடு கரிவரதராஜ பெருமாள் கிழக்கில் யார் தெரியலை. இவங்கதான் காவல் தெய்வங்கள்.

    இன்னும் வரும்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #59
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    எங்கள் ஊருக்கும் சில சரித்திர பெருமைகள் உண்டு. கிருஷ்ணகிரி சோழர்கள் காலத்தில் நிகரிலி சோழ மண்டலம் மற்றும் விதுகதழகி நல்லுர் எனவும் அதற்கு முன்பே எயில் நாடு எனவும், நுளம்பர்கள் காலத்தில் நுளம்பாடி எனவும் அழைக்கப்பட்டது. கிருஷ்ண என்றால் கறுப்பு கிரி என்றால் மலை. கறுப்பு கிரானைட் கற்கள் நிறைந்த பிரதேசம் என்பதால் இப்போதைய பெயர் என ஒரு கருத்தும், கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசமானதால் இந்தப் பெயர் எனவும் சொல்லப்படுகிறது. ராபர்ட் கிளைவ் கவர்னராக இருந்த சமயத்தில் கிருஷ்ணகிரிக்கு அருகில் இருக்கும் காவேரிப்பட்டிணத்தில்தான் திப்புசுல்தான் படைகளுடன் பெரும் போர் நிகழ்ந்தது. அதில் ஆங்கிலேயர்கள் தோற்றுப்போன வெற்றிச் சரித்திரமும் இருக்கிறது.


    மேலும் “பாரா மஹால்” எனப்படும் பனிரெண்டு கோட்டைகள் உள்ள பிரதேசமாகவும் இருந்துள்ளது. இந்த பனிரெண்டு கோட்டைகளில் ஒன்றான ஜெகதேவிக் கோட்டை எங்கள் வீட்டிலிருந்து பத்துக் கிலோமீட்டர்கள். சைக்கிளில் நானும் என் நண்பன் நாகராஜனும் அந்த ஊருக்குப் போவோம். அவனுடைய அக்கா வாழ்க்கைப்பட்ட ஊர். அவரைப் பார்க்கப்போவோம். அப்படியே கோட்டைக்குள் போய் ஒவ்வொரு பகுதியாய் சுற்றிக் களைத்துத் திரும்பி, ஊரில் அப்போதிருந்த மூன்று டெண்ட் கொட்டகைகளில் ஏதாவது ஒன்றில் படமும் பார்ப்போம். நாகராஜனின் அப்பா பார்பர் ஷாப் வைத்திருந்ததாலும், இவனும் படிப்பு ஏறாமல் அதே கடையில் வேலை செய்ததாலும் காசு அவனிடம் கொஞ்சம் தாராளமாகவே புழங்கும்.


    சில சமயங்களில் சைக்கிளிலேயே 42 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் தர்மபுரிக்குப் போய் சினிமா பார்த்ததும் உண்டு. அப்போது தர்மபுரிதான் எங்கள் மாவட்டம். தற்சமயம் ஆனந்த் என்ற பெயருள்ள சினிமா தியேட்டர் இருக்கும் இடம் அப்போது பன்றிகள் மேயும் ஒரு குட்டை. அதனையொட்டிதான் அப்போதே பல லட்சங்கள் செலவில் கட்டப்பட்ட வீடுகளும் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் என் பால்ய நண்பன் ரிஸ்வானின் வீடு. பெரும்பாலான நேரங்கள் அவன் வீட்டில்தான் இருப்பேன். ஐந்தாவது படிக்கும்போதே அவனுடன் சேர்ந்து பீடி குடித்துவிட்டு பீடா போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போய் அம்மாவிடம் அடி வாங்கி அதோடு அதனை விட்டக் கதையும் நடந்தது.


    அப்போதெல்லாம் ஒரு தள்ளுவண்டியில் பெரிய பெட்டியைப்போல இருக்கும் பயாஸ்கோப் எங்கள் ஊரின் தெருக்களில் வலம் வரும். சின்ன பிள்ளைகள் மட்டுமே அதற்குள் நுழைந்து உட்கார முடியும். சிறிய கதவைத் திறந்து ஐந்தாறு பொடுசுகளை அதற்குள் அனுப்பி, கதவை அடைத்துவிட்டு படம் காண்பிப்பார்கள். சந்தோஷமாய்ப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது மன்னன் படம் ரஜினியைப்போல முழுக்க வியர்வையால் நனைந்து வெளியே வருவோம்.


    நான் படித்த ஆரம்பப்பள்ளியின் பெயர் சப்ஜெயில் ஸ்கூல். வெள்ளையர் காலத்தில் சப்ஜெயிலாக இருந்ததை பள்ளியாக மாற்றியதால் அந்தப் பெயர். இப்போதும் அந்த சாலையின் பெயர் சப்ஜெயில் ரோடுதான். அந்தப்பள்ளியில் ஐந்தாவது படிக்கும்போது என் வகுப்புத்தோழி அருணா. ஒரு வழக்கறிஞரின் மகள். குண்டு முகம். உப்பியிருக்கும் கண்ணங்கள், கல்லுக்குளீரம் அருணாவைப்போலவே குண்டுக் கண்கள் அழகாய் இருப்பாள். அவள் என்னுடன் நெருக்கமாய் பழகியதைப் பொறுக்காத சிலர் வேண்டுமென்றே வம்பிழுத்து, பி.டி பிரீயடில் அவர்களுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டு, அந்த சண்டைக்கான காரணம் தெரிந்து, அடுத்த வாரம் பள்ளிச் சுற்றுலாவுக்காக செஞ்சிக்கோட்டைக்குப் போன போது அருணா இன்னும் நெருக்கமாகி என் கை கோர்த்துக்கொண்டே என்னுடன் சுற்றியது....மறக்கமுடியா மலரும் நினைவுகள்.


    அப்போதெல்லாம் பள்ளிக்கூட வாசலில் ஒரு கிழங்கு விற்பார்கள். இடுப்பு உயரத்தில் ஆரஞ்சுக் கலர் தோல், வெளிர் மஞ்சள் நிற உட்புறம் என்று பார்க்கவே பிரமாண்டமாய் இருக்கும். கத்தியால் சின்னச் சின்னத் துண்டுகளாய் சீவியெடுத்து 3 பைசாவுக்கு ஒன்று என விற்பார்கள். இப்போது அந்தக் கிழங்கு காணக்கிடைக்கவேயில்லை. எப்படி மறைந்தது என்றே தெரியவில்லை. மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு திரும்பப்போகும் போது என் அப்பாவும் சாப்பிட்டுவிட்டுக் குட்டித்தூக்கம் போட்டுக்கொண்டிருப்பார். பட்டனில்லாத ஜிப்பா போன்ற பக்க வாட்டில் பாக்கெட் வைத்த சட்டையைத்தான் அவர் அணிவார். அவர் தூங்குகிறாரா என்பதை உறுதி படுத்திக்கொண்டு நைஸாக அந்தப் பாக்கெட்டில் கையைவிட்டுக் கிடைக்கும் சில்லறையை அள்ளிக்கொண்டு பறந்துவிடுவேன். நீண்ட நாட்களாய் நான் செய்து வந்த இந்தத் திருட்டு அவருக்குத் தெரியாது என்ரே நினைத்துக்கொண்டிருந்தேன்...ஆனால் எல்லாவற்ரையும் தெரிந்து கொண்டே தூங்குவது போல பாசாங்கு செய்து வந்திருக்கிறார் என்று பிறகுதான் தெரிந்தது. எனக்காகவே அதில் சில்லறையைப் போட்டு வைத்திருப்பார் என்று அம்மா சொல்லித்தான் தெரியும். நான் அப்பாவுக்கு செல்லப்பிள்ளை என்பதால்..இந்தத் திருட்டு சந்தோஷமாய் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.


    ஒருமுறை ஐந்து ரூபாய்க் கொடுத்து எண்ணை வாங்கிவர என் அம்மா அனுப்பினார். ரவுண்டானா பக்கத்திலிருக்கும் கடையில் எண்ணை வாங்கிக்கொண்டு, திரும்பி வந்துகொண்டிருந்தேன். அங்கே குதிரை வண்டிகள் அதிகமாய் நிற்கும். இப்போதைய ஆட்டோ ஸ்டாண்டைப் போல அது குதிரை வண்டி ஸ்டாண்ட். குதிரைகளுக்கு புல் விற்றுக்கொண்டிருக்கும் பெண்களும் அங்கே வரிசையாய் அமர்ந்திருப்பார்கள். நான் அந்த இடத்தைக் கடந்துகொண்டிருக்கும்போது ஒரு வேட்டி கட்டிய ஆள் சடாரென்று புல் விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணை முடியைப் பிடித்து எழுப்பிக் கையில் வைத்திருந்தப் பையிலிருந்து அருவாளை எடுத்து ஒரே வெட்டில் தலையைத் துண்டாக்கி, ஏதோ காய்கறியைப்போல அந்தத் தலையை தான் கொண்டு வந்திருந்தப் பையில் போட்டுக்கொண்டு சாவகாசமாய், ரத்தம் ஒழுகும் அருவாளை ஒரு கையிலும், தலை இருக்கும் பையை இன்னொரு கையிலும் பிடித்துக்கொண்டு நடந்து போனான். காவல்நிலையத்துக்குப் போய் சரண்டராகிவிட்டான் என பிறகு பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு சம்பவம் அது.


    இதைப்பார்த்த நான் கையிலிருந்த எண்ணைக் கிண்னத்தை ரோட்டில் போட்டுவிட்டு அலறியடித்துக்கொண்டு வீட்டுக்கு ஓடி அம்மாவைப் பிடித்துக்கொண்டு அழுதேன். இப்போதும் அந்த இடத்துக்குப் போனால் அந்த நினைவுகள் எட்டிப்பார்ப்பது நிற்கவில்லை.


    எங்கள் ஊரில் இருக்கும் காட்டினாயனப்பள்ளி (நாங்கள் காட்னாம்பட்டி எனச் சொல்லுவோம்) முருகன் கோவிலில் நடக்கும் தைப்பூசத் திருவிழாவிற்காக வருடம் முழுதும் காத்திருப்போம். அந்தக் கோவிலின் தேர் உலா நகருக்குள் வரும்போது நடக்கும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் அனைத்தையும் ஓடி ஓடிச் சென்று பார்ப்போம். தேரின் மீது பொரியும் சில்லறைக் காசுகளும் வீசுவார்கள் அந்தக் காசுகளை பொறுக்க பெரிய ரகளையே நடக்கும்.(அப்படியும் கணிசமா நாங்க தேத்திடுவோம்ல...)
    கோவிலில் நிறைய கடைகள் முளைத்திருக்கும். வாண்ண விளக்கு தோரணங்கள், கவரிங் ந்கைகள், கலர்கலராய் சீனிமிட்டாய்கள், பஞ்சுமிட்டாய், ஜவ்வுமிட்டாய் என அந்தத் திருவிழா நடக்கும் ஏழு நாட்களும் எங்கள் முன்னிரவு நேரங்கள் அங்கேயேதான் கழியும். ஒவ்வொருநாளும் ஒரு கச்சேரி இருக்கும் டி.எம்.சவுந்திரராஜனெல்லாம் அங்கு கச்சேரி நடத்தியிருக்கிறார். திருவிழாவின் கடைசி நாளில் நடக்கும் வாணவேடிக்கை மிக அற்புதமாக இருக்கும். இப்போதும் அந்தத் திருவிழா நடக்கிறது...ஆனால் அந்த சந்தோஷம் இல்லை. பெரும்பாலவர்களின் முன்னிரவுகளை நெடுந்தொடர்கள் ஆக்ரமித்துக்கொள்வதால், யாரும் அதிகமாய் வருவதில்லை. விழாக் குழுவினரும் உற்சாகமிழந்து ஏதோ பேருக்கு நடத்துகிறார்கள்.


    எங்கள் ஊரின் ஒவ்வொரு அங்குலத்தையும் என் கால்கள் அளந்திருக்கின்றன. அவ்வளவு அலைந்திருக்கிறேன். இப்போதும் என் மகளுடன் இரு சக்கர வண்டியில் சில சந்து பொந்துகளில் நுழைந்து பயணிக்கும்போது, வருஷக்கணக்கா வெளியிலயே இருந்திருக்கீங்க...நாங்க இங்கேயே இருக்கோம் எங்களுக்குக் கூட இந்த இடமெல்லாம் தெரியாதே நீங்க எப்படி டாடி ஞாபகம் வெச்சிருக்கீங்க என என் மகள் கேட்பாள். இது வைத்துக்கொண்ட நினைவுகள் இல்லை...பதிந்துவிட்ட நினைவுகள்ன்னு சொல்வேன்.


    அடுத்து நான் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை படித்த ஆடுதுறையைப் பற்றி சொல்கிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #60
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post

    சில சமயங்களில் சைக்கிளிலேயே 42 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் தர்மபுரிக்குப் போய் சினிமா பார்த்ததும் உண்டு.
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அப்போதெல்லாம் ஒரு தள்ளுவண்டியில் பெரிய பெட்டியைப்போல இருக்கும் பயாஸ்கோப் எங்கள் ஊரின் தெருக்களில் வலம் வரும்.
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஐந்தாவது படிக்கும்போதே அவனுடன் சேர்ந்து பீடி குடித்துவிட்டு பீடா போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போய் அம்மாவிடம் அடி வாங்கி அதோடு அதனை விட்டக் கதையும் நடந்தது.
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அடுத்த வாரம் பள்ளிச் சுற்றுலாவுக்காக செஞ்சிக்கோட்டைக்குப் போன போது அருணா இன்னும் நெருக்கமாகி என் கை கோர்த்துக்கொண்டே என்னுடன் சுற்றியது....மறக்கமுடியா மலரும் நினைவுகள்.
    சினிமாவின் மீதான உங்கள் ஈர்ப்பை அச்சுப்பிசகாமல் பறைசாற்றும் காரியங்களின் பட்டியலைப் படித்துவிட்டு மெலிதாய் இழையோடுகிறது புன்னகை.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நான் படித்த ஆரம்பப்பள்ளியின் பெயர் சப்ஜெயில் ஸ்கூல்.
    பள்ளியின் பெயரைக் கேட்டாலே பகீரென்றது. காரணம் புரிந்து ரசித்தேன்.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அப்போதெல்லாம் பள்ளிக்கூட வாசலில் ஒரு கிழங்கு விற்பார்கள். இடுப்பு உயரத்தில் ஆரஞ்சுக் கலர் தோல், வெளிர் மஞ்சள் நிற உட்புறம் என்று பார்க்கவே பிரமாண்டமாய் இருக்கும். கத்தியால் சின்னச் சின்னத் துண்டுகளாய் சீவியெடுத்து 3 பைசாவுக்கு ஒன்று என விற்பார்கள். இப்போது அந்தக் கிழங்கு காணக்கிடைக்கவேயில்லை.
    பனங்கிழங்கா அண்ணா?

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    எல்லாவற்ரையும் தெரிந்து கொண்டே தூங்குவது போல பாசாங்கு செய்து வந்திருக்கிறார் என்று பிறகுதான் தெரிந்தது. எனக்காகவே அதில் சில்லறையைப் போட்டு வைத்திருப்பார் என்று அம்மா சொல்லித்தான் தெரியும். நான் அப்பாவுக்கு செல்லப்பிள்ளை என்பதால்..இந்தத் திருட்டு சந்தோஷமாய் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
    அப்பாவின் அளவிட இயலாத அன்பை வெளிப்படுத்திய வரிகள். பிள்ளை ஏமாறக் கூடாது என்னும் எண்ணத்தோடு, இங்கே இல்லையெனில், வேறு எங்காவது கை போய்விடப்போகிறது என்னும் அக்கறையும் கூட காரணமாக இருக்கலாம்.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நான் அந்த இடத்தைக் கடந்துகொண்டிருக்கும்போது.......

    இதைப்பார்த்த நான் கையிலிருந்த எண்ணைக் கிண்னத்தை ரோட்டில் போட்டுவிட்டு அலறியடித்துக்கொண்டு வீட்டுக்கு ஓடி அம்மாவைப் பிடித்துக்கொண்டு அழுதேன். இப்போதும் அந்த இடத்துக்குப் போனால் அந்த நினைவுகள் எட்டிப்பார்ப்பது நிற்கவில்லை.
    மிகவும் அதிர்ச்சியில் உறையவைத்த நிகழ்வு. சிறுவயதில் இது போன்ற சம்பவங்கள் எந்தவித மன உளைச்சலைத் தரும் என்று நினைத்தாலே விதிர்ப்பு உண்டாகிறது.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நீங்க எப்படி டாடி ஞாபகம் வெச்சிருக்கீங்க என என் மகள் கேட்பாள். இது வைத்துக்கொண்ட நினைவுகள் இல்லை...பதிந்துவிட்ட நினைவுகள்ன்னு சொல்வேன்.
    ஆழப் பதிந்த நினைவுகளும் பிரமாதம். பாராட்டுகள்.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அடுத்து நான் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை படித்த ஆடுதுறையைப் பற்றி சொல்கிறேன்.
    காத்திருக்கிறோம். விரைவில் வாங்க அண்ணா.

Page 5 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •