Page 4 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 37 to 48 of 80

Thread: என் ஊர்....!!!!!

                  
   
   
  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கிருஷ்ணகிரிக்கே அழைத்துச்சென்றது உங்கள் ஊர்நினைவுகள். பொதுவில் பார்த்தால் அநேகருடைய அக்கால இளமை நினைவுகள் ஒன்றே போல் இருப்பதை உணரமுடிகிறது. தொடருங்கள் சிவா..!!

  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    "என் ஊர்"

    இப்படிப் பெருமையாகச் சொல்லிக் கொள்வது எந்த ஊரை?

    முதலிரண்டு ஆண்டுகள் வேம்படிதாளம்
    அடுத்து 4-1/2 ஆண்டுகள் இளம்பிள்ளை
    அடுத்து ஒரு வருடம் வேப்பம்பட்டி புதூர்
    அடுத்து நாலுமாதம் காடையாம்பட்டி.

    இப்படி ஊர் ஊர் ஊராகச் சுத்தி சேலம் வந்து சேர்ந்தபொழுது 8 வயசு ஆகிவிட்டது.

    ஒவ்வொரு ஊருக்கும் பல நினைவுகள் உண்டு.

    சேலத்திலேயே 4 வீடுகள் மாறியாச்சி. அதாவது நிலைத்ததா? 9 வருடங்கள் மட்டுமே சேலம். அதன் பின் திருச்சி, கல்லூரி வாழ்க்கை, மறுபடி சேலம், பெங்களுர், மும்பை, டெல்லி, அமெரிக்கா என்று சுற்றி கடைசியாக 2002 ல் பெங்களூர் வந்தாயிற்று. இங்கும் இரண்டு வீடுகள். முதல் வீடு 5 வருடம் இரண்டாம் வீடு 5 வது வருடம்.

    சொல்லப்போனால் பெங்களூர் இன்னும் ஒரு வருடத்தில் நான் அதிகம் வசித்த ஊர் என்று பெயர் பெறப் போகிறது.

    ஒவ்வொரு ஊருக்கும் சில நினைவுகள் நிரந்தரமாகப் பதிந்திருக்கின்றன.

    ஒரு விஷயம் சிவா.ஜி. மலைமேல் இருந்து வீட்டைப் பார்க்கும் ஆர்வம் இன்னும் நமக்கு உண்டு. என்ன வித்தியாசம் என்றால் கூகுள் எர்த் மூலம் இப்போது தேடுகிறோம்..

    ஊரைப் பற்றி எழுதணுமானால் முதல் நான்கு ஊரைப்பற்றியும் எழுதணும்.

    முதல் ஊர் - வேம்படிதாளம்.

    என்ன நினைவு இருக்கு?

    1. ஊரெல்லையில் இருக்கும் சேலம் - கோவை இருப்புப்பாதையில் ரெயிலின் கூவல் சத்தம். கூரை வீட்டில் தறி ஓடும் சத்தத்தையும் மிஞ்சிக் கேட்க, நடு வீதிக்கு ஓடி வந்து இரயிலுக்குக் காட்டும் டாட்டா!!!

    2. அக்காமார்களுடனும் அவர்களின் தோழிகளுடனும் நொண்டியாட்டத்தில் ஒப்புக்குச் சப்பாணியாய் நான் மட்டும் நொண்டாமல் ஓடி ஓடி ஆடிய ஆட்டம்.

    4. சின்ன பாட்டி வந்தால் கண்ணை மூடிக்கொள்வதும், சொந்தப்பாட்டி வந்தா சிரிக்கரதுமா செஞ்ச குறும்பு.

    3. அந்த ஊரை விட்டு இளம்பிள்ளைக்கு மாட்டு வண்டியில் கிளம்பி இரவில் வந்த பொழுது கூடவே வந்த நிலா!

    இதைத் தவிர வேறு நினைவுகள் இல்லை,

    அகத்தியர் படத்திற்கு என்னைத் தூக்கிக் கொண்டு டூரிங் தியேட்டருக்குப் போனதா அக்கா சொல்லி இருக்காங்க. அக்காமார்களின் கையில் வளர்ந்ததால் வேம்படிதாளத்தில் அம்மா முக நினைவு குறைவு, அப்பா முகம் பார்த்த நினைவே இல்லை. சின்ன அண்ணன் கூடவே இருந்ததால் நினைவுண்டு. பெரிய அண்ணன் எப்பவும் தறியிலேயே வேலை செய்ததால் விளையாட வாய்ப்பு குறைச்சல்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #39
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    ஆரம்பமாகிவிட்டதா அடுத்த நினைவுகள்? மிகவும் லயித்து எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள் தாமரை அவர்களே.

    ஒன்றிரண்டு வயதில் பரிச்சயமான வேம்படிதாளத்து நினைவுகளை இன்னும் நினைவில் வைத்திருப்பது வியப்புதான்.

    சிறுவயதில் எத்தனை ஊர்கள்! எத்தனை வாழ்வியல் மாற்றங்கள்! எத்தனை அனுபவங்கள்!

    ஒவ்வொரு சமயமும் பள்ளியை மாற்றும்போது பழகிய நண்பர்களைப் பிரிவதை எண்ணி என் மகன் கலங்கும்போது என் மனம் வலிக்கும்.

    உங்கள் வாழ்க்கையில் அது போன்ற தருணங்களில் எப்படி உணர்ந்திருப்பிர்கள் என்று அறிய ஆவலாக உள்ளது.

  4. #40
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    என் ஊர் என்று நான் சொல்லி ஆரம்பிக்கணும்னா முதலில் இளம்பிள்ளையைத்தான் சொல்ல வேண்டும்.

    இளம்பிள்ளை ஒரு செங்கோண முக்கோண வடிவான ஊர். முதல் கோணத்தில் மாரியம்மன் - காளியம்மன் கோவில், சந்தை அதிலிருந்து நேராகச் சென்றால் மூன்று நிமிட நடையில் நடராஜா தியேட்டர் அருகே 90 டிகிரியில் சாலை திரும்பும். இளம்பிள்ளையில் இருந்து கிளம்பும் ஒரே பஸ் அங்கிருந்துதான் கிளம்பும். தொண்ணூறு டிகிரி திரும்பி இரண்டு நிமிடம் நடந்தால் சித்தர்கோவில் முச்சந்தி வரும். அங்கிருந்து வெளிப்புறம் செல்லும் சாலை சேலம் செல்லும். உட்புறம் செல்லும் சாலை மீண்டும் மாரியம்மன் கோவிலுக்கே சென்று சேர்ந்து விடும். மாரியம்மன் கோவிலுக்கு எதிரில் பத்து ஏக்கருக்கு ஒரு ஏரி.

    ஊருக்குள் ஒரு சுப்ரமணியர் கோவில், ஒரு பிள்ளையார் கோவில் ஒரு சௌடேஸ்வரி அம்மன் கோவில் என மூன்று கோவில்கள் உண்டு. சௌடேஸ்வரி அம்மன் கோவில் ஊர் மத்தி எனச் சொல்லலாம்.

    ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து. சேலம் நோக்கியோ வேம்படிதாளம் நோக்கியோ செல்லும் ஊருக்குள்ள ஒரே ஒரு அம்பாசிடர் கார் பசுநீலக் கலர். மற்றபடி அந்தக் காலத்தின் மிகச் சிறந்த வாகனம் சைக்கிள் மட்டுமே. அதுவும் வேலைக்குச் செல்லும் அண்ணன்கள்/அப்பாக்கள் மட்டுமே சைக்கிள் வைத்திருப்பார்கள்.

    எப்படிச் சுத்தினாலும் 10 நிமிசத்திற்குள் ஊரைச் சுத்தி முடிச்சிடலாம்.

    எங்க வீடு இருந்தது அந்தச் சித்தர்கோவில் பிரிவு அருகே. கையோட்டு வீடு. ரோட்டை விட்டு உள்ளே தள்ளி இருக்கு, வீட்டின் முன்னால் தென்னையோலையால் வேய்ந்த நிரந்தரப் பந்தலும் உண்டு. எனக்கு பொழுது போகாட்டி அந்தப் பந்தல் மேல் ஏறி அங்கிருந்து தொபீர்னு குதிப்பேன்.

    விளையாட்டுத் தோழர்கள் என்று பார்த்தால் சந்திரன், நாகராஜ் போன்று சற்றே எங்களை விட வயதில் மூத்தவர்களும், ராகவன், இட்டாயி, கலா என்று எங்கள் வயதை ஒத்தவர்களும் மற்றும் அக்காக்களின் தோழிகளும் தான்.

    கஞ்சமலையின் எல்லையில் சித்தர்கோவிலுக்கு மிக அருகில் அமைந்த ஊர். சித்தர்கோவில் மூன்று கிலோமீட்டர் தொலைவுதான். பழனி புகழ் போகரின் குரு காலாங்கிநாதர் தான் அங்கிருந்தச் சித்தர். போகர் காலாங்க நாதருடன் இங்கேதான் இருந்து மருத்துவம் பயின்றதாகச் சொல்வார்கள்.

    இரும்புத்தாது நிறைந்த இடம் என்பதால் இங்கே ஒரு காந்தக் கேணி உண்டு. அந்தக் காந்தத் தீர்த்தத்தில் உப்பு மிளகு இட்டுக் குளித்தால் தோல்சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை களையுமாம்.

    இங்கே ஓடை ஒன்றும் உண்டு. வருடத்திற்கு ஒன்பது மாதத்திற்கு மேல் இந்த ஓடையில் தண்ணீர் வரும். ஓடக்கரை ஓரம் சின்ன சின்னதாகக் கேணிகளும் உண்டு. ஐந்தடி ஆழத்திலேயே வற்றாமல் ஊரும் கிணறுகள் இவை. எத்தனைத் தண்ணீர் பஞ்சம் என்றாலும் இவை வற்றியதே இல்லை.

    அங்கே ஒரு தெப்பக் குளமும் இருந்தது, அந்தக் காலத்தில் நீர் நிறைந்து இருக்கும். இப்போது வறண்டு போய்க் கிடக்கிறது.

    மலைக்குக் கீழ் சித்தர் மற்றும் சிவன் கோவில். சிறிய மலையின் மேல் முருகன் கோவில். படியேறிச் சென்றால் நிறைய முன்னோர்கள் இருப்பார்கள், அந்தக் காலத்தில் சாந்தமாக இருந்த இவர்கள் காலம் மாற மாற இப்பொழுது பெரிய ரௌடிகளாக மாறிவிட்டார்கள்.

    ஒரு முறை இந்த முருகன் கோவிலில் இருந்து இறங்கும் பொழுது விழுந்து ஒரு பத்துபடிகள் உருண்டு பின்னர் எழுந்து இருக்கிறேன்.

    சித்தர் கோவில், நடராஜா தியேட்டர் இரண்டை விட்டால் வேறு பொழுது போக்கு கிடையாது. சந்தைக்குக் கூட அம்மா அழைத்துச் சென்றால்தான் உண்டு. ஒரே ஒரு சந்தோஷம் பங்குனி மாசத் தேர்த்திருவிழா.

    ஊரே ஜேஜேன்னு இருக்கும் அப்போ. மிகப் பெரிய தேர். இந்த முக்கோணப் பாதையில் மட்டுமே வரும். ஊருக்குள் தெருத்தெருவா போகாது. திருவிழான்னா அந்தக் காலத்தில அரிச்சந்திரா, பவளக்கொடி, சித்திரவல்லி (ஒட்ட நாடகம்) இப்படி ஒரு நாடகம் இருக்கும். கரகாட்டமும் நையாண்டி மேளமும் களைகட்டும். இராட்டினங்கள் சந்தைப் பேட்டையில் போடப்பட்டு 1 பைசா 2 பைசாவிற்கு சிறந்த பொழுதுபோக்காக அமையும். ஒரு விஷயத்திற்கு மட்டும் எங்களுக்குப் போக அனுமதியில்லை. அது ரெகார்ட் டேன்ஸ்.

    எங்களுடைய வாரநாட்கள் ரொம்பவே எளிமை. காலை பல் விளக்கின பின்னால் ஒரு பைசாவிற்கு மரவள்ளிக் கிழங்கு. அப்புறம் குளியல். கோதுமை களியை மோரில் கரைத்து வெங்காயம் கடித்துக் கொண்டே குடித்துவிட்டால் பள்ளிக்குத் தயார். எந்த கல்யாணத்திலோ கொடுத்த தாம்பூலப் பைதான் எங்களின் பள்ளிப்பை. அதற்குள் சிலேட்டும் இரண்டு புத்தகமும்தான். மூணாவது போகும்போதுதான் 5 புத்தகம். நோட்டுப் புத்தகம்.

    பள்ளியிலேயே காமராஜர் தயவில் மதிய உணவு. கோதுமை நொய்யில் செய்த ரவை, மக்காச்சோள ரவை இப்படி எதாவது மிக எளிமையானதாக இருக்கும். மாலை 4 மணிக்கு பள்ளி விட்டால் வீட்டிற்கு முன்பு விளையாடுவது அல்லது அப்பா வாங்கிவந்த முத்துகாமிக்ஸ், அம்புலிமாமா, பொம்மைவீடு போன்ற புத்தகங்கள் படிப்பது என்று நாள் ஓடிவிடும் மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து 25 வாட்ஸ் பல்பிற்கு மாறினாலும் இரவு 8:00 மணிக்கு வரும் இளையபாரதம் நிகழ்ச்சியை அந்தக் கால வால்வு ரேடியோவில் கேட்ட உடன் தூங்கப் போய்விடுவோம்.

    ரேடியோ எங்களுக்கு அப்போது முக்கியத் தோழன். திரைப்படப் பாடல்கள், நாடகங்கள், ஒலிச்சித்திரங்கள், பட்டிமன்றங்கள், செய்திகள் என எல்லாவற்றையும் கேட்போம். ஆனால் மற்றபடி கர்நாடக இசை, இசைமேதைகளின் பாட்டுகள் இவை எல்லாம் நாங்கள் அறியாதவை. சிலோன் ஸ்டேஷன் கூட அப்பொழுது கேட்கமுடியும். திருச்சி, சென்னை, கோவை, சிலோன் என நான்கு ஸ்டேஷன்கள் மிக பிரசித்தம்.

    ஊருக்குள் சுத்தற மாதிரி ஒரு இடம்னா அது எதுவும் இல்லை. எங்க போனாலும் ஒண்ணுமில்லை. நடராஜா தியேட்டர் பக்கத்தில் உள்ள கடைகளில் பெரிய பணியாரம், பரோட்டா, பூரி மற்றும் பலகாரங்கள் கிடைக்கும். எப்பவாவது அம்மா காசு கொடுத்து வீட்டிற்கு வாங்கிவரச் சொன்னால் உண்டு. கடையில் ஒக்காந்து சாப்பிடறதெல்லாம் கெட்டபசங்க வேலை.

    நடராஜா தியேட்டரில்தான் சினிமா ரசனை ஆரம்பித்தது. ராஜாவின் ரோஜா, சிவகாமியின் செல்வன், டாக்டர் சிவா, நல்ல நேரம் எங்க வீட்டுப் பிள்ளை, ஆதி பராசக்தி, வெள்ளிக்கிழமை விரதம்,நாளை நமதே, உலகம் சுற்றும் வாலிபன், அன்னமிட்ட கை, சவாலே சமாளி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் இப்படி எத்தனையோ படங்கள். எல்லாம் அம்மா, அக்கா, நான் என் சின்ன அண்ணன் நாலு பேரும் போனது. அப்பா சினிமா பார்க்க மாட்டார். மூத்த அண்ணன் தன்னோட ஃபிரண்ட்ஸோடதான் போவார்.

    எங்க அக்காக்கள் அங்கே இருந்த கூட்டுறவுச் சங்கத்தில் நூல் நூற்கப் போவாங்க, அதில கொஞ்சம் சைட்ல காசு வாங்கிக் காலைக் காட்சிக்கு இந்திப்படம் போவாங்களாம். எனக்கு இது தெரிஞ்சது அவங்க யாதோங்கீ பாரத் படம் பார்த்துட்டு வந்த பின்னாலதான். அதுவும் நாளை நமதே படம் பார்த்தப்ப இது அந்தப்படமில்ல ன அவர்கள் குசுகுருத்தபோது.

    எங்க வீட்டிற்கு எதிர்ல ஒரு வயல். பெரிய கருங்கல் காம்பவுண்ட் போட்டிருக்கும். அது சித்தர்கோவில் முச்சந்தியில் முடியும் இடத்தில் ஒரு கேணி இருக்கும். அங்கிருந்து உப்புதண்ணீர் கொண்டு வந்து சிமெண்ட் தொட்டிகளில் நிரப்பி வப்பாங்க.
    சிமெண்ட் தொட்டி அப்ப எனக்கு நெஞ்சு வரைக்கும் இருக்கும்.

    ஒருதடவை எதுக்கு சொம்பில நீர் மொள்ளப் போனப்ப தண்ணி எட்டலை. எக்கி மொண்டபோது தொபுக்குன்னு தலைக் குப்புற தொட்டியில் விழுந்திட்டேன். நெஞ்சுவரைக்கும் தண்ணி காலை தூக்கி உதைக்கிறேன். கத்துனா முட்டைதான் வருது. மூக்கு கண்ணெல்லாம் எரிஞ்சது.

    அப்ப ஓடி வந்த அக்கா காப்பாத்தினாங்களோ.. உங்க கிட்ட பேசிகிட்டு இருக்கேன்.

    என்னடா ஊரைப் பத்தி இவ்வளவுதானான்னு யோசிக்காதீங்க. நான் ரம்ப நல்ல பையன். ஊர்சுத்தவே போகமாட்டேன். தனியா வெளிய போனதே கிடையாது, ஃபிரண்ட்ஸோட சுத்தனதும் கிடையாது,

    அப்படி வெளிய போனா என்ன நடக்கும் தெரியுமா?

    உடனே ஒரு தறி பட்டறையில் தார் பிடிக்க சேர்த்து விட்டுருவாங்க. ஊருக்குள்ள நிறைய தறிப்பட்டறைகள் இருப்பதால் வேலை ஈசியா கிடைக்கும்.

    ஊர்ல விவசாயம் கிடையாது.ஊரைச் சுத்திதான் விவசாயம். சோளம், வேர்க்கடலை, மரவள்ளிக்கிழங்கு இப்படி புஞ்சையும் நெல் வாழை கரும்பு போல நஞ்சையும் உண்டு.

    ஊரைச்சுத்தி பனைமரம் என்பதால் அங்கே போனா கள்ளு கிடைக்கும். ஊருக்குள் தெளுவு எனப்படும் பதநீர் கொண்டுவந்து விப்பாங்க. காலை 11 மணி சுமாருக்கு வருகிற பதநீர் குளுகுளுன்னு இருக்கும்.

    கீரை, மோர் என எல்லாமே வீட்டுக்கே கொண்டுவந்து காட்டுக்காரங்க தந்திட்டுப் போவாங்க.

    முக்கியமான விசயம் கறிக்கடை,

    ஊர்ல நிரந்தரக் கறிக்கடை அப்ப இல்ல. கோழி என்றால் சந்தையில் குஞ்சு வாங்கி வந்து வீட்டில் வளர்ப்போம். அப்புறம் முட்டை வச்சா வீட்டிலயே குஞ்சுபொறிக்க வச்சு அந்தக் குடும்பத்தையும் காப்பாத்தி சமயம் வரும்போது நாங்களே அறுத்து கடவுள் மாதிரி ஆக்கல், காத்தல், அழித்தல் என முத்தொழிலும் செய்வோம். ஆட்டுக்கறி சந்தைப் பேட்டையில் வியாழக்கிழமை, ஞாயித்துக்கிழமை மாத்திரம் கிடைக்கும். கல்திட்டில் தென்னை ஓலையை விரித்து அதன் மேல் வாழை இஅலி விரித்து அதன் மேல் கறியை வெட்டிப் போடுவார்கள். கட்டித்தர ஒரு இலை பயன்படுத்துவார்கள் பேர் தெரியலை. ஆட்டை அறுத்து அவர்கள் உரித்து வெட்டிய சதைகளில் துள்ளல் இன்னும் இருக்கும். அந்த அளவுக்கு ஃபிரெஷ்ஷாதான் அப்ப கறியெடுப்பார். சிறுகுடல், பெருங்குடல், தலை, கால், ஈரல், சுத்துக் கொழுப்பு, இரத்தம், நுரையீரல் என ஆட்டின் தோலும் கொம்பும் தவிர எல்லாமும் உண்ணப்படும்.

    அப்ப கள்ளச் சாராயமும் ஊர்ல கிடைக்கும். மலையடிவாரத்தில காய்ச்சுவாங்க. அப்பா அப்பப்ப வாங்கி வந்து சாப்பிடுவார், வெளியில் குடிச்சிட்டு வீட்டுக்கு வருகிற மாதிரி இல்லை. யார் வீட்டிலாவதுதான் குடிப்பார்கள். நல்ல காரமா மாமிசம் சமைச்சு வச்சிகிட்டு அப்ப கொஞ்சிக் கொஞ்சி மாமிசம் கொடுப்பார் அப்பா.

    அதிக பட்சம் விளையாடியது கில்லி தாணடல் மற்றும் ஓடிப்பிடிக்கும் விளையாட்டு, நொண்டி விளையாட்டுதான். அதிசயமாக ஒரே ஒருமுறை அப்பா பெங்களூரில் இருந்து டென்னிகாய்ட் (அதாங்க வளையம்) வங்கி வந்தார். அதுவும் எங்களுக்கு விளையாட்டு ஆயிடுச்சி. கோலி விளையாட்டு என்பது பெரியவங்க ஆடற 9 குழி விளையாட்டு கிடையாது. ஒரே குழியில் விளையாடும் சின்ன பசங்க விளையாட்டுதான்.

    அப்ப வேட்டையாடிய அனுபவமே கிடையாதா என்றால்..

    ஒரே ஒரு முறை உண்டு, அது ஓணான் என்று நீங்க நினைச்சா தப்பு. அது பொன்வண்டு.

    ஊரோரமா வயல்களைத் தாண்டி வளர்ந்திருந்த புல்லுல பொன்வண்டு இருக்கும்னு பசங்க கூட்டிகிட்டுப் போனாங்க.. ஒரே ஒரு பொன்வண்டைப் புடிச்சி தீப்பெட்டியில் போட்டுகிட்டு திரும்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி மூணு நாளில் அந்தப் பொட்டியே அந்த வண்டுக்குச் சவப்பெட்டி ஆயிருச்சி,

    கார்த்திகை தீபம் மிக அருமையாகக் கொண்டாடுவோம். தீபாவளியை விட எங்களுக்குத் தீபம்தான் பிடிக்கும். அப்பவும் பட்டாசு வெடிப்போம். பொங்கல் கூட மூன்றாம் பட்சம்தான். ஏன்னா எங்க ஊர்ல ஜல்லிக்கட்டு கிடையாது. இதுவரை ஜல்லிக்கட்டை நேர்ல பார்த்தது கிடையாது. பொங்கலுக்கு காட்டுக்காரங்க விஷேசமா கொண்டாடுவாங்க. ஆனால் எங்க ஊர்மக்கள் முக்காவாசி சேலத்துக்குப் போயிருவாங்க.. தீபாவளிக்கும் அப்படித்தான்.

    பள்ளியைப் பத்திச் சொல்லணும்னா, அது ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி. அஞ்சாவது வரைதான்.

    அதில ஒரு பெரிய ஹால். . சொன்னா கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.

    அதாவது நடுவில் பாதை. இந்தப் பக்கம் ஒரு பதினைந்து அடிக்கு தாழ்வாரம் மாதிரி இழுத்திருப்பாங்க. அந்தப் பக்கம் ஒரு பதினைந்து அடிக்குத் தாழ்வாரம் மாதிரி இழுத்திருப்பாங்க. அதை மரத்தடுப்புகள் வச்சு வகுப்புகள் பிரிச்சிருப்பாங்க மொத்தம் பத்து வகுப்புகள் இதில. எல்லாம் ஒண்ணாவது இரண்டாவது. ஒண்ணாவது எஃப், இரண்டாவது எஃப் எனது வகுப்பிடங்கள். (அறைன்னு சொல்ல முடியாது) மூணாவது நாலாவது அஞ்சாவதுக்கு மட்டும் தனி வகுப்புகள்..மூணாவது சி யில் காலாண்டு முடியற வரைக்கும்தான் வாழ்க்கை.

    இந்த ஊரை விட்டுப் போகும்போது கீதம் சொல்லற மாதிரி ஒரு சின்ன ஃபீலிங் இருந்திருக்கலாம், ஆனால் அந்த அளவுக்கு பெரிய ஃபீலிங் இல்லை. நான் 7 வது படிக்கும் போது அண்ணனுக்கு பொண்ணு இந்த ஊரில் எடுத்ததாலதான் இந்த ஊருக்குத் திரும்பிப்போனேன் என்பதைப் பார்த்தால், அதுவும் நண்பர்கள் யாரையும் இதுவரைச் சந்திக்கவில்லை என்பதையும் பார்த்தால்..

    இளமையில் இப்படி அடிக்கடி நகர்வு இருந்தால் செண்டிமெண்டல் அட்டாச்மெண்ட் என்பது வரவே வராது என்பது தெரியும்.

    நான் அழுதது மும்பையை விட்டு டெல்லி போனப்ப மட்டுமே.. கல்லூரி முடிந்து போனப்ப கூட நான் அழுதது பிரிவினால் என்பதை விட பயத்தினால் என்று சொல்லலாம்..

    சரி அப்புறம் பார்ப்போம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #41
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.....
    புறநகர் பெருக்கத்தால் வீக்கம் அதிகமாகி கமலா காமேஷ் இப்போது இருப்பதைப் போல ஆகிவிட்டது என்ற நகைச்சுவையுடன் கிருஷ்ண கிரியைப் பற்றி அருமையான ஒரு துவக்கம்.

    சிறுவயதில் செய்த குறும்புகள், மலையேறி இறங்கிய சாகசப்பயணம், மாங்காய் திருடி மாட்டிக்கொண்ட குற்றச்சரித்திரம், ருசித்த சாமைச்சோறு, கம்பங்கூழ் என இளம்வயது நிகழ்வுகள் அனைத்துமே மிகவும் ரசிக்க வைக்கின்றன.

    கரடி பெண்களைக்கண்டுவிட்டால் வேகமாக ஓடி வரும் என்ற செய்தி சிரிக்க வைத்ததுடன் வியக்கவும் வைத்தது. அருமையான நடையில் சுவையான ஒரு பதிவு.
    பாராட்டுக்கள் சிவாஜி சார். தொடருங்கள்!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  6. #42
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    என் ஊர் என்று நான் சொல்லி ஆரம்பிக்கணும்னா முதலில் இளம்பிள்ளையைத்தான் சொல்ல வேண்டும்.

    நான் அழுதது மும்பையை விட்டு டெல்லி போனப்ப மட்டுமே.. கல்லூரி முடிந்து போனப்ப கூட நான் அழுதது பிரிவினால் என்பதை விட பயத்தினால் என்று சொல்லலாம்..

    சரி அப்புறம் பார்ப்போம்.
    அடேயப்பா! எட்டு வருடத்தில் எத்தனை ஊர் சுற்றியிருக்கிறீர்கள்? அடிக்கடி நகர்வு இருந்ததால் செண்டிமெண்ட் அட்டாச்மெண்ட் இல்லாமல் போவது இயற்கைதான்.
    இளம்பிள்ளை என்ற ஊரின் பெயரே வித்தியாசமாக உள்ளது. நீங்கள் சொல்லியிருப்பது போல் அக்காலத்தில் கார் வைத்திருப்பவரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வீட்டுக்கு வீடு சைக்கிள் தான் இருக்கும்.

    அதே போல் அப்போது ரேடியோவுக்கு இருந்த மவுசு இப்போது போயே போச்!
    நீங்கள் சுற்றிய மற்ற ஊர்களின் விபரங்களைக் கேட்க ஆவலாயிருக்கிறேன். தொடருங்கள்.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    தாமரையின் இளமை நினைவுகளும் ஊர் நினைவுகளும் கிட்டத்தட்ட எனக்கும் நேர்ந்துள்ளமை அதிசயம். அதே தறிவேலை. நாடா கோத்துவாங்கும் சிற்றாள் பணி. எல்லாமே என் இளமையை நினைவுக்குக் கொண்டுவந்தது.

    என் ஊரைப்பற்றி எழுத இன்னும் ஆர்வம் மிகுந்துவிட்டது கலையரசி சிவா மற்றும் தாமரையின் அனுபவங்களை வாசித்ததும்.

    எப்படியோ தம் கட்டி விரைவில் எழுதவே போகிறேன்.

  8. #44
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    சிவா.ஜி, தாமரை கலையரசி அனைவரின் நினைவலைகள் அபாரமாய் இருக்கிறது. ஏதோ கவிதை என்று சில வரிகள் கிறுக்குகிறேனே தவிர கதைபோல் எழுதவேல்லாம் நான் முயற்சி செய்ததில்லை. உங்களின் அனுபவங்களைப் படிக்கும்போது எனக்கும் எழுதவேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    என்னால் இவ்வளவு கோர்வையாக எழுத முடியாது. ஆகவே மற்றவர்கள் எழுதுவதைப் படித்து ரசிக்கின்றேன்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #46
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    பொன்மலை என்பது என் ஊராம்...

    என் ஊர் என்று சொல்லும்போதே அதில் தொணிக்கும் பெருமிதத்தை எவராலும் உணரமுடியும். அறியா வயதில் அதுதானே நம் உலகம். அதிலும் பெண்களுக்குப் பிறந்தவீட்டுப் பெருமை பேசவும் கூடுதலாய் ஒரு வாய்ப்பினை வழங்கும் ஊரல்லவா? வாருங்கள். திருச்சி மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

    என்னைப் பெற்றெடுத்த மண் மன்னை என்றாலும் வளர்த்தெடுத்த மண் திருச்சிராப்பள்ளி என்னும் திருச்சிக்கு உரியது.

    காவிரிக்கரையில் அமைந்த இவ்வூரின் சிறப்புக்கானக் காரணங்கள் என்று பலவற்றையும் சொல்லலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எவ்வித தொழில்நுட்ப வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் அதிசயிக்கத் தக்கவிதத்தில் காவிரியின் குறுக்கே அற்புதமாய்க் கட்டப்பெற்று இன்றும் நிலைத்திருக்கும் உறுதி கொண்ட கல்லணை ஒரு பெரும் சிறப்பு. மேலணை எனப்படும் முக்கொம்பு அணைக்கட்டு இன்னுமொரு கூடுதல் சிறப்பு.

    நடிகர் திலகம், நடிகவேள், திருச்சி லோகநாதன், லால்குடி ஜெயராமன் , கவிஞர் வாலி, ஷேக் சின்ன மௌலானா போன்ற மற்றும் இன்னும்பிற கலையுலக மற்றும் திரையுலக மாமேதைகளையும், கி.ஆ.பெ. விசுவநாதம், சிறுகதை மன்னன் சுஜாதா போன்ற எழுத்துலக ஜாம்பவான்களைத் தந்திருப்பது திருச்சி மாநகரம். பாரத மிகுமின் நிறுவனம், துப்பாக்கித் தொழிற்சாலை, பொன்மலை ரயில்வே நிலையம் போன்ற பிரதான தொழில் நிறுவனங்களால் மேலும் சீர் பெற்றது திருச்சி மாநகரம்.

    ஆன்மீகத்திலும் திருச்சியின் அடையாளங்கள் தனித்தவை. திருச்சியின் மாபெரும் அடையாளமென உறைந்திருக்கும் உச்சிப்பிள்ளையார் கோயில், அருள்மிகு தாயுமானவர் கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயம், வயலூர் முருகப்பெருமான் ஆலயம், மும்மூர்த்திகள் உறைந்திருக்கும் உத்தமர்கோயில், திருவெறும்பூர் எறும்பேசுவரர் மலைக்கோயில், சமயபுரம் மகாமாரியம்மன் ஆலயம், உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் என்னும் இந்துக்களின் வழிபாட்டுத்தளங்கள் அல்லாது, ஆங்கிலேயர் காலத்தில் முதன்முதலாய் கட்டப்பட்டப் பழமைவாய்ந்த கிறித்துவ தேவாலயமும், பொன்மலையின் புனித அந்தோணியார் தேவாலயமும் தவிர சிற்றூர்களுக்கொன்றெனத் திகழும் தேவாலயங்கள் யாவும் பிரசித்தமானவை. இஸ்லாமியர்களின் தொழுகைக்கென பாங்கு ஒலிக்கும் மசூதிகளுக்கும் குறைவில்லை. மதப்பாகுபாடற்ற நட்புணர்வோடும் நல்லிணக்கத்தோடும் திகழும் திருச்சி மக்களிடம் மனிதாபிமானத்துக்கும் மரியாதைக்கும் குறைவில்லை.

    திருமணமாகி சென்னை வந்தபுதிதில் என் அம்மா அப்பாவுடன் ஒரு கடைக்கு வீட்டுசாமான் வாங்கச் சென்றிருந்தேன். கடை ஊழியர்களிடம், ‘தம்பி, இங்க வாங்க, அதை எடுங்க, இதைக் காட்டுங்க’ என்று நாங்கள் பேசியதைக் கேட்டுவிட்டு, அந்தக் கடையின் முதலாளி எங்களிடம் வந்து ‘நீங்கள் திருச்சிக்காரர்களா?’ என்றார். எங்களுக்குப் பெரும்வியப்பு. ‘எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?’ என்றதும், ‘உங்கள் தமிழிலும், ஊழியர்களிடம் காட்டும் மரியாதையிலும் தெரிகிறது’ என்றார். ஏன் அப்படிச் சொன்னார் என்பது சென்னையில் தொடர்ந்து குடியிருக்கும்போதுதான் புரிந்தது.

    அத்தகு சீர்மிகு திருச்சி மாநகரத்தின் ஒரு பகுதியாய் அமைந்த என் ஊரான பொன்மலை பற்றிச் சொல்ல விழைகிறேன். முன்னுரையே இவ்வளவு பெரியதா என்று மலைத்துவிடாதீர்கள். என்ன செய்வது? பிறந்த ஊர்ப்பாசம் அத்தனை எளிதில் விட்டுவிடுமா?

    பொன்மலை என்றதுமே நினைவுக்கு வருவது பொன்மலை ரயில்வே பணிமனையும் அதனைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் நேர்த்தியான பணியாளர் குடியிருப்புகளும்தான். இந்தியாவில் மிகப்பெரிய இரயில் கட்டுமாணப் பணிமனையான இது, 1897 இல் நாகப்பட்டிணத்தில் துவங்கப்பட்டது. சாதகமான இடம் மற்றும் சூழல்தேர்வு காரணமாய் அது திருச்சிக்கு மாற்றப்பட முடிவெடுக்கப்பட்டு, 1926 இல் பொன்மலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. 1928 முதல் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஓய்வின்றி இங்கு இயங்கிவருகிறது.

    சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் பொன்மலை ரயில்வே பணிமனை, கிட்டத்தட்ட ஆறாயிரம் ஊழியர்களின் வாழ்க்கையை தன்னுள் அடக்கியது. டீசல் என்ஜின்களைப் பழுதுபார்ப்பதும், நீலகிரி மலைரயில்களை நிர்வகிப்பதும் முக்கியமான வேலை என்றாலும் தென்னக ரயில்வே மற்றுமல்லாது பிற பகுதி ரயில்வேக்களின் பழுது பார்ப்பகமாகவும் இது திகழ்கிறது. என் அப்பா, சித்தப்பா, அப்பாவழித் தாத்தா, அம்மாவழித்தாத்தா, தாய்மாமாக்கள், இவர்கள் அல்லாது பெரும்பாலான உறவினர்கள் இந்தப் பணிமனையில் பணிபுரிந்ததால் என்னவோ இரயில்வே நிர்வாகமே சொந்தம்போல் ஒரு உணர்வு.

    புகைவண்டிப் பயணம் இலவசம் என்பதால் அப்போதெல்லாம் எங்கு செல்வதாக இருந்தாலும் ரயில்தான். பேருந்து என்றப் பேச்சுக்கே இடம் கிடையாது. எத்தனை மணிநேரத் தாமதமானாலும் ரயில்நிலையத்திலேயே காத்திருந்து ரயிலில் அழைத்துச் செல்வதுதான் அப்பாவுக்கு மட்டுமல்ல, அனைத்து ரயில்வே ஊழியரின் இரத்தத்திலும் ஊறியப் பழக்கம்.

    ஆங்கில வழி மற்றும் தமிழ்வழிக் கல்வி பயிற்றுவிக்கும் வகையில் இரு ரயில்வே பள்ளிக்கூடங்கள், ரயில்வே ஊழியர்களுக்கான கல்யாண மண்டபம் மற்றும் சகலவசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனை என ஊழியர்களின் அனைத்துத் தேவைகளையும் தனக்குள் கொண்ட பொன்மலை, பொன்மலைவாசிகளைப் பொறுத்தவரை ஒரு சிற்றுலகம்தான்.

    அந்தத் திருமண மண்டபத்தில்தான் எனக்குத் திருமணம் நடைபெற்றது என்பதும், ரயில்வே மருத்துவமனையில்தான் என் இரு குழந்தைகளும் பிறந்தனர் என்பதும் எனக்கு பொன்மலை மீதான அளவிடற்கரியப் பற்றுக்கு மற்றுமொரு காரணம்.

    ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள், ஊழியர்களின் தகுதிக்கும் வருமானத்துக்கும் ஏற்றபடி A, B, C, D, E, F, G, H என்று வகைப்படுத்தப்பட்டு, படிப்படியாக வசதிப் பெருக்கம் பெறக்கூடிய அளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. அனைத்தும் இரட்டை அடுக்குச் சீமை ஓடுகள் வேயப்பட்டவையே. அவற்றில் C மற்றும் D வகைக் குடியிருப்புகளில் வசித்த அனுபவம் எனக்கு உண்டு. குடிநீர், கழிப்பறை, குளியலறை, சாக்கடைவசதி, தார்ச்சாலை என சகல வசதிகளுடனும் ஒரு மாதிரிக்குடியிருப்பென கட்டப்பட்டிருந்தவை அவை.

    நாற்சதுர வடிவமைப்பில் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளில் மத்தியில் உள்ள மைதானங்களில் மாலை வேளைகளில் குழந்தைகளும் பெரியவர்களும் குழுமிப் பேசி, பரஸ்பரம் நட்புறவுடன் கெழுமிய நாட்களை நினைவுகூர்கிறேன். இன்று அப்படிப் பேசுவாரும் இல்லை, தெருவிலும் மைதானத்திலும் ஓடியாடும் குழந்தைகளைக் காணமுடிவதும் இல்லை.

    விதவிதமான விளையாட்டுகள் விளையாடிக் களித்ததும், வாடகை சைக்கிள் ஓட்டி மகிழ்ந்ததும், விளையாட்டுத்திடலில் கூச்சலும் கும்மாளமுமாய், இருட்டியதும் தெரியாமல் விளையாடி, அம்மா தேடிவரும்போது அலுப்புடன் வீடு திரும்புவதும், கோடை விடுமுறையில் வீட்டுக்கு வீடு வற்றலும் வடகமும் போட்டு கையில் கம்புடன் காவலுக்கு எங்களை இருத்திவைத்து விளையாடப் போகவிடாமல் செய்துவிடும் அம்மாக்களின் செயல்களை எண்ணி நோவதுமாய் எத்தனை அனுபவங்கள்!

    திருட்டு சீசன் என்றொரு காலம் உண்டு. மே மாதம், முதல் வாரம் ஊழியர்களுக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறைக்காலம். பிள்ளைகளுக்கும் அப்போது விடுமுறை என்பதால் பெரும்பாலான வீடுகளில் வெளியூர் சென்றுவிடுவார்கள். இதற்கெனவேக் காத்திருக்கும் திருடர்கள், அப்போது பல வீடுகளிலும் ஓட்டைப் பிரித்து வீட்டுக்குள் இறங்கி தன் கைவரிசையைக் காட்டிவிடுவர். திருட்டுக்குப் பயந்து எங்கும் போகாமலும் இருக்க முடியாது. இன்னும் சில இடங்களில் வீட்டுக்குள் ஆளிருக்கும்போதே சாமர்த்தியமாக சன்னல் மற்றும் கதவிடுக்குகளின் வழி திருடிச் செல்வோரும் உண்டு. பெரும்பாலும் பித்தளைப் பாத்திரங்கள், அண்டா, குண்டான்கள் போன்றவையே திருட்டுப் போகும். திருடன் என்ற ஒற்றைச் சொல்லுக்குத் தெருவே கூடிவிடும் அபாயம் இருந்தும் துணிந்து திருடவருபவர்கள் மாட்டிக்கொண்டால் அதோகதிதான்.

    மக்களின் எண்ணங்களை, சிந்தனைகளை மழுங்கடிக்கும் தொலைக்காட்சி, கணினி, அலைபேசி போன்றவை வாழ்க்கையை ஆக்கிரமிக்காத காலம் அது. சொல்லப்போனால் நான் பத்தாவது முடிக்குந்தருவாயில்தான் தொலைக்காட்சி அறிமுகம் ஆகத்தொடங்கியது. தெருவுக்கு ஒரு வீட்டில் (அதாவது இருபது, இருபத்தைந்து வீடுகளுக்கு ஒன்று என்று) தொலைக்காட்சி இருந்த காலம். கொடைக்கானல் ஒளிபரப்பு நிலையத்தின் உதவியால் வாரமொரு தமிழ்த் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

    எங்கள் எதிர்வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியிருந்தார்கள். அந்த வீட்டினர், திங்களன்று முதலே தெருவிலிருக்கும் எல்லோருக்கும் அந்த வாரக் கடைசியில் தொலைக்காட்சியில் படம் பார்க்கத் தங்கள் வீட்டுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுக்க ஆரம்பித்துவிடுவர். குறுகிய திண்ணையை அகலப்படுத்தி மேற்கூரை அமைத்திருந்தனர். அதனால் அங்கு ஓரளவு இடம் இருந்தது. பெரும்பாலும் சிறுவர்களும் வயதானவர்களும் தவறாமல் வந்துவிடுவார்கள். இதில் வேடிக்கை என்னவெனில், திரைப்படத்துக்கு இடையில் பட்டாணி, வேர்க்கடலை, முறுக்கு போன்ற நொறுக்குத் தீனிகளையும் சப்ளை செய்வார்கள் அந்த வீட்டு அம்மாவும் ஐயாவும். அந்த அளவுக்கு திறந்த மனமும், தாம் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெற வேண்டுமென்ற நல்லெண்ணமும் நிறைந்திருந்தது அவர்களிடம்.

    வீடுகளின் நெருக்கம் மனங்களையும் நெருக்கியிருந்தது. ஒளிவு மறைவு இல்லாத காலம். கஷ்டம் என்றால் கேட்காமலேயே உதவி கிடைக்கும். ஒரு வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் உறவினருக்கு முன்னால் அக்கம்பக்கத்தினர் முன்வந்து உரிமையுடன் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வர். பண்டிகைகள் யாவருக்கும் பொது. பரவசங்கள் பொது. துக்கமும் பொது, துயரங்களும் பொது.

    இந்து, முஸ்லிம், கிறித்துவர் என்று அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும், தமிழர், மலையாளிகள், தெலுங்கர், கன்னடர், ஆங்கிலோ இந்தியர் என்று பலதரப்பட்ட மொழி பேசுவோரும், பல்வேறு சாதியினரும் ஒற்றுமையாய் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் ஒருவருக்கொருவர் அன்புடனும் நட்புறவுடனும் பழகிய சூழலில் என் குழந்தைப்பருவமும் இளமைக்காலமும் கழிந்தது என்பதை நினைக்கையிலேயே பெருமிதம் நிறைகிறது.

    அடிவாரத்தில் பொன்னேஸ்வரி அம்மனும் உச்சியில் முருகனும் குடிவைத்திருக்கும் மலைக்கோவில் பொன்மலையின் மற்றுமொரு சிறப்பு. திரும்பிய இடங்களில் எல்லாம் தேவாலயங்களும், பள்ளிவாசல்களும், கோவில்களும் என்று இங்கும் எல்லா மதத்தினருக்கும் வழிபாட்டுத் தளங்கள் இருந்தாலும் எல்லோரும் எல்லா இடங்களுக்கும் சென்றுவரும் வகையில் ஒற்றுமையின் இருப்பிடமாய்த் திகழ்வது குடியிருப்புவாசிகளின் மனம்.

    அதிகாலை வேளையில் துயில் களையும் நேரம் மசூதியின் பாங்கொலி ஒருபுறமும், தேவாலயத்தில் பாதிரியார் பாடலோடு இசைக்கும் பிரார்த்தனை ஒருபுறமும், விநாயகர் கோவிலில் சீர்காழி கோவிந்தராஜனின் கணீர்க்குரல் ஒருபுறமும் ஒலித்து, பறவை மற்றும் கறவைகளின் ஒலியோடு இணைந்து அன்றைய நாளை இனிமையாய்த் துவக்கும்.

    மாதாகோவிலில் உப்பும் மிளகும் நேர்ந்துகொட்டுவதிலாகட்டும், பயந்த குழந்தைகளுக்கு ஓதி பயந்தெளிவிக்க பள்ளிவாசல்களுக்குப் படையெடுப்பதிலாகட்டும், கோவில் திருவிழாக்களுக்குக் நன்கொடைகள் வழங்குவதிலாகட்டும் மதங்கள் பற்றிய குறுக்கீடு இல்லாமல் மனங்கள் மட்டுமே ஒன்றி வாழ்ந்த அதிசயம் அது.

    திருச்சியில்தான் தந்தை பெரியார் துவங்கிய சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதனால் எங்கள் குடியிருப்புகள் சார்ந்த விளையாட்டுத் திடல்களில் திராவிடக் கழகத்தின் கூட்டங்களும் சொற்பொழிவுகளும் அடிக்கடி நடந்தேறும் விரும்பியோ விரும்பாமலோ பல பகுத்தறிவுக் கருத்துகள் ஒலிப்பெருக்கியின் உதவியால் செவி வந்து சேரும். மோதும் கருத்துக்களின் தாக்கத்தின் தீவிரத்தால் வாய்கள் வசைபாடினாலும் மனங்கள் அசைபோடத் தவறுவதில்லை. பின்னாளில் ஒரு பகுத்தறிவுக் குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டபோது, வாழ்க்கை முறையில் உண்டான மாற்றங்களை, இழப்பாய் இல்லாது, இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துக்கான விதையை அக்கூட்டங்களும் சொற்பொழிவுகளும் அன்றே என் மனத்தில் விதைத்திருக்கவேண்டும். மதப்பாகுபாடு அற்ற சூழலின் வளர்ப்பும் அவ்வித்துக்கு உரமளித்திருக்கவேண்டும்.

    பொன்மலைவாசிகளுக்குப் பிடித்த விளையாட்டு என்றால் பேட்மிண்டன் என்று சொல்லலாம். சிறியவர் பெரியவர் வேறுபாடு இன்றி, காணும் இடங்களில் எல்லாம் பூப்பந்து விளையாடுவதை இன்றும் பார்க்கலாம். அதிலும் மரத்தால் செய்யப்பட்ட கட்டைபேட் என்று சொல்லப்படும் மட்டையால் அடித்துவிளையாடுவது பலருக்கும் விருப்பம். டேபிள் டென்னிஸ் மட்டையைப் போல் சற்றுப் பெரியதாக இருக்கும் அதை அநேகமாய்த் தாங்களாகவே தயாரிப்பர். என் தம்பி இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாய் எப்படி இன்னும் அதே ஆர்வத்துடன் விளையாடிக்கொண்டிருக்கிறான் என்பது எனக்கு வியப்புதான்.

    பணிமனையின் அருகிலேயே ஒரு சந்தை. ஞாயிற்றுக்கிழமை சந்தை. சட்டி பானை முதல் காய்கறி, பழம், கோழி, வாத்து (உயிருடன்தான்) இவற்றுடன் மக்கள் கூட்டத்துடன் காட்சியளிக்கும் அது திருவிழாக்கடைகளை நினைவுபடுத்தும். அங்குக் கிடைக்காதப் பொருட்களே இல்லை என்னும் அளவுக்கு எல்லாமும் கிடைக்கும். அதிலும் சம்பள சந்தை பற்றிச் சொல்லவே வேண்டாம். இங்கு எல்லோருக்கும் ஒரே நாள் சம்பளம் மாதா மாதம் 3 ந்தேதி என்பதால் அன்று மாலைச் சந்தை லாந்தர்களாலும், திரிவிளக்குகளாலும் களைகட்டியிருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். (மின்சாரம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்று கேள்விப்படுகிறேனே...) முன்பே சொன்னதுபோல் அப்பா, சித்தப்பா, மாமா என்று அத்தனைப்பேரிடமிருந்தும் தின்பண்டங்கள் கிடைக்கும் நாள் அது. இன்று நினைத்தாலும் மகிழ்ச்சியில் புரளவைக்கும் நாட்கள் அவை.

    ஒவ்வொரு சம்பள சந்தையன்றும் தவறாமல் பெரிய பெரிய அல்வாக்கடைகள் உதயமாகியிருக்கும். பீமபுஷ்டி அல்வா என்று ஒரு பேனரில் ஒருபக்கம் எழுதியிருக்க, மறுபக்கம் ஒரு பயில்வான் உடலை முறுக்கிக்கொண்டு போஸ் கொடுத்திருப்பார். அதற்குப் போட்டியாக மற்றொரு பயில்வான் படத்துடன் காமபுஷ்டி அல்வா என்றொரு கடையும் உதயமாகியிருக்கும். இரண்டு கடையாட்களும் போட்டி போட்டுக்கொண்டு, அல்வா மலையின்மேல் பட்டாக்கத்திபோல் ஒரு வெட்டுக்கத்தியை படார் படார் என்று தட்டி விளம்பரம் செய்வதைப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கும். ஐயா வாங்க, அம்மா வாங்க என்று போவோர் வருவோரை எல்லாம் அழைத்து சாம்ப்பிள் அல்வா கொடுப்பார்கள். அப்படி யார் எது கொடுத்தாலும் வாங்கக் கூடாது என்பது அப்பாவின் கட்டளை. காசு கொடுத்து வாங்கியதை மட்டும்தான் சாப்பிடவேண்டும். தீபாவளி, பொங்கல் சந்தைகள் இன்னும் விசேஷமாக இருக்கும். நடப்பதற்கும் பாதையில்லாமல் கடைகள் குவிந்திருக்கும்.

    தோட்டம் பராமரித்தும் மரங்கள் வளர்த்தும் தம் சுற்றுப்புறங்களைப் பேணுவதில் பெரும் அக்கறை காட்டுவதில் குடியிருப்புவாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளைத் தம் சொந்த வீடு போலத்தான் நினைத்து வாழ்வர். தெருக்களையும் வீடுகளையும் தம் நிழலால் குளிர்விக்கும் மரங்களால் வீடுகளுக்குள் எப்போதும் ஒரு வித குளுமை நிலவிக்கொண்டே இருக்கும். முருங்கை, மாமரங்கள் இல்லாத வீடுகளைக் காண்பது அரிது. இவை தவிர வேம்பு, வாதுமை, தூங்குமூஞ்சி, கொன்றை, உதயன் மரங்களும் சாலையோரங்களில் பல பெயர் தெரியா பெருமரங்களும் சூழ்ந்து, கோடையின் வெம்மையிலிருந்து பொன்மலை மக்களைக் காக்கும்.

    குடியிருப்பின் வீடுகளைக் காலி செய்யுமுன் தாம் வளர்த்தவற்றை வெட்டி மரங்களை மொட்டை அடித்தும், வேரோடு பெயர்த்தும், அடுத்து வருபவரை அனுபவிக்க விடாமல் செய்யும் சில அற்ப மனிதர்களும் உண்டு. குடியிருப்புகளில் ஆடு,மாடு,கோழி போன்றவற்றை சிலர் வளர்த்துப் பராமரித்ததால், சாணி நாற்றம், கோழிகள் சீய்த்துத் தோட்டம் பாழ்படுதல், ஆடுகள் தோட்டத்துள் புகுந்து செடிகளைத் தின்றுவிடுதல் என்ற காரணங்களால் சில மனக்கசப்புகளும் எழுவதுண்டு. அவற்றையெல்லாம் புறந்தள்ளிப் பார்த்தால் நினைத்து மகிழ இனிய நினைவுகள் நிறைய உண்டு.

    பொழுதுபோகவும், பண்டிகை நாட்களில் மட்டுமல்லாது, தேவைப்படுபவற்றைத் தேவைப்படும் எந்நேரத்திலும் வாங்கவும் திருச்சி டவுன் சென்று, தெப்பக்குளத்தின் சுற்றுப்புறச் சுவர்களையொட்டி நடைபோட்ட நாட்கள், கால்வலிக்க வலிக்க, ஓடி ஓடி மலைக்கோட்டையின் மேலேறிக் கால்வலி மறந்த பால்ய நாட்கள், பேருந்தேறிவந்து, மலைக்கோட்டையை நித்தமும் தரிசித்தபடியே பட்டயப்படிப்பை முடித்த பருவநாட்கள்... திருமணமாகி சென்னை வந்தபின் தாய்வீடு பயணிக்கும் ஒவ்வொரு முறையும் திருச்சி மலைக்கோட்டையைக் கண்டவுடன் சிறு குழந்தையெனக் குதூகலித்து கணவரையும் குழந்தைகளையும் வியப்புக்குள்ளாக்கிய நாட்கள்... வாழ்வில் என்றுமே மறக்கவியலா நாட்கள்.

    காலப்போக்கில் சொந்தவீட்டுக் கனவு ஒவ்வொரு பணியாளருக்குள்ளும் குடியேற, குடியிருப்புகள் மீதான மோகமும் குடியிருப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாய்க் கைவிடப்பட்டுவிட்டன. பொன்மலையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் இருந்த வயல்கள் எல்லாம் இப்போது வீடுகளாகிவிட்டன. சுடுகாட்டுக் கொட்டகையும் கூப்பிடுதூரத்தில் என்னுமளவில் மனைகளின் விற்பனை பெருகிவிட்டது.

    இன்று… அம்மா வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் களையிழந்தும் கவனிப்பாரற்றும் இன்னும் சில பகுதிகளில் இடிந்தும் கிடக்கும் குடியிருப்புகளைக் காணும்போது மனத்துக்குள் ஏனோ இனம் புரியாத வலி! வசதிகள் புகுந்துவிட்டன. மக்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. ஆனாலும் அந்தப் பழைய நாட்களும் வாழ்க்கையும் மனத்தில் என்றும் இனிக்கும் நினைவுகள்தாமே….
    Last edited by கீதம்; 23-04-2012 at 04:19 AM.

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    திருச்சிக்கு வடக்கே 30 கல் தொலைவில் இருக்கும் துறையூர்தான் என்னுடைய பிறந்த ஊர் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில்தான் என்னுடைய இளங்கலைப் பட்டத்திற்கான படிப்பை முடித்தேன். அப்போது பொன்மலையில் உள்ள இரயில்வே பணியாளர்களுக்கான திரை அரங்கில் இதய கமலம் படம் பார்த்தது இன்றும் நினைவில் உள்ளது. கட்டணம் 25 பைசா.

    ஞாயிறு தோறும் திருச்சி மலைக்கோட்டைக்கு சென்று வருவேன். தற்போது திருச்சி மாநகரம் மிகவும் மாறிவிட்டது. திருச்சி உறையூரில் நிறைய சொந்தங்கள் உண்டு.

    1971 -ல் வேலை நிமித்தமாகச் சென்னைக்கு வந்த நான் இங்கேயே தங்கிவிடுவேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
    நீங்கள் திருச்சியைச் சேர்ந்தவர் என என்னும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது " யாதும் ஊரே! யாவரும் கேளிர்! " என்ற நிலைக்குச் சென்றுவிட்டீர்கள்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  12. #48
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அட நானும் துறையூரில் தான் பிறந்தேன்.. ஆனால் இப்போது திருச்சிக்காரன்..

Page 4 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •