அருமை கலையரசி. மிக்க ரசனையுடன் சிலாகித்து எழுதியுள்ளீர்கள். நீங்கள் சொன்ன டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள் முழுக்க முழுக்க அதே போன்றவைதான் எனக்கும்.
அதே எழுபதுகளில் சிறுவனாக ஓடிக்களித்த பள்ளி அனுபவங்களை நினைவூட்டினீர்கள்.
உங்களுக்கு ஜிம்மி போல் எனக்கு டாம்மி. அதுவும் தெருநாய் தான். வயதாகி மரித்துப் போனது. இறுதிவரை எங்கள் கூடவே இருந்த்து.
திருநள்ளாறு வர்ணனை கிட்டத்தட்ட காவிரிக்கரையாகிய எங்கள் திருமங்கலக்குடி சூரியனார் கோயில் போன்றே இருந்ததால் எங்கள் ஊரின் வர்ணனை போன்றே அனுபவித்தேன்.
ஆண்டாளு அம்மாளின் பாசமும் பரிவும் மனதை அசைத்தது.
உங்கள் எளிய நல்ல உள்ளத்திற்கு எந்த குறையும் இன்றி எல்லா வளங்களும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பாராட்டுகளும் நன்றிகளும் கலையரசி..!!
பி கு : நீங்கள் கூறியனவற்றில் விடுபட்டவை
1, எங்கள் ஊர் ரிகார்ட் டான்ஸ் ( மூன்று நான்கு நாட்கள் நடைபெறும் )
2. தோல் பொம்மை நாடகங்கள். ( ஒரு வாரம் தொடர்ந்து நடக்கும் )
3. நாடகங்கள் ( நல்லதங்காள் முதல் ராமாயணம் போன்றவை )
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
எழுத எழுத நீண்டு கொண்டே சென்ற நினைவலைகளை மிகவும் சிரமப்பட்டு சுருக்க வேண்டியதாயிற்று. என் அனுபவங்கள் போன்றதே உங்களுடையதும் என்றறியும் போது வியப்பாயிருக்கிறது.
தோல் பொம்மை, ந்லலதங்காள் நாடகம் இன்னும் என் எழுத்தில் விடுபட்டவற்றை நீங்கள் தொகுத்து எழுதுங்கள். படிக்க மிகவும் ஆர்வமாயிருக்கிறேன். சிவாஜி சார் எல்லோரையும் தானே அவரவர் அனுபவங்களை எழுத அழைத்திருக்கிறார்? எனவே கண்டிப்பாக எழுதுங்கள்.
உங்களது பாராட்டுக்கள் என்னை மென்மேலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மிக மிக நன்றி கலை சார்!
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
என் மன உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நீண்ட கட்டுரை எழுத இயலாதவாறு எனது இரத்த அழுத்தம் இருப்பதால் இவ்வளவு அழகாக என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை. இருப்பினும் முயற்சிக்கிறேன் கலையரசி.
சார் எல்லாம் வேண்டாம். வெறும் கலை போதும். ( ஸ்கூல்ல பசங்க சார் சார்னு அழைச்சு ரொம்ப போரடிச்சுப்போச்சுங்க மேடம்.. அதான்..)
மீண்டும் நன்றிங்க..!!
அழகான தொடர்ச்சி மேடம். அந்த நாளைய நினைவுகள் என்பது நோட்டுப்புத்தகத்தில் பாடம் செய்துவைத்த மயிலிறகைப்போன்றது....பக்கத்தைப் பிரித்து இறகைக் காணும்போது நாமும் அந்த இறகாய் மாறி சந்தோஷ வானில் பறவையாய் பறப்போம்...அதுவும் சொந்த ஊரின் நினைவென்றால்....கேட்கவே வேண்டாம்.
உங்களுக்கு ஜிம்மியைப்போல எங்களுக்கும் ஒரு மணி இருந்தான். அவனும் தெருநாய்தான்...ஆனால் சம்பளம் வாங்காத காவல்காரனாய் எங்களுக்காக இருந்தான்.
அருமையான பதிவை அளித்து இந்த திரிக்கு சிறப்பு சேர்த்த உங்களுக்கு அன்பான நன்றிகள் மேடம்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பத்துப்பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் ஆந்திரா...இருபது இருபத்தைந்து கிலோமீட்டர்கள் தொலைவில் கர்நாடகா...ஊரைச் சுற்றிலும் அந்தக்காலத்து புண்ணியவான்கள் வெட்டிவைத்த ஏரிகள்...ஊருக்கே அடையாளமாய் உயர்ந்து நிற்கும் சையது-பாஷா மலை..... 30 சதவீதம் தெலுங்கு பேசும் மக்கள் 10 சதவீதம் கன்னடம் பேசும் மக்கள், 10 சதவீதம் உருது பேசும் இஸ்லாமிய மக்கள்...பாக்கியுள்ள இதெல்லாவற்றையும் கலந்து பேசும் தமிழ் மக்கள்....இதுதான் நான் பிறந்து சிலகாலம் வளர்ந்த மாங்கனிநகரம் கிருஷ்ணகிரி.(ஏன் கொஞ்சகாலம் என்பதை பிறகு சொல்கிறேன்)
தன்னில் விளைந்ததை சேலம் சந்தைக்கு அனுப்பி, அதற்கு சேலத்து மாம்பழம் என்ற நிரந்தரப் புகழைக் கொடுத்த தியாகி எங்கள் ஊர். இரயில் வசதியில்லாததால்...சாலைகளையே நம்பவேண்டியக் கட்டாயம். ஊருக்கு மத்தியில் ஒரு ரவுண்டானா...அதிலிருந்து புறப்படும் சாலைகளின் பெயர்களாலேயே அந்த தெருக்கள் அழைக்கப்பட்டன. சேலம் ரோடு, பெங்களூர் ரோடு, மெட்ராஸ்ரோடு, குப்பம் ரோடு, திருவண்ணாமலை ரோடு...என்பவை பிரதான தெருக்கள்.
இதில் திருவண்ணாமலை ரோடு என்ற தெருவில் இருந்த ஒரு ஓட்டுவீட்டில்தான் நான் பிறந்தேன்.(ஏன் பிறந்தேன்....இன்னும் விளங்கலையே) அந்த வீட்டுக்குப் பெயர் சித்தம்மா வீடு. கன்னடக்காரர்கள்.அதே தெருவில் குடியிருந்த நாகராஜன், ஆனந்தன், மதன், மோதி...என்ற நண்பர்கள். இதில் மதன் மட்டுமே வக்கீல்வீட்டுப் பிள்ளை மற்ற மூவரும் நாவிதர் குடும்பம். அதே தெருவின் முனையில் ஒரு தேர்முட்டி இருக்கும்(இப்ப இல்லை) அந்தத் தேர் ஓடி நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை....ஆனா அந்த தேர்நிலையிலிருந்து சற்று தள்ளி இருக்கும் ராசிவீதியின் முச்சந்தியில் வருடா வருடம் மாடுகள் ஓடும். வேடிக்கப் பார்த்த என்னையும் சில சமயம் அந்த மாடுகளைக் கட்டியிருந்த நீண்ட கயிறுகள் பதம் பார்த்தது...இப்போதும் கை எரிச்சலைக் கொடுக்கிறது. (வேடிக்கைப் பாக்கப் போணமா பாத்தமான்னு இல்லாம பத்து வயசுல பெரிய வீரணாட்டம் கயிறைப் பிடிச்சா...)கால்ல பட்டக் காகிதத்தை உதறித் தள்ளிவிட்டு ஓடுவதைப்போல என்னையும் என் நண்பர்களையும் அந்த மாடுகள் உதறிவிட்டு ஓடிவிடும்.
அப்போதெல்லாம் வீக்கமில்லாத கிருஷ்ணகிரி எங்கள் கைக்குள் அடக்கமாய்...சரியாகச் சொன்னால் காலுக்குள் அடக்கமாய் இருந்தது. இப்போது புறகர் பெருக்கத்தால் வீக்கம் அதிகமாகி.....விசுப் பட கமலா காமேஷ்..இப்போது இருப்பதைப்போல ஆகிவிட்டது. எங்கள் கால்கள் படாத இடமே எங்களூரில் இல்லை....இதனால்...அடி விழாத இடமே எங்கள் உடம்பில் இல்லை. காலையில் பள்ளிக்குச் செல்லும்போதே மாலையை மட்டுமே நினைக்கும் மனது. 5 மணிக்கு பள்ளிவிட்டதும்...ஓட்டஓட்டமாய் வீட்டுக்கு வந்து....காக்கிப் பையையோ...மஞ்சள் பையையோ....அம்மா அலற அலற வீட்டுக்குள் கடாசிவிட்டு....திரும்ப ஓடுவோம். என்ன முக்கியமான வேலை என்கிறீர்களா...நகருக்கு வெளியே நகராட்சிக் குப்பைக் கொட்டுமிடம் ஒன்று இருந்தது. காலையிலிருந்து சேகரித்தக் குப்பைகளை...மூன்று மணி வாக்கில்தான் அங்கே கொண்டு வந்து கொட்டுவார்கள்....அதைக் கிளறத்தான்...இந்த அரக்கப் பரக்க ஓட்டம்.
பல நூறு...ஆயிரம் உடைந்த உடையாத பொருள்களிலிருந்து...அவரவர்களுக்குத் தேவையான பொருட்களை சேகரித்துக்கொண்டு(பொறுக்கிக்கொண்டு சரியா இருக்குமோ...) எங்கள் தெருவில் முட்செடிகள் வளர்ந்து நிற்கும் ஒரு நிழலான மைதானப் பரப்புக்கு வந்து...தர ஆய்வு செய்து...தேவையானவை...தேவையற்றவை எனப் பிரிக்கும் வேலை நடக்கும். முடிவில் யாரிடம்...மற்ற அனைவருக்கும் கிடைத்ததிலேயே நல்ல பொருள் இருக்கிறதோ..அவனுக்கு தாக்குதல் நடக்கும்...இதில்...மற்றவர்களிடம் உள்ள நல்ல பொருளும்...உடைந்துவிடும் அபாயம் இருந்தாலும்...நம்மிடமில்லாதது அவனிடமும் இருக்கக்கூடாது என்ற நல்லெண்ணம் அனைவரிடமும் இருந்ததால்...அதை பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை.
பெங்களூர் சாலை நகரத்தை பின்னால் நிறுத்திவிட்டு முன்னோக்கிப் போகத்தொடங்கும் எல்லையில் இருந்த(இப்போதுமிருக்கும்) பகுதியின் பெயர் லண்டன்பேட்டை. அங்கிருந்துதான் சையது-பாஷா மலைமேல் ஏற முடியும். இதுவும் எங்கள் முற்றுகைக்கு அடிக்கடி ஆட்பட்ட இடம். மலைமேல் ஏறி சில்லென்ற குகைக்குள் சற்று பயத்துடனே நுழைந்து...அதற்குமேல் ஆளைப் பார்க்கமுடியாதக் கருமை சூழ்ந்துகொண்டதும்...அலறியடித்து ஓடி வருவது...பின் அங்கிருந்து துக்குளியூண்டாய் தெரியும் வீடுகளில் எங்கள் வீட்டை அடையாளம் காண முயற்சித்துக் குத்துமதிப்பாய்க் கண்டுபிடித்த சந்தோஷத்தில் மீண்டும் ஹோவென கத்திக்கொண்டே மலை இறங்குவது...என சாகசப் பயணமாய் இருக்கும்
நகரத்திலிருந்து மூன்றே கிலோமீட்டரில் எங்கள் கிராமம் அவதானப்பட்டி. அம்மாவைப் பெற்ற தாத்தா பாட்டி, மாமா, சித்தி என அனைவரும் அங்கேதான் இருந்தார்கள். அப்போது அம்மாவின் அப்பாவைப்பெற்ற தாத்தாவும் உயிருடன் இருந்தார். அங்கு போகும்போதெல்லாம் அந்தக் கொள்ளுத்தாத்தாவின் மடியில் உட்கார்ந்துகொண்டு...பழங்கதை கேட்டபடியே அந்த உழைப்பாளியின் தோள்மஞ்சத்தில் துயில் கொள்ளும் மன்னனாய் கழிந்த காலங்கள்...அங்கிருக்கும்போது சித்தி கரைத்து தரும் மோர் கலந்த கம்பங்கூழும், சாமைச் சோறும்...பச்சைக் கேழ்வரகு கதிர்களை கையில் வைத்துத் தேய்த்து...அந்த பசும் மஞ்சளும், பச்சையும், வெள்ளையும் கலந்த தானியங்களின் பால் ருசியும்.....பிட்ஸா பர்கரிலோ....இல்லை தம் பிரியாணியிலோ இல்லவே இல்லை.
அப்போதெல்லாம்...காட்டு யானைகளின் வரவு அந்தக் கிராமத்தில் அடிக்கடி நிகழும் நிகழ்வுகள்.(இப்போது அது மீண்டும் தொடங்கியிருக்கிறது...ஆனால்....புற்களால் வேயப்பட்டக் கூரைகள்தான் அந்நாளில் அவற்றின் இலக்கு...இந்நாளில்...அவை சாப்பிட அங்கு ஒன்றுமேயில்லை...விவசாய நிலமெல்லாம் கோழிப்பண்ணைகளாகவும், மலர்த்தோட்டங்களாகவும் மாறிவிட்டன) அதற்காகவே அங்கிருந்த கூரை வீடுகளின்(காரை வீடுகளே கிடையாது) சுவரில் ஆங்காங்கே துளையிட்டிருப்பார்கள். யானைகள் ஊருக்குள் நுழையும்போது வீட்டுக்கு உள்ளிருந்தே தீப்பந்தங்களை அந்த துளைகளின் வழியே வெளியே நீட்டி அவற்றை அச்சுறுத்துவார்கள். இது இல்லாமல் மலைப்பக்கம் ஒதுங்குபவர்களின் மேல் அடிக்கடி கரடிகளின் தாக்குதல்களும் நடக்கும். அதுவும் பெண்களைக் கண்டுவிட்டால்..மனிதனைப்போலவே இரண்டு கால்களால் வேகமாக ஓடிவரும். (நிறைய சினிமா பாக்குமோ)
வீரப்பன் பின்னாளில் ஆதிக்கம் செலுத்திய வனப்பிரதேசம்தான் இது. இங்கிருந்து தொடங்கி சத்தியமங்கலம் வரை அவரது ஏரியா பரவியிருந்தது. அங்கிருந்த மராட்டியர் ஒருவரின் மாந்தோப்பு எங்களின் தீம்பார்க். ஏறுவது, சறுக்குவது, ஊஞ்சலாடுவது...ஒளிந்துவிளையாடுவது என காய்ப்பில்லாக் காலங்களில் எங்கள் ஆரோக்கியம் வளர்த்த அதே தோப்பு...காய்ப்பு சமயத்தில்...காவல்காரரின் மூலம் வைக்கும் ஆப்பு. மாங்காய் திருடி மாட்டிக்கொண்டு...மாமரத்துக்கு அருகில் குத்துக்காலிட்டு உட்காரவைக்கப்பட்ட குற்றசரித்திரமும் உண்டு. அந்த நிலையில் தொடர்ந்து உட்கார்ந்திருப்பதே பெரும்பாடு....அதிலும் அந்த மாமரத்தின் சிவப்பு எறும்புகள் சூழ்ந்துகொண்டால்....அந்த சமயத்திலெல்லாம் காவல்காரர் துரத்தினாலும்...என்கவுண்ட்டரில் தப்பித்து ஓடும் தாதாவைப்போல ஓடிச்சென்று தாத்தாவிடம் அடைக்கலமாவோம்.
சுரைபுடுக்கை எனச் சொல்லும் காய்ந்த சுரைக்காயை கயிறில் கட்டி...அந்தக் கயிறை என் இடுப்பில் கட்டி...எங்கள் கிணற்றில் எனக்கு நீச்சல் சொல்லிக்கொடுத்த மூன்றாவது மாமா(என் மாமனார்)...அதே நேரம்...மேலே கவலையில் மாட்டைக் கட்டி தண்ணீர் பாய்ச்சிக்கொண்டே..’ப்பா....ப்பா...’என்று மாட்டுடன் பேசிக்கொண்டிருந்த நான்காவது மாமா....அனைவரும் களைத்து...கிணற்று மேட்டுக்கு வந்ததும் தயாராய் குளிர்ந்த மோரை அங்கே கொண்டு வந்த சித்தி.....நினைக்க நினைக்க...மகிழ்கிறது மனசு.
இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.....
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் நிறைந்த அழகான ஊர் நினைவுகள். உங்களுடைய பிரத்தியேக எழுத்து நடை, இன்னும் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் அண்ணா.
சின்ன வயதின் சேட்டைகளுடன் குறும்பாகக் கழித்த நாட்களின் நினைவுகளை மிகவும் ரசித்தேன். நாகரிக வளர்ச்சியால் ஊருக்கு உண்டாகியிருக்கும் மாற்றங்களை மனம் ஏற்காது தவிக்கும் தவிப்பையும் உணரமுடிகிறது.
தொடரும் பகுதிகளுக்காய் காத்திருக்கிறேன் அண்ணா.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks