அன்னையின் ஆவி!
நான் மெதுவாக ஓரக்கண்ணால் பார்த்தேன். என்னை பெண் பார்க்க வந்தவர் எதிரில் ஒரு சேரில் உட்கார்ந்திருந்தார். அவருடைய வலது பக்கத்தில் அவருடைய தந்தை உட்கார்ந்திருந்தார். தந்தை மகனைப் பார்த்து 'என்ன?' என்று கேட்பது போல தலையை அசைத்ததையும் அதற்கு அவரின் மகன் 'சரி' என்பது போல தலையாட்டியதையும் நான் பார்த்து விட்டேன். என் மனம் சந்தோஷத்தால் குதித்தது.
நான் வந்து பாயின் மீது உட்காரும் முன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. "இரண்டாம் தாரம் என்று கவலைப்படாதே. பையன் காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருக்கிறான். வயது கூட 26-தான் ஆகிறது. பையன் நல்ல வேலையில் இருக்கிறான். சொந்த வீடு, வசதி இருக்கிறது. முதல் தாரத்து பெண் குழந்தை மூன்று வயதே ஆனாலும் மிகவும் சூட்டிகையாக இருக்கிறாள். இந்த வரன் அமைந்தால் பெரிய விஷயம். நமது நிலைமை அப்படியிருக்கிறது. உன்னை அவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்று சாமியை வேண்டிக்கொள்" என்று சொன்னாள்.
ஆறு மகன்களையும் ஆறு பெண்களையும் பெற்ற அவளுக்குத்தான் தெரியும், ஒவ்வொரு மகளையும் கரையேற்ற அவள் பட்ட கஷ்டம். நாலாவது மகள் நான். எனக்கும் கீழே இரண்டு தங்கைகள் இருந்தார்கள்.
என் குடும்பத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அறிமுகப்படுத்திய என் அத்தை கேட்டாள் "என்னங்க, எங்கள் பெண்ணை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?"
"எனக்கு பிடித்திருப்பது அப்புறம். பெண்ணுக்கு என்னைப் பிடித்து இருக்கிறதா என்பதை முதலில் சொல்லட்டும். பிறகு நான் சொல்லுகிறேன்" மென்மையான குரலில் மாப்பிள்ளை சொன்னார்.
"என்னடி, உன்னைத்தான் கேட்கிறார். சொல்லேன்" என்றாள் அத்தை. "உம்.... சரி, பிடித்திருக்கிறது" என்று சொல்வதற்குள் என் உடம்பு வியர்த்து போய்விட்டது.
அன்றைக்கே நிச்சயார்த்த தேதி குறிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து என்னுடைய பெரிய அண்ணன் வந்தார். குதி குதியென்று குதித்தார். "அது எப்படி தங்கையை இரண்டாம் தாரமாக கொடுப்பீர்கள்? அதுவும் அந்த ஆளின் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்லுகிறார்கள். அதனால்தான் முதல் மனைவி தற்கொலை செய்துக்கொண்டாள் என்றும் சொல்லுகிறார்கள். நிச்சயார்த்தத்தை நிறுத்துங்கள், நான் வேறு இடம் பார்க்கிறேன்" என்றார்.
என் தந்தை மிகுந்த மனக்கஷ்டத்துடன் மாப்பிள்ளை வீட்டிற்கு போய் கொஞ்சம் தள்ளிப்போடலாமா என்று கேட்டுக்கொண்டு வந்தார். இப்படியே நான்கு மாதங்கள் ஓடி விட்டன. என் மனக்கண்ணில் அன்று அவர் தனது தந்தையைப் பார்த்து தலையாட்டியதே மீண்டும் மீண்டும் தோன்றியது.
ஒரு நாள் ஆபிஸில் என் மேஜையில் இருந்த போன் அடித்தது. நான் அதை எடுத்து "ஹலோ, மீனாட்சி பேசுகிறேன்" என்றேன்.
"நான் சந்தோஷ் பேசுகிறேன். சாயங்காலம் 5.30 மணிக்கு உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சங்கீதா ஹோட்டலில் சந்திக்க முடியுமா? உன்னிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும்" என்று அவர் கேட்டார்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஹோட்டலில் உட்கார்ந்த பின் "உங்கள் வீட்டில் என்ன பிரச்சனை?" என்று கேட்டார்.
"என்னுடைய அண்ணன்மார்கள் நீங்கள் கெட்டவர் என்றும் உங்கள் மனைவி தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என்றும் அதனால் இந்த கல்யாணம் வேண்டாம் என்றும் சொல்கிறார்கள்."
"நான் கெட்ட பழக்கங்கள் கொண்டவன்தான். ஆனால் என் மனைவி இறந்ததற்கு காரணம் நான் அல்ல. அது மாமியார் மருமகள் சண்டையாலும் என் மனைவியின் பக்குவம் இல்லாத அவசர முடிவாலும் ஏற்பட்டது. நான் உன்னை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?" என்றார் அவர்.
"நீங்கள் உங்களின் பழக்கங்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் எனக்கு ஒரு உறுதிமொழி கொடுக்க வேண்டும். என்னைத்தவிர வேறு பெண்ணை நீங்கள் தொடக்கூடாது"
"சரி அப்படியே ஆகட்டும். எனக்கு மனைவியை தவிர வேறு பெண்களை தொடும் பழக்கம் இல்லை. எனக்கு நீயும் ஒரு உறுதிமொழி கொடுக்க வேண்டும். என் பெண்ணை உன் மகளாக வளர்க்க வேண்டும்."
"இதில் என்ன சந்தேகம். பிருந்தா என் மகள்தான். நான் வீட்டிற்கு போய் அப்பாவிடம் பிடிவாதமாக சொல்லி விடுகிறேன். மீதியை அவர் பார்த்துக்கொள்வார்" என்று சொல்லி விடைப்பெற்றேன்.
வீட்டிற்கு போய் அப்பாவிடம் நடந்தது எல்லாவற்றையும் சொல்லி 'நான் அவரைதான் கல்யாணம் செய்துக்கொள்வேன்' என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டேன். அன்றிரவு எனக்கு ஒரு கனவு வந்தது. வயதான பெண்மணி முகம் நிறைய மஞ்சளும் குங்குமமாக கனவில் வந்தார்கள். "நீ சொன்னதை நிறைவேற்றினால் மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன், என்ன செய்வாயா?" என்று என்னிடம் கேட்டார்கள்.
"நிச்சயம் அம்மா, நிச்சயம்" என்று நான் சொல்லுகிறேன். விழித்துக்கொண்டேன்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
அடுத்த மூன்றாவது மாதம் ஒரு நல்ல நாளில் எங்கள் திருமணம் நடந்தேறியது. திருமண சடங்குகள் எல்லாம் முடிந்து நான் என் கணவர் வீட்டிற்கு சென்றேன். பெரிய விசாலமான அந்த வீட்டில் இருந்த பூஜையறையில் என்னை விளக்கேற்ற சொன்னார்கள். அங்கே அக்கா வேதவள்ளியின் மார்பளவு படம் இருந்தது. எல்லா சாமிகளுக்கும் தீபம் காட்டிவிட்டு அந்த படத்திடம் வந்தேன்.
"அம்மா, எங்கள் குடும்பம் ஆனந்தமாக, நிம்மதியாக இருக்க நீதான் உதவி செய்ய வேண்டும்" என்று வேண்டிக்கொண்டேன்.
"நிச்சயமாக!" என்று யாரோ சொல்வது போல இருந்தது. சட்டென்று திரும்பி பார்த்தேன். பூஜையறையின் ஜன்னல் அருகிலிருந்து நிழல் போன்ற ஒரு உருவம் நகர்ந்து போவது தெரிந்தது. பின்னால் நீண்டு அடர்த்தியாக இருந்த பின்னல்தான் என் கண்ணுக்கு தெரிந்தது.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
வருடங்கள் இரண்டு ஓடின. நான் கர்ப்பமானேன். கணவருக்கு மிகுந்த ஆனந்தம். "இந்த முறை நமக்கு பையன்தான்" என்றார். "ஆமாம். நமக்குதான் ஒரு பெண் ஏற்கனவே இருக்கிறாளே" என்றேன் நான்.
ஒரு நாள் என்னுடைய மூத்த சகோதரி ஞானம் எங்கள் வீட்டிற்கு அவளுடைய ஆறு வயது பையனுடன் வந்தாள். அவள் ஒரு குறுகிய புத்திக்காரி. வெகு சுலபமாக பொறாமை படக்கூடியவள். அவள் உள்ளே வந்ததும் வீட்டை முழுவதுமாக சுற்றிப்பார்த்தாள். பார்க்கும் போதே 'இவளுக்கு இப்படிப்பட்ட வாழ்வு வந்து விட்டதே' என்று நினைப்பது முகத்திலேயே தெரிந்தது. சுமார் மணி 6.30 இருக்கும். வெளியில் இருட்டிக்கொண்டு வந்தது. நான் வாசல் விளக்கை போட்டு விட்டு வந்து ஞானத்தோடு ஊர் கதை பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது பிருந்தா 'அம்மா' என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடி வந்தாள். வந்த வேகத்தில் பாவாடை தடுக்கி என் மீது பொத்தென்று விழுந்தாள். நான் அவளை சரியாக பிடித்திராவிட்டால் அடிப்பட்டிருக்கும். என் அக்கா பிருந்தாவின் முதுகில் பட்டென்று அடித்தாள். "ஏன்டி சனியனே, அம்மா வயிற்றில் பாப்பா இருக்குதுன்னு உனக்கு தெரியாதா?" என்று கோபமாக சொன்னாள்.
குழந்தை பிருந்தா ஒரு கணம் கண் கலங்கி விட்டாள். நான் அவளை இழுத்தணைத்துக் கொண்டேன். "என்ன அக்கா, குழந்தையை இப்படி அடித்து விட்டீர்கள்?" என்றேன்.
"நீ என்னடி, அவளுக்கு வக்காலத்து வாங்குகிறாய்? உன் வயிற்றில் பிறந்த குழந்தையை போல தாங்குகிறாயே? மூத்தாள் குழந்தையை கொஞ்சம் தள்ளி வைத்து வளர்த்துக்கொண்டு வா. இல்லையென்றால் பின்னால் உனக்கே வினையாகி விடுவாள்" என்றாள் ஞானம்.
அப்போது வாசற்படி விளக்கு வெளிச்சத்தில் ஏதோ உருவம் அசைவது போல நிழலாடியது. திரும்பி பார்த்தேன். எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை. வெள்ளையாடை அணிந்த ஒரு பெண் தலையை விரித்து போட்டுக்கொண்டு வாசற்படியை தாண்டி சென்று ஜன்னலருகே நிற்பதை கண்டேன். முதுகை காட்டியப்படி நின்றிருந்த உருவம் சட்டென்று திரும்பி தன் முகத்தை காட்டியது.
மிகவும் கோபமாக இருக்கும் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது. விரலை உதட்டின் மீது வைத்து என்னை எச்சரித்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
அந்த சமயம் பார்த்து அக்காவின் பையன் மதுசூதனன் 'அம்மா' என்று அழைத்துக்கொண்டு வெளியிலிருந்து ஓடி வந்தான். வேகமாக ஒடி வந்தவன் யாரோ பின்னால் இருந்து பிடித்து தள்ளினால் எப்படி குப்புற விழுவானோ அதுபோல வாசற்படியை தாண்டி ஹாலில் வந்து விழுந்தான். அவனின் தலை எதிர்பக்க சுவரில் போய் மோதியது.
அக்கா ஓடிப்போய் அவனை தூக்கி நிறுத்தினாள். கை, கால்கள் எல்லாம் தேய்த்துக்கொண்டு இரத்தம் கசிந்தது. தலையிலும் அடிப்பட்டு இரத்தம் வழிந்தது. நான் ஜன்னலை பார்த்தேன். அந்த உருவம் சிரிப்போடு என்னை பார்த்து விட்டு நகர்ந்து மறைந்தது.
பிருந்தாவை யாராவது துன்புறுத்தினால் இப்படித்தான் நடக்கும் என்று என்னை எச்சரிப்பது போல இருந்தது அதன் நடவடிக்கை.
அதற்கப்புறம் இரண்டு முறை பிருந்தா வந்து என்னிடம் "அம்மா, நம் வீட்டின் பின்னால் இருக்கும் சலவைக்கல் மீது ஒரு பெண் உட்கார்ந்து தலை வாரிக் கொண்டிருந்தாள். ஆனால் நான் கிட்டே போனால் மறைந்து விட்டாள்" என்று சொன்னாள். பிருந்தாவின் அம்மாவின் ஆவி அங்கேயே இருந்து அவளை பாதுகாக்கிறது என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது. ஆனால் என் கண்ணுக்கு மட்டும் மறுபடியும் தென்படவேயில்லை.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
எனக்கு நல்லப்படியாக பிரசவம் ஆனது. அழகான ஒரு ஆண்மகன் பிறந்தான். அவனுக்கு பிரசாந்த் என்று பெயர் வைத்தோம். அப்போது பிருந்தா பள்ளிக்கு போய் கொண்டிருந்தாள். அது என்னவோ தெரியவில்லை, அக்காவும் தம்பியும் அவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள். நாங்களும் அவர்கள் விளையாடுவதை பார்த்து சந்தோஷப்படுவோம்.
இப்படியே வாழ்க்கை நிம்மதியாக ஓடியது. பையனும் வளர்ந்து இரண்டாவது பிறந்த நாளையும் கொண்டாடி விட்டாள். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி இருக்கும். பிருந்தாவும் பிரசாந்தும் வாசற்படியை தாண்டி வெளியில் பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
நான் மதிய சாப்பாட்டிற்காக காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தேன். தக்காளி இருந்த கூடை உயரத்தில் இருக்கவே எடுத்துக்கொடுக்க பிருந்தாவை கூப்பிட்டேன். அவளும் தம்பியை விட்டு விட்டு வந்து தக்காளி கூடையை எடுத்துக் கொடுத்தாள். அப்படியே என் அருகில் உட்கார்ந்து நான் வெட்டி வைத்திருந்த வெள்ளரி துண்டுகளை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
திடீரென்று "அம்மா, என்னை யாரோ வெளியில் வரச்சொல்லுகிறார்கள்" என்று சொல்லிவிட்டு எழுந்து ஓடினாள். சற்று நேரத்தில் "அம்மா" என்று அவள் அலறும் சப்தம் கேட்டு நானும் எழுந்து ஓடினேன்.
அங்கே கழிவு நீர் தேங்கி நிற்க ஒரு ஆழமான மூடியில்லாத தொட்டி ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அதில் பிருந்தாவும் பிரசாந்தும் இருந்தார்கள். பிரசாந்தை பிருந்தா உயரமாக தூக்கிப் பிடித்திருந்தாள். நல்ல காலம் மூன்றடி தண்ணீரே இருந்ததால் பிருந்தா மூழ்காமல் நின்றுக்கொண்டிருந்தாள்.
நான் முதலில் பிரசாந்தையும் பிறகு பிருந்தாவையும் தூக்கி வெளியே கொண்டு வந்தேன். இருவரையும் குளியறைக்கு அழைத்துச்சென்று துணிகளை கழற்றி குளிப்பாட்டினேன். நல்லகாலம், யாருக்கும் எந்த விதமான அடியும் படவில்லை. "என்னம்மா நடந்தது?" என்று பிருந்தாவை கேட்டேன்.
"யாரோ கூப்பிட்டார்கள் என்று ஓடினேன். வெளியே போய் பார்த்தால் தம்பி விளையாடிக் கொண்டிருந்த பந்தை தொட்டியில் போட்டு விட்டு அதை எட்டிப்பிடிக்க முயற்சி பண்ணிக் கொண்டிருந்தான். அப்படியே பொத்தென்று உள்ளே விழுந்து விட்டான். நான் ஓடிப்போய் உள்ளே குதித்து அவனை தூக்கிக்கொண்டேன். அப்புறம்தான் உங்களை கூப்பிட்டேன்" என்றாள்.
இருவருக்கும் வேறு ஆடை அணிவித்தேன். என் மனதில் பிருந்தாவின் அம்மாவின் ஆவிதான் தகுந்த நேரத்தில் பிருந்தாவை கூப்பிட்டு என் பையனை காப்பாற்றியது என்பது நிச்சயமாக தோன்றியது. பிருந்தா சமயத்தில் போய் அவனை தூக்கி பிடித்திராவிட்டால் அவன் அந்த சாக்கடை நீரில் மூழ்கி போயிருப்பான். நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது.
பூஜையறையில் ஊதுபத்திகளை ஏற்றி வைத்து விட்டு இரண்டு குழந்தைகளையும் வேதவள்ளி அக்காவின் படத்தின் முன்பு நிற்க வைத்து கண்கள் கலங்க நின்று வணங்கினேன்.
"நீ என் மகளை உன் குழந்தையாக வளர்க்கும் போது, உன் பையன் எனக்கும் குழந்தையல்லவா?" என்று அவர்கள் சொல்லுவது போல தோன்றியது.
(முற்றும்)
ஆவிகள் உலகம் - ஜூலை 2010
12ம் ஆண்டு சிறப்பிதழில் வந்தது.
Bookmarks