இது ஒரு மொழிபெயர்ப்புக் கதை. ஆங்கிலத்தில் இருப்பதைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறேன். கதையின் இறுதியில் அதன் மூலம் எழுதியவர் பெயர் அனைத்தும் வழங்குகிறேன்..!
தூமகேது பகுதி ஒன்று.
கார்த்திகை மாதத்தின் நிலவற்ற இரவு. ஜன்னலிலிருந்து வந்த குளிர்ந்த காற்று இந்திராணியின் உறக்கத்தைக் கலைக்க போதுமானதாக இருந்தது. அரைத்தூக்கத்தில் தனது படுக்கையைக் கையால் தடவிய இந்திராணி அருகில் தத்தா இல்லாததை உணர்ந்தாள். விடை அவள் அறிந்தது தான்.
‘’ ஹூம்... மீண்டும் அந்த மாயக்காரியுடன் கொஞ்சி விளையாட மொட்டை மாடிக்குப் போய்விட்டாரா..? போனவர் கதவைச்சாத்திக்கிட்டு போகனும்னு தோணலையே .. ‘’ அலுத்துக்கொண்டாள் இந்திராணி.
தன் கணவன் மேல் எரிச்சலான புகாரை அவள் வாய் சொன்னாலும் அவளது வாயோரம் எழுந்த புன்னகையை அடக்க இயலாமல் சிரிக்கவே செய்தாள். தன் கணவனது உடல் நலம் குறித்த அக்கறைதான் அவளை வருத்தமுறச்செய்தது.
’’ டாக்டர் எத்தனை முறை சொன்னார்..? குளிர் ஒத்துக்காது இவருக்குன்னு..ஹூம் .. அப்படி என்ன திவ்யாவை கொஞ்சாவிட்டால் என்ன குடிமுழுகியா போய்விடும்..? அட ...போனது தான் போனார்... ஒரு ஸ்வெட்டராவது போட்டுக்கிட்டு போயிருக்கலாமே... இதோ சேர் மேல தானே கிடக்குது.. ஹூம்... அவருக்கு எப்படி இதெல்லாம் நினைவுல இருக்கும்... அந்த திவ்யா பிசாசு இருந்தாலே போதுமே..வேற ஒன்னும் தோணாதே .. ‘’
அலுத்துக்கொண்ட இந்திராணி தத்தாவின் ஸ்வெட்டரைக் கையில் எடுத்துக்கொண்டு தன்னை ஒரு சால்வையால் போர்த்திக்கொண்டு ,மொட்டை மாடிக்குச்சென்றாள். அவளுக்குத்தெரியும்... அவர் அந்த திவ்யா பேயுடன் மொட்டை மாடியில் கொஞ்சிக்கொண்டு இருப்பார் என்பது..
மொட்டைமாடியில் அவள் அனுமாணித்தது சரியானதாக இருந்தது.
தத்தா திவ்யாவுடன் ஒன்றிப்போய் அவள் கண்ணில் தன் கண்ணைப்பதித்து மெய்மறந்து இருந்தார்.
தத்தா அந்த டெலஸ்கோப்பை வாங்கும்போதே அவர் தன்னைமறந்து உற்சாகத்தில் விசிலடித்து அவளுக்கு திவ்ய கண்கள் என்று பெயரும் இட்டுவிட்டார்.
இந்திராணிக்கோ அந்த டெலஸ்கோப் இந்த வயதான காலத்தில் தன் கணவனை தன்னிடம் இருந்து பிரிக்க வந்து சேர்ந்த சக்களத்தியாகவே தெரிந்தது. எனவே இந்திராணி அந்த சக்களத்திக்கு திவ்யா என்ற பெயரையே சூட்டிவிட்டாள்.
தத்தாவின் வாழ்நாள் இலட்சியத்தை அடைய வந்து சேர்ந்த அற்புதமான தேவதையாக அந்த டெலஸ்கோப் பட்டது.
அமெச்சூர் வானியல் நிபுணரான அவருக்கு ஒரு நல்ல டெலஸ்கோப் வாங்குவதே முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் அதற்கான வசதியின்மையால் அவதிப்பட்ட அவர் தனது ரிடையர்மெண்ட்டில் கிடைத்த பெருந்தொகையைச் செலவளித்து அந்த எட்டு இஞ்ச் டெலஸ்கோப்பை வாங்கியே விட்டார்.
பிறகென்ன..? தினந்தோறும் இரவில் மொட்டைமாடியில் திவ்யாவின் கண்களில் தம் கண்களைப்பதித்து வானில் தோன்றும் வியப்புகளைக் கவனிப்பதுதான் தினசரி பணியாயிற்று.
மொட்டைமாடியில் அந்த டெலஸ்கோப்புக்காக பாதுகாப்பான கூரை அமைத்து பராமரித்து அதை அங்கே ஒரு கோயில் போல பாதுகாத்து வந்தார் தத்தா.
அவருடைய ஆசை வானில் தோன்றும் வால்நட்சத்திரத்தை முதன் முதலில் கண்டறிந்து உலகத்திற்கு சொல்லவேண்டும் என்பதும் அந்த வால் நட்சத்திரத்துக்கு தத்தா காமெட் என உலகம் முழுவதும் பெயர் சொல்லி வலம்வரவேண்டும் என்பதும் தான்.
வானியல் நிபுணர்கள் முதன் முதலில் கண்டறிந்து கூறும் வால்நட்சத்திரத்துக்கு கண்டறிந்தவர் பெயரை வைப்பது மரபு.
‘’ இந்தாங்க... இந்த ஸ்வெட்டரைப் போட்டுக்கோங்க.. இதே போல அலட்சியமா இருந்தா டாக்டர் நவீன்பாபுகிட்ட சொல்லி பெட் ரெஸ்ட் எடுக்க சொல்லச்சொல்லிடுவேன்.. ‘’ செல்லமாக மிரட்டிய இந்திராணி தன் கணவனின் லட்சியத்தை அறிவாள். அந்த லட்சியத்துக்கு தன்னால் இயன்ற உதவியையும் ஆதரவையும் செய்யத்தயங்குவதில்லை அவள்.
வானில் தினம் தினம் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். ஒரு நாள் இரவில் இருந்தது போல் அடுத்த நாள் இருப்பதில்லை. புதிய புதிய நட்சத்திரங்கள் தோன்றிய வண்ணமே இருக்கும்.
ஆனால் தூமகேது என்னும் வால்நட்சத்திரம் நட்சத்திரஙகளைப்போல இல்லை. அவை சூரிய மண்டலத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து சரேலென வானில் தோன்றக்கூடியவை. கிரகங்களைப்போலவே அவையும் சூரியனைச் சுற்றியே வருபவைதான். ஆனால் அதன் பயணப்பாதை ( ஆர்பிட்)மிகவும் விசாலமானது.
நெருப்புக்கோளமாக வரும் வால் நட்சத்திரம் சூரியனின் அருகாமையில் வரும்போது மிக நீளமான ஒளிவால் ஒன்று முளைத்துவிடும்.சூரிய ஒளியின் உதவியால் அது பிரகாசமானதாக ஒளிரும்.
பின்னர் இருளில் மறைந்து கண்காணாமல் போய்விடும். மீண்டும் பல ஆண்டுகள் சில சமயம் சில நூற்றாண்டுகள் கழித்தே மீண்டும் கண்களுக்குத்தெரியவரும்.
மிகப்பெரிய வானியல் ஆராய்ச்சியாளர்கள் பெரிய பெரிய சக்திவாய்ந்த டெலஸ்கோப்புகளை வைத்துக்கொண்டு ஆராய்கையில் இந்த அமெச்சூர் தத்தாவுக்கு தனது எட்டு இஞ்ச் டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு கண்டறியலாம் என்று நம்பிக்கை கொள்ளச்செய்தது எது..?
பலநேரங்களில் முழுநேர வானியல் நிபுணர்களால் கண்டறிய இயலாத வானின் அற்புதங்கள் தத்தா போன்ற அமெச்சூர் வான சாஸ்திரிகளால் கண்டறியப்பட்டுள்ளன என்பது தான் உண்மை.
அதிலும் தத்தா மிகவும் தன்னம்பிக்கை உடையவர். அவருக்கு தன் வாழ்நாளில் ஒரு வால் நட்சத்திரத்தைக் கண்டறியும் வாய்ப்பு வருமென்றே திடமாக நம்பினார்.
ஆம் ... அவரது நம்பிக்கை பொய்க்கவில்லை.
தொடரும்..
Bookmarks