தூம கேது... பகுதி ஏழு..! ( நிறைவுப் பகுதி )
ல]ண்டனில் இருந்து திரும்பியநாள் முதல் மனோஜ் தத்தா சர் ஜானுடன் அடிக்கடி தொடர்புகொள்ளத்தவறவில்லை.இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். ஒருவரை ஒருவர் திறமைகலை வியந்துகொண்டனர். அவர்களின் தொடர்பில் ப்ராஜக்ட் லைட் பிரிகேடின் முன்னேற்றம் குறித்த பரிமாற்றங்களும் இடம்பெறத் தவறவில்லை.
ஆனால் கடிதத்தைப் பிறர் எவர் படித்தாலும் விளங்கிக்கொள்ளாதவாறு சங்கேதங்களில் பரிமாறிக்கொண்டார்கள்.
தத்தா தனது திவ்யாவியின் உதவியுடன் அந்த வால் நட்சத்திரத்தைத் தினமும் கவனித்து தினம் தினம் அதன் தொலைவைக் கணக்கிடத்தவறவில்லை.
இப்போது வாலும் முளைத்துவிட்டிருந்தது.. தத்தாவுக்கு.. காமெட் தத்தாவுக்கு. ..
எதிர்பார்த்த மாதிரி அல்லாமல் அந்த வால் நட்சத்திரம் ஆவியாகாமல் சூரியனைச் சுற்றிவந்த வண்ணம் பூமியை நெருங்கிக் கொண்டிருந்தது.
லைட் ப்ரிகேட் ப்ராஜக்டில் தொடர்புகொண்ட அனைவருக்கும் காமெட் தத்தா பூமியுடன் மோதப்போவது திண்ணமாகத் தெரியவந்தது.
அக்டோபர் மாத நடுவில் சர் ஜானுக்கு தத்தாவிடமிருந்து வந்திருந்த கடிதத்தில் லண்டனைப்பற்றிய விவரங்களும் வானிலை அறிக்கையும் கால் பந்தாட்ட விவரங்களும் சமீபத்திய இடைத்தேர்தலைப்பற்றியும் எழுதப்பட்டு இருந்தாலும் லைட் பிரிகேடின் துவக்கம் பற்றியும் குறிப்பைக் கொடுத்திருந்தார்.
சரியான நேரத்தில் அணு ஆபத்துகளுடன் விண்கலம் வானில் ஏவப்பட்டது.
ஆனால் சரியான நேரத்தில் சரியான திசையில் சென்று வால் நட்சத்திரத்தை எதிர்கொள்ளுமா..?
சரியான சமயத்தில் ரிமோட் கண்ட்ரோல் சொதப்பாமல் வேலை செய்யுமா..?
முக்கியமான நேரத்தில் அணுப்பிளவு அங்கே நடவாமல் போய்விட்டால் என்ன ஆகும்..?
இவை எல்லாம் ஒரு குழுவினரின் தினசரி கவலைகள் ஆயின.
தத்தாவுக்கு தனது நிலைகொள்ளா தவிபை எவரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூட இயலாதது சிரமமாக இருந்தது.
வெளிப்படையாக தமது தவிப்பைக் காட்டிக்கொள்ளாமல் துர்கா பூஜை தீபாவளி ஆகிய அனைத்திலும் அமைதியாகக் கலந்துகொண்டார்.
இரவில் திவ்யாவுடன் தனது மனக்கலக்கங்களை மானசீகமாகப்பகிர்ந்து கொண்டார்.
இப்போது வெறும் கண்களுக்கும் கூட தத்தா வால் நட்சத்திரம் தெரியத் தொடங்கியது.
நவம்பர் 18 ஆம் தேதி தத்தாவுக்கு சிறப்புத்தந்தி வந்து சேர்ந்தது. மிகவும் அவசரம் என்பதால் தந்தி உயர் அதிகாரியே நேரில் வந்து . தத்தாவிடம் அந்த தந்தியைச் சேர்த்தார். தத்தா இப்போது உலகப்புகழ் பெற்றவர் இல்லையா..?
அந்தத் தந்தி சர் ஜானிடம் இருந்து வந்திருந்தது. நடுங்கும் கைகளால் அதைப்பிரித்துப் படித்தார் தத்தா.
‘’ இனி நான் கிறிஸ்துமஸுக்காக டிசம்பர் 15 ஆம் தேதி பரிசு வாங்கலாம் என நம்புகிறேன் - ஜான் மேக்பெர்சன்.’’
அடுத்து எல்லாமே சுமுகமாக நடந்தது. டிசம்பர் 15 ஆம் தேதி காமெட் தத்தா பூமிக்கு மிக அருகில் வந்து சென்றது. மிகப்பெரிய கோளமாக சுமார் 80000 கிலோமீட்டர் தொலைவில் வந்து சென்ற காமெட் தத்தாவை கோடிக்கணக்கானோர் கண்டு வியந்தனர்.
மிகவும் குறைந்த எண்ணிக்கையில் சிலரே அந்த வால் நட்சத்திரம் எத்தனை அருகில் வரவேண்டியது என்பதும் வராமல் போயிற்று என்பதையும் அறிவர்.
தத்தாவின் அருகில் வந்து அவரது கையைப்பற்றிய இந்திராணி கேட்ட கேள்வி தத்தாவை திடுக்கிடச் செய்தது.
‘’ அந்த வால் நட்சத்திரம் பூமிக்கு எந்த தீங்கும் செய்யாமல் காப்பாற்றியது எப்படின்னு தெரியுமா உங்களுக்கு..? ‘’
தத்தா அதிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தார். ‘ இவளுக்கு ஒரு வேளை உண்மை தெரிந்துவிட்டதோ ? நாம் யாரிடமும் சொல்லாமல் தானே காப்பாத்தி வந்தோம்..? எப்படி இவளுக்கு உண்மை தெரியவந்தது..? ‘
ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல் இயல்பாகக் கேட்டார். ‘’ எப்படி..? ‘’
‘’ நான் ஏற்பாடு செய்த அந்த சாந்தியாகத்தால் தான்.. இப்ப புரியுதா ? ’’என்றாள்.இந்திராணி
‘’ குருஜி சொன்னபடி யாகம் மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் என்னென்ன அனர்த்தங்கள் நடந்திருக்குமோ..’’ இந்திராணி கூறிக்கொண்டே சென்றது அவர் காதில் சன்னமாக மறைந்து அங்கே லண்டனில் ஒரு வாரம் தூக்கம் தொலைத்து வல்லுனர்கள் அனைவரும் அலசி ஆராய்ந்த அந்த காட்சி மனத்திரையில் ஓடியது.
தத்தா புன்னகைத்துக்கொண்டார்.
முற்றும்.
இக்கதை ஜயந்த் நார்லிகர் என்பவரால் எழுதப்பட்ட தி காமெட் என்னும் ஆங்கிலக் கதையின் மொழியாக்கம்.
Bookmarks