நவீன இலக்கியம்.
இந்த வார்த்தைதான் என்ன பாடுபடுத்துகிறது மனிதனை. ஆதன் இதுவரை நவீன இலக்கியத்தில் இது புதிது என்ற வாதத்தை எடுத்து வைத்தபொழுதெல்லாம் அந்த நுட்பம் சங்க இலக்கியத்தில் எங்கு இருக்கிறது என்பதை நான் உதாரணங்கள் கொடுத்துள்ளேன்.
உதாரணத்திற்கு இப்போ சொன்னீங்களே மீமொழி.. இதுன்னா அதைக் குறிக்கும் அதுன்னு இதைக் குறிக்கும்னு.. அகத்திணையை நாம் பிரிச்சு அடையாளங்கள் குறித்து எழுதி இலக்கணமாக ஆக்கி வச்சமே அதானே இது..
நவீன இலக்கியம் என்பது பரிணாம வளர்ச்சியாய் இருந்திருந்தால் இவ்வளவு எதிர்ப்புகள் இருந்திருக்காது. ஆனால் அது புலியை பார்த்து போட்டுக் கொண்ட சூடு மாதிரி ஆகிப் போவதால்தான் அது பலரோட எதிர்ப்புக்கும் ஆளாகி விடுகிறது.
ஒரு காலம் வரப்போகிறது. யாராவது ஒருவன் ஒரு பிறமொழிப் புத்தகத்தை அது தமிழில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது என அறியாமலேயே இதற்கு ஈடாய் தமிழில் ஒரு புத்தகம் இருக்கிறதா என மேடையிட்டு பாடப்போகிறான். அதற்கும் ரொம்ப காலம் இல்லை. (அது நீயாக இருக்கக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன்).
"பொருள்" மயக்கம் இந்தக்காலத்தில் ரொம்பவே அதிகம்தான். பொருள் என்பதற்கு அர்த்தம் என்பது பண்டைய காலம். செல்வம் என்பது இந்தக் காலம். திருக்குறளின் பொருட்பால் - சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் இரண்டுமே ஒரே வகையைச் சார்ந்தவை.
தர்ம - அர்த்த - காம - மோட்சம் என்பது இந்திய மதங்களில் பொதுவானது.. திருக்குறளில்
தர்ம - அறத்துப் பால்
அர்த்த - பொருட்பால்
காம - காமத்துப்பால்
இதைக் காணும் பொழுது மோட்ச என்னும் தத்துவ (தத்துவம் என்றால் உண்மைப் பொருள் என்று அர்த்தம்) விளக்கங்கள் மறைக்கப்பட்டனவா இல்லை மறைந்து விட்டனவா என்ற கேள்வி உண்டாகும்.
திருக்குறள்
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
அர்த்தமுள்ள அரட்டையில் பாகவதத்தில் வரும் ஜடபரதன் கதையைச் சொல்லி இருப்பேன்.
மானைப்பத்தி நினைச்சுகிட்டே இருக்கிறப்ப உயிர் பிரிஞ்சதால அது மேல பற்று வைச்சு இருந்ததால அடுத்து ஜன்மமும் வாய்ச்சது; மானா பிறந்தார். போன ஜன்மத்திலே அவர் செஞ்ச தவத்தால அந்த பிறப்பு சமாசாரங்கள் நினைவு இருந்தது. இப்படி ஒரு தவவலிமை இருந்தும் மோட்சம் பெறுகிற வாய்ப்பை வீணாக்கிட்டோமேன்னு வருத்தப்பட்டது. இந்த ஜன்மத்திலே அதே தப்பை செய்யக்கூடாதுன்னு கவனமா இருந்து இறை நினைவோடேயே இருந்து அடுத்த ஜன்மத்திலே ஒரு அந்தணருக்கு மகனா பிறந்தது. அவரே ஜட பரதர்.
முற்பிறவி ஞாபகங்கள் இப்பிறவியிலும் வாய்க்கப் பெற்ற பரதன், எதுக்குமே எந்த ரியாக்ஷனுமே செய்யாம வாழ்ந்தார். அதனால மக்கள் அவரை ஜடம் என அழைத்தனர்.
அப்பா பூணூல் போட்டு வேதம் சொல்லிக் கொடுக்க முயற்சி பண்ணி பிரயோசனமின்றி செத்தார். அண்ணன்மார்கள் கைகழுவினர். யாராவது எதாவது கொடுத்தா சாப்பிடுவார். எதாவது செய்யச் சொன்னா செய்வார். எந்த முயற்சியும் இல்லாம இப்படி அவதூதனா சுத்திகிட்டு இருக்கும் பொழுது ஒரு முறை கொள்ளையர்கள் கையில் மாட்டிக் கொண்டார். அவர்கள் செய்த எந்த துன்பத்திற்கும் இவர்கிட்ட இருந்து ரியாக்ஷனே இல்லை. அம்மனே பொறுக்காம வந்து அவர்களை அழிக்க அதுக்கும் இவர் ரியாக்ஷன் காட்டலை.
ஒருமுறை இவர் பாதையில் போய்கிட்டு இருக்கறப்போ, சௌவிய மன்னன் ரகுகுணன் . மகாமுனிவர் கபிலரைப் பார்த்து ஆசிர்வாதம் வாங்க பல்லாக்கில் புறப்பட்டுகிட்டு இருந்தான் பல்லாக்கு தூக்க ஆள் பத்தலைன்னு பாதையில போய்கிட்டு இருந்த பரதனை புடிச்சி இழுத்து தூக்க வச்சாங்க. பரதனுக்கு பல்லாக்கு தூக்கி பழக்கமே இல்லை. அதுவுமில்லாம அவர் தரையில் புழு பூச்சி எதாவது இருந்தா மிதிச்சிடக் கூடாது என்ற ஜாக்கிரதையின் காரணமா குனிஞ்சு கிட்டே மெதுவா போனாரு. மன்னருக்கு இது ரொம்ப அசௌகரியமா போயிருச்சி..
பல்லாக்கு ஏன் இப்படிப் போகுது பல்லாக்குத் தூக்கிகளைக் கேட்க, பல்லாக்குத் தூக்கிகள் இவன் தான்.. ஒழுங்கா தூங்க மாட்டேங்கறான் என ஜடபரதனைக் கைகாட்டறாங்க.
ஏண்டா, பாக்க வாட்டசாட்டமாத்தானே இருக்க, இப்பதானே தூக்க ஆரம்பிச்ச, அதுக்குள்ள என்ன களைப்பு? குசும்பா? பொளந்துருவேன் பொளந்துன்னு ராஜா கத்துறார், பரதன் ஜடமா நிக்கிறார்..
டேய் யார்டா நீ? அப்படின்னு ராஜா கேட்க,
பரதன் முதன் முறையா வாயைத் திறந்து பதில் சொல்றார்..
நான் யார்? அப்படின்னுதான் தேடிகிட்டு இருக்கேன், இதோ இருக்கே இந்த உடல் இது நானல்ல. எதிரிலே நிற்கிறதே இன்னொரு உடல் அது நீயல்ல. இவை வெறும் உடல்கள்.. மாயைகள். இதிலிருக்கும் ஆன்மாக்கள் இருக்கே அதுதான் நிஜம். அந்த ஆன்மாவுக்குன்னு எந்த உணர்வும் தனியே கிடையாது, இப்போ பார்த்தியே அதே மாதிரியான உணர்வுகள் இல்லாத ஜடங்கள் அந்த ஆன்மாக்கள். ஆன்மாக்கள், உடல்கள், மாயை, ஜீவாத்மா, பரமாத்மா அப்படின்னு பெரிய லெக்சர் அடிக்க ஆரம்பிக்கிறார். அனைத்து பற்றுகளையும் துறந்து இந்த மாய உலகில் இருந்து விடுவித்துக் கொள்வதே மோடசம் பெறும் வழி என உபதேசம் செய்கிறார்.
இதில இன்னொரு சூட்சுமம் என்னன்னா நான் வெகுநாட்களாக சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு தத்துவத்தை இவர் சொல்லி இருக்கிறார். (யார் சொன்னது? படிக்காம எனக்கு எப்படித் தெரிஞ்சது என்றெல்லாம் கேட்கப்படாது. அதற்கு காரண காரியங்கள் இருக்கலாம்)
பிரம்மம் - அதனுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டு சித்து - அசித்து.
சித்து அறிவுள்ளது. அசித்து அறிவில்லாதது.பருமனானது. சித்து பருமனில்லாதது. நுட்பமானது.
அசித்திலிருந்து உண்டான பஞ்ச பூதங்களினால் ஜடப்பொருள்கள் உண்டாயின. சித்திலிருந்து உண்டான நுட்பமான ஆன்மாக்கள் ஜடப் பொருளை உயிருள்ளதாக்குகின்றன.
அதாவது உடலில் உயிராக ஆன்மா.
இதில் பிரம்மம் இரு வகையாக விரவிக் கிடக்கிறது.
1. உடலில் உயிர் எப்படி நுட்பமாக அமைந்ததோ அப்படி ஆன்மாவில் பிரம்மம் நுட்பமாக உள்ளது (இது உள்நோக்கிய பயணம்)
2. உயிர் எப்படி உடலில் எப்படி பரந்து விரிந்ததோ அப்படி அனைத்தும் தன்னுள் அடங்கம் பிரம்மம் மிகப் பெரிய உயிரியாக திகழ்கிறது. நம் உடல் அவருக்குள் ஒரு அணு. எப்படி மின்னோட்டம் எலக்ட்ரான் பாய்ச்சலால் உண்டாகிறதோ அப்படி ஆன்மாக்களின் பாய்ச்சலினால் படைப்புகள் தோன்றி வாழ்ந்து மடிகின்றன. (இது வெளி நோக்கிய பயணம்).
மனத்தை பழக்க முடியும் உடல் வேறு ஆன்மா வேறு என்பதை மனம் பழகிக் கொள்ளுமானால் உடலின் உபாதைகள் துன்புறுத்தாது. மனதை உள்நோக்கித் திருப்பி உயிரில் உயிராய் கலந்திருக்கும் பிரம்மத்தை நோக்கி பயணிப்பதே எளிதான முக்தி வழியாகும். அதற்கு படிகள் உண்டு
பக்தியாளருடன் கலந்திருத்தல்
ஆன்மாவை உணர்தல்..
ஆன்மாவிற்குள் உயிராய் இருக்கும் பிரம்மத்தை உணர்தல்
பிரம்மத்திடம் தன்னை ஒப்படைத்தால்.
இப்படி எல்லாம் சொல்றார்,
ஐயோ இவர் மிகப் பெரிய ஞானி அப்படின்னு அரசன் அவரை வணங்கி தன் குருவா ஏத்துக்கிறான்.
பல்லாக்கு ஏறியவன் அறியாமையில் இருந்தான்.
முதலில் அரசன் என்றான், தண்டிப்பேன் என்றான். பின்னர் பயந்தான். பின்னர் பணிந்தான்.. பின்னர் தெளிந்தான்.
பல்லாக்கு தூக்கியவனோ எப்பொழுதும் ஒரே மாதிரியே இருந்தான் ஏனென்றால் அவன் எதையும் இலட்சியம் செய்யலை,
ஆனால் அவரோ அதே ஜடமாக வாழ்ந்து மறைகிறார். மோட்சமடைந்தார் அப்படின்னு கதையில சொல்றாங்க.
இப்பொழுது திருக்குறளை இதனுடன் பார்க்க,,,
பல்லாக்கில் ஏறிய அரசன் - உயர்ந்தவனும் இல்லை
பல்லாக்கை தூக்கிய பரதன் - தாழ்ந்தவனும் இல்லை.
அறியாமையில் இருந்ததால் அரசன் தாழ்ந்தவனும் இல்லை
அறிந்து கொண்டிருந்ததால் பரதன் உயர்ந்தவனும் இல்லை.
பல்லாக்கு தூக்கியதோ அல்லது பல்லாக்கில் இருந்ததுவோ அதெல்லாம் அறத்தின்பாற்பட்டது அல்ல. அது வினைபயன் அது இது என்றாலும் அதில் அர்த்தம் இல்லை. ஏனென்றால்
பல்லாக்கைத் தூக்கிய பரதனும் மோட்சமடைந்தான்
பல்லாக்கில் வந்த அரசனும் மோட்சமடைந்தான்.
ஆகவே தர்மத்தின் வழி இன்னதுதான் என்ற ஒரு கருத்திற்கு அவசரப்பட்டு வந்து விட வேண்டியது இல்லை. ஒருவன் துன்பப்படுகிறானோ இல்லை இன்பப்படுகிறானோ அதற்கு தர்மம் காரணம் இல்லை. பல்லாக்கில் போவதும் பல்லாக்கு தூக்குவதும் இரு நிலைகள் அவ்வளவே.
இப்போ திருக்குறளை கவனியுங்க..
சிவிகை பொருத்தானொடு ஊர்ந்தான் இடை..
பல்லாக்கை தூக்குபவனோடு பல்லாக்கில் செல்லுபவனும் அவரது நிலைகள் இடையில் வந்து செல்லுபவை. இவை காலத்தால் மாறலாம். அறிவால் மாறலாம்.. ஞானத்தால் மாறலாம் இன்னும் எத்தனை வழிகளிலும் மாறலாம்.
அறத்தா றிதுவென வேண்டா
அவை தர்மத்தின் விளைவுகள் அல்ல. தர்மம் இப்படிப்பட்ட தற்காலிக இன்ப துன்பங்களிற்கு காரணமாக அமைவதில்லை.
தர்மம் என்பது தினசரி இன்ப துன்பங்களுக்குக் காரணமில்லை.
பின்னர் வேறென்ன?
தர்மத்தின் வழி என்னவென்றால் நிலைத்த பயனைத் தருவதாகும்.
அதையெல்லாம் அப்புறம் பார்ப்போம்..
இப்ப முக்கியப் பகுதிக்கு வருவோம்.
ஒரு படைப்பில் உள்ளது ஓர் அனுபவம். அது ஒர் அக அனுபவம். அந்த அக அனுபவத்தை நாம் கருத்துக்களாக ஆக்கிக்கொள்ளலாம். அக்கருத்துக்கள் அந்த ஆசிரியர் சொன்னவை அல்ல, நாம் அடைந்தவை. நமக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் கிடைக்கிறது, அதில் இருந்து நாம் சில சிந்தனைகளை அடைகிறோம். அச்சிந்தனைகள் அந்த அனுபவத்துக்குள் உள்ளனவா என்ன? அதே அனுபவத்தை அடைந்த இன்னொருவர் இன்னொரு கருத்தைத்தானே அடைகிறார்? அதேபோன்றதே இலக்கிய அனுபவம். அது நிஜ வாழ்க்கை அனுபவம்போன்ற ஒன்றை நம் கற்பனையில் நிகழ்த்துகிற்து
நம்ம ஊரில் இதனால்தான் போலிச்சாமியார்கள் அதிகரித்து விட்டார்கள். அவரோ புரியாம எதையோ சொல்லி வைக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லி வளர்த்து விட்ட குப்பைகள் எவ்வளவு தெரியுமா?
ஒரு படைப்பு புகழப் படவேண்டியது அதைப் படைத்தவனின் அறிவுக்கா? இல்லைப் படிப்பவனின் அறிவுக்கா? இங்கயே ஜெயமோகனின் இந்த இலக்கியத்தைப் பற்றிய கருத்து செத்துப் போய்விடுகிறது, மன்றத்தில் பல படைப்புகளைப் படித்தவர்களுக்குத் தெரியும். பல நேரங்களில் பின்னூட்டங்கள் படைப்பை தூக்கிச் சாப்பிட்டு இருக்கின்றன. அப்படியானால் அந்தப் படைப்பு இலக்கியமல்ல. பின்னூட்டம்தான் இலக்கியம்.
இயற்கையில் பலப் பல விஷயங்கள் இருக்கின்றன. எதைப் பார்த்தாலும் நமக்கு கருத்துகள் தோன்றுகின்றன. அனுபவிக்கிறோம். போற்றுகிறோம். அதற்கும் இலக்கியத்திற்கும் வித்தியாசம் இல்லையா என்ன?
தன் அனுபவங்களை தன் போக்கில் எழுதுவது இலக்கியம் அல்ல. தயவு செய்து அதை ஏற்றுக் கொண்டு விடாதீர்கள். அப்புறம் நித்யானந்தா மிகப் பெரிய இலக்கியவாதி (200 க்கும் மேல புத்தகம் எழுதி இருக்காராம்) என ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கும். படிப்பவனுக்கு அவன் அனுபவத்தால் கற்பனை ஏற்படுவது இயல்பான ஒன்று. அப்படி அனுபவம் இல்லாதவனுக்கும் அதை கற்பனையாக அனுபவிக்க வைப்பதே இலக்கியம் ஆகும்.
இன்னொரு வேடிக்கை.. இதை விட வேடிக்கையான ஒன்று இல்லை.
நம்முடைய கற்பனையை தூண்டி விடக்கூடிய இயல்பே இலக்கிய படைப்பை ஆழம் மிக்கதாக ஆக்குகிறது. இதையும் நாம் நம் அனுபவத்தில் இருந்தே உணரலாம். ஓர் அனுபவத்தில் நம்மால் புரிந்துகொள்ளமுடியாத ஒரு புதிர் இருந்தால், அதை நாம் வகுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், நாம் அதைப்பற்றியே சிந்திப்போம் இல்லையா? நம் மனம் அதைநோக்கியே சுழன்றுகொண்டிருக்கிறது இல்லையா?
ஆகவேதான் முக்கியமான இலக்கிய ஆக்கங்கள் முழுமையாக எல்லாவற்றையும் சொல்வதில்லை. எவ்வளவு குறைவாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு குறைவாகச் சொல்லி மிச்சத்தை வாசகக் கற்பனைக்கே விட்டுவிடுகின்ரன. அதிகமாக கற்பனைசெய்ய வைக்கும் இலக்கியம் அதிகநேரம் நம்முடன் இருக்கிறது. நம்மை அதிகமாக பயணம் செய்ய வைக்கிறது.
இதன்படிப் பார்த்தால் மிகச் சிறந்த இலக்கியம் ஒண்ணுமே புரியாமல் எழுதப்பட்டது ஆகும். இலக்கியம் என்பது அதி புத்திசாலிகளுக்காக எழுதப்படுவது அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
இன்றுவரை நீண்ட நாட்களாக இருக்கும் எல்லா இலக்கியங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் எல்லோருக்கும் எதாவது இருக்கும். குழந்தைக்கு சொல்லும் தாலாட்டில் இருந்து சங்கங்களில் விவாதிப்போர் வரை அவரவர் தேவைக்கேற்ப அது விரியும். குவியும். ஆனால் ஒவ்வொருவருக்கும் எதாவது இருக்கும். இலக்கை இயம்புவதே இலக்கியம். இலக்கே இல்லாமல் பயணிப்பது அல்ல.
இலக்கியம் என்பது மேதாவிகளுக்கே என்ற அந்த போலித்தனம், நவீன இலக்கியத்தின் வறட்டு கௌரவமாக இருக்கிறது. அதை வயலில் களை பறிக்கும் போது வாழ்க்கைத் துணையாய் பாட்டுக்களைக் கொண்ட தமிழன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் சரியான வாதமில்லை.
புதிது புதிதாய் கற்று கொள்ள வேண்டியது படைப்பாளியின் கடன். அப்படிக் கற்றதை படிப்பாளிக்கு புடைத்துக் கொடுப்பதும் படைப்பாளியின் கடனே.
அப்படி அல்லாமல் படிப்பவரே புடைக்கணும் என்பது படைப்புத் தொழிலல்ல. தரகு வேலை. (ஒருவர் பொருளை இன்னொருவருக்கு விற்பது)
யாருக்காக படைக்கிறோம் என்ற கேள்வி எழும் பொழுது மக்களுக்காக என்ற பதில் உண்மையாக ஒலிக்குமானால் அதுதான் இலக்கியம்.
Bookmarks