விடிந்தால் விமலாவுக்குக் கல்யாணம். விமலா என் உயிர்த் தோழி.கல்லூரியில் நானும், அவளும் மூன்று வருடங்கள் படித்தோம். படிப்பு முடிந்த கையோடு , நல்ல வரன் அமைந்ததால் , விமலாவின் தந்தை அவளுக்குத் திருமண ஏற்பாடுகளை செய்துவிட்டார்.
சென்ற வாரம், திருமணப் பத்திரிகை கொடுப்பதற்காக விமலா, என் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் வந்துவிட்டுப் போனதிலிருந்து , அம்மா , விமலாவையே நினைத்துக் கொண்டு இருந்தாள்.
" மஞ்சு !" அம்மா கூப்பிட்டாள்.
" என்ன அம்மா ? என்ன யோசனை?" என்று கேட்டேன்.
" விமலா மாதிரி ஒரு பெண் எனக்கு மருமகளாக வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! ஆனால் எனக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை! திருமணப் பேச்சு எடுத்தாலே உன் அண்ணன் எரிஞ்சு விழறான்.எனக்கும் வயசாகி விட்டது. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணாமலேயே கண்ணை மூடிவிடு வேனோன்னு பயமாயிருக்கு! " என்று அம்மா அழுதுகொண்டே சொன்னாள்.
" கவலைப் படாதே அம்மா ! காலநேரம் வந்தா எல்லாம் தன்னால நடக்கும்."
அம்மா அமைதி ஆனாள்.
பொழுது விடிந்தது. ஒன்பது மணிக்கு முகூர்த்தம்.குளித்துவிட்டு புறப்படத் தயாரானேன்.
" அண்ணா ! நீயும் விமலா கல்யாணத்துக்கு வர்றியா ?"
" இல்ல மஞ்சு! நீ மட்டும் போய் வா!"
" உன்ன விமலா இதுவரைக்கும் பாத்ததில்ல! உனக்கு இன்னிக்கி லீவு தானே! வா! நாம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்."
" சரி " என்று சொன்னான் அண்ணன் பாஸ்கர்.
அம்மாவிடம் சொல்லிவிட்டு இருவரும் ஸ்கூட்டரில் புறப்பட்டோம்.மண்டபத்தை அடைந்தோம். முன்வரிசையில் நானும், அண்ணாவும் அமர்ந்தோம். மணமேடையில் விமலா இருந்தாள். விமலாவின் அப்பா பதட்டமாக இருந்தார்.
முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது. மாப்பிள்ளை இன்னும் வரவில்லை. மாப்பிள்ளையின் அப்பா , விமலாவின் அப்பாவுடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.சாதரணமாக பேசிக்கொண்டு இருந்தவர் திடீரென்று கத்த ஆரம்பித்துவிட்டார்.
' நிச்சயத்தின்போது நாற்பது பவுன் போட்டீர்கள். மீதிப் பத்து பவுன் நகையை திருமணத் தேதிக்குள் போடுவதாகச் சொன்னீர்கள்! ஆனால் இதுவரையில் எதுவும் காணோம். கேட்டால், ஏதோ சாக்குப் போக்கு சொல்கிறீர்கள்! ஒரு குண்டுமணித் தங்கம் குறைந்தால் கூட ,என் பையன் தாலி கட்டமாட்டான்."
விமலாவின் அப்பா, காலில் விழாத குறையாகக் கெஞ்சிப் பார்த்தார். ஆனால் மாப்பிள்ளையின் அப்பா மசியவில்லை. பையனை அழைத்துக் கொண்டு மண்டபத்தைவிட்டு வெளியேறிவிட்டார்.
விமலாவின் அப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே சாய்ந்துவிட்டார்.விமலா , அழுதுகொண்டே ,அப்பாவைத் தாங்கிப் பிடித்தாள். வந்திருந்த கூட்டம் மெதுவாகக் கலையத் தொடங்கியது. நிலைமையைப் புரிந்துகொண்ட நான் , சட்டென்று கூட்டத்தினரை நோக்கி,
" யாரும் போகாதீங்க! இந்தக் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்!தயவு செய்து எல்லாம் உட்காருங்க!" என்று கத்தினேன்.
கூட்டம் அமைதியாக உட்கார்ந்தது.
என் அண்ணன் பாஸ்கரிடம் அவசரமாகப் பேசினேன்.
" அண்ணா! இந்தக் கல்யாணத்துக்கு நீ சம்மதிக்க வேண்டும். பாவம் விமலா! .இந்தக் கல்யாணம் நின்று போய்விட்டால் , விமலாவுக்கு மறுபடியும் கல்யாணம் நடக்காது.' ராசியில்லாதவள்' என்று இந்த சமுதாயம் அவளுக்குப் பட்டத்தை சூட்டிவிடும். கல்யாணம் நின்று போனால் அவளுடைய அப்பாவும் உயிரோடு இருக்கமாட்டார். யோசனை செய்யாதே! சரி! என்று சொல் "
" சாரி மஞ்சு! அம்மாவைக் கேட்காமல் ,நான் எதுவும் சொல்ல முடியாது."
" சரி ! அம்மாவிடம் பேசு."
பாஸ்கர் அம்மாவுடன் செல்போனில் பேசினான்.பிறகு என்னைப் பார்த்து ," அம்மா சரி என்று சொல்லிவிட்டாள்." என்று சொன்னான்.
அடுத்த நிமிடம் , விமலாவின் அப்பாவுடன் நானும், அண்ணாவும் பேசினோம்.
" விமலாவுக்கு சரி என்றால் எனக்கும் சம்மதம்தான்." என்று சொன்னார்.
விமலாவை நான் பார்த்தேன். அவள், வெட்கத்தால் தலை குனிந்து இருந்தாள்.
" சீக்கிரம் ஆகட்டும்! முகூர்த்த நேரம் முடியப் போறது! வந்து உட்காருங்கோ!" ஐயர் அவசரப் படுத்தினார்.
அடுத்த நிமிடம் , நான் மணமேடையில் அமர்ந்தேன்.ஐயர் மந்திரம் சொல்ல விமலாவின் கழுத்தில் தாலி கட்டினேன்.
திருமணம் முடிந்தவுடன் ஆசி பெறுவதற்காக நானும், விமலாவும் அவளுடைய அப்பாவின் காலில் விழப்போனோம்.
திடீரென்று என்னை அப்படியே அணைத்துக்கொண்டு
" மஞ்சுநாத் ! நீங்கள் எனக்கு மாப்பிள்ளை மட்டுமல்ல! என் மானம் காத்த கடவுளும் நீங்கள்தான்!" என்று சொன்னார். ஆனந்தக் கண்ணீர் கண்களில் இருந்து வழிந்து கொண்டு இருந்தது.
Bookmarks