”நீ என்ன சொன்னாலும் சரி இனிமே நான் அந்த வேலைக்குப் போக மாட்டேன்,” என்றான் முரளி.
”கல்யாணமான இந்த ரெண்டு வருஷத்துல இதோட எத்தினி வேலைக்கு மாறிட்டீங்க? ஒரு இடத்துலயாவது தொடர்ச்சியா ஆறு மாசம் இருந்திருக் கீங்களா?”
”நான் என்ன பண்றது? இந்த மேனேஜர் சரியான முசுடு.
எதுக்கெடுத்தாலும் என்மேல எரிஞ்சு எரிஞ்சு விழறான். எல்லார்க்கும் முன்னால என்னக் கன்னாபின்னான்னு திட்டறான். எனக்குத் தன்மானம் தான் பெரிசு. நீயுமாச்சு ஒன் வேலையுமாச்சின்னு ராஜினாமாக் கடிதத்தை அவன் மூஞ்சுல விட்டெறிஞ்சுட்டு வந்துட்டேன்.”
”இப்படி முணுக்குன்னா ராஜினாமாக் கடிதத்தை விட்டெரிஞ்சிட்டு வந்தா அதனால யாருக்கு நஷ்டம்? நாம சரியா வேலைச் செய்யலேன்னா மேனேஜரா இருக்குறவங்க, கொஞ்சம் சத்தம் போடத் தான் செய்வாங்க. நாம தான் நம்ம முன் கோபத்தை கொஞ்சம் அடக்கிட்டு, அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகணும். நாளைக்கே ஒங்க இடத்துல வேற யாராவது வேலையில சேர்ந்துடப் போறாங்க. நாம தான் சாப்பாட்டுக்கு வழியில்லாமத் திண்டாடப் போறோம். அது ஏன் ஒங்களுக்குப் புரிய மாட்டேங்குது?”
”தோ பாரு. தொண தொணன்னு சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காத. என்கிட்ட இருக்கிற திறமைக்கு ஒருத்தன் கிட்டப் போயி கையைக் கட்டி வாயைப் பொத்தி வேலை பார்க்கிறது எனக்குப் புடிக்கலே. அது என்னோட மெண்டாலிட்டுக்கு ஒத்து வராதுன்னு தெரிஞ்சுப் போச்சு. அதனால நானே சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.”
”அது சரி. இது எப்ப எடுத்த முடிவு? கம்பெனின்னா மொதல் வேணாமா? அவ்ளோ பணத்துக்கு நாம எங்கப் போறது?”
”அதைப் பத்தி நீயொன்னும் கவலைப்பட வேணாம். நானும் என்னோட நண்பனும் சேர்ந்து தான் ஆரம்பிக்கப் போறோம். பண விஷயத்தை அவன் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டான். மத்ததையெல்லாம் நான் பார்த்துக்குவேன்.”
”உருப்படியா எதையாவது செஞ்சாச் சரி.”
ஒரு மாதம் கழிந்திருக்கும்.
”அம்மா கற்பகம், என்னமோ மளிகை சாமான் இல்லேன்னு சொன்னியே. என்ன வேணும்னு எழுதிக் கொடு. போய் வாங்கிட்டு வரேன்.”
”ஏற்கெனவே எழுதி வைச்சிருக்கேன் மாமா. தோ தர்றேன்.”.
”என்னங்க, சும்மாத் தானே இருக்கீங்க. நீங்களும் மாமா கூட போயிட்டு வாங்களேன். தனியாளாத் தூக்கிட்டு நடக்க ரொம்பச் சிரமப்படுவாரு.”
”இருங்கப்பா, நானும் வரேன்.”
”என்னப்பா முரளி, கம்பெனி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லி ஒரு மாசம் ஓடிப் போயிடுச்சி. உருப்படியா இன்னும் ஒன்னும்
பண்ணக் காணோம். ஒங்கப் பையனுக்கு நீங்களாவது புத்திமதி சொல்லி ஏதாவது வேலைக்கு அனுப்பக் கூடாதான்னு தினந் தினம் மருமகப் பொண்ணு புலம்பறதைப் பார்த்தா ரொம்பப் பாவமாயிருக்கு. சம்பாதிக்கிற வயசுல நாள் முழுக்க ஒரு ஆம்பிளை இப்டி வீட்டுல வெட்டியா ஒட்கார்ந்திருந்தா யாருக்கும் மனசு கஷ்டமாத் தானே இருக்கும்?
எனக்கு வர்ற சொற்ப பென்ஷன் பணத்துல எவ்வளவு நாளைக்குத் தான் குடும்பத்தை நடத்த முடியும்? முடிவா என்ன தான் செய்யறதா உத்தேசம்? பணம் கொடுக்கறதாச் சொன்ன ஒன் நண்பன் கடைசி நிமிஷத்துல தர மாட்டேன்னு சொல்லிக் கையை விரிச்சிட்டானா?”
”அதல்லாம் இல்லப்பா. என்னோட திறமையிலேயும் உழைப்பிலேயும் என்னை விட அவனுக்கு நம்பிக்கை அதிகமா இருக்குப்பா.”
”அப்புறம் என்ன? ஆரம்பிச்சிட வேண்டியது தானே?”
என்னோட கவலையெல்லாம் மார்க்கெட்டிங் பத்தித் தான். முன்ன மாதிரி இப்ப இல்லப்பா. நான் இறங்க நினைக்கிற துறையில, போட்டி இப்ப ரொம்ப அதிகமாயிடுச்சி. பெரிய பெரிய வெளிநாட்டுக் கம்பெனியெல்லாம் இந்தியாவுக்குள்ள வந்து விற்பனையை ஆரம்பிச்சிட்டாங்க. அந்தப் பெரிய முதலைகளோட போட்டிப் போட்டு இந்தச் சின்ன மீன் குஞ்சால ஜெயிக்க முடியுமான்னு, ரொம்பப் பயமாயிருக்குப்பா. அதனால தான் ஆரம்பிக்கிறதா, வேண்டாமான்னு ஒரே குழப்பத்துல இருக்கேன்.”
”ஒரு நிமிஷம் முரளி. இந்தப் பையைப் புடி. போயி கொய்யாப் பழம் வாங்கிட்டு வந்துடறேன்.”
அடுத்த நிமிடம் அவன் தந்தை, ஷோரூம் வாசலுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த கிழவியிடம் போய் கொய்யாப் பழத்தை விலை கேட்டுக் கொண்டிருந்தார்.
முரளி அந்தக் கிழவியைப் பார்த்தான். மெழுகுவர்த்தியொன்றை ஏற்றி வைத்துக் கொண்டு, மொத்தமே பத்துப் பனிரெண்டு பழங்களை மூன்று நான்கு கூறுகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு ’கூறு பத்து ரூபா,’என்று கூவிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
தம் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து நீட்டி, ஒரு கூறு வாங்கி வந்த தந்தையைக் கோபமாக முறைத்தான் முரளி.
”ஏற்கெனவே வதங்கி அழுகல் நாத்தம் அடிக்குது. இதைப் போயி ஏன் வாங்கினீங்க? காசு கொஞ்சம் அதிகம்னாலும், பக்கத்து ஷோ ரூம்ல பாலீதின் பையிலப் போட்டுப் பிரஷ்ஷா வைச்சிருக்கான். அதை வாங்கியிருக்கலாம்ல? இதைச் சாப்பிட்டா ஒடம்புக்கு ரொம்பக் கெடுதல். தூக்கிக் குப்பையில போடுங்க.”
”நீ சொல்றது சரிதான்பா. நான் இதைச் சாப்பிடறதுக்காக வாங்கல,” என்று சொன்னவர், அடுத்த நிமிடம் அவற்றைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டார்.
”என்னடா காசைக் கொடுத்து வாங்கி குப்பைத் தொட்டியில போடறானே, இவனுக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு அப்படின்னு தானே நினைக்கிறே? இதை நான் வாங்குனதுக்கு ஒரு காரணம் இருக்கு முரளி.
ஒரு பெரிய ஷாப்பிங் மால் பக்கத்துல, இந்த ராத்திரி நேரத்துல முணுக் முணுக்குன்னு ஒரு மெழுகுவர்த்தியை ஏத்தி வைச்சிக்கிட்டு, அழுகிப் போன கொய்யாப் பழத்தைக் கூடத் தன்னால விக்க முடியுங்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோட கூவிக் கூவி வித்துக்கிட்டுயிருக்கிற, இந்தக் கிழவிக்கிட்ட நாம கத்துக்க வேண்டிய பாடம் நிறைய இருக்குப்பா.
அவளோட அந்த நம்பிக்கை வீண் போயிடக்கூடாதுங்கிறதுக்காகத் தான் நான் வாங்கினேன்.
இந்த வயசிலேயும் புள்ளைங்களை நம்பாம, உழைச்சிச் சாப்பிடணும்னு நினைக்கிறாளே, அது ரெண்டாவது காரணம்.
முரளிக்கு ஏதோ புரிவது போலிருந்தது.
Bookmarks