”ஆச்சா....பலகாரமெல்லாம் செஞ்சு முடிச்சாச்சா?”
கேட்டவரைப் பார்த்து....
“ஆச்சுங்க ஐயா....ஒவ்வொரு முறையும் பலகாரம் செஞ்சு முடிக்கும்போது தவறாம இங்க வந்து நிக்கறீங்களே ஏங்கையா...எங்க மேல நம்பிக்கையில்லையா?”
“அட பைத்தியக்காரா....என்கிட்ட வேலை செய்யறவங்கள நம்பாம வேற யாரை நம்புவேன்....எங்க என் மேல இருக்கிற விசுவாசத்துல....எனக்கு நஷ்டம் ஏற்பட்டுடக்கூடாதேன்னு தப்பு செஞ்சிடப்போறீங்களோன்னுதான் நானே வந்து நிக்கறேன்”
“என்னய்யா சொல்றீங்க நாங்க தப்பு செய்வோமா?”
“டே கொழந்த....அப்படி செய்யறது உன்னைப் பொருத்தவரைக்கும் தப்பில்ல....எஜமான விசுவாசம்....ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும்....தப்புதான்....அத நீங்க செஞ்சாலும் நான் செஞ்ச மாதிரிதான்....சரி...சரி....அந்த எண்ணையையெல்லாம் ஒரு டப்பாவுலக் கொட்டி...எடுத்துட்டுப் போய் முனிசிபாலிட்டிக் குப்பைக் கொட்டுற இடத்துலக் கொட்டிட்டு வந்துடுங்க”
“ஐயா அடிக்கடி சொல்றதுதான்....தப்பா நினைச்சுக்காதீங்க....ஒருமுறை உபயோகப்படுத்திய எண்ணையை.....இன்னொருமுறை உபயோகப்படுத்தக்கூடாதுன்னு அப்படியே குப்பையிலக் கொட்றதுக்கு....மனசு கேக்கலைங்க....இன்னும் ஒரு தடவையாவது உபயோகப்படுத்தலாமே....லாபம் கிடைக்குமில்லைய்யா?”
“கொழந்த...எனக்கு என் பாட்டன் முப்பாட்டன் சேத்துவெச்ச சொத்தே ஏராளமா இருக்கு. ஆனா உக்காந்து திண்ணா.....உள்ளதெல்லாம் போயிடும்....அதனாலத்தான்.....லாபக் கணக்குப் பாக்காம...முதலுக்கு வியாபாரம் பண்றேன்....இதை ஏன் அண்ணதானமா செய்யக்கூடாதுன்னு கேப்ப.....ஓசியாக் கொடுத்தா....அதுக்கு மதிப்பில்லடா....அதுக்குதான் ஒரு விலை....எல்லாருக்கும் கட்டுப்படியாகிற விலை.....இந்த ஓட்டலுக்குப் போனா....ஆரோக்கியமான சாப்பாடு.....அடக்கவிலையில கிடைக்கும்ன்னு மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கு அதக் கெடுத்து நான் இன்னும் பணக்காரனா ஆக விரும்பல”
“உங்க நல்ல மனசுய்யா....ஆனா...இதே எண்ணையை நாம உபயோகிக்காம வேற ஓட்டல்காரங்களுக்குக் கொடுத்தா.....அவங்களுக்கும் மலிவா கிடைக்கும், நமக்கும் கொஞ்சம் பணம் கிடைக்குமேய்யா?”
“அப்ப இங்க சாப்பிடறவங்க நல்லாருக்கனும், நம்ம எண்ணையை...மறுபடி, மறுபடி உபயோகிச்சு செய்யுற பலகாரத்த வேற ஓட்டல்ல திண்ணுட்டு வியாதி வர்ட்டுன்னு சொல்றியா....அப்ப நாம நல்லது செய்யனுன்னு நினைக்கறதோட அடிப்படையே அடிபட்டுப் போயிடுதேடா....நல்லெண்ணை தயாரிச்சு விக்கறவங்களே இதயம் தயாரிப்புன்னு சொல்லும்போது....அந்த எண்ணையை உபயோகப்படுத்திப் பலகாரம் செய்யுற நாம ஏன் இதை இதயத்தோட தயாரிக்கக்கூடாது?.......மூளை ஆயிரம் சொல்லும்....ஆனா இதயம் ஒண்ணுதான் சொல்லும்......அதுலதான் நல்ல மனுஷன் இருக்கிறான்......எதுல வேணுன்னாலும் ஏமாத்தலாண்டா....ஆனா வயித்துக்கு சாப்பிடற சாப்பாட்டுல ஏமாத்துனா......அவன் மனுஷனே இல்ல.....நான் மனுஷனா இருக்க விரும்பறேன்...”
“பசின்னு வர்றவங்களோட பாக்கெட்டப் பாக்காம...பசியைப் பாக்குற, ஆரோக்கியத்தப் பாக்குற இந்த ஓட்டலோட ஓனர் நல்லா இருக்கனும்ப்பா”
தர்மலிங்கத்தின் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டுப் போகும் சிலரின் வார்த்தைகள் குழந்தைசாமியின் காதுகளில் விழுந்தது. உபயோகித்த எண்ணையைக் குப்பையில் கொட்டினான்......நிமிர்ந்துபார்த்து தர்மலிங்கத்தைக் கும்பிட்டான்.
Bookmarks