நான் கிரிக்கெட் தெரிந்து கொண்ட நாட்களில் எனக்கு முதலில் தெரிந்த பெயர் “சச்சின் டெண்டுல்கர்”.. அவர் வந்து ஆடினால் அந்த நாள் இந்தியாவுக்கானது என்பது சின்னவயதிலிருந்தே எல்லாருடைய மனதிலும் பதிந்து போன விஷயம். இந்தியாவைப் பொறுத்தவரையிலும் “ஹீரோ” அந்தஸ்து உள்ள எவரையும் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறோம். அதைப் போலவே சச்சினை தனது மானசீக ஹீரோ எனும் அந்தஸ்தில் தூக்கி ஆடாதவர்களே இருக்கமாட்டார்கள் எனலாம். இவருக்கு நாடுகடந்தும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிநாட்டு போட்டிகளின்போது காணமுடியும். மற்ற வீரர்களுக்கு இப்படியில்லை.
சரி... அப்படியென்ன சச்சின் கிழித்துவிட்டார் என்று கேட்பவர்களும் உண்டு. இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து சச்சின் பற்றிய சர்ச்சைகளும் விவாதங்களும் “தனக்காக ஆடினாரா. அணிக்காக ஆடினாரா” போன்ற பட்டிமன்றங்களும் இவர்களால் எழுப்பக் கூடும். அவர்கள் சொல்வது என்னவெனில்
1. இவர் ஒரு மேட்ச் வின்னர் கிடையாது
2. 90 களின் போது நடுங்குகிறார்.
3. தனது சதத்திற்காக ஆடுவதால் இவருக்கு பொதுநலம் கிடையாது.
4. இளம் வீரர்களுக்கு வழிவிடாமல் அணியில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்
5. இவரால் வாய்ப்பிழந்த வீரர்கள் அதிகம்
போன்ற எண்ணற்ற குற்றச்சாட்டுகள்!!
ஒவ்வொரு முறையும் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் சச்சின் ஒரு சதத்தின் மூலமாகவே பதில் தருகிறார்.. ஆனால் அந்த சதமும் இப்போது அடிக்க முடியாமல் திணருகிறார் என்பதையே இன்னொரு குற்றச்சாட்டாக வைக்கிறார்கள்... அதற்குக் காரணம் அவருக்கு வயது 38 முடிந்து 39 பிறக்கப் போகிறது என்பது மட்டும்தான்!!!!
என்ன ஆச்சு சச்சினுக்கு??
இக்கால பிராட்மன், கிரிக்கெட்டின் கடவுள், பிதாமகன், நந்தா, அவன் இவன் வரை இவர்தான் என்றாலும் இன்றைக்கு பெரிதாக பேசப்படும் விஷயம் “சச்சின் ஓய்வு பெற சரியான தருணம் இதுதான்” என்பதுதான். நாடு கடந்தும் ரசிகர்களைப் பெற்றிருக்கும் ஒரு வீரர். ஏராளமான சாதனைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு ஆளுமை, வயதின் காரணமாக ஓய்வு பெற இது சரியான நேரமா? அவ்வளவு மோசமாக ஆடிக் கொண்டிருக்கிறாரா?? சில புள்ளிவிபரங்கள் பார்த்தபிறகு விவாதத்திற்குச் செல்லுவோம்..
சச்சினின் கடந்த ஒருவருடம் - டெஸ்ட்
11 மேட்ச், - 21 இன்னிங்ஸ் - 778 ரன்கள் - 37.04 ஆவ் - 6 அரைசதம்
:ஒருநாள்:
12 மேட்ச் - 547 ரன்கள் - 45.52 ஆவ் - 2 சதம் - 2 அரைசதம்
12 மார்ச் 2011க்குப் பிறகு ஒரு சதமும் அடிக்கவில்லை என்பதைவிட அவரது கெரியரிலேயே சதமடிக்க ஆரம்பித்த பிறகு இவ்வளவு பெரிய இடைவெளி இல்லை என்பதுதான் உண்மை...
சச்சினுக்கு ஃபார்ம் போய்விட்டதா?. கண் மங்கிவிட்டதா? பழைய சச்சின் இனி அவ்வளவுதானா?
கிட்டத்தட்ட ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த சச்சின் இந்த சிபி சீரிஸில் பங்கெடுப்பதும், அதற்கு சுழற்சி முறையில் அணித்தேர்வும் “சச்சினது சதத்திற்காக” என்கிறார்கள்... அது எவ்வளவு தூரம் உண்மை?
விவாதிக்கலாமே?
Bookmarks