உயிர்ப்பதும் மரிப்பதுமாய்
தினம் தினம் போராட்டம்
இரவுக்கும் பகலுக்குமிடையே!
இரண்டுக்குமான சமரசம்
இன்னமும் உடன்பாடாகவில்லை.
தீராப்பகையின் தீவிரத்தால் தூண்டப்பெற்று,
ஆழ் உறக்கத்திலிருக்கும் இரவின் அடிவயிற்றை
அதிரடியாய்க் குத்திக் கிழிக்கின்றன
அநேக ஒளிக்கதிரம்புகள்!
செங்குருதி சொட்டும் கிரணங்களைக்
கடலிற் கழுவிப் பரிசுத்தமாக்கி
பவனிவருகின்றது பகற்பொழுது!
பார்வைக்கு அடங்காத பளபளப்போடும்
பலம் வாய்ந்த பெருந்திமிரோடும்
நாளெல்லாம் உலாவருகிறது.
குற்றுயிராய்க் காலடியில் கிடக்கும்
கருங்குவியலின் குறுநகையைக்
கவனிக்கத் தவறிய அது,
கர்வத்தின் பாத்திரத்தைக் கவிழ்த்துப் பருகியபடியே
உச்சந்தலையில் ஏறிய வெஞ்சூட்டு போதையுடன்
தள்ளாடிக்கொண்டிருக்கிறது உச்சிப் பொழுதில்!
சாயுங்காலத் தருணம் பார்த்திருந்த இரவு
சத்தமின்றி அதைச் சாய்த்துக் கிடத்தி
தாளாத வேகத்துடன் அதன் பிடறி கவ்வ…
பீறிட்டுத் தெறிக்கிறது செங்குருதிச் சாயம்!
வீறிட்டலறுகிறது வானம்!
விருட்டென்று பதுங்குகின்றன யாவும்!
மங்கிய இருள் மறைத்திருக்கும் பேராபத்துகளோடு
எங்கும் வியாபித்துக் கிடக்கும் இரவானது,
வெற்றியின் களிப்பில் மெய்மறந்து,
முற்றிய அசட்டையில் மனந்திளைத்தபடி
மென்துயில் கொள்ளத் தொடங்குகிறது,
தன்னைத் தானே மெல்ல உயிர்ப்பித்துக்கொண்டிருக்கும்
பகற்பொழுதைப் பற்றிய பிரக்ஞையற்று!
Bookmarks