பரமக்குடி பலஉயிர் குடித்தது
எதேச்சையாகவா...எதேச்சதிகாரத்தாலா
கல்லெறிந்ததாலா கடும்
சொல்லெறிந்ததாலா....
ஏதோ ஒன்றால்
அப்பாவிகள் சிதையெரிந்தது....
இனத்தலைவனின் இறந்தநாள்,
இன்றாகியது...இன்னா செய்யாதவரின் இறந்தநாள்
இப்படியும் நடக்குமென்றோ
இனிப்பு வாங்கித்தர வந்த தந்தை
இல்லாமல் போவாரென்றோ
அதிர்ச்சியில் அழ மறந்த
அந்தக் குழந்தைக்குத் தெரியாதே
கண்ணீரஞ்சலிக்காய் கூடியவர்
கண்ணியம் மறந்து
கல்லெறிந்தது குற்றமா....
காவல் வேலை விடுத்து
காலன் வேலை செய்த
காவலரின் குற்றமா....
குற்றம் யார்மீதாகினும்
சற்றும் சம்பந்தமில்லா உயிர்கள்
சுற்றும் நடப்பதை
முற்றும் உணர்வதற்குள்
வெற்றுடலை வீதியில் விட்டு...
வற்றாத் துயரை
உற்றாரிடம் விட்டுப் பிரிந்ததே....
ஊரைக் குறை சொல்வதா
ஊருக்குள் உலவும்
சாதி வேரைக் குறை சொல்வதா....
சாதிக்கணலை ஊதிப்பெருக்கும்
தலைவனைச் சொல்வதா...
இருக்கும்போதே உதவாதவன்
இறந்தபின் உதவுவானா எனக்கூட
அறிந்துகொள்ளாத தொண்டனை சொல்வதா...
உலகில் இருப்பது இரு இன சாதி
உயிர் பிரிந்தால் வெறும் பிண சாதி
இதை அறியாதவர்கள் அழிவதில் ஆதங்கமில்லை....
ஒன்றும் அறியாதவர்கள் அழிவதைக் கண்டு
என்றும் மனிதம் சுமக்கும் மனம் அழுகிறது....!!!
Bookmarks