கொல்லத்துடிக்குது மனசு..! பகுதி - 17
கொரியர் ஏஜண்ட்டிடம் எத்தனை போராடியும் விக்னேஷ் அந்த காணாமல் போன கொரியர் டாக்கெட் கிடைக்கப்பெறாமல் ஏமாற்றத்துடன் திரும்பவேண்டி வந்தது.
அரைமணி பொறுக்கச்சொன்ன முதலாளி ஒரு மணி ஆகியும் தகவல் கூறவில்லையே என்று விக்னேஷ் அவரை அணுகிக் கேட்டபோது ‘’ சாரி சார். பையன் எவ்வளவோ தேடியும் அந்த டாக்கெட் கிடைக்கலை. ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க.. எப்படியாச்சும் தேடிக்கண்டுபிடிச்சு ஒப்படைக்கிறேன்..’’ என்று பணிவுடன் தன் இயலாமை வியர்வையாய் வழியக் கூறினார்.
’’ பரவாயில்லை சார்.. எங்கே அந்த டாக்கெட் இருந்தது நான் கொஞ்சம் பார்க்கலாமா ? ‘’
இதோ என்றவர் விக்னேஷை உள்ளே அழைத்தார். வசந்தியை கடை வாசலில் இருக்கச்சொல்லிவிட்டு விக்னேஷ் உள்ளே நுழைந்தான்.
கடையின் பின்புறம் அந்த கட்டிடத்தின் வாகன பார்க்கை நோக்கி திறந்ததால் அங்கே இருந்த தட்டுமுட்டு சாமான்கள் கவனக்குறைவாகவே வைக்கப்பட்டு இருந்தது.
கடையின் உடனடிப் பின்பக்கம் ஏழெட்டு பைக்குகள் பார்க் செய்யப்பட்டு இருந்தன.
கடைக்காரப்பையனை உதவிக்கு அழைத்த விக்னேஷிடம் பையனை ஒப்படைத்துவிட்டு கடையைக் கவனிக்க விரைந்தார் முதலாளி.
‘’ உன் பேர் என்னப்பா..?’’ விக்னேஷ் அவனிடமிருந்து தகவல்களை வரவழைக்கும் நோக்கில் அன்பாகத் தொடங்கினான்.
‘’ மாரிமுத்து சார்..’’
’’அது சரி.. இத்தனை அலட்சியமா எல்லா தளவாடங்களும் போடப்பட்டு இருக்கே ..? திருட்டு போகாதா..? ‘’
’’ இல்ல சார்.எல்லாம் பழைய ஜெராக்ஸ் மெஷின். பொண கனம் கனக்கும். இத்தை எடுத்துக்கினு போய் என்னா செய்யமுடியும்..? ‘’
’’ அது சரி .. டெலிவரி ஆகாத கொரியரை இப்படித்தான் இங்கே குப்பையாக கொட்டிவைப்பீங்களா..? ‘’
‘’ ஐயோ இல்ல சாரே.. தப்பித்தவறி உங்க கொரியர் டாக்கெட் மட்டும் எப்படியோ இங்க விழுந்து இருக்கும் போல.. கிடைச்சுடும் சார்.. நான் தேடித்தரேன்.. ‘’
விக்னேஷ் புன்னகைத்தான்.
‘’ வேண்டாம் மாரிமுத்து. விடுங்க.. சரி இதைச் சொல்லுங்க .. இங்கே நிறுத்தி இருக்கும் பைக்குகள் எல்லாம் தினம் தினம் அதே இடத்தில் நிறுத்துவாங்களா இல்லை மாற்றி மாற்றி நிறுத்துவாங்களா..? ‘’
‘’ இல்ல சார்.. எல்லாருக்கும் தனி இடம் இருக்கு.. மாத்தி நிறுத்த மாட்டாங்க.. ‘’
‘’ ஓ.. உங்க கடையை ஒட்டி நிறுத்தப்பட்டு இருக்கே ஒரு டிவிஎஸ்.. அது யாருதுன்னு தெரியுமா..? ‘’
‘’ சரியா தெரியாது சார்.. அனேகமா டாப் ஃப்ளோர்ல இருக்காரு ஒருத்தர். ராகவன்னு பேருன்னு நினைக்கிறேன். ‘’
‘’ ஓ .. என்ன வேலை செய்றார்..? ‘’
‘’ அது தெரியாது சார்.. ஆனா ஸ்கேன் எடுக்க.. சில சமயம் பிரிண்ட் எடுக்க எங்க கடைக்கு வருவார்..லோனுக்கு டாகுமெண்ட் ஜெராக்ஸ் எடுக்க அடிக்கடி வருவாரு.. அப்படிதான் பழக்கம்.. ‘’ - ஏதோ குற்றம் செய்தவனைப்போல் அவன் குரல் சன்னமாக ஒலித்தது.
சன்னமாக சீட்டி அடித்தான் விக்னேஷ்.
’’கமான் அவர் என்ன வேலை செய்றார்னு உனக்கு கண்டிப்பா தெரிஞ்சு இருக்கனும். சும்மா சொல்லுப்பா.. உன்னை ஒன்னும் போலீஸ் விசாரணை செய்யலை. பயப்படாதே..’’
‘’ சரி சார்... அது வந்து... அவர் சி ஐ டி எஸ் ல வேலை செய்றார். சாஃப்ட்வேர் எஞ்சினியர். ரொம்ப நல்லவர் சார்..’’ இப்போது மாரிமுத்து குரலில் தயக்கமேதும் இல்லை.
கண்களை லேசாக இடுக்கிக்கொண்டு ஒரு கணம் யோசித்த விக்னேஷ் , ‘’ சரி சரி .. ரொம்ப நன்றிப்பா.. முடிஞ்சா அந்த டாக்கெட்டை சீக்கிரம் தேடிக்கண்டுபிடிச்சு எனக்கு கால் பண்ணு ‘’ என்றவன் தனது எண்ணைக் குறித்துக்கொடுத்துவிட்டு முன்பக்கம் விரைந்தான்.
கடைமுதலாளியிடமும் அதையே சொல்லிவிட்டு வசந்தியின் கைகளை இறுகப்பற்றியவண்ணம் விரைவாக தனது பைக்கை நோக்கி விரைந்தான் விக்னேஷ்.
அவன் பிடித்த இடம் கன்றிச்சிவந்து வலி எடுத்தாலும் வசந்திக்கு அது இன்பவேதனையாக இருந்தது என்பது அவள் கண்ணில் தெரிந்த பளபளப்பு காட்டியது.
தனது ஹெல்மெட்டை மாட்டிய விக்னேஷ் , ’’ வசந்தி, நான் கொஞ்சம் ஃபாஸ்டா பைக் ஓட்டப்போறேன். நீ பயப்படாமல் என்னை பிடிச்சுக்கோ .. சரியா..? ‘’ என்றவனின் குரலில் கண்டிப்பாக காதல் இல்லை.
ஆனால் வசந்திக்கு அந்த வார்த்தைகள் சொர்க்கத்துக்கே கொண்டு சென்றன.
உணர்வுகளைக் காட்டிக்கொள்ளாமல் அவன் பின்னால் அமர்ந்து அவனுடன் பல்லி போல் ஒட்டிக்கொண்டாள்.
சென்னையின் இரவு நேர இதமான சில்லென்ற காற்றும் விக்னேஷின் முதுகு வசந்தியின் மார்புக்கு அளித்த கதகதப்பும் அவளுக்கு தன்னை இழக்கவைத்தன.
இதை ஒன்றும் அறியாத விக்னேஷ் விரைவாகச் செல்லவேண்டிய அவசியம் உணர்ந்து பைக்கை வேகமாகச்செலுத்தி தனது அலுவலகம் வந்து சேர்ந்தான்.
அங்கே காரில் ஆ ஆறுமுகமும் மாணிக்கமும் கப்பல் கவிழ்ந்தாற் போல இவனுக்காகக் காத்திருந்தனர்.
துடிப்புகள் தொடரும்..
Bookmarks