கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 6
உண்மையில் மாணிக்கத்தின் கண்கள் ஏமாந்துதான் போயின.
மாணிக்கம் பின்னாலிருந்து பார்த்த போது விக்னேஷ் வசந்தியைக் கட்டிப்பிடித்து நின்ற மாதிரி தெரிந்தாலும் உண்மையில் அன்று வசந்தி கண்ணில் விழுந்து ரொம்ப நேரமாக அவளைக் கண்கலங்க வைத்துக் கொண்டிருந்த தூசியை அவ்வளவு நெருக்கத்தில் நின்று அவள் கன்னத்தை ஏந்தி நின்று ஊதியதால் மாணிக்கம் இருந்த குழப்பத்தில் கட்டிப்பிடித்ததாக எண்ணிவிட்டான். ( அப்பாடா... எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு மு மன்ற வாசிகள் கிட்ட : ) )
மாணிக்கம் தன்னை சுதாரித்துக்கொண்டு கனைத்தான். அப்போது தான் இவனைத்திரும்பிப்பார்த்த விக்னேஷ் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இவனிடம் அங்கே இருந்த சேரைக்காட்டி உட்கார வைத்துவிட்டு தன் பணியைத் தொடர்ந்தான்.
கண்ணில் இருந்த தூசி வெளியானதும் ஆசுவாசம் அடைந்த வசந்தி - வயது 27 - கல்வி பி ஏ பி எல். - கல்யாணம் ..? ஊஹூம். இன்னும் இல்லை. ராஜ சக்தி விமல் சிவஹரி போன்ற எளிஜிபில் பேச்சலர்களுக்காகக் காத்திருக்கும் கொள்ளை அழகி வசந்திக்கு ஒரே லட்சியம் விக்னேஷ் போல மிகப்புகழ் பெற்ற டிடெக்டிவாக ஆக வேண்டும் என்பது தான்.வசதி மிக்க பெற்றோரின் செல்ல மகள்.சுருக்கமா சொல்லப்போனால் ஓர் ஆண் பாரதி..!
அவள் விக்னேஷிடம் அசிஸ்டண்டாக சேர்ந்து இரண்டே வருடம் தான் ஆகிறது. அதற்குள் மிக சிக்கலான கேஸ்களில் இருக்கும் முடிச்சுகளைக் கூட அவிழ்க்கும் திறமையை விக்னேஷ் கற்றுக்கொடுத்து இருந்தான்.
விக்னேஷ் போன்ற டிடெக்டிவ் புலியுடன் இணைந்து செயலாற்றுவதில் கர்வம் உண்டு அவளுக்கு.
ஏன் இருக்காது...?
விக்னேஷ் தமிழகத்தின் மிகச்சிறந்த துப்பறிவாளனாக பெயர்பெற்று ஐந்து வருடங்கள் ஆகின்றன. 35 வயதில் அவன் இத்தனை பேர் பெற்றதுக்கு முக்கிய காரணம் அவனது சுறுசுறுப்பான மூளை. அவனிடம் வருபவர் தரும் சிற்சில நுனிகளைக் கொண்டு உடனேயே ஐம்பது சத விகிதம் என்ன நடந்தது என்பதை ஊகித்துவிடுவான். ஆனால் அதை யாரிடமும் பகிரமாட்டான். அவனுக்குரிய தனிபாணியில் விவரம் சேகரிப்பான்.
இத்தனை தகுதி இருந்தும் மணம் முடிக்காமைக்கு காரணம் - அவன் கல்யாண வாழ்க்கையை நம்புபவன் இல்லை. அது போகட்டும். அது அவன் தனிப்பட்ட பிரச்சினை.
’’ போய் நல்லா முகம் கழுவி கலைஞ்சு போன மேக்கப்பை டச் பண்ணிக்கிட்டு வா வசந்தி’’ - என்று புன்முறுவலுடன் அவளை தன் அலுவலக உள் அறைக்கு அனுப்பிய விக்னேஷ் ‘’ சொல்லுங்க மாணிக்கம் ... வாட் கேன் ஐ டூ ஃபார் யூ ’’.. - என்றான்.
மாணிக்கம் வியப்பின் உச்சியில் சேரின் நுனிக்கே வந்தான்.
’’ என் பெயர் மாணிக்கம்னு எப்படி உங்களுக்கு தெரியும் ’’ - என்றான்..
’’ அது மட்டுமா ..? நீங்க அமைச்சர் ஆ ஆறுமுகத்தின் அந்தரங்க ஆலோசகர் என்பதும் தெரியும்..’’ - மாணிக்கத்தின் வியப்பை இன்னும் அதிகமாக்கினான் விக்னேஷ்.
என்ன தான் அமைச்சரின் பி ஏ என்றாலும் கூடிய வரை பொது இடங்களில் தன்னைத் தலை காட்டிக்கொள்ளாமல் இருந்தான் மாணிக்கம். அவன் நேரடியாக அரசியலிலும் தலையிடுவது இல்லை. நெருங்கிய சொந்தமான ஓரிருவருக்கு மட்டுமே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி உதவி இருக்கிறானே தவிர வேறு எதிலும் தலையிட்டதும் இல்லை.
மாணிக்கம் அப்படி பட்டும் படாமலும் இருக்க வலுவான காரணம் ஒன்றும் உண்டு. என்ன தான் மாணிக்கம் ஆறுமுகத்தின் அந்தரங்க நிழல் என்றாலும் அவன் அவர் சார்ந்த கட்சியையும் அதன் போக்கையும் அறவே வெறுத்தான். நிறைய படித்து அரசியல் ஞானமும் உலகவியலும் மனோதத்துவமும் பொருளாதாரமும் கணிணி அறிவும் நிறைந்த மாணிக்கம் இப்படிப்பட்ட கேடுகெட்ட அரசியலை விரும்பாமல் இருப்பதில் வியப்பில்லை.
தன் அறிவுக்கும் திறமைக்கும் தக்க மேடை கிடைக்காமல் ஏழ்மையில் உழன்ற மாணிக்கத்தை இப்போது கோடியில் புரளும் மனிதனாக மாற்றிய அமைச்சருக்கு அவன் மிகுந்த நன்றியுடன் இருக்கிறான். அவ்வளவுக்குமேல் அவன் யோசிப்பதும் இல்லை. விரும்புவதும் இல்லை.
இப்படி இருக்க இப்போது தன்னை அடையாளம் தெரிந்துகொண்டு விக்னேஷ் அப்படி கேட்டதும் அவன் வியப்பில் ஆழந்தான்.
’’ என்ன யோசிக்கிறீங்க...?நான் சொன்னது தப்பா...? ’’- என்ற விக்னேஷின் கேள்வி அவனைச் சுயத்துக்கு கொண்டு வந்தது.
‘’ நான் கேள்விப்பட்டதை விட நீங்க வெரி ஸ்மார்ட்...’’ - மனம் விட்டு பாராட்டினான் மாணிக்கம்.
’’ஓகே தாங்க் யூ ’’- வெட்கத்துடன் நெளிந்த விக்னேஷ் கேட்டான். ‘’ நான் எப்படி உங்களுக்கு உதவனும்..? ‘’
இதை இங்கே பேசுவது உசிதமான்னு தெரியலை. நீங்க விரும்பினா அமைச்சர் வீட்டுக்கே வரலாம். - என்று கூறிய மாணிக்கம் விக்னேஷைக் கூர்ந்து கவனித்தான்.
அதற்குள் அங்கே வந்த வசந்தியைக் கண்டதும் மாணிக்கம் இவள் முன் பேசலாமா என்பது போல் அர்த்தமுள்ள பார்வையை விக்னேஷ் மேல் வீசினான்.
’’ இவமுன்னால எதையும் நீங்க சொல்லலாம். இவளை விட்டு என்னை விட்டு வெளியில் கசிவதில்லை எதுவும். என் க்ளையண்ட்ஸ் என் மேல் அபரிதமான நம்பிக்கை வைப்பதே இந்த நம்பகத்தன்மை காரணமாத்தான்.. கேரி ஆன் ப்ளீஸ்... - மாணிக்த்தின் மனதை வாசித்தது போல் விக்னேஷ் கூறினான்.
மாணிக்கம் எல்லா விவரத்தையும் விரிவாகக்கூறினான். இந்த பிரச்சினை தீர்த்து வைத்தால் குறிப்பிட்ட சதவீதம் ஃபீஸ் ஆக தருவதாகவும் கூறினான்.
‘’ வாவ்’’ - சத்தமாகவே விசிலடித்தான் விக்னேஷ்.
’’என் ஃபீஸ் என்ன தெரியுமா ..? ‘’ - என்று கண்களில் குறும்புடன் கேட்ட விக்னேஷை சட்டென கூர்ந்து பார்த்தான் மாணிக்கம்.
’’ மொத்த மதிப்பில் நாற்பது சதவீதம்’’. - இப்படி விக்னேஷ் சொன்னதும் அவனை மிரண்டு போய் பார்த்தான் மாணிக்கம்.
துடிப்புகள் தொடரும்...!
Bookmarks