சுவாதீனத்துடனிருங்கள்!
எந்நேரமும் எதிர்கொள்ளநேரிடும்
வலியின் சுவையறிந்த நாவுகளை!
வன்சொற்கள் விதைத்து
ரணங்களை அறுக்கும் கலையில்
கைதேர்ந்த அவை,
பதுக்கும் வலிகளையும் கண்டறிந்து
பரிகசிக்கும் வல்லமை பெற்றவை!
மேலாடையில் ஊர்ந்துசெல்லும்
சிற்றெறும்பைத் தட்டிவிடுவதுபோல்
அசட்டையாய் இருக்கக்கூடும் எனினும்,
குத்தீட்டிவெல்லும் கொடுஞ்சொற்கள் ஏந்தி
உதட்டு உறைக்குள் பதுங்கி
உங்கள் பலவீனத்தைப் பார்த்திருக்கும் அவற்றிடம்
உங்கள் பாசாங்கு பலிக்காமல் போகலாம்.
பாராமுகமாய் ஒதுங்கும்போதும்
பாய்ந்திழுத்துப் பேசி வளைத்து
வன்மப்புன்னகையினுள் வெஞ்சினம் மறைத்து
விடைபெறும் தருணம்
விருட்டென்று குரல்வளையில் செருகப்படும்
கூரிய சொற்களின் வீரியம் குறைக்கக்கூடும்,
மற்றுமொரு தருணம்
முனைப்புடன் தாக்கும் சொற்கள்…
முன்னிலும் கூர்தீட்டப்பட்டும்
முனைகளில் நச்சு தோய்க்கப்பட்டும்!
சுதாரித்துக்கொள்ளுங்கள்!
வக்கணை பேசும் இந்நாவிலும்
வஞ்சனை கொஞ்சம் இருக்கலாம்.
Bookmarks