உன் வாசல் வந்து
நேசம் சொல்லிக் காத்திருக்கும்
என் காதல்
உன் காலடி பட காத்திருக்கிறது
நீயோ செருப்பில்லாமல்
பயணித்துக் கொண்டிருந்தாய்.....
நீ பூவான நாளிலிருந்து
என் நேசத்தை
வேலியாக்கி உனக்கொரு
காதல் பாதை அமைத்து
கனவுகளோடு காத்திருந்தேன்...
நீயோ தூங்க விடவுமில்லை
தூங்க வைக்கவுமில்லை
எப்படியாவது உன்னிடம்
சேர்ப்பிப்பதற்காக எழுதிய
கடிதங்கள்-உன் விரல்
தொட்டு பிரிப்பதற்காக
உறங்கிக் கொண்டிருந்தன...
பத்திரமாக என் வீட்டு
அலமாரியில்......
உனக்கு தெரியாமல்
உன்னிடமிருந்து எடுத்துப் போன
சின்ன சின்ன பொருள்களுடன்
வாழ்ந்து கொண்டிருந்தேன்
பெரும்பான்மையாய் உன்னை
மறந்து இருக்கும் நேரங்களில்....
எல்லாமே விளையாட்டுதான்
உனக்கு......
கல் இடித்து ஏற்பட்ட உன்
கால் காயமாகட்டும்....
அதிகமாய் நீ நேசித்த உன்
செல்ல நாய் செத்துப் போனதையும்....
காதலைப் பிரித்து வெறிக் கூச்சலிடும்
சினிமா வில்லனாகட்டும்...
இன்னும் பிறவாகட்டும்...
எல்லாமே விளையாட்டுதான்
உனக்கு....
என்னையே உருக்கி உன்
மீது வைத்திருந்த
என் காதலும் கூட....
எப்படியாவது சொல்லி விட
ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தன...
உதடுகளும் மனசும்
உன்னை நேசிக்கிறேன் என்பதை...
சேர்ந்திருக்கும் நேரங்களில்
எல்லா நேரங்களிலும்
அவற்றை உணவாக்கி
கொண்டிருந்தது நம்
பாழாப்போன மௌனம்....
................................................
................................................
இப்போதெல்லாம்
உனக்கென இல்லையெனிலும்
தினம் தினம் எழுதிக் கொண்டிருக்கிறேன்
சில கவிதைகளை-சில ரத்தம் கசியும்
ஞாபகங்களுடனும்
படித்து பாதுகாத்து வைத்திருக்கும்
என் மனைவிக்காகவும்.....
Bookmarks