பகையைக் கொள்வானேன்? பதுங்கி வாழ்வானேன்?
புகையைப் பிடிப்பானேன்? புற்றை வளர்ப்பானேன்?
இருமணம் கொள்வானேன்? தெருவில் நிற்பானேன்?
உறவில் மணப்பானேன்? பெருமையை இழப்பானேன்?
அதிகம் பெறுவானேன்? அவதிப்படுவானேன்?
மதுவைக் குடிப்பானேன்? மதியை இழப்பானேன்?
குற்றம் புரிவானேன்? கும்பிட்டு நிற்பானேன்?
சுற்றம் தவிர்ப்பானேன்? தனித்து நிற்பானேன்?
கடனை வாங்குவானேன்? கவலை கொள்வானேன்?
அடக்க நினைப்பானேன்?அடங்கிப் போவானேன்?
ஓட்டை விற்பானேன்? நாட்டைக் கெடுப்பானேன்?
காட்டை அழிப்பானேன்? மழைக்கு ஏங்குவானேன்?
களவு செய்வானேன்? கம்பி எண்ணுவானேன்?
சோம்பித் திரிவானேன்? சோற்றுக்கு அலைவானேன்?
ஆத்திரம் கொள்வானேன்? அறிவை இழப்பானேன்?
பாத்திரம் அறியாமல் பிச்சை இடுவானேன்?
Bookmarks