(22)
அழகிய ரோஜாப்பந்தைக் கொண்டு வந்து கையில் கொடுத்ததைப் போல் இருந்தது சுந்தருக்கு. அது உடலை முறுக்கி, மெலிதாய் வாயைக் கோணிக் கொண்டு ஒரு கொட்டாவி விட்டது. பின் அரைக்கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மறுபடியும் மூடிக்கொண்டது. பச்சிளம் சிசுவை முதலில் வாங்கப் பயந்து மறுத்தவனிடம் எப்படி ஏந்திப் பிடிக்கவேண்டும் என்று கற்றுத் தந்து வற்புறுத்திக் கொடுத்துவிட்டுக் கேட்டாள் அத்தை,
"உம்மருமவன் என்ன சொல்றான்?"
"ஆமா.... அவன் எப்பவும் தூங்கிகிட்டே இருக்கான்...என்ன சொல்லப் போறான்?"
"சீக்கிரமா கல்யாணம் பண்ணிகிட்டு எனக்கொரு பொண்ணு பெத்துக்குடு மாமான்னு சொல்லல?"
வழக்கமான கிராமத்துக் கிண்டல் பேச்சு. முன்பென்றால் சட்டென்று கோபமோ வருத்தமோ வெளிப்படும். இப்போது மனமெங்கும் ஜாக்கியின் நினைவு இருந்ததால் இனம் புரியாத பரவசமே உண்டானது.
சித்ரா மிகவும் சோர்ந்து காணப்பட்டாள். குழந்தையைப் பார்த்து மகிழ்ந்தாலும், அது அழும் வேளையில் மெலிதாய் சலித்துக்கொண்டாள். அடிக்கடி சோர்ந்துபோனாள். காரணமின்றி கார்த்திக்கிடம் கடுகடுத்தாள்.
டாக்டர் கார்த்திக்கைத் தனியே அழைத்துச் சொன்னார், "மிஸ்டர் கார்த்திகேயன், சித்ரா இப்போ நார்மலா இல்ல. அவங்க மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்காங்க. அதனால்..."
"டாக்டர், ஏதாவது பிரச்சனையா?"
"நோ... நோ... சில பெண்களுக்கு பிரசவகாலத்தில் இதுபோல் டிப்ரஷன் உண்டாவது உண்டு. கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் சுரப்பு க்ராஜுவலா அதிகரிச்சிருக்கும். குழந்தை பிறந்த கொஞ்ச நேரத்துக்குள்ள அது கிடுகிடுன்னு குறைஞ்சு வழக்கமான அளவை அடைஞ்சுடும். இந்த ஹார்மோன் இம்பேலன்ஸ் டிப்ரஷனை உண்டாக்குது. ப்ளஸ் குடும்பப் பிரச்சனைகள், கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை, அழகு குறைஞ்சிடுமோன்னு பயம்...."
"அவ அப்படி நினைக்கிற டைப் இல்லை, டாக்டர்"
"அவங்களைச் சொல்லல. பொதுவான காரணங்களைச் சொல்றேன். அதனால் அவங்க மூடு ஸ்விங் ஆகிட்டே இருக்கும். மத்தவங்கதான் அனுசரிச்சு நடக்கணும். அதுக்காகத்தான் உங்களை கூப்பிட்டேன். சித்ராவோட ப்ரதர் விஷயமா அவங்க ஏற்கனவே ரொம்ப அப்செட் ஆனாங்க இல்லையா?"
"ஆமாம், டாக்டர்"
"அதனால்தான் சொல்றேன்... எச்சரிக்கையா இருங்க... சமயத்தில் குழந்தையிடம் கூட அவங்க கடுமையா நடந்துக்கலாம்."
"டாக்டர்..."
"பயப்படாதீங்க... போஸ்பாடம் டிப்ரஷனுக்கு ட்ரீட்மெண்ட் இருக்கு. மாத்திரைகள் கொடுக்கறோம். நாளைக்கு சைக்காலஜிஸ்ட் வந்து பார்ப்பாங்க.சித்ராவைக் குணப்படுத்துற முயற்சியில் உங்களுடைய ஒத்துழைப்பும் தேவை. அதனால்...."
"புரியுது, டாக்டர். இனி அவளச் சங்கடப்படுத்துற மாதிரி எந்த டாபிக்கும் எடுக்கமாட்டேன்."
"தட்ஸ் குட்"
கார்த்திக் இத்தனையையும் சொன்னபிறகு அக்காவிடம் ஜாக்கியைத் திருமணம் செய்ய நினைப்பது குறித்துப் பேசுவது சரியா? சரியில்லை. இப்போதைக்கு இந்த விஷயம் தனக்குள்ளேயே இருக்கட்டும். ஜாக்கியை சந்தித்தபின் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலாம்.
ஜாக்கியை எப்படி சந்திப்பது? எப்படித் தொடர்பு கொள்வது? ஜாக்கி தன் நிலையைத் தெரிவித்துவிட்டாள். தான் எப்படி அவளிடம் என் நினைவை எடுத்துச் சொல்வது? இடையில் இருப்பவள் இந்த வரவேற்பாளினிதான். அவளிடம் ஜாக்கியின் தொலைபேசி எண்ணையோ... வீட்டு முகவரியையோ கேட்டால் என்ன?
கேன்டீனிலிருந்து வெந்நீர் வாங்கி வரச் சொல்லி அத்தை கையில் ஃப்ளாஸ்கைக் கொடுக்க... படியிறங்கும்போதே வரவேற்பறையில் அவள் இருக்கிறாளா என்று பார்த்துக்கொண்டே இறங்கினான். இரவுப் பணியிலிருப்பவள் தலைவாரி ரப்பர் பேண்ட் போட்டுக்கொண்டு, கிளம்புவதற்கு தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தாள். அவள் இன்னும் வரவில்லை. பகல் வேலை என்பதால் ஆறுமணிக்குதான் வருவாள். கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது ஆறாக ஐந்துநிமிடங்கள் என்று காட்டியது. சாலையைக் கடந்து எதிர்புறமிருந்த கேன்டீனுக்குள் நுழையும்போது அவள் அரக்கப்பரக்க ஓட்டமும் நடையுமாக மருத்துவமனைக்குள் செல்வது தெரிந்தது.
வெந்நீரைப் பெற்றுக்கொண்டு வந்தபோது அவள் ரெஜிஸ்டரில் என்னவோ மும்முரமாக எழுதிக்கொண்டிருக்க... இப்போது போய் நின்றால் காலையில் வந்ததும் வராததுமாக கழுத்தறுக்கிறானே என்று நினைத்துவிட்டால் என்னாவது என்ற பயத்துடன் சுந்தர் தயக்கமாய்ப் படியேற... அவள் அழைத்தாள்.
"குட்மார்னிங், சுந்தர் சார்.... என்ன சார், கண்டுக்கவே மாட்டேங்கறீங்க?”
"எ..என்ன?"
"என்னவா? உங்க சிஸ்டருக்கு பையன் பிறந்திருக்கான். எங்களுக்கெல்லாம் சாக்லேட் எங்கே? கார்த்திகேயன் சாரும் கண்டுக்க மாட்டேங்கறார். நீங்கதானே பையனோட தாய்மாமா.... நீங்க வாங்கித் தாங்க... தப்பில்ல.."
அவள் கிண்டலும் கேலியுமாய் சொல்ல பக்கத்திலிருந்த நர்ஸ் சிரித்தாள். நேற்றே எல்லாருக்கும் சாக்லேட் வாங்கித்தரவிருப்பதாக அத்தான் சொன்னாரே... இன்னுமா வாங்கவில்லை? அலுவலகத்தில் தொடர்விடுப்பு எடுக்க இயலாததால் சுந்தர் அவ்வப்போது மட்டும் வந்து பார்த்துவிட்டு தேவையானதை வாங்கித்தந்துவிட்டு சென்றுகொண்டிருந்தான். முன்பே தெரிந்திருந்தால் தானே வாங்கித் தந்திருக்கலாம். சரி, இப்போது என்ன, சாக்லேட்டுக்குப் பதில் ஸ்வீட் பாக்ஸே வாங்கித் தந்துவிடவேண்டியதுதான். அப்படியே ஜாக்கியின் முகவரியையும் வாங்கிவிடவேண்டும்.
"என்ன சார்... யோசிக்கிறீங்க?"
"ஸாரிங்க... நேத்தே வாங்கித்தரதா அத்தான் சொன்னார். மறந்திட்டார் போல... இன்னைக்கு வாங்கித் தரேன்.மொத்தம் எத்தனைப் பேரு?"
"ஏன் கணக்காதான் வாங்கித்தருவீங்களோ? ஹா….. ஹா….. சும்மா சொன்னேன் சார், ஸ்டாஃப், டாக்டர்ஸ், அட்டென்டர்ஸ் எல்லாரையும் சேத்தா... முப்பத்திரண்டு பேர் சார்.... எல்லாருக்கும் ஃபைவ் ஸ்டார்தான் வேணும். லாக்டோகிங் வாங்கிக் குடுத்து ஏமாத்திடாதீங்க"
அவள் பேச்சில் அதீத உரிமை பிரதிபலித்தது. சுந்தரைப் பார்க்கும் பார்வையில் கனிவு தென்பட்டது. ஜாக்கி தன்னைப் பற்றி இவளிடம் ஏதாவது சொல்லியிருப்பாளோ?
அன்று அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு ஆனந்தபவன் சென்று இரண்டு கிலோ மில்க் ஸ்வீட் வாங்கிவந்து அவளிடம் கொடுத்து அனைத்து ஊழியர்களுக்கும் விநியோகிக்கச் சொல்ல.... விழி விரித்தாள்.
"சார், நான் விளையாட்டுக்கு சொன்னேன். நிஜமாவே வாங்கிட்டு வந்திட்டீங்களா?....வாவ்... சார்... யூ ஆர் க்ரேட்! தாங்க் யூ சார்!"
"இந்தாங்க நீங்க கேட்ட ஃபைவ் ஸ்டார்!"
"ஓ மை காட்! சார்... அசத்துறீங்க... தாங்க் யூ... தாங்க் யூ... "
சுந்தர் பக்கத்தில் ஒருவருமில்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு கேட்டான்.
"நீங்க தவறா நினைக்கக் கூடாது... ஜாக்குலின் அட்ரஸ் கொஞ்சம் சொல்லமுடியுமா?"
"ஓ! இதுக்குதான் இந்த ஸ்பெஷல் ஃபைவ் ஸ்டாரா?" விஷமமாய்க் கண்ணடித்தாள். சுந்தர் அதிர்ந்தான். இப்படி அவள் கண்ணடித்தும் சிரித்தும் விளையாட்டாய்ப் பேசிக்கொண்டிருப்பதை யாராவது பார்த்தால் தங்களைத் தவறாக நினைக்கக் கூடும் என்று பயந்தான்.
"எதுக்குக் கேக்கறீங்க?"
"சும்மாதான்... அவகிட்ட... அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"
"சாரி சார்! ஜாக்கி சிஸ்டர் அனுமதியில்லாம அதை நான் கொடுக்க முடியாதே..."
அத்தனை உற்சாகமும் வடிந்துவிட்டது. இவளென்ன முட்டுக்கட்டை போடுவது? வேறுவழிகளில் முயன்றால் முடியாதா என்ன?
"சார், நான் வேணும்னா அவங்ககிட்ட போன்ல பேசிப் பாக்கறேன். அவங்க சம்மதிச்சா அட்ரஸ் தரேன்."
இவனின் சோர்ந்த முகம் அவளை இரங்கவைத்தது போலும்.
"எப்போ பேசுவீங்க?"
"இப்ப டாக்டர் வர நேரம்! அப்புறமா பேசிச் சொல்றேன் சார்!"
"சரிங்க..."
அதுவரை இங்கென்ன செய்வது? அக்காவைப் பார்த்துவரலாம் என்று போனால்.... அறைக்கு வெளியில் அத்தை நின்றிருந்தாள்.
"என்ன அத்தை, போரடிச்சிடுச்சா?"
"டாக்டர் வந்திருக்காங்க...... என்னை வெளியில இருக்கச் சொன்னாங்க"
"அத்தான் எங்க?"
"புள்ளைக்கு ஏணை கட்டக் கயிறு, ஏணைத்துணி, ரப்பர் ஷீட்டு, மடக்கு கொசுவல.... எல்லாம் வாங்கணும்னு சொல்லி கடைக்குப் போயிருக்காரு.... நாளைக் கழிச்சு வீட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்..."
"நாளன்னிக்கா?"
"ஆங்.... இப்பெல்லாம் தையல் பிரிக்கிற வேலையே கெடையாதாமே... தானாவே சரியாயிடும்னு சொல்றாங்க..."
அத்தை மருத்துவ முன்னேற்றத்தை வியந்தபடி இன்னும் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தாள். சுந்தரின் நினைவோ... அந்தப் பெண் இந்நேரம் ஜாக்கிக்கு போன் செய்திருப்பாளா? ஜாக்கி என்ன சொல்லியிருப்பாள்? என்பதையே நினைத்துக்கொண்டிருந்தது.
கீழே போகலாமா? அவள் என்ன நினைப்பாள்? திருமணமாகிவிட்ட பெண்ணைத் தொடர்புகொள்ள இவன் ஏன் இப்படித் துடிக்கிறான் என்று தவறாக நினைப்பாளோ? நினைத்தால் நினைக்கட்டும். அவளுக்கென்ன தெரியும் எங்கள் காதலைப் பற்றி! பொறுமையற்று மீண்டும் கீழே வந்தான்.
வரவேற்பறையில் ஆட்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. அவளிடம் இப்போது பேச முடியாது. அவளும் வருவோர் போவோருக்கு தகவல்கள் தெரிவித்து, வரும் நோயாளிகளின் மருத்துவக் குறிப்புகள் பதிந்து, அவற்றைக் கணினியில் ஏற்றி, கண்ணும் கையும் வாயும் ஓயவே இல்லை.
சுந்தர் வரவேற்பறையில் ஓரமாய் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு அங்கிருந்த இந்தியா டுடேவை எடுத்து வெறுமனே புரட்டிக் கொண்டிருந்தான். இடைக்கிடை அவளை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். அவளை நோட்டமிடுவதற்காகவே இவன் வந்து அமர்ந்திருப்பதுபோல் யாரும் நினைக்க நிறைய வாய்ப்புள்ளது என்று நினைத்தபோது பயமும் வந்தது.
ஒருமுறை நேருக்கு நேர் கண்கள் சந்தித்தபோது, இவனது நோக்கம் அறிந்து அவள், தொலைபேசியைக் காட்டி உதட்டைப் பிதுக்கி, லைன் கிடைக்கவில்லையென்று சாடை காட்டினாள். நேரம் கடக்க.. கடக்க... சுந்தர் பொறுமை இழந்தான். தன்னிடம் ஜாக்கியின் தொலைபேசி எண்ணையும் தரமறுக்கும் அந்தப் பெண்ணின் மேல் கோபம் வந்தது. வேலையில் நேர்மை கடைப்பிடிக்கிறாளாம்.
வேறு யாருடனும் அதிகம் பழகவில்லையென்பதால் இப்போதைக்கு இவளை விட்டால் வேறு வழியுமில்லை. ஜாக்கிக்கும் இவனுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கிறது என்பதை ஜாக்கியின் கடிதத்தின் மூலம் இவள் அறிந்திருக்கிறாள். அதனால் மேற்கொண்டு காய் நகர்த்துவது இவள் மூலமெனில் எளிது. பொறுமை காக்க வேண்டும்.
"என்ன சுந்தர், இங்க உக்கார்ந்திருக்கே... ஆபிஸ் போகல?"
திடீரென முன்னால் வந்து நின்ற அத்தானின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாமல் திணறினான். கார்த்திக் ஏதோ சந்தேகம் கொண்டு வரவேற்பாளினியைப் பார்க்க... அவள் ரெடிமேட் புன்னகையை உதிர்த்தாள்.
"சரி, வா.... ரூமுக்குப் போகலாம்"
"இல்ல... நீங்க போங்க...நான் அப்புறம் வரேன்"
"சுந்தர், இங்க உக்கார்ந்திருக்கிறதுக்கு.... மேல வந்து சித்ராகிட்ட அத்தைகிட்ட பேசிட்டு உக்காந்திருக்கலாமே...."
"என்னைத் தொந்தரவு பண்ணாம போறீங்களா? ப்ளீஸ்" சுந்தரின் குரலில் மெலிதாய்க் கோபம் எட்டிப்பார்த்தது.
"ஓஹோ... கதை அப்படிப் போகுதா?"
"எப்படி?" சுந்தர் கோபமும் எரிச்சலுமாய்க் கேட்டான். கார்த்திக் அதை அலட்சியப்படுத்திப் புன்னகைத்துச் சொன்னான்.
"ம்..ம்.. நடக்கட்டும்... நடக்கட்டும்" சொல்லிவிட்டு சென்றுவிட.... சுந்தருக்கு சற்றுத் தாமதமாகவே அதன் பொருள் விளங்கியது.
ச்சே! ஏன் இப்படி அவசரப்படுகிறார் இவர்?
சட்டென்று ஏதோ நினைவுக்கு வர.... 'கடவுளே... ' என்று பதற்றத்துடன் மாடியேறினான்.
எதைத் தடுக்க ஓடிவந்தானோ அது அவன் வருவதற்குள்ளாகவே நடந்துமுடிந்திருந்தது.
"அப்படியா? கேக்கவே சந்தோஷமா இருக்கு. அந்த நாசமாப் போனவளை மறந்து தொலைச்சானே.... அது போதும். இந்தப் பொண்ணு யாரு...என்னன்னு விசாரிங்க... பேரு உதயநாயகின்னு தெரியும். வேற விவரம் எதுவும் தெரியல."
அக்கா குதூகலத்துடன் அத்தானுக்குக் கட்டளையிட்டுக்கொண்டிருந்தாள். விட்டால் அடுத்த முகூர்த்தத்திலேயே சுந்தருக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் செய்துவிடுவது போல் பேசிக்கொண்டிருந்தார்கள்.
"வா... வா.. சுந்தரு, உனக்கு நூறு ஆயுசு..." அத்தை சொன்னாள்.
"இப்படிக் கண்டவளையும் கட்டிகிட்டு நூறு வயசு வாழுறதுக்கு, பொட்டுனு போய்ச் சேர்ந்திடலாம்"
"பாவி... உன் வாயிலே நல்ல வார்த்தையே வராதா? எப்ப நல்ல விஷயம் பேசுனாலும் குதர்க்கமா ஏதாவது பேசு" சித்ரா கடிந்தாள்.
"அக்கா... அத்தான், ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கங்க.... நான் ஜாக்கியைத் தவிர வேற எந்தப் பொண்ணையும் என் மனசாலயும் நினைக்க மாட்டேன். ஜாக்கியைக் கல்யாணம் பண்றது பத்திதான் இப்ப யோசிச்சுகிட்டு இருக்கேன்."
சித்ரா அதிர்ச்சியில் வாயடைத்திருக்க... கார்த்திக் சரமாரியாக கேள்விகள் கேட்டான்.
"என்னது? ஜாக்கியைக் கல்யாணம் பண்ணப் போறியா? அதுக்கு அவ ஒத்துகிட்டாளா? அப்போ அவ புருஷன்?"
"ஜாக்கிகிட்ட இதுபத்தி இன்னும் பேசல. பேசுறவிதத்தில் பேசினா ஒத்துப்பா..."
"நான் ஒத்துக்க மாட்டேன்" சித்ரா அழுத்தமாய்ச் சொன்னாள்.
"எனக்கு அதைப் பத்திக் கவலையில்ல" சுந்தரும் அழுத்தம் காட்டினான். சுந்தரின் அழுத்தமான பேச்சு அனைவரையுமே அதிரவைத்தது.
சித்ரா அரைநிமிடம் அமைதியாய் இருந்துவிட்டு முகம் திருப்பி அழ ஆரம்பித்துவிட்டாள். கார்த்திக் தவித்தான். மருத்துவர் சொன்ன அறிவுரையை மறந்து அவளிடம் இந்தப் பேச்சை எடுத்தது எத்தனைத் தவறு? ஆனால் இப்படி நடக்குமென்று யாருக்குத் தெரியும்?
காலையில் போகும்போது அந்தப் பெண்ணிடம் சுந்தர் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததையும் வேலையெல்லாம் முடித்துத் திரும்பிவரும்போது அவளுக்கெதிரில் அமர்ந்து தவிப்பாய் அவளையே நோட்டமிட்டுக்கொண்டிருந்ததையும் வேறு என்னவென்று புரிந்துகொள்வது?
"சுந்தருங்கிறவருக்கு போன் வந்திருக்காம். கீழ கூப்புடுறாங்கோ.."
தகவல் சொல்லவந்த ஆயாம்மாவைத் தள்ளிக்கொண்டு படிகளில் பாய்ந்தான் சுந்தர்.
"போன்தானே வந்திருக்கு. இவரு என்னமோ பொதையலைக் கண்டமாதிரி இப்படி ஓடுறாரு?" அவள் நொடித்தாள்.
கீழே வந்தபோது அவள்... உதயநாயகி அவனைப் பரிதாபமாய்ப் பார்த்தாள்.
"போன் வந்திருக்குன்னு...." ரிஸீவரைக் காணாமல் இவன் தவித்தான்.
"ஸாரி, சார், உங்ககிட்ட போன் நம்பர், வீட்டு அட்ரஸ் எதுவும் தரவேண்டாம்னு சொல்லிட்டாங்க சார், அதுவுமில்லாம இனிமே அவங்களை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு கண்டிப்பா சொன்னாங்க சார்"
தொல்லை தருகிறேனா? நானா? அடிப்பாவி! உன்னைக் காப்பாற்ற வந்த தேவதூதனை அலட்சியப்படுத்துகிறாயே... ஜாக்கி... என்னை நீ புரிந்துகொண்டது அவ்வளவுதானா? கண்ணில் அணை கட்ட சட்டென்று கைக்குட்டை எடுத்து முகத்து வேர்வையைத் துடைப்பதுபோல் துடைத்துக்கொண்டான்.
"சார்.."
"ம்?" வேறென்ன சொல்லியிருக்கிறாளோ?
"ஜாக்கி சிஸ்டரோட எக்ஸ் லவ்வரா சார்?"
அவமானத்தாலும் ஆற்றாமையாலும் அடிபட்டுக் கிடந்த மனம் அவளது இந்தக் கேள்வியால் அசுரத்தனம் கொண்டது. சூழலை மறந்து சுந்தர் அவளிடம் பாய்ந்தான்.
"என்னங்க அது எக்ஸ் லவ்வர்... ஒய் லவ்வர்னு? காதலில் என்னங்க முன்னாள் பின்னாள்னு இருக்கு? அவ காதல் உண்மையா இருந்தா.... என்னோட ஒரு வார்த்தைக்காவது மதிப்பு குடுத்திருப்பா... இப்படி முகத்தில அடிச்சமாதிரி பேசாதேன்னு சொல்லமாட்டா... அவகிட்ட சொல்லிடுங்க... நான் சாகுறவரைக்கும் அவளத்தான் நினைச்சுகிட்டிருப்பேன்னு.... எனக்கு இப்ப இருக்கிற ஜாக்கி தேவையில்ல... அந்த உலகம் தெரியாத அப்பாவி ஜாக்கி போதும். அன்னைக்கு அவகிட்ட நான் பார்த்த காதல் போதும். சொல்லிடுங்க... என்னை மறக்க சொல்லிடுங்க... ஆனா.... அவளை மறக்கச் சொல்லி யாரும் என்னைக் கட்டாயப்படுத்த முடியாது... அவளுக்கே அந்த உரிமை இல்லைன்னு சொல்லிடுங்க.... பேச விரும்பலையாமா? பேசாம இருப்பா.... என்னை நினைக்காம இருப்பாளா? நெஞ்சைத் தொட்டு சொல்லச் சொல்லுங்க.... என்னைப் பைத்தியக்காரன்னு நினைச்சிட்டாளா? பரவாயில்ல... ஆனா... என்னைக்காவது ஒருநாள் என்னோட தவிப்பும் காதலும் அவளுக்குப் புரியும்...."
சுந்தர் வெறிபிடித்தவனைப் போல் கத்திக்கொண்டிருந்தான்.கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் கசமுசாவென்று பேசிக்கொண்டார்கள். உதயநாயகி அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றாள். அவளிடம்தான் ஏதோ பிரச்சனையென்று மருத்துவமனை ஊழியர்கள் குழுமிவிட... தலைமைச்செவிலி சுதா சிஸ்டர் வந்து சத்தமிட்டாள்.
"ஹலோ.... என்ன? ஏன் இங்க வந்து கத்திக் கலாட்டா பண்ணிட்டிருக்கே? உன் வீட்டுப் பிரச்சனையையெல்லாம் உன் வீட்டோடு வச்சுக்கோ... இது ஹாஸ்பிடல். ஹாஸ்பிடல்ல எப்படி பிஹேவ் பண்ணணும்னு தெரியாதா? படிச்சவனாட்டம் இருக்கே... இப்படிக் கூச்சல் போட்டு எல்லாரையும் டிஸ்டர்ப் பண்றியே... முதல்ல வெளியே போப்பா..."
சுந்தர் அவமானத்தால் குறுகிப்போனான். யாரோ தகவல் சொல்லி… ஓடிவந்த கார்த்திக், சுந்தரை நிலைக்குக் கொண்டுவர முயல, கார்த்திக்கின் கைகளைத் தட்டிவிட்டு வாசலுக்கு விரைந்தவன், தன் கோபத்தையும் எரிச்சலையும் பைக்கிடம் காட்டிப் புறப்பட…. அழகாய்ப் புலர்ந்த அந்த நாளின் மகிழ்வெல்லாம் அவனது ஆக்ரோஷ வாய்வீச்சால் சின்னாபின்னமாகி அற்பாயுளில் கரைந்துபோனது.
love is torture
words can’t just express
love is gamble
with tears of pain in life’s distress
love makes your life a strain
where money’s there
to lose the game
love has this crazy name
of pain and sorrow
die down in shame…
(தொடரும்)
Bookmarks