அது என்பது வாக்கியங்களில் வேறுபடும் பொருளைப் பதிந்திருக்கிறேன்.
அது, (ஒரு ஜீவன்)
அந்த ஜீவன் குழந்தையாய் அவதரித்தது,
அந்தக்குழந்தை அழகாயிருந்தது,
அற்புதமாய் இருந்தது,
இயற்கையழகுடன் அசாதாரணமாய் இருந்தது,
செயற்கையாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது,
வளரும்போது அதிநுட்பமதியோடு இருந்தது,
அறிவு அதிசயிக்கத்தக்கதாய் இருந்தது,
மேலும் அபாரத்திறனோடு அமைந்திருந்தது,
அளவிலாக் கலைநயத்தோடு இருந்தது,
மனத்துள் அரங்கு ஏறி ஆடும் ஆர்வம் மிகக் கொண்டது.
குமரிப்பருவத்தில் அரிதாரப் பூச்சிலே உள்ளம் திளைத்து நின்றது.
அவள் அழகும் திறமையும் அணு அணுவாய் உள்ளங்கவரும் வண்ணம் இருந்தது.
அவள் நினைவுகளே அநேக மனங்களை அண்மித்திருந்தது.
அவள் அழகு பல அடிமைகளை (ரசிகர்களை) உருவாக்கியிருந்தது.
புகழ்போதை கொண்ட மனம் அழகின் ஆராதனையில் கிறங்கியது.
வெறி கொண்ட மனம் அரங்கு அதிரச் சதிராடி அசத்தியது.
அற்ப சுகத்தில் ஆழ்ந்திருந்தது,
அதீத கர்வம் கொண்டது.
அகங்காரம் கிளர்ந்தது.
அகம் சுருக்கியது.
அதனால் அடுத்தவரை அவமதித்தது.
அதன் காரணமாய் ஆணவம் அடிபட்டது.
அவளுக்கு அடுத்தது (அடுத்த அழகு)
அவளுக்குப் போட்டியாக அறிமுகமானது,
அவளை விடவும் அழகாயிருந்தது,
அன்றாடியிருந்தது,
அடியோடு அகற்றப்பட்டது
அவளது அகம்பாவம் அடக்கப்பட்டது.
அவள் தேகம் அலட்சிய உரு(வம்)வானது.
அவளுடைய அடையாளம் அழிந்தது.
அடைமொழி அனைத்தையும் இழந்தது.
அவளுடைய அங்கம் தளர்ந்தது.
அவள் நிலை அனாதரவானது.
அவளுடைய அழகு ஒழிந்தது.
உணர்ந்த மனம் அழுது அரற்றியது.
உண்மையை அகம் அறிந்தது.
ஆட்டம் அடங்கியது.
ஆணவம் அழிந்தது.
அது! (மீந்தது அது மட்டுமே! அது ..... ஆதியிலிருந்த ஜீவன்)
நடிகை என்றில்லை, எந்த ஒரு மனிதனுமே புகழின் உச்சியில் இருக்கும்போது ஆயிரம் பேர் சுற்றிவருவார்கள். கொஞ்சம் நிலை தாழ்ந்தாலோ எவருமே சீண்ட மாட்டார்கள். அதிலும் அவருடைய ஆணவத்தால் அந்நிலை அடைந்திருப்பாராயின் அப்போது அவர் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.
சொல்ல நினைத்தது இதுதான். ஆனால் இதை அதில் சரியா சொல்லியிருக்கேனான்னுதான் தெரியவில்லை.
Bookmarks