அன்றாடம் நான் கடந்துசெல்லும் பாதையோரம்
என் கவனமீர்க்கவென்றே
காத்திருக்கும் அம்மரத்தைப் பற்றி நீங்கள்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.
என்னிடம் அறிவித்திராத தன் பெயரை
அது உங்களிடம் சொல்லியிருக்க நியாயமுமில்லை..
அதன் பெயர் அறியுமுன்னரே
அதனுடன் இணக்கமாகிவிட்டது என் மனம்.
உரிபொருளுளை உடலாய்க் கொண்ட
அடிபெருத்த அம்மரம்…..
இலையுதிர்காலத்தில் இலைகளை உதிர்ப்பதில்
அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை.
பதிலாய்…
தன் உடல்பற்றிய ஆடையை
உருவி எறியும் குறும்புக் குழந்தை போல்
பட்டையுரித்து பரவசமாய் நிர்வாணம் காட்டி
நிறுத்துகிறது தன்னிருப்பை.
அரைகுறையாய் சட்டையுரித்து
அலுங்காமற்செல்லும் அரவம்போன்று
பதைப்பூட்டும் அது....
பழந்துணிகளைப் படுதாக்களாய்த் தொங்கவிட்டு
மறைப்பிலே மானம் காக்கும்
பாதையோர வசிப்புகளின்
பரிதாபத்தை நினைவுறுத்தும் சிலநேரம்…
நைந்த கந்தலினும் மிகுதியாய்
மனதின் நலங்கெட்டுத்திரிபவனை
பேரதிர்வோடு நினைவுபடுத்தும் சிலநேரம்….
உரித்தலுக்குப் பின்
ஏமாற்றும் வெங்காயம் போல்
சுவாரசியம் கெடுக்காமல்…
நித்தமும் பட்டையுரித்து
நவசித்திரங்களாய் விசித்திரத் தோற்றம் காட்டி,
அன்றாடக் கவலைகளையும்
அதுபோல் அப்புறப்படுத்தச் சொல்லித்தந்து
உணர்வுகளைப் புதுப்பிக்கிறது,
கடந்துசெல்லும் கணந்தோறும்!
Bookmarks